சுவிட்ஸர்லாந்தில் புலிகள் மீதான கடும் நடவடிக்கையின் தாற்பரியம்
(டெய்லி மிரர் ஆங்கில பத்திரிகைக்காக சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது)
ஜனவரி 11 ஆம் திகதி தமிழீழ விடுதலை புலிகள் மீது சுவிஸ் சமஷ்டி பொலிஸார் கடும் நடவடிக்கை எடுத்ததும், அதன்போது 10 உயர்மட்ட புலி செயற்பாட்டாளர்களை பொலிஸார் தமது காவலுக்குள் கொண்டு வந்ததும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.
ஹெல்வீச்சியா அல்லது சுவிட்ஸர்லாந்து, இலங்கையில் பிறந்த 40000 - 42000 தமிழர்களின் வதிவிடமாக உள்ளது. கனடா போன்ற நாடுகளில் உள்ள தமிழ் புலம் பெயர்ந்தோரைவிட இந்த எண்ணிக்கை குறைவானது ஆகும்.
பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ் உட்பட எந்தவொரு மேற்கத்தைய நாட்டைவிடவும், சுவிட்ஸர்லாந்து தமிழர்கள் புலிகளின் யுத்த நடவடிக்கைகளுக்கு வழங்கிய பங்களிப்பு விகிதாசார ரீதியில் அதிகமானதாகும்.
புலிகளின் கோட்டை
அண்மைக் காலத்தில் சுவிஸ் வாழ் தமிழர்கள் புலிகளின் இலட்சியத்திற்காக அதிகளவான பணவலு, மனிதவலு, சிரமவலு, என்பவற்றை வழங்கியுள்ளனர். இவ்வாறான பண்பு ரீதியான பங்களிப்பு சுவிட்ஸர்லாந்தை ஐரோப்பாவில் உள்ள புலிகளின் கோட்டை என கருத வைத்தது.
இந்த பின்னணியில் பார்க்கும்போது சுவிஸ் அதிகாரிகளின் அண்மைக்கால நடவடிக்கை, சுவிடஸர்லாந்தில் புலிகளின் எதிர்காலம் கெட்ட காலமாக அமையப் போகின்றது என்பதை கட்டியம் கூறுவதாக உள்ளது. புலிச் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக சாட்சியமளிக்க பல தமிழர்கள் முன்வந்துள்ளது போல தோன்றுவதால் புலிப் பப்படம் சுவிட்சர்லாந்தில் நொறுங்கிப் போவதாக தெரிகின்றது.
சுவிட்ஸர்லாந்தில் புலிகளின் தற்போதைய தலைவர் விஜயரட்ணம் சிவனேசன் அல்லது ரகு அல்லது ரகுபதி, இவருக்கு முன் தலைவராக இருந்த செல்லையா குலராஜசேகரம் அல்லது குலம் மற்றும் சுவிட்ஸர்லாந்து புலி நிதிப்பொறுப்பாளர் செல்லையா ஜெயபாலன் அல்லது அப்துல்லா ஆகியோரும் கைது செய்யப்பட்டவர்களுள் அடங்குவர்.
சுவிஸ் அதிகாரிகள் முக்கிய புலிச் செயற்பாட்டாளர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கைகளை எடுப்பதில் வெற்றி பெறுவார்களாயின், சுவிட்ஸர்லாந்தில் உள்ள புலிகளின் அமைப்பு நிச்சயம் பலவீனப்படும், அத்துடன் அங்குள்ள தமிழ் மக்கள் மீதான புலிகளின் பிடியும் தளரும்.
இவ்வாறான நீதி விசாரணை வெற்றி பெறுவதற்கு புலிகளால் பாதிக்கப்பட்ட சுவிஸ் வாழ் தமிழர்களின் பூரண ஒத்துழைப்பு அவசியமானது ஆகும்.
இந்த முறை புலிச் செயற்பாட்டாளர்களுக்கு தண்டனை வழங்க வேண்டுமென்பதற்காக பல தமிழர்கள் அதிகாரிகளுடன் உண்மையாகவே ஒத்துழைப்பதாக தெரிகிறது. முன்னைய சந்தர்ப்பங்களில் புலிகளுக்கு எதிராக சாட்சியமளிக்க தமிழர்கள் தயங்கினர். இந்த முறை இது வித்தியாசமாக உள்ளது.
இவ்வாறு பலர் புலிகளுக்கு எதிராக சாட்சியமளிக்க விரும்புவதை பற்றிய விசேட அம்சம், இவர்கள் புலிகளால் பாதிக்கப்பட்ட புலி ஆதரவாளர் அல்லாதவர்களாக இல்லாமல், புலிகளின் தீவிர ஆதரவாளர்களாக ஒரு காலத்தில் இருந்தவர்களாக இருப்பதுதான். புலியோடு சேர்ந்திருந்தவர்களே புலிகளுக்கு எதிராக செயற்பட வந்தமையால் சுவிட்ஸர்லாந்து புலிக் குமிழி உடைந்து போயிற்று.
