சிறிலங்காவில் போருக்குப் பின்னான மீட்சி: அமெரிக்க நிலைப்பாடு
சிறிலங்காவில் இனங்களுக்கு இடையிலான கருத்து இணக்கம் ஏற்பட - தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டு, இயல்பாகவும் பாதுகாப்பாகவும் தமது சொந்த இடங்களில் வாழ அவர்களுக்கு வழி செய்யப்படுவது இன்றியமையாதது என அமெரிக்கா அழுத்தமாக நம்புவதாக "வொய்ஸ் ஓஃப் அமெரிக்கா" [Voice of America] குறிப்பிட்டுள்ளது.
இந்த மீள் குடியேற்ற விடயத்தில் சிறிலங்காவிற்கு உதவிகளை வழங்குவதற்கும் அமெரிக்கா தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள "வொய்ஸ் ஓஃப் அமெரிக்கா" [Voice of America] இணையத் தளத்தின் ஆசிரியர் தலையங்கம் - தமது கருத்து அமெரிக்க அரசாங்கத்தின் கருத்தையே பிரதிபலிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அந்த ஆசிரியர் தலையங்கத்தின் முழு விபரம்:
26 ஆண்டுகளாக நீடித்த சிறிலங்கா உள்நாட்டுப் போர் முடிவடைந்து 6 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், போர் காரணமாக இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தமது சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பிச் செல்வதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து நீண்ட காலமாகக் காத்திருக்கிறார்கள்.
சுமார் 30 ஆண்டு காலமாக சிறிலங்கா அரசுக்கு எதிராகப் போராடி வந்த விடுதலைப் புலிகள் கடந்த மே மாதம் 17ஆம் நாள் சரணடைந்தார்கள். புலிகள் இயக்கம் அமெரிக்கா உட்பட 31 நாடுகளில் தடை செய்யப்பட்ட வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்பாக இருக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்களின் படி இந்த உள்நாட்டுப் போரில் ஒரு லட்சம் வரையான உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன. 247,000 பேர் இடம்பெயர்ந்து அரசு நடத்தும் தடுப்பு முகாம்களில் தங்கி இருக்கின்றனர்.
முகாம்களில் உள்ள மக்கள் அனைவரும் இந்த ஆண்டு இறுதிக்குள் தமது சொந்த இடங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுவிடுவர் என சிறிலங்கா அரசு உறுதி அளித்திருக்கிறது. ஆனால், அதனைச் செயற்படுத்தும் வேகம் மிக மெதுவானதாகவே இருக்கிறது.
இருந்தாலும் முகாம் மக்களை விடுவிக்கும் வேகம் ஒக்டோபர் மாதத்தில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. இதுவரை மூன்றில் ஒரு பகுதி மக்களே வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
163,000 பேர் இன்னமும் முகாம்களிலேயே அடைக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் அனைத்துலக அபிவிருத்திக்கான முகவரமைப்பு (யுஎஸ்எய்ட்) [ United States Agency for International Development - USAID] - போரின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ள வடக்கு கிழக்கைப் புனரமைப்பதற்கும், இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் உதவிகளை வழங்கி வருகின்றது. இவ்வாறான உதவிகள் பல அரசுகளாலும் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களாலும் சிறிலங்கா அரசுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
ஆயிரம் வரையான முன்னாள் போராளிகளுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்கி சிறிய அளவிலான வர்த்தக நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபடுத்தும் 2 வருடகால செயற்திட்டம் ஒன்றை யுஎஸ்எய்ட் அண்மையில் ஆரம்பித்தது.
முன்னாள் போராளிகