mp3: எழிலனின் மனைவி ஆனந்தி சசிதரன் - பி.பி.சி தமிழோசை செவ்வி
இலங்கையில் உள்நாட்டு யுத்தத்துக்குப் பின்னர் அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள படிப்பினை மற்றும் நல்லிணக்கக் குழு முன்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய இடங்களில் இன்று சனிக்கிழமை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
ஆனந்தி சசிதரன் அவர்கள் இது தொடர்பாக தமிழோசைக்கு கொடுத்த செவ்வியினை இங்கு கேட்கலாம் ~ 18 செப்டம்பர், 2010
இந்த குழு முன்பு ஆஜாரான விடுதலைப்புலிகளின் திருகோணமலை அரசியற்துறை பொறுப்பாளரான எழிலனின் மனைவி ஆனந்தி சசிதரன், தன்னுடைய கணவர் எழிலன் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைவதை தான் கண்டதாகவும், அதன் பின்னர் அவர் குறித்து எவ்வித தகவலும் இல்லை என கூறியுள்ளார். அதே போன்று இன்னும் பல நூறு போராளிகளும் சரண் அடைந்ததாகவும் அவர்களையும் தனது கணவரையும் இந்த குழு கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு நகரங்களுக்குச் செல்வதோடு, இறுதி கட்ட யுத்தம் அரங்கேறிய நந்திக்கடல் பகுதிக்கும் படிப்பினை மற்றும் நல்லிணக்கக் குழு செல்லவிருக்கின்றனர்.
இந்தக் குழுவின் விசாரணைகள் பல பொதுமக்கள் முன்னிலையில் நடக்கின்றன என்றாலும், குறிப்பிட்ட இந்த விசாரணைகளுக்கு பிபிசி செய்தியாளர்கள் வந்து செய்தி சேகரிக்க அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது. மறுப்புக்கு காரணம் தொடர்பில் அரசாங்கம் விளக்கம் எதுவும் அளிக்கவில்லை. [நன்றி: பி.பி.சி தமிழோசை]