இவ்வாறு வழமைக்கு மாறாக நடப்பதற்கு புலிச் செயற்பாட்டாளர்களின் நடவடிக்கைகளே காரணமாயின. நம்பிக்கைத் துரோகம் செய்யும் வகையில், புலிகளின் ஆட்கள் தமது ஆதரவாளரக்ளின் பெயரில் வங்கிக் கடனை பெற்று அந்த பணத்தை கையாடியதுடன் கடனையும் கட்டாமல்விட்டு விட்டார்கள்.
இவ்வாறு கடன் பெற்றுக் கொடுத்தவர்கள் இப்போது மிகவும் அந்தரமான ஆபத்தான நிலையில் உள்ளனர். கடன் கொடுத்த நிறுவனங்களும் சங்கடமான நிலையில் உள்ளன. இந்த நிலையில் புலிகளின் நம்பி;க்கைக்கு உரித்தாயிருந்த ஆதரவாளர்கள், அதிகாரிகளிடம் இதுபற்றி முறையிட வேண்டிய நிலைக்கு ஆளாகியதுடன் பிரதான புலிச்செயற்பாட்டாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஒத்துழைக்கவும் சம்மதித்துள்ளளர். இது ஒழுங்காக நடைபெற்று புலியின் முக்கிய தலைவர்கள் மீது வெற்றிகரமாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமாயின் இதுவொரு முன்மாதிரியாக அமைந்து ஏனைய நாடுகளில் உள்ள புலிசார்பு புலம்பெயர்ந்தோர்கள் மீதும் தொடர் தாக்கத்தை முடுக்கிவிடலாம்.
தாக்கங்கள்
சுவிட்ஸர்லாந்தில் புலிகள் மீதான நடவடிக்கைகளின் தார்ப்பரியங்களையும் தாக்கங்களையும் விளங்கிக்கொள்ள புலிகளின் நிதிசேகரிப்பு பொறிமுறையை விளங்கிக்கொள்ள வேண்டும்.
இதில் 5 வகைகள் உள்ளன. இதில் முதலாவது நிலையியல் கட்டளை முறையாகும். இந்த முறையில் புலிகளின் மனப்பூர்வமான ஆதரவாளர்கள் தத்தம் நாடுகளில் உள்ள புலிகளின் முகப்பு அமைப்புகளுக்கு தமது வங்கியூடாக ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகை பணத்தை தவறாது அனுப்பும் நிலையியல் கட்டளையொன்றை பிறப்பித்து இருப்பர். இது, ஒப்பீட்டளவில் குறைவான தொகையாக இருப்பினும், ஒழுங்காக கிடைக்கும் உத்தரவாதம் இருந்தது.
இதில் பலவந்தம் இருக்கவில்லை. ஏனெனில் இவ்வகையில் நிதி கொடுத்தோர் புலிகளின் உண்மையான ஆதரவாளர்களாக இருந்தனர். இவ்வகையில் கிடைத்த பணம் அந்தந்த நாட்டிலிருந்த முகப்பு நிறுவனங்களையும் புலி இயக்கத்தின் கிளைகளையும் நடத்தப் பயன்பட்டது. இது இலங்கைக்கு அனுப்பப்படவோ அல்லது ஆயுதம் வாங்கவோ பயன்படவில்லை.
இரண்டாவது முறை 'ஆண்டுப் பொது நிதிசேகரிப்பு' ஆகும். இது வருடம் முழுவதும் செயற்படும் திட்டமாகும். இதில் புலிகளின் தீவிர ஆதரவாளர்களும், ஆதரவாளர் இல்லாதோரும் இலக்காக உள்ளனர். சில தவணைகளில் குறிப்பிட்ட தொகைப் பணத்தை செலுத்த வேண்டும்.
இதில் பணத்தை வாங்கவும், பங்களிப்பின் அளவை அதிகரிக்கவும், நெருக்குவாரம் பலவந்தம் என்பன பயன்படுத்தப்பட்டன. இலங்கையில் உள்ள குடும்ப அங்கத்தவர்களுக்கு தீங்கு விளைவிக்கப்படும் என பயமுறுத்துவது இலகுவான வழியாக இருந்தது. தாமே விரும்பி நிதி கொடுத்தோரும் கணிசமாக காணப்பட்டனர்.
ஆரம்பத்தில் தொண்டர்களே நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர். பின்னர் நிதி சேகரிப்போருக்கு தரகுப்பணம் கொடுக்கப்பட்டது. இந்த ஊக்குவிப்பு நிதி சேகரிப்பில் பெரும் அதிகரிப்புக்கு வழிகோரியது. அதேசமயம், தமது தரகுப்பணத்தை அதிகரித்துக் கொள்வதற்காக நிதிசேகரிப்பாளர்கள் வன்முறையிலும் ஈடுபட்டனர். பிரான்ஸில் எல்.ரீ.ரீ.ஈ. நிதி சேகரிப்போர் பாரிஸுக்கு அப்பால் ஒரு பண்ணையொன்றை வைத்திருந்தனர். இங்குதான் நிதிக்காக கடத்தப்பட்டவர்கள் நிதி செலுத்தும்வரை மறைத்து வைக்கப்பட்டனர்.
