அரச சார்பற்ற நிறுவனங்கள் குறைபாடுகளை ஐ.நாவிடம் முறையிடக்கூடாது - சிறிலங்கா
சிறிலங்காவில் உள்ள அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்கள் பிரச்சினைக்குரிய விடயங்கள் குறித்து அரசுடன் மட்டும்தான் இனி பேச வேண்டுமே தவிர ஐக்கிய நாடுகள் சபையிடம் முறையிடக்கூடாது என கொழும்பினால் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
உலகின் மிகப்பெரிய அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றைத் தொடர்பு கொண்ட அரச தலைவரின் சிறப்புச் செயற் குழுத் தலைவரும் மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான பசில் ராஜபக்ச இந்த அறிவுறுத்தலை அண்மையில் வழங்கினார் என ‘இன்னர் சிற்றி பிரஸ்’ தெரிவித்துள்ளது.

2009 ஜனவரியில் பசில் ராஜபக்சவுடன் ஐ.நா. போதுச்செயலர் பான் கீ மூன்
முட்கம்பி வேலிகளுக்கு இடையில் படையினரால் காக்கப்படும் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு டிசெம்பர் முதலாம் திகதி முதல் நடமாட்ட சுதந்திரம் வழங்கப்படும் என சிறிலங்கா அரசு சில நாட்களின் முன்னர் அறிவித்தது. ஆனால், இந்த நடமாட்ட சுதந்திரம் என்பது வரையறுக்கப்பட்ட அளவிலேயே இருக்கும் என அரச சார்பற்ற நிறுவனங்கள் தெரிவித்துள்ள நிலையில், தனிமனிதப் பாதுகாப்புத் தவிர்த்து மக்களின் நடமாட்ட சுதந்திரத்திற்கு வேறு எந்தத் தடைகளும் இல்லை என்று கோமஸ் கூறினார்.
அரசு அறிவித்துள்ள நடமாட்ட சுதந்திரம் என்பது வாரத்தில் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமானது என்றும் முகாம்களைவிட்டு வெளியே செல்வதற்கு நாளாந்தம் அனுமதிச் சிட்டைகள் பெறப்பட வேண்டும் என்றும் சிறிலங்காவில் இயங்கி வரும் அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனமான ‘ஒக்ஸ்பாம்’ [Oxfam] தெரிவித்திருந்தது.
இது பற்றி கோல்மஸ்சிடம் மத்யூ லீ கேட்டதற்கு, “மக்கள் பகல் நேரங்களில் முகாம்களைவிட்டு வெளியே செல்லலாம்; உலகம் நடமாட்ட சுதந்திரம் என்று எதனை வரையறுக்கிறதோ அதற்கு ஏற்றது போலவே இதுவும் அமைந்திருக்கிறது” என அவர் பதிலளித்தார்.
ஆனால், முட்கம்பி வேலிகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள முகாம்களின் உள்ளேயும் வெளியேயும் செல்வதற்குக் கட்டுப்பாடுகள் இருக்கும் வரைக்கும் அதனை எப்படி நடமாட்ட சுதந்திரம் என வரையறுக்க முடியும் என ‘இன்னர் சிற்றி பிரஸ்’ செய்தியாளர் கேள்வி எழுப்பி உள்ளார்.
அதே போன்று அரச சார்பற்ற நிறுவனங்கள் ஐ.நா.விடம் முறையிடக்கூடாது என்ற சிறிலங்கா அரசின் அறிவுறுத்தலும் அப்படி ஒன்றும் சிறிய விடயம் இல்லை என்றும் மத்யூ லீ சுட்டிக்காட்டி உள்ளார்.
கிளிநொச்சியில் இருந்து ஐ.நா. வெளியேற்றப்பட்டதன் பின்னர் அங்கு பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். அதேபோன்று, தகவல்கள் வெளி உலகுக்குப் போகக் கூடாது என நினைத்து சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் ஐ.நா. கவனக்குறைவுடனேயே நடந்து கொள்கிறது எனவும் அவர் மேலும் விமர்சித்துள்ளார். [நன்றி: புதினப்பலகை.கொம்]

