'சிறிலங்கா ஆட்சியாளர்களை பாதுகாக்க இந்தியா முற்படுகின்றது'- கவிஞர் புலமைப்பித்தன்
[ புதினப்பலகை]சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினை உலகுக்கு எடுத்துரைக்கும் தமிழ் இனப் படுகொலைகள் பற்றிய விபரம் அடங்கிய ஆவணப் புத்தகத்தின் வெளியீடு கடந்த 23ஆம் திகதி மாலை சென்னையில் வெளியிடப்பட்டது.
1956 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சிறிலங்கா அரசால் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளின் விபரங்கள் அடங்கிய புத்தகமே ‘தமிழினப் படுகொலைகள் : 1956 - 2008’ என்ற தலைப்பில் ஆவணமாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரின் மத்தியில் அமைந்துள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் டிசம்பர் 23 ஆம் திகதி, புதன் மாலை 6 மணிக்கு இடம்பெற்ற நிகழ்வில் தமிழக முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன் புத்தகத்தை வெளியிட்டு வைத்தார்.
பின்னர் அங்கு - சென்னை உயர் நீதிமன்ற சட்டவாளர் அமைப்பின் தலைவர் பால் கனகராஜ், பி.யூ.சி.எல். மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் சட்டவாளர் திருமதி சுதா ராமலிங்கம், ‘தி வீக்’ ஆங்கில வார ஏட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர் திருமதி கவிதா முரளிதரன், ஓவியர் புகழேந்தி, ஈழ ஆர்வலர்கள் ஜனார்த்தனன், கிருபானந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். அந்த உரைகளின் தொகுப்பு கீழே:
அக்னி சுப்பிரமணியன்:
சிறிலங்காவில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் இதுவரை மக்கள் மத்தியில் சரிவரக் கொண்டு செல்லப்படாதது பெரிய தவறு.
இந்தப் புத்தகத்தில் 1956ஆம் ஆண்டு முதல் இடம்பெற்ற 160 படுகொலைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
இவற்றில் ஒரு ஐந்து படுகொலைகளைப் பற்றிப் படித்தாலேயே ஈழத்தில் தமிழ் இளைஞர்கள் ஏன் ஆயுதம் ஏந்தினார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
அந்த அளவிற்கு அங்கு அரச பயங்கரவாதம் இடம்பெற்றுள்ளது.
ஆனால், தன் வளத்தையும் 'அரசு' என்கிற அதிகாரத்தையும் பயன்படுத்திப் பிரபாகரனைப் பயங்கரவாதி என்று சொல்கிறது சிங்கள அரசு.
ஈழத் தமிழர்களின் விடுதலைப் பேராட்டத்தைப் "பயங்கரவாத"மாக அனைத்துலக சமூகத்தின் முன் கொண்டு சென்ற சிறிலங்கா அரசு, அதனைத் தனக்குச் சாதகமாக்கி வன்னியில் இருந்த மூன்று லட்சம் மக்கள் மீதும் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது.
மனித வரலாற்றில் எந்த ஒரு இனமும் ஈழத் தமிழ் இனம் போன்று அவலங்களைச் சந்தித்ததில்லை.
மனித உரிமை மீறல்கள் என்றால் அவை சிறிலங்காவில் நடந்தவைகள் தான்.
கிடைசி மூன்று நாள் சண்டையின் போது - ஒரு சதுர கிலோ மீற்றருக்கும் குறைவான பிரதேசத்தினுள் வைத்து 3 லட்சம் மக்கள் மீது சரமாரியான குண்டுத் தாக்குதலை சிறிலங்கா அரசு நடத்தியிருக்கிறது.
ஆனால் 2009 ஆம் ஆண்டு நடந்த இந்தப் படுகொலைகள் இந்தப் புத்தகத்தில் சேர்க்கப்படவில்லை; 2008ஆம் ஆண்டு வரை இடம்பெற்றவை மட்டுமே பதியப்பட்டுள்ளன.
ஈழத்தில் நடந்த இந்த அத்து மீறல்களை, படுகொலைகளை வடக்கு – கிழக்கு மனித உரிமைகள் செயலகம் ஆவணப்படுத்தி இருந்தது.
இன்றைய நிலையில் அவர்கள் சிறிலங்காவில் இருக்க முடியாமல் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டார்கள்.