இவ்வகையில் சேகரிப்பட்ட நிதி மூன்று வழிகளில் செலவழிக்கப்பட்டது. இதில் ஒரு பகுதி இயக்கத்தை நடத்துவதற்காக வன்னிக்கு அனுப்பப்பட்டது. இன்னொரு பகுதி ஆயுதம் வாங்குவதற்குப் பயன்பட்டது. ஆகக் கூடுதலான பகுதி புலி இயக்கம் வெளிநாடுகளில் நடத்திக் கொண்டிருந்த வணிக நடவடிக்கைகளில் முதலீடு செய்யப்பட்டது.
விசேட நிதி சேகரிப்பு
மூன்றாவது வகை நிதி சேகரிப்பு, 'விசேட சேகரிப்பு' என கூறப்பட்டது. இது உண்மையில் ஆயுதம் வாங்குவதற்காக மட்டும் என விசேடமாக ஒழுங்கு செய்த கடன் ஏற்பாடாக இருந்தது. இது கே.பி. இராணுவ தளவாடம் வாங்குவதற்கு பொறுப்பாக இருந்த காலத்தில் அவராலேயே தொடக்கப்பட்ட விடயமாகும். ஆயுதம் வாங்குவதற்கு பெருமளவு பணத்தை சொற்ப கால அவகாசத்தில் பெற வேண்டியிருந்தது. வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ.யின் நிர்வாகத்திற்கும், நிதி சேகரிப்புக்கும் பொறுப்பாக இருந்த கேபியின் மனதிலேயே இந்த திட்டம் உதயமாயிற்று.
இந்த முறையில், வெளிநாடுகளிலிருந்த நம்பிக்கைக்குரிய, உறுதியான விசுவாசிகள் குறிப்பாக இவர்களில் வங்கியில் நற்பெயர் உடையவர்களாக இருந்தவர்கள் தமது பெயரில் கடனைப் பெற்று எல்.ரீ.ரீ.ஈ. முகவர் அல்லது முகப்பு நிறுவனத்திடம் கொடுத்தனர். இந்த கடனை பெற்றவர்கள் தமது சொத்துக்களை பிணையாக காட்டினர்.
இந்த முறையினால் பெருந்தொகையான பணம் விரைவில் சேகரிக்கப்பட்டது. இப்பணம் ஆயுதம் வாங்கப் பயன்படுத்தப்பட்டது. இந்த வங்கிக் கடனுக்கான வட்டி, நிலையியல் கட்டளை மூலம் சேகரிக்கப்பட்ட பணத்திலிருந்து, கொடுக்கப்பட்டது. கடனின் முதல், படிப்படியாக, பொது சேகரிப்பிலிருந்து பெற்ற பணத்தால் கட்டப்பட்டது.
கே.பி, புலிகளின் ஆதரவாளர்கள் தமது பெயரில் பெற்றுக்கொடுத்த கடனை மீளச் செலுத்துவதில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டார். அவரின் பின் வந்தவர்களும் அவ்வாறே செய்தனர். விசேட நிதி சேகரிப்பு எல்.ரீ.ரீ.ஈ. ஆதரவாளர்கள்களின் மனதில் இடம்பிடித்தது. மிக அதிகளவான நிதி சேகரிக்கப்பட்டு பிரச்சினை ஏதுமின்றி மீளச் செலுத்தப்பட்டு வந்தது. விசேட நிதி சேகரிப்பு 18 மாதங்களுக்கு ஒரு தடவை செய்யப்பட்டது.
இவற்றுக்கு மேலாக நிதி சேகரிக்க இரண்டு விரிந்த முறைகள் காணப்பட்டன. இதில் ஒன்றாக, மேடை நிகழ்வுகள் நடத்துதலும், கலண்டர், வீடீயோ, டீவிடி, ஓடியோ சீடிகள், புத்தகங்கள், சஞ்சிகைகள், ஞாபகார்த்த சின்னங்களை விற்பதும் அமைந்திருந்தது. கரும்புலி தினம், மாவீரர் தினக் கொண்டாட்டங்களிலும் நிதி சேகரிக்கப்பட்டது. ஒரு பக்கத்தில் நுழைவுக்கட்டணமாக பெருமளவு பணம் அறவிடபட்ட வேளையில் செலவுகளை சரிக்கட்ட நன்கொடை வழங்கும்படியும் மக்களிடம் கேட்கப்பட்டது.
