ஊற்று

உண்மையிலேயே உடைகின்றதா தமிழரின் தேசியத் தலைமை?

[புதினப்பலகை] ப்ரல் மாதம் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் ஆளும் கட்சியான ஐ. ம. சு. முன்னணியில் இணைந்து போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

கடந்த காலங்களில் அரசாங்கத்துடன் இணைந்து இவர்கள் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் இவர்களுக்கு ஆசன ஒதுக்கீட்டை வழங்க கூட்டமைப்பின் தலைமை மறுத்துவிட்டதை அடுத்தே ஆளும் கட்சியில் இணைந்து தோ்தலில் போட்டியிட இவர்கள் தீர்மானித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேஸ்வரி, வன்னி மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவநாதன் கிஷோர் மற்றும் எஸ்.கனகரத்னம் ஆகியோரே ஆளும் கட்சியில் இணைந்து பொதுத் தோ்தலில் போட்டியிடவுள்ளனர்.

தங்கேஸ்வரி மட்டக்களப்பு மாவட்டத்திலும், கிஷோர் சிவநாதன் வன்னித் தோ்தல் மாவட்டத்திலும், கனகரட்ணம் யாழ்ப்பாணம் தோ்தல் மாவட்டத்திலும் போட்டியிடவிருக்கின்றார்கள்.

இதே வேளையில் - கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம்.கே.சிவாஜிலிங்கம், என்.சிறிகாந்தா, பத்மினி சிதம்பரநாதன் மற்றும் எஸ்.கஜேந்திரன் ஆகியோர் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பாக தோ்தல் களத்தில் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் அரசரப் பேச்சுக்கள் இடம்பெற்ற போதிலும் இன்று அல்லது நாளை இது தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகின்றது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை 26 ஆம் திகதிதான் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான இறுதித் தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

2001 ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது அதன் அடிப்படைகளாக இருந்த - தமிழர் தேசியம், தன்னாட்சி உரிமை, தமிழர் தாயகம் ஆகிய கொள்கைகளில் இருந்து கூட்டமைப்பு தடம் மாறி விட்டதாகக் குறி்ப்பிட்டு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அதிலிருந்து வெளியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் -

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம் மற்றும் சிறிகாந்தா ஆகியோர் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற புதிய கட்சியை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்டனர். புதிய கட்சியின் தலைவராக சிறிகாந்தா செயற்படுவார் எனவும், செயலாளராக சிவாஜிலிங்கம் இயங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

புதிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கில உள்ள ஐந்து மாவட்டங்களிலும் விக்கிரமபாகு கருணாரட்ணவின் இடதுசாரி விடுதலை முன்னணியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடவுள்ளது. ஏனைய 17 மாவட்டங்ளிலும் இடதுசாரி விடுதலை முன்னணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட சிவாஜிலிங்கம் -

“தமிழ் மக்களைக் கொலை செய்ய துணை போன இந்தியாவுக்கு உடந்தையாகவும் சோனியாவின் காங்கிரஸ் அரசாங்கத்தின் விருப்பத்திற்கேற்பவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இயங்கியது. இது தொடர்பான எந்தவொரு பகிரங்க விவாதத்திற்கும் நான் தயாராக இருக்கிறேன். இந்தப் போரை ஆரம்பித்தது இந்தியா தான் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவே கூறியிருந்தார்.

மாவிலாறு பிரச்சினையில் போர் தொடங்கிய தருணத்தில் - தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தூதுக் குழு இந்தியாவுக்கு சென்றது. எனினும் பிரதமர் மன்மோகன் சிங்கை அவர்களால் சந்திக்க முடியவில்லை. அதே ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழு இந்தியப் பிரதமரை சந்தித்தது. அதன் பின்னர் கிட்டத்தட்ட 28 மாதங்களாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தூதுக்குழு இந்தியாவில் காலடி எடுத்து வைக்கவில்லை.

2007ஆம் ஆண்டில் சுமார் 15 வரையான வெளிநாடுகளுக்குச் சென்று போரை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்த இரா.சம்பந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராசா ஆகியோர் இந்தியாவுக்கு மட்டும் செல்லாதது ஏன்?

இந்திய பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெறச் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஏமாற்று முயற்சிகளிலே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பகடைக்காய்களாக பயன்படுத்தப்பட்டது. இவர்களும் அதில் விரும்பியே கலந்து கொண்டார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

அதே வேளை இங்கு கருத்து வெளியிட்ட சிறிகாந்தா -

“சோனியா அரசுக்கு விசுவாசமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழு இருக்க வேண்டும் என இந்தியா விரும்புகிறது.

கிளர்ச்சியாளர்கள், தட்டிக்கேட்பவர்கள், இந்தியாவின் துரோகத்தைப் பற்றி கடந்த காலத்தில் பேசியவர்கள் இருக்கக் கூடாது என்பதில் இந்திய காங்கிரஸ் அரசாங்கம் தீர்மானமாக இருக்கிறது” என்று குறிப்பட்டார்.

ஊற்றில் அண்மையில் பிரசுரமானவை