சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவன் பொன்சேகாவை எப்படி ஆதரிக்க முடியும்? - ஆசாத் சாலி
சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் தளபதி பொன்சேகாவை எதிர்த்துக் கருத்துத் தெரிவித்ததை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ஆசாத் சாலி அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, “இந்த நாடு பெரும்பான்மையினருக்குச் சொந்தமானது. சிறுபான்மையினர் விருந்தினர்களாக வந்தவர்கள். அவர்கள் எந்த உரிமைகளையும் இந்த நாட்டில் கேட்க முடியாது என்று கூறிய பொன்சேகாவை, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவன் என்ற வகையில் எப்படி மதிப்புடன் ஆதரிக்க முடியும்?” என ஆசாத் சாலி கேள்வி எழுப்பி இருந்தார்.
கொழும்பு மாநாகர சபையின் முன்னாள் பிரதி மேயரான ஆசாத் சாலி ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறி மிக அண்மையில்தான் அரசு பக்கம் சாய்ந்துள்ளார்.
பொன்சேகாவின் இந்தக் கருத்து கனடாவின் ‘நஷனல் போஸ்ட்’ நாளேட்டில் வெளியாகி இருந்தது. அதனைக் கொழும்பில் வெளிவரும் ‘டெய்லி மிரர்’ நாளேடு மறுபதிப்புச் செய்திருந்தது.
அப்போது அந்தக் கருத்தை ஐ.தே.க, முஸ்லிம் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போன்ற அனைத்துக் கட்சிகளும் எதிர்த்தன. ஆனால், தமது அந்த முடிவை அவர்கள் அனைவரும் இன்று வசதியாக மறந்துவிட்டார்கள் என்று ஆசாத் சாலி மேலும் தெரிவித்திருந்தார்.
சரத் பொன்சேகா எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் மட்டுமல்ல “வெளிநாடுகளினதும் பொது வேட்பாளர்” என்றும் கூறினார். மாதாந்தம் 500,000 ரூபாய்க்கு வாடகைக்கு வீடும் 1,000,000 ரூபாய்க்கு அரசியல் அலுவலகமும் முன்னாள் தளபதி தேடி வருகின்றார் என்றும் குற்றஞ்சாட்டினார் ஆசாத் சாலி.
சாலியின் இந்த நிலைப்பாட்டை அடுத்து அவர் கட்சியின் முடிவுகளை எடுக்கும் உயர் அமைப்பான நிறைவேற்றுக் குழுவில் இருந்து நீக்கப்பட்டார் என ஐ.தே.க. அறிவித்துள்ளது.
ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஆசாத் சாலிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராக அவரது சேவை இனித் தேவை இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.
கட்சியின் அதியுயர் குழுவின் முடிவுகளை தொலைக்காட்சி அலைவரிசையில் விமர்சனம் செய்ததற்காக ஆசாத் சாலிக்கு மன்னிப்பே வழங்கப்படாது என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. [நன்றி: புதினப்பலகை.கொம்]