வர்த்தகம்
இறுதியானது வர்த்தக நிறுவனங்களில் முதலீடு செய்வதாகும். போரை தொடர்ந்து நடத்துவதற்கு ஒழுங்கான நிதிகிடைக்கும் வழிகள் காணப்பட வேண்டுமெனக் கூறி எல்.ரீ.ரீ.ஈ. தனது வர்த்தக நடவடிக்கைகளை நியாயப்படுத்தியது. நன்கொடையில் மட்டும் தங்கியிருப்பது, நீண்டகால நோக்கில் உறுதியில்லாது போகலாம் என்பதால் புலிகள் பல்வகையான வர்த்தக முயற்சிகளிலும் ஈடுப்பட வேண்டுமென காரணம் கூறப்பட்டது.
புலிகளின் பெருந்தலைவர் வே.பிரபாகரன் இதற்கான சம்மதத்தை கொடுத்தபோது வான் கதவுகளை திறந்தது போலாயிற்று. பினாமிகள், மற்றும் முகப்பு நிறுவனங்களுடாக பல வகையான வர்த்தக நடவடிக்கைகளில் புலிகளின் கிளைகள் ஈடுபட்டன.
இந்த வணிக முயற்சிகள் தமிழ்படம் காட்டுதல், உணவு விடுதிகள், உணவு வழங்குதல், மெய்ச்சொத்து வியாபாரம், சில்லறைக்கடைகள், அச்சகங்கள், கட்டுமான வேலை, பணம் அனுப்புதல், கணினி சேவைகள், வாகன சேவைகள் என அமைந்தன.
சில வர்த்தக நடவடிக்கைகள் புதிதாக தொடங்கப்பட்டன. ஆனால் அனேகமான சந்தர்ப்பங்களில் ஏற்கெனவே இருந்த வியாபார முயற்சிகளை புலிகள் அதிக விலை கொடுத்து தமதாக்கி கொண்டனர். இலாபத்தில் ஒரு பகுதியை இந்த வர்த்தக நிறுவனங்கள் எல்.ரீ.ரீ.ஈ. க்கு கொடுத்தனர். நிறுவனங்களை நடத்தியோருக்கு சம்பளம் கொடுக்கப்பட்டது.
அநேகமாக முகவர்கள் எல்.ரீ.ரீ.ஈ.யின் விசுவாசத்துக்கு உரியவர்களின் கூட்டாளிகளாக அல்லது உறவினர்களாக இருந்தமையால் துர்ப்பிரயோகமும், ஊழலும் இந்த வர்த்தக நிறுவனங்களில் காணப்பட்டன. பல வர்த்தக நிறுவனங்கள் வங்குரோத்தாகியுள்ள வேளையில் ஏனையவை நட்டத்தை காட்டுகின்றன. (2009 மே ) முள்ளிவாய்க்கால் அனர்த்தத்தின் பின் இந்த வர்த்தக நிறுவனங்களை நடத்திக் கொண்டிருந்தவர்கள் அவற்றை தமக்கே சொந்தமாக்கிக் கொண்டனர்.
எல்.ரீ.ரீ.ஈ.க்கு சுவிட்ஸர்லாந்தில் நடந்தது, புலிகளின் வீழ்ச்சிக்கு பின் வேறு இடங்களில் நடப்பதன் ஒரு அடையாளமே. இதனால்தான் சுவிட்ஸர்லாந்தில் நடந்தது எல்.ரீ.ரீ.ஈ.யின் எதிர்காலத்தின் மீது பாரிய விளைவுகளை ஏற்படுத்திக் கூடியதாக உள்ளது.
சில தசாப்தங்களின் முன் சுவிட்ஸர்லாந்தில் விரல்விட்டு எண்ணக் கூடிய தமிழர்களே இருந்தனர். இலங்கையில் இன முரண்பாடு தீவிரமாகத் தொடங்கியதோடு இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. 1979 இல் யாழ்ப்பாணத்தில் அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டு அதன்போது 'இன்பம்' போன்ற தமிழ் இளைஞர்கள் ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டதும், பலர் சிறைகளில் அடைக்கப்பட்டதும், பல தமிழர் இளைஞர்கள் ஐரோப்பாவில் புகலிடம் கோர வழிவகுத்தது. பயங்கரவாத தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டமை இந்த வகை வெளியேறுகையை மேலும் முடுக்கிவிட்டது.
1981 மே – ஜுன் பகுதியில் ஒழுக்க கட்டுப்பாடில்லாத பொலிஸாரினால் யாழப்பாண பொது நூல் நிலையம், ஈழநாடு புதினப்பத்திரிகைக் காரியாலயம், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் காரியாலயம், யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீடு என்பன எரிக்கப்பட்டதுடன் புகலிடம் கோருதல் மேலும் விசைகொண்டது.