செயலகத்தின் முக்கிய உறுப்பினர்களின் அனுமதி பெற்று ‘மனிதம்’ – மனித உரிமைகள் அமைப்பு இந்தப் புத்தகத்தை வெளியிடுகிறது; இது ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய புத்தகம்.
இதுவரை இப்படியொரு ஆவணத்தைத் தமிழக மக்களிடம் கொண்டு சென்று சேர்க்காதது மிகப் பெரும் தவறு; இந்தப் புத்தகம் ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். தமிழர்களிடம் மட்டுமல்ல; உலகின் எல்லாச் சமூகத்தினரிடமும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும்.
தற்போது ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளில் வெளியிடப்படுகிறது. மொழி பெயர்ப்பாக அல்லாமல் இரு மொழிகளிலும் தனித் தனியே எழுதப்பட்டு வெளியிடப்படுகிறது.
இந்தப் புத்தகத்தைப் படிப்பது மட்டுமன்றி அதிலுள்ள செய்தியை ஒவ்வொரு தமிழனிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்.
சட்டவாளர் திருமதி சுதா ராமலிங்கம் (பி.யூ.சி.எல். மனித உரிமைகள் அமைப்பின் தலைவர்):
கொசோவா, செச்சினியா போன்ற நாடுகளில் இனப் படுகொலைகள் நடந்தால் அதற்கு உலகம் முழுவதும் உடனடியாகக் குரல் கொடுக்கும்.
ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக ஒரு விசாரணைக் குழு அமைக்கும்.
மேற்கு நாடு ஒன்றில் இத்தகைய சம்பவம் இடம்பெற்றால் அது உடனடியாக அனைத்துலகத்தின் முன்பாகப் பொதுமைப்படுத்தப்படும்; மேற்குலக ஊடகங்கள் அவற்றைப் பெரிதாகப் பேசும்.
ஆனால், நமது விடயத்தில் நமது ஊடகங்கள் அவற்றைச் செய்வதில்லை; அப்படிச் செய்யும் திறமை அவற்றுக்கு இல்லை என்று நினைக்கிறேன்.
ஐரோப்பிய நாடொன்றில் மிகச் சிறிய விபத்தாக இருந்தாலும் அது பெரிதாக்கப்படும். ஆனால், கீழை நாடுகளில் நடக்கும் பெரும் குற்றங்கள் கூடக் கண்டுகொள்ளப்படுவதில்லை.
கீழைத் தேசங்களில் நடக்கும் விடயங்கள் மேற்குலகின் பொருளாதாரத்தில் ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தினால் தவிர அவை குறித்து மேற்கு கவனம் செலுத்துவதில்லை; ஐ.நா. சபை கூட இதற்கு விதிவிலக்கு அல்ல.
சிறிலங்கா அரசு செய்த கொலைகளைப் பயங்கரவாதமாகவே நாம் பார்க்க வேண்டும்.
அந்தக் கொலைகளுக்குப் பொறுப்புக் கூறும் கடமை சிறிலங்கா அரசுக்கு இருக்கிறது; அதனை இந்த நூல் மேலும் வலியுறுத்துகிறது.
ஓவியர் புகழேந்தி:
இந்தப் புத்தகம் ஒரு மிகச் சிறந்த ஆவணம்.
திட்டமிட்டு சிங்களம் மேற்கொண்ட படுகொலைகளை வரலாறாகப் பதிவு செய்துள்ளது இந்தப் புத்தகம்.
ஆனாலும், கொல்லப்பட்டவர்களின் விபரங்களை முழுமையாக எடுக்க முடியவில்லை என்பதையும் புத்தகம் பதிவு செய்கிறது.
குடும்பம் குடும்பமாகக் கொல்லப்பட்டோர் மற்றும் கொல்லப்பட்டுவி்ட்ட ஆயிரக்கணக்கானோரின் உறவினர்கள் உலகெங்கும் சிதறிச் சென்று விட்டமை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு இந்த நூல் எப்போதோ வந்திருக்க வேண்டும்; ஆனால், எப்போதும் போல இப்போதும் தமிழகம் காலம் தாழ்த்தியே விழித்துக் கொண்டுள்ளது.
