மகிந்த ராஜபக்ச சிறிலங்காவின் ஆறாவது அதிபர்: அதிகாரபூர்வ அறிவிப்பு
[ புதினப்பலகை ]சிறிலங்காவின் ஆறாவது நிறைவேற்று அதிகாரமுள்ள அரச அதிபருக்கான தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றிருப்பதாக அதிககாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (புதன்கிழமை, 27 சனவரி 2010) மாலை தேர்தல் ஆணையாளர் தயானந்த திசநாயக்க இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்தத் தேர்தலில் மகிந்த ராஜபக்ஸ 6,015,934 வாக்குகளும், சரத் பொன்சேகா 4,173,185 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
இதன்படி 57.88 வீத வாக்குளைப் பெற்ற மகிந்த ராஜபக்ச சுலபமான முறையில், வெற்றி பெற்றுள்ளார்.
சரத் பொன்சேகாவுக்கு 40.15 வீத வாக்குகளே கிடைத்தன.
நுவரெலிய, யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் மட்டுமே சரத் பொன்சேகா அதிகளவு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஏனைய மாவட்டங்களில், மகிந்த ராஜபக்ஸவுக்கே பெருவாரியான வாக்குகள் கிடைத்துள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகப்படியாக 90,394 வாக்குகள் வித்தியாசத்திலும், அம்பாறை மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 6193 வாக்குகள் வித்தியாசத்திலும் சரத் பொன்சேகா வெற்றி பெற்றிருந்தார்.
அதேவேளை மகிந்த ராஜபக்ச கம்பஹா மாவட்டத்தில் அதிகபட்சமாக 284,210 வாக்குகள் வித்தியாசத்திலும், குறைந்தபட்சமாக பதுளையில் 38,744 வாக்குகள் வித்தியாசத்திலும் சரத் பொன்சேகாவைத் தோற்கடித்துள்ளார்.
இந்தத் தேர்தலில் போட்டியிட்ட ஏனைய வேட்பாளர்களில் எவருமே 1 சதவீத வாக்குளைக் கூடப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்பதாமிடத்தைப் பெற்ற சிவாஜிலிங்கத்துக்கு 9662 வாக்குகளே கிடைத்தன.
ஏனைய இடதுசாரி வேட்பாளர்களான சிறிதுங்க ஜெயசூரிய, விக்கிரமபாகு கருணாரட்ண, விஜே டயஸ் போன்றோர் மிகக் குறைந்தளவு வாக்குகளையே பெற்றனர்.