குடித்தொகை
இவ்வாறு, 1979, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் உண்டான உந்தலுடன் தமிழர் குடித்தொகை சுவிட்ஸர்லாந்தில் அதிகரிக்க தொடங்கியது. இதன் பின் சுவிட்ஸர்லாந்தில் தமிழர்களின் வருகை சீராக காணப்பட்டது. சிலர் இந்த நாட்டை விட்டு வெளியேறவும் செய்தனர். அண்மைக்காலத்தில் இலங்கையை சேர்ந்த பல ஊடகவியலாளர்கள் சுவிட்ஸர்லாந்தில் புகலிடம் கோரியுள்ளனர். தற்சமயம் சுவிட்ஸர்லாந்தில் 2200 தஞ்சம் கோரும் விண்ணப்பதாரிகள் உள்ளனர்.
'ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளிலுள்ள தமிழர்கள் போலன்றி, சுவிஸ் தமிழர்கள் பெரியளவில் உயர்கல்வியை நாடவில்லை. இவர்கள் வெண்ணிற ஆடை வேலைகளில் அதிகம் காணப்படவில்லை. அநேகமான தமிழர்கள் தொழிற்சாலைகள், உணவகங்கள், போக்குவரத்து, நகரசுத்தி, வயோதிபர் பராமரிப்பு, காவல் துறைகளில் நீல ஆடை வேலைகளில் அதிகமாக ஈடுபடுகின்றனர்.
இவர்கள் பொதுவில் கடின உழைப்பாளர்களாக உள்ளனர். மாதம் 2000-4000 பிராங்வரை சம்பாதிக்கின்றனர். (ஒரு சுவிஸ் பிராங்க் 117 இலங்கை ரூபாவுக்கு சமன்) சுவிட்ஸர்லாந்தில் நன்றாக உழைத்தபின் பல தமிழர்கள் பிரித்தானியா, கனடா ஆகிய நாடுகளில் வசிக்கச் சென்றுள்ளனர்.
40000 – 42000 வரையிலான இலங்கையர்கள் சுவிட்ஸர்லாந்தில் வாழ்கின்றனர். இவர்களில் பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்களின் ஆதரவாளர்கள் உள்ளனர். படிப்படியாக எல்.ரீ.ரீ.ஈ. ஆதிக்கம் பெற தொடங்கியது. ஆயுதப்போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்த ஒரேயொரு இயக்கம் என்பது புலிகள் இயக்கத்தின் பலமாக இருந்தது. கடும ;பிரச்சார வேலை, தேவையான போது பலவந்தம் போன்ற தந்திரங்கள் சுவிட்ஸர்லாந்து தமிழர் மீது புலி இயக்கம் தனி ஆதிக்கம் பெற உதவியது. சுவிடஸர்லாந்தில் புலிகளுக்கு எதிர்ப்பு காட்டும் ஒரே ஒரு அமைப்பாக புளொட் இருந்து வந்தது. இதன் தலைவராக சொக்கலிங்கம் ஞானலிங்கம் அல்லது ரஞ்சன் இருந்து வருகிறார்.
1991 இல் சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமார் அல்லது கிட்டு லண்டனிலிருந்து சுவிட்சர்லந்துக்கு சென்றபோது அங்கிருந்த எல்.ரீ.ரீ.ஈ. உற்சாகம் பெற்றது. 1984- 1987 காலப்பகுதியில் புலிகளின் இரணுவ தளபதியாக இருந்த கிட்டு லண்டனில் எல்.ரீ.ரீ.ஈ.யின் சர்வதேச செயலகத்தை நிறுவியிருந்தார். லண்டனில் கைது செய்யப்படலாம் என கருதி கிட்டு சுவிட்ஸர்லாந்தில் இடம்பெயர்ந்தார். கிட்டு சுவிட்சர்லாந்தில் ஓய்வெடுத்தமை சுவிட்சர்லாந்துக்கான எல்.ரீ.ரீ.ஈ. தலைவராகவிருந்த நடராஜா முரளிதரன் அல்லது முரளியின் கரத்தை வலுப்படுத்தியது.
சுவிஸ் முரளி
கிட்டுவினால் போடப்பட்ட அத்திவாரத்தின் மீது முரளியால் சுவிட்ஸர்லாந்தில் எல்.ரீ.ரீ.ஈ.யை புனருத்தாரணம் செய்து வளர்க்க முடிந்தது. முரளி பொறுப்பாயிருந்த 1991-1997 காலப்பகுதியில் எல்.ரீ.ரீ.ஈ. சுவிட்ஸர்லாந்தில் பலம் பெற்று வளர்ந்தது. முரளி சுவிடஸர்லாந்தில் தமிழ் பாடசலைகளின் வலையமைப்பை ஏற்படுத்தினார். இவர் மக்கள் கடைகள் என அழைக்கப்பட்ட கடைத் தொகுதியையும் அமைத்தார். எதிர்ப்புகளை அடக்க மாற்றுக் கருத்தை எடுக்க, பணம் கொடுக்குமாறு மக்களை பலவந்தப்படுத்த வன்முறையை பயன்படுத்தியமை முரளியின் தலைமைத்துவத்தின் பாதகமான அம்சமாக இருந்தது.