சொந்த வரலாறு மறக்கடிக்கப்பட்ட எந்த ஒரு இனத்தாலும் பேராட்டம் நடத்த முடியாது.
அந்தப் பழைய வரலாற்றை மறக்க விடாது செய்யும் பதிவாக இந்தப் புத்தகம் ஆவணப்படுத்துகிறது.
1956 முதல் படுகொலைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து ஈழத்தில் ஊர்களின் பெயர்கள் அந்தப் படுகொலைகளின் வழியாகவே தான் அறியப்படுகின்றன.
ஈழத்தில் நான் பயணம் செய்த போது ஒவ்வொரு இடத்திலும் படுகொலைகள் பற்றிய செய்திகளைக் கேட்க முடிந்தது.
அங்கு ஒவ்வொரு மனிதனிடமும் ஆயிரக்கணக்கான கதைகள் புதைந்திருப்பதைக் காண முடியும்; அவர்கள் தமக்கு நடந்த கொடூரங்களைச் சொன்ன போது நான் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன்.
இவை எல்லாவற்றையும் மிஞ்சுகிற அளவில் 2009 படுகொலைகள் நடந்துள்ளன; அதனையும் ஆவணப்படுத்த வேண்டும். அதையும் சேர்த்து வெளியிடும் போது தான் "தமிழினப் படுகொலைகள்" பற்றிய பதிவு முழுமை பெறும்.
வன்னியில் நடந்த இறுதிக் கட்டப் போரின் பின்னர் ஈழப் போராட்டம் முடிந்து விட்டதாக சிறிலங்கா அரசு சொன்னாலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் போராட்டத்தை இந்த உலகம் பார்த்து நிற்கிறது.
"நீங்கள் புலம் பெயரக் காரணமானது எது என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. அதற்கான தீர்வு எட்டப்படுவதை நீங்கள் ஒருபோதும் புறந்தள்ளி விடாதீர்கள்" என்று நான் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது எல்லாம் தமிழ் மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
எழுபதுகளில் முடிவுக்கு வந்தது அறவழிப் போராட்டம்; 2009 ஆம் ஆண்டு ஆயுதப் பேராட்டம் முடிவுக்கு வந்தது; ஆனால், போராட்டங்கள் தொடங்கப்பட்டதற்கான காரணங்கள் இன்னும் அப்படியே தான் இருக்கின்றன.
இன்று - அந்தக் காரணங்கள் இன்னும் கூர்மைப்படுத்தப்பட்டுள்ளன.
இலக்கு அடையப்படும் வரை போராட்டம் தொடரும். அந்த மக்களுக்கு விடிவு வேண்டும். 50 ஆண்டுகளாக அவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும், விடை கிடைக்க வேண்டும்.
எனவே நிச்சயம் பேராட்டம் தொடரும்; அது வெற்றியும் பெறும்.
அந்தப் போராட்டத்தை வெற்றி அடையச் செய்கிற பொறுப்பு எம் எல்லோருக்குமே உள்ளது. அந்த வகையில்தான் இந்த நூல் வெளிவருகிறது.
திருமதி கவிதா முரளிதரன் (ஊடகவியலாளர், ‘தி வீக்’ ஆங்கில வார ஏடு) :
ஈழத்தில் நடந்த படுகொலைகளுக்கு சிறிலங்கா மற்றும் இந்தியா நாடுகள் மட்டுமே பொறுப்பாளிகள் அல்ல; தமிழகமும் அதற்கு பொறுப்பாளி தான்.
அங்கு படுகொலைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது தமிழகம் காத்திரமான எந்த எதிர்வினையும் ஆற்றாது இருந்தது.
எமது கைகளும் இரத்தம் படிந்து போய்த் தான் இருக்கின்றன. அந்தக் கறைகளை நம்மால் ஒருபோதுமே கழுவ முடியப் போவதில்லை; ஆனால், இனிமேலாவது எம் மீது இரத்தக் கறை படியாமல் இருப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.
சிறிலங்காவில் போர் முடிந்து விட்டபோதும் அங்கு தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறை இன்னும் தொடர்கிறது; போருக்குப் பின்னர் தான் ஊடகங்களின் மீது அங்கு கடும் அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
கடந்த ஒரு வருட காலத்தி்ல் மட்டும் 15 ஊடகவியலாளர்கள் உயிர்ப் பயம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்கள்.
