கொதிப்பு அடைகின்றது யாழ்ப்பாண தேர்தல் களம்: 27 அணிகள் களத்தில்
[ புதினப்பலகை ] சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் யாழ். மாவட்டத்தில் முன்னொரு போதும் இல்லாத வகையில் 15 அரசியல்கட்சிகளும், 12 சுயேட்சைக் குழுக்களுமாக மொத்தம் 27 அணிகள் போட்டியில் குதித்துள்ளன.
ஒன்பது ஆசனங்களுக்காக இந்த அணிகளின் சார்பில் மொத்தம் 324 வேட்பாளர்கள் மோதுகின்றனர்.
இன்று நண்பகலுடன் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கால எல்லை முடிவடைந்தது.
இதையடுத்து 16 அரசியல் கட்சிகள் மற்றும் 16 சுயேட்சைக் குழுக்களின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட 32 வேட்புமனுக்களையும் யாழ்.மாவட்டத் தெரிவத்தாட்சி அதிகாரி பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டார்.
இதன் போது 4 சுயேட்சைக் குழுக்களினதும் சிறிலங்கா தேசிய முன்னணி என்ற அரசியல் கட்சியினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இதையடுத்து 27 அணிகள் போட்டியில் நிற்பது உறுதிசெய்யப்பட்டது.
* தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
* அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
* ஐ.தே.க.
* தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (சிவநேசதுரை சந்திரகாந்தன்)
* தமிழர் விடுதலைக் கூட்டணி (ஆனந்தசங்கரி)
* ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (மகிந்த ராஜபக்ச)
* சோசலிச சமத்துவக் கட்சி
* அனைவரும் மக்கள் அனைவரும் மன்னர்கள் கட்சி
* ஜனசெத பெரமுன
* ஈரோஸ்
* ஐக்கிய சோசலிசக் கட்சி
* இடது சாரி விடுதலை முன்னணி
* தேசிய ஜனநாயக கூட்டணி
* ஈ.பி.ஆர்.எல்.எவ்-பத்மநாபா அணி
* ஜனநாயக ஐக்கிய முன்னணி
என 15 அரசியல் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் வேட்பாளர்களைக் களமிறங்கியுள்ளன.
இன்றைய தினம் - அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் பிரபல பொருளியல் ஆசிரியர் வரதராஜன் தலைமையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ. கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் மற்றும் கலாநிதி மனோகரன் கெனடி, தமிழ் ஆசிரியர் குழந்தைவேலு உள்ளிட்ட பலரும் இடம்பெற்றுள்ளனர்.
அதே வேளை - தமிழர் விடுதலைக் கூட்டணி ஆனந்தசங்கரி தலைமையிலும், இடதுசாரி விடுதலை முன்னணி சிறிகாந்தாவின் தலைமையிலும், ஈ.பி.ஆர்.எல்.எவ்.-பத்மநாபா அணி சிறிதரன் தலைமையிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
ஈ.பி.டி.பி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகிறது.
டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் 8 ஈ.பி.டி.பி.யினரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் மூவரும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஒருவரும் போட்டியிடுகின்றனர்.
இதற்கிடையே, திருகோணமலை மாவட்டத்திலும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளது.
திருகோணமலை நகரசபைத் தலைவர் கௌரிமுகுந்தன் தலைமையில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