சுவிஸ் முரளியினால் பயன்படுத்தப்பட்ட முறை பெரும் வெற்றியை கண்டது. புலிகள் சுவிட்ஸர்லாந்தில் தம்மை உறுதியாக நிலை நிறுத்திக் கொண்டனர். சூரிச், பேர்ண், ஜெனீவா ஆகிய இடங்களில் நடந்த புலிகளின் ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஐரோப்பிய நாடுகளில் நடந்த கூட்டங்களில் பங்குப்பற்றி சனக் கூட்டத்தை அதிகரிக்கவும் சுவிட்சர்லாந்தில் இருந்த தமிழர்கள் உதவினர். சுவிஸ் வாழ் தமிழர்கள் உதவினர். சுவிஸ் வாழ் தமிழர்கள் நிதி சேகரிப்பதில் விகிதாசார ரீதியில் முதலிடத்தை பெற்றனர். தலைக்குரிய பங்களிப்பில் ஆகக் கூடிய நிதியை சுவிஸ் தமிழர்கள் வழங்கினர்.
இதனால் முரளி எல்.ரீ.ரீ.ஈ.யின் பெருந்தலைவர் பிரபாகரனின் விருப்புக்குரியவரானார். ஒரு முறை, பிரபாகரன், சுவிட்ஸர்லாந்திலுள்ள முரளிதரன் எல்.ரீ.ரீ.ஈ.யின் வெளிநாட்டு கிளைகளின் தலைவர்களுள் மிகவும் வினைத்திறன் மிக்கவர் என பிபிசி தமிழ் சேவை அறிவிப்பாளர் ஒருவருக்கு கூறினார். ஆனால் முரளிதரன், ஹம்ரி – டம்ரி போல விழவிருந்தார்.
வன்முறை, மிரட்டல், மிரட்டி பணம் பறிப்பு ஆகிய குற்றச்சாட்டுகளில் பேரில் முரளியும் இன்னும் பதினான்கு எல்.ரீ.ரீ.ஈ. செயற்பாட்டாளர்களும் 1996 இல் சுவிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டனர். ஏனையவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும் முரளி 18 மாதம் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். முரளிதரன், தன்னை பிழையாக கைது செய்து அடைத்து வைத்தனர் என சுவிஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். முரளிக்கு எதிராக தமிழர் சாட்சி சொல்லாதவாறு தடுக்க பயமுறுத்தல் உட்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
முரளி மறியலிலிருந்த காலத்தில் அவரை படியிறக்க விரும்பிய சில எல்.ரீ.ரீ.ஈ.யினர், இயக்கத்தின் நலனுக்காக முரளியை பதவியிலிருந்து அகற்றுவது நல்லதென எல்.ரீ.ரீ.ஈ.யில் அதிகாரமுள்ளவர்களை நம்ப வைப்பதில் வெற்றி பெற்றனர். எனவே 1997 இல் முரளி குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டபோது முரளி பதவியிலிருந்து விலக்கப்பட்டார். முரளி வன்னிக்கு வருமாறு பணிக்கப்பட்டார். இதை மறுத்த முரளி தனது குடும்பத்தோடு கனடாவில் குடியேறினார். அவர் இப்போது கனடாவில் வசிக்கின்றார். ஆனால் இப்போது அவர் 'சுவிஸ் முரளி' எனவே அறியப்படுகிறார்.
தவறாக தான் கைது செய்யப்பட்டதற்கு நட்ட ஈடு கோரி முரளி தாக்கல் செய்த வழக்கில் வென்று, பெருந்தொகை பணத்தை நட்ட ஈடாக, கனடாவிலிருந்த போது பெற்றுக்கொண்டார் என்பது சுவாரஷ்யமான செய்தியாகும்.
அவ்ரோ குலம்
சுவிஸ் முரளி பதவி நீங்கி தனிவழி போன போதும், எல்.ரீ.ரீ.ஈ. சுவிட்ஸர்லாந்தில் நல்ல வளர்ச்சி கண்டது. சிலகால கூட்டுத் தலைமையின் பின் செல்லையா குலசேகர சிங்கம் அல்லது குலம் அல்லது அவரோ குலம் சுவிட்ஸர்லாந்து புலித் தலைவராக நியமிக்கப்பட்டார். குலம் எல்.ரீ.ரீ.ஈ.யின் பழைய அங்கத்தவர் இவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நெருங்கிய சகாவும் ஆவார்.
1978 செப்டெம்பர் இல் இரத்மலானையில் 'எயர் சிலோன் விமானத்தில் குண்டு வெடித்த சம்பவத்தில் தொடர்பு இருந்தது என்ற குற்றச்சாட்டின் பேரில், கைது செயய்யப்பட்டபின், குலம், அவ்ரோ குலம் என அழைக்கப்பட்டார்.