இனியாவது எமது எதிர்ப்பைத் தீவிரப்படுத்த வேண்டும். அதற்கான கருவியாக இந்தப் புத்தகத்தைப் பயன்படுத்த வேண்டும்.
இனியாவது எமது கைகளில் இரத்தக் கறைகள் படியாது பார்த்துக் கொள்வோம்.
சட்டவாளர் பால் கனகராஜ் (தலைவர், சென்னை உயர் நீதிமன்ற சட்டவாளர் அமைப்பு):
இந்தப் புத்தகத்தை 2010 ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்; 2009 படுகொலைகளையும் சேர்த்து அப்போது ஒரே புத்தகமாகக் கிடைத்திருக்கும்.
"தமிழினப் படுகொலைகள்" என்ற இந்தப் புத்தகத்தை வெளியிட்டது போன்றே, ‘தமிழினத் துரோகிகள்’ என்று ஒரு புத்தகத்தையும் ‘மனிதம்’ அமைப்பு வெயியிட வேண்டும்; அதற்கு இன்னும் அதிகம் வரவேற்புக் கிடைக்கும்.
இப்போது உள்ள நிலைமையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து செயற்படுவதே தேவையானது.
30 ஆண்டுகளாகத் தமது கைகளில் வைத்திருந்த ஒரு பொக்கிசத்தைத் தவறவிட்ட மக்களுக்கு நாம் எப்படி உதவப் போகிறோம்?
வதைபடும் அந்த மக்களுக்காக நாம் என்ன செய்யப் போகிறோம்?
இன்றைய இளைஞர்களிடம் போராட்டக் குணம் இல்லை; அவர்கள் போராடுவதற்கு முன்வரவேண்டும்.
நாம் எல்லோரும் கூடிப் பேசி ஈழத் தமிழர்களுக்காக என்ன செய்யவது என்று முடிவு செய்ய வேண்டும்.
ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா விடுதலை பெற்றது போன்று சிங்களத்திடம் இருந்து தமிழர்களும் விடுதலை பெறவேண்டும்; பெறுவார்கள்.
புலவர் புலமைப்பித்தன்:
நம்பிக்கையைக் கைவிடாதே, அது தான் வெற்றியின் முதற்படி என்றார் அறிஞர் அண்ணாத்துரை; அதுதான் என் முன் இப்போது தெரிகிறது.
தந்தை பெரியாரின் நினைவு நாளான இன்று, ‘தம்பி’க்குத் தாராளமாகக் கைகொடுத்த தலைவர் எம்.ஜி.ஆர். நினைவு நாளான இன்று - இந்தப் புத்தகத்தை அக்னி சுப்ரமணியன் வெளியிட்டுள்ளமை சிறப்பு.
இந்த இடத்திற்குத் 'தமிழ் நாடு' என்று பெயர் வைத்தது குறித்து அண்ணா மீது எனக்கு வருத்தம் உள்ளது: ஏனெனில் இங்கு தமிழர்கள் மிகக் குறைவு; இந்தியர்கள் தான் பெரும்பாலானவர்கள்.
வெட்கமில்லை, யாருக்கும் வெட்கமில்லை என்றார் பராதிதாசன். அந்த நிலையில்தான் நாமும் இப்போது இருக்கிறோம். தமிழினம் விரோதத்தால் வீழ்த்தப்படவில்லை; அது துரோகத்தால் வீழ்த்தப்பட்டது.
இதற்காக நாம் யாரைக் குற்றஞ்சாட்டுவது...? நாம் ஒவ்வொருவருமே குற்றவாளிகள் தான். ராஜபக்சவுக்கு முன்னர் நம்மைத் தான் விசாரிக்க வேண்டும்.
நாம் இதுவரை மத மாற்றம் பற்றித் தான் கேள்விப் பட்டிருக்கிறோம்; இங்கு தமிழ் நாட்டில் ஒரு இன மாற்றமே நடைபெற்றுள்ளது. இங்கு தமிழன் தமிழனாக இல்லை.
ஒர் இனத்தையே அழித்த பின்னர் அந்த இனத்தின் மொழிக்கு என்ன விழா வேண்டி இருக்கிறது...? ஈழ நிலமே இரத்தத்தால் செம்மையாகிக் கிடக்கையில் செம்மொழிக்கு என்ன ஆராய்ச்சி வேண்டிக் கிடக்கிறது...?
