'பௌத்த பிக்குகளுக்கு சிறிலங்கா அரசு மிரட்டல்'
[புதினப்பலகை]சிறிலங்காவில் இருந்து தேரவாத பெளத்தத்தை அழித்தொழிக்க முயல்வதன் மூலமாக நாட்டின் அரசியலமைப்பை மீறி அரசு செயற்படுகின்றது என எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன.
நாட்டின் நான்கு முக்கிய பெளத்த மத பீடங்களில் முக்கிய பீடம் ஒன்றில் இருந்து பிரிந்து சென்று விடப் போவதாக பிக்குகள் குழு ஒன்று மகாநாயக்க தேர்களை மிரட்டி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மல்வத்த பீடதிபதியான அதி வண. திப்பெட்டுவேவ சிறி சுமங்கல தேரருக்கு எதிராகவே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக ரணில் கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கூறினார்.
கடந்த வியாழக்கிழமை ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மகாநாயக்க தேரர்களின் கூட்டத்தை நடத்தக் கூடாது என்ற முன்னணிப் பிக்குகள் சிலர், இல்லையேல் தாங்கள் பிரிந்து சென்று விடுவர் என்றும் எச்சரித்தனர்.
நாட்டின் அரசியலமைப்பின் மூலம் பெளத்த மதத்தைப் பாதுகாக்க வேண்டிய அரசே இந்த மிரட்டல்களின் பின்னணியில் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் கூறுகிறார்.
“மல்வத்த பீடத்திற்குச் சொந்தமான பெளத்த ஆலயங்களைப் பிரித்தெடுத்து மற்றொரு பீடத்துடன் சேர்த்துவிடப் போகிறார்கள் என்று மல்வத்த பீடத்தைச் சேர்ந்த முன்னணி பிக்குகள் சிலர் எச்சரித்துள்ளனர். அவர்களின் இந்த எச்சரிக்கை அரசின் தூண்டுதலின் கீழேயே செய்யப்பட்டது. மல்வத்தை பீடத்தை பிரித்து மற்றொரு பீடத்தை உருவாக்குவதென்பது அரசியலமைப்புக்கு முரணானது” என்றார் ரணில்.
பல்கலைக்கழக வேந்தர் பதவி உள்ளிட்ட எந்வொரு அரச பதவியிலும் இருப்பதற்கு குறிப்பிட்ட அந்தப் பிக்குகளுக்கு உரிமை இல்லை என்று ரணில் தெரிவித்தார்.
“சிறிலங்காவில் பெளத்த மதத்தை அழிக்கும் பாதையில் அரசு பயணித்துக் கொண்டிருக்கிறது. பிக்குகள் அச்சுறுத்தப்படுகிறார்கள். கண்டியுடன் [மல்வத்த பீடம்] இணைந்து செயற்பட்டால் குண்டு போட்டு அழிக்கப்படுவார்கள் என்று பிக்குகளுக்குச் சொல்லப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் நாம் கண்டிக்கிறோம்” என்கிறார் ரணில்.
நாட்டின் மிகவும் மரியாதைக்குரிய பிக்குமார்களை யார் மிரட்டினார்கள் என்பதை அறியும் உரிமை, பெளத்த மத பக்தர்களுக்கும் நாட்டின் குடிமக்களுக்கும் இருக்கிறது என்றும் அவர் கூறுகின்றார்.
இருந்தாலும், பெளத்த மதபீடங்களின் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதற்கும் தனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது.
பிக்குகள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு குறித்துக் கவனம் செலுத்திய பின்னர் பெளத்த பீடாதிபதிகளே கூட்டத்தை ஒத்தி வைத்தார்கள் எனத் தெரிவித்தார் சமய விவகார அமைச்சர் பண்டு பண்டாரநாயக்க.
எதிர்க் கட்சிகளின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவின் கைது தொடர்பில் கூடிப் பேசி, அவரை விடுவிக்குமாறு கோரிக்கை முன்வைப்பதற்காகவே மகாநாயக்கர்களின் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தொடர்புபட்ட செய்தி:
அதிகார வேட்கையில் மிரட்டல்களுக்குள்ளாகும் பௌத்த பிக்குகள்
நவம்பர் 2009 இல் பர்மாவின் அதிபதி ஜெனரல் தான் ஷ்வே கொழும்பு வந்த போது இடம் பெற்ற ஆர்ப்பாட்டம். ஐக்கிய சோசலிச முன்னணி தலவரும், தொழிற்சங்க வாதியும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவருமான சிறிதுங்க ஜயசூரிய தலமையில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தில் - மகிந்த ராஜபக்ச மற்றும் பர்மா அதிபர் தான் ஷ்வே ஆகியோரை எதிர்த்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
பல பௌத்த பிக்குகளை படு கொலை செய்த பர்மா அதிபருக்கு எதிராக இடம் பெற்ற இந்த நிகழ்வில் சிங்கள பௌத்த மதகுருமார் பங்கேற்பதனை தடுக்கவும் சிறிலங்கா அதிபர் மிரட்டல்கள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