'2002 இல் கேபி நிர்ப்பந்தம் காரணமாக பதவி விலகியபின், குலத்தின் நிலைமை ஆட்டம் காணத் தொடங்கியது. வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ.யின் புதிய தலைவராக வந்த மணிவண்ணன் அல்லது காஸ்ட்ரோ, குலத்தை கேபியின் விசுவாசியாக கருதி அவரை ஒதுக்கத் தொடங்கினார். குலம், பிரபாகரனுடன் நெருக்கமான தனிப்பட்ட உறவை வைத்திருந்தமையால், காஸ்ட்ரோவால் குலத்தை பதவியிலிருந்து நீக்க முடியவில்லை. எனவே குலத்தை கஸ்ட்ரோ ஒதுக்கி, அப்துல்லா என்னும் இயக்கப்பெயர் கொண்டவரை முதன்மைப்படுத்தி அதிகாரத்தையும் வழங்கினார்.
அப்துல்லாவின் உண்மைப் பெயர் செல்லையா ஜெயபாலன். இவர் சுவிஸ் புலிகள் நிதிப்பொறுப்பாளராக ஆக்கப்பட்டார். இவரிடமே உண்மையான அதிகாரம் இருந்தது. குலம் பெயரளவில் மட்டுமே தலைவராக காணப்பட்டார். அதிகாரம் செலுத்த முடியாத நிலையில் குலம் இருந்த வேளையிலும், பெயரளவிலான தலைமைப் பொறுப்பிலிருந்தும் இவர் அகற்றப்பட்டார்.
இது நடந்தது மார்ச் 2009 இல் ஆகும். குலம் பதவியிலுருந்து அகற்றப்பட்ட சூழல்கள், தற்போது சுவிட்சர்லாந்தில் எல்.ரீ.ரீ.ஈ.யை சூழ்ந்துள்ள நெருக்கடியோடு தொடர்பானது ஆகும். 2007-2008 எல்.ரீ.ரீ.ஈ. 'இறுதியுத்தம்'; என பெயரிடப்பட்ட பெரும் நிதி சேகரிப்பு இயக்கமொன்றை வெளிநாடுகளில் நடத்தியது. இதிலும் சுவிட்ஸர்லாந்து முன்னணி வகித்தது. பொது சேகரிப்பு, விசேட சேகரிப்பு என பெருமளவு நிதி சேகரிக்கப்பட்டது.
ஆனால் 2009 ஆரம்பத்தில், ஆயுதம் வாங்குவதற்கு என இன்னொரு விசேட நிதி சேகரிப்பை தொடங்கும்படி சுவிஸ் புலிகளுக்கு காஸ்ட்ரோ அறிவுறுத்தல் வழங்கினார்.
காஸ்ட்ரோ இந்த முறையும் சுவிஸ் புலிகள் நிதிசேகரிப்பதில் முன்னணி வகிக்க வேண்டுமென்பதில் கவனமாக இருந்தார். ஆனால் குலம் இந்த விடயத்தில் காஸ்ட்ரோவுக்கு கடும் எதிர்ப்பை காட்டினார். முன்னர் விசேட சேகரிப்புக்காக பெற்றுக்கொண்ட கடன்கள் திருப்பிச் செலுத்தப்படவில்லை என்பதை குலம் சுட்டிக் காட்டினார். இன்னுமொரு விசேட சேகரிப்பு மக்களுக்கு தாங்க முடியாத சுமையாகிவிடும் என அவர் கூறினார்.
அப்துல்லா
போர் தீவிரமடைந்திருந்த நிலையில் பிரபாகரனுக்கும் குலத்துக்கும் இடையிலான நேரடி தொடர்புகள் தடைப்பட்டுப் போயிருந்தன. இதனால் காஸ்ட்ரோவுக்கும் ஐரோப்பாவிலிருந்த அவரது கையாளான நெடியவனுக்கும் குலத்தை பதவியிலிருந்து நீக்குவது சுலபமாக இருந்தது. மீண்டும் ஒரு கூட்டுத்தலைமை உருவாக்கப்பட்டது. புதிய நிதிசேகரிப்பு இயக்கம் ஜெயபாலன் அல்லது அப்துல்லாவினால் தொடக்கி நடத்தப்பட்டது. இதனால் சுவிஸ் புலி அமைப்பில் பிளவு ஏற்பட்டது. குலமும் அவரது விசுவாசிகளும் தள்ளி வைக்கப்பட்டு தனிமை படுத்தப்பட்டனர்.