உண்மையானவர்கள் இப்போது செய்ய வேண்டியது தமிழ் ஆராய்ச்சி இல்லை, தமிழன் பற்றிய ஆராய்ச்சி தான். தமிழன் ஏன் இப்படி இருக்கிறான் என்பது தான் செய்ய வேண்டிய ஆராய்ச்சி.
ஒரு இலட்சம் பேர் இறந்த பின்னால் சிறிலங்கா அரசு மட்டுமா அதற்குக் குற்றவாளி...? இந்திய அரசும் தான் குற்றவாளி. இன்னும் சொல்லப் போனால் இந்தியாவே அதிக குற்றவாளி.
தனித்துப் போராடிப் புலிகளை வெல்லும் திறன் இலங்கை இராணுவத்திற்கு இருக்கிறதா...? அந்தப் போரை முன்னெடுத்ததே இந்திய அரசுதான்.
புலிகள் அடியோடு இருக்கக்கூடாது; என்ன ஆயுதம் வேண்டுமானாலும் மக்கள் மீது பயன்படுத்துங்கள் என்று துணை நின்றது இந்தியா தான்.
ஒக்டோபர் மாதமே தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவியை விட்டு விலகி இருந்தால் டில்லியில் ஒர் அரசு இருந்திருக்குமா?
டில்லியில் ஒர் அரசு இல்லாது போயிருந்தால் ஈழத்தில் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டிருப்பார்களா...?
அன்று தமது பதவிகளில் இருந்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகி மைய அரசை நீக்கி இருந்தால், இடைக்கால அரசு மட்டுமே இருந்திருக்கும்.
ஈழத்தில் ஒரு இலட்சம் பேர் அப்போது கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். ஓர் இடைக்கால அரசு அதற்கு ஆதரவு அளித்திருக்காது.
இப்போது நான் கேட்கிறேன், அந்த மைய அரசு தொடர்ந்தும் பதவியில் இருந்ததற்கு யார் பொறுப்பு...? அந்த மைய அரசை யார் முட்டுக் கொடுத்துத் தாங்கினார்களோ அவர்களே ஈழத்தில் நடந்த கொலைகள் அனைத்துக்கும் காரணம்.
இப்போது ஈழத்தில் எல்லோரையும் முடித்து விட்டோம் என்கிறது சிறிலங்கா அரசு; தொடங்கிய ஒன்று முடியும், முடிந்த ஒன்று தொடங்கும். ஈழம் விடுதலை பெறும். நான் உயிருடன் இருக்கும் போதே ஈழம் விடுதலை பெறும்.
ஒரு இலட்சம் பேரைக் காவு கொடுத்த ஈழப் போர் உலகமெங்கும் பரந்திருக்கிற தமிழர்களால் அனைத்துலக சமூகத்தின் முன் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ஈழத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், பொன்சேகா – ராஜபக்ச மோதலால் இந்த உலகுக்கு விரைவில் தெரியவரும். அப்போது அவர்கள் அனைத்துலக சமூகத்தின் விசாரணைகளின் முன்பாக நிறுத்தப்படுவார்கள்.
இந்த விசாரணைகளில் இருந்து சிறிலங்கா ஆட்சியாளர்களை இந்தியா பாதுகாக்க முற்படுகின்றது. ஆனால், இனியாவது இந்தியா திருந்த வேண்டும்; அதற்கு ஏற்ற வகையில் இந்தியா நடந்துகொள்ள வேண்டும்.
தமிழீழத்தின் விடுதலை தான் இந்தியாவுக்குப் பாதுகாப்பானது. ஒன்றுபட்ட சிறிலங்காவால் இந்தியாவிற்கு ஒருபோதும் பாதுகாப்பு இல்லை.
இந்தியாவில் இருந்து நாம் (தமிழ்நாட்டுத் தமிழர்கள்) ‘விலகிச் செல்ல’ மாட்டோம்; ஆனால், இந்தியா எங்களை விலக்கி விடக்கூடாது.
நண்பர்களே கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள் - இந்தியா எங்களை ‘விலக்கி’ விடக்கூடாது; இந்தியா உணர்ந்து செயற்பட வேண்டும்.

