ஊற்று

"நடமாட்ட அனுமதி": உலகத் தமிழ் அமைப்புக்கள் கருத்தில் எடுக்குமா?

[புதினப்பலகை] இன்று முதல் சுதந்திர நடமாட்ட அனுமதி; ஆனால், அனைத்து தடுப்பு முகாம் மக்களுக்கும் அல்லவாம்: உலகத் தமிழ் அமைப்புக்கள் கருத்தில் எடுக்குமா?

வுனியா தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் இன்று முதல் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ள போதும், அந்த அனுமதி தடுத்து வைக்கப்பட்டுள்ள எல்லா மக்களுக்கும் அல்லவாம்.

O121camp.jpg

அத்தோடு - வெளியே சென்று வர அனுமதிக்கப்படும் முகாம்களில் உள்ள தமிழர்கள் கூட, வெளியே செல்லுவதற்கு முன்னதாக தடுப்பு முகாம்களில் உள்ள படையினரின் பிரத்தியேகச் செயலகங்களில் அதற்கான அனுமதிப் பத்திரத்தைப் பெற்ற பின்பே வெளியே செல்ல முடியும்.

தடுப்பு முகாம்களில் உள்ளவர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள விசேட அடையாள அட்டையைக் காண்பித்து இந்த அனுமதியைப் பெற முடியும் என்று சிறிலங்கா மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஹால்டீன் அறிவித்துள்ளார்.

இது இப்படியிருக்க - வவுனியாவில் உள்ள அனைத்து தடுப்பு முகாம்களில் உள்ள மக்களுக்கும் வெளியே சென்று வருவதற்கான அனுமதி வழங்கப்படாது என்றும் அவர் மேலும் கூறியிருக்கிறார்.

அருணாசலம், கதிர்காமர், இராமநாதன் முகாம்கள் மற்றும் "மெனிக்பாம்" வலயம்-5, வலயம்-6 மறறும் வலயம்-6-ஈ முகாம்களில் உள்ளோர் மட்டுமே வெளியே சென்று வர அனுமதிக்கப்படுவார்கள்.

"மெனிக்பாம்" முகாமின் ஏனைய வலயங்களில் இருப்போருக்கு இந்த அனுமதி வழங்கப்படாது.

அத்தோடு - தடுப்பு முகாம்களுக்கு வெளியே செல்வோர் தமது உறவினர், நண்பர்களின் வீடுகளுக்குச் செல்வதானால் - அவர்களின் பெயர், முகவரிகளையும் அந்த பிரத்தியேக இராணுவச் செயலகத்தில் கொடுத்த பின்பே வெளியே செல்வதற்கான அனுமதிப் பத்திரத்தைப் பெற முடியும்.

சிறிலங்கா அரச கணக்கின்படி வவுனியா தடுப்பு முகாம்களில் தற்போது 128,000 வரையானோர் இருக்கின்றனர்.

இது இவ்வாறு இருக்க - இந்த "நடமாட்ட சுதந்திரம்" என்பது, எதிர்வரும் அரச அதிபர் தேர்தலில் வாக்குப் பெறுவதைக் கருத்தில் கோண்டு மகிந்த ராஜபக்ச செய்யும் ஒரு சிறிய நடவடிக்கை மட்டுமே என்ற கருத்தும் பரவலாக உண்டு.

இதே வேளை - ஏற்கெனவே விடுவிக்கப்பட்டு "மீள்குடியேற்றம்" செய்யப்பட்ட மக்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வரும் நிலையை கருத்தில் கொண்டு - இந்த விடயத்தில் வெளிநாட்டுத் தமிழர் அமைப்புகள் உடனடிக் கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடத்தில் உண்டு.

ஏற்கெனவே விடுவிக்கப்பட்டு யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களுக்கும் மற்றும் கிழக்கு மாகாணத்திற்கும் அனுப்பப்பட்ட தமிழர்கள் வேறு விதமான - உயிர் அச்சுறுத்தலான - தொல்லைகளுக்குத் தொடர்ந்தும் உள்ளாகி வருவதாகத் தகவல்கள் வெளிவந்தபடி உள்ளன.

தொடர்ந்து கண்காணிக்கப்படுதல், அடிக்கடி மீள்-விசாரணைக்கு உட்படுத்தப்படுதல், மீள்-விசாரணைக்குப் பின் கைது செய்யப்படல், காணாமல் போகச் செய்தல் என்ற வகைகளில் - "விடுவிக்கப்பட்டு" மீள்குடியேற்றப்பட்ட மக்கள் சிறிலங்கா புலனாய்வுத் துறை ஆட்களின் தொடர்ச்சியான நெருக்கடிகளுக்கு உள்ளாவதாகி வருகின்றனர்.

அதே போல - இப்போதும் - வெளியே நடமாட அனுமதிக்கப்படும் மக்கள் உண்மையில் "சுதந்திரமான" நடமாட்டத்தை அனுபவிக்க முடியாத நிலையே காணப்படலாம்.

மேலும் - அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களின் கண் பார்வையில் உள்ள தடுப்பு முகாம்களுக்குள் இருக்கும் போது மக்களைத் தொடர்ந்து கைது செய்தால் - அது சிறீலங்கா மீது சர்வதேச அழுத்தங்களை மேலும் அதிகரிக்கும் என்ற நிலையும் உண்டு.

அதனால் - கட்டுப்பாடுகளை நீக்கி மக்களை வெளியே நடமாட அனுமதித்து விட்டு, வெளியில் வைத்து அவர்களை - விசாரணைகள் ஏதுமின்றி - "காணாமல் போக" செய்வதற்கான வாய்ப்புக்களும் உண்டு எனவும் சில அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

அதனால் - இந்த விடயங்களைத் தமது உடனடிக் கவனத்தில் எடுத்து - வெளிநாடுகளில் உள்ள தமிழர் அரசியல் செயற்பாட்டு அமைப்புக்கள் உடனடியாக நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.

வெளியே சென்று வர அனுமதிக்கப்படுகின்ற இந்த மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு - தத்தமது நாட்டு அரசாங்க மட்டத்தினருடன் உலகத் தமிழ் அமைப்புக்கள் கருத்துக்களைப் பரிமாற வேண்டும் என்பது ஒரு பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது.

அதே வேளையில் - தற்காலிக "சுதந்திர நடமாட்டம்" அல்லாமல், மக்கள் தமது சொந்த வாழ்விடங்களுக்குச் சென்று - எவ்வித கட்டப்பாடுகளோ அல்லது அச்சுறுத்தலோ இல்லாமல் - குடியேற அனுமதிக்கப்படுவதற்கான ஒரு சர்வதேச அழுத்தத்தை சிறிலங்காவின் மீது கொண்டுவருவதற்கும் உலகத் தமிழ் அமைப்புக்கள் உடன் முயல வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊற்றில் அண்மையில் பிரசுரமானவை