அப்போது காணப்பட்ட சூழலின் காரணமாக அவசரமாக ஆயுதங்கள் வாங்குவதற்கென தொடக்கப்பட்ட விசேட நிதிசேகரிப்பு, புலி ஆதரவாளர்கள், விசுவாசிகளினால் மனதார ஏற்கப்பட்டது. அப்போது எல்.ரீ.ரீ.ஈ. , முல்லைத்தீவில், கடலோரமாக அமைந்த ஒரு ஒடுங்கிய துண்டு நிலத்தில் அடைபட்டுக் கொண்டு வந்தது. எதிரியை அழித்தொழிப்பதற்கான ஆயுதங்களை வாங்கவென கூறி வெளிநாட்டு புலிகள் நிதிசேகரிப்பு இயக்கத்தை நடத்தியபோது உணர்;ச்சி மேலிட்ட நிலையிலிருந்த புலம் பெயர்ந்தோர் நிதியை வாரி வழங்கினர்.
இது சுவிட்ஸர்லாந்தில் மட்டும் நடந்ததல்ல. தமிழர்கள் செறிவாக வாழ்ந்த ஒவ்வொரு நாட்டிலும் இது நடந்தது. எல்.ரீ.ரீ.ஈ.யின் வெளிநாட்டு அமைப்புகள் பரந்தளவில் விசேட நிதி சேகரிப்பு இயக்கத்தை நடத்தினர்.
இதற்காக பெருமளவிலான புலி ஆதரவாளர்கள் தமது பெயரில் வங்கிக் கடனைப் பெற்று ஆயுதம் வாங்கவென புலிகளிடம் கொடுத்தனர். சில இடங்களில் புலிகள் கடனுக்காக வட்டி தருவதாகவும் கூறி ஊக்குவித்தனர். இது வங்கிக்கு செலுத்தும் வட்டிக்கு மேலானதாகும்.
பொதுசன அபிப்பிராயம்
இவ்வாறு மார்ச் 2009- மே 2009 காலப்பகுதியில், வங்கிக் கடனாகவும், விசேட நிதி சேகரிப்பாகவும் பெருமளவு பணம் சேகரிக்கப்பட்டது. இதிலும் சுவிட்ஸர்லாந்து முன்னிலை வகித்தது. மூன்று, நான்கு மாதங்களில் வெளிநாட்டு புலிகள் பெரும் நிதி சேகரிப்பதில் வெற்றி பெற்றனர்.
எவ்வளவு தான் உணர்ச்சியோடு நீதி சேகரிப்பட்டபோதும், ஒரு சதம் கூட ஆயுதம் வாங்கப் பயன்படவில்லை என்பதுதான் கசப்பான யதார்த்தமாகும். இந்த இலட்சணத்தில் வன்னிக்கு ஆயுதம் அனுப்புவதைப்பற்றி பேசவேண்டுமா? ஆயுதம் வாங்கவென சேகரிக்கப்பட்ட பெருமளவு பணம் வெளிநாடுகளில் பயன்படுத்தப்படாமல் கிடந்த வேளையில் எல்.ரீ.ரீ.ஈ. முள்ளிவாய்க்காலில் இராணுவ ரீதியில் தோல்வியை தழுவி முழுதாய் அழிந்து போயிற்று.
இந்த நிலையில் தற்போதைய நெருக்கடிக்கான விதைகள், புலம்பெயர்ந்தோரிடையே காணப்பட்ட புலி மற்றும் புலிசார்பு சக்திகளிடையே விதைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. வங்கிக்கடன் மூலம் சேகரிக்கப்பட்ட பணம் எல்.ரீ.ரீ.ஈ. யுடன் தொடர்பான சுயநலமிகளின் பைகளுக்குள் போய்விட்டது. தமது பெயரில் கடன் பெற்ற தீவிர ஆதரவாளர்கள் கடன் செலுத்த முடியாது கஷ்டப்படுகின்றனர். கடனை திருப்பி செலுத்துவோம் என உத்தரவாதம் வழங்கிய பெருங் கைகளுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்கள் ஒளித்து விளையாடுகின்றனர்.
எல்.ரீ.ரீ.ஈ.யின் விசுவாசமான ஆதரவாளர்களாக இருந்த வெளிநாட்டு தமிழர்களின் எண்ணத்திலும் இதயத்திலும் வெறுப்பும் ஆத்திரமும்; பொங்குகின்றன. எல்.ரீ.ரீ.ஈ.யின் பப்படம் நொறுங்க தொடங்கியுள்ள சுவிட்சர்லாந்தில் நாம் காண்பது இதைத்தான். இந்த வகையில், வேறு எங்கும் உள்ள தமிழர்களைவிட சுவிஸ் தமிழர்கள் கூடுதலாக வருந்துகின்றனர். ஏனெனில் இவர்கள் தமது சக்திக்கு அப்பால் எல்.ரீ.ரீ.ஈ.க்கு நிதி வழங்கியுள்ளனர். இவர்களை புலித் தலைவர்கள் ஏமாற்றிவிட்டனர்.
DBS Jeyaraj can be reached at இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
(தமிழில்: ந.கிருஷ்ணராசா)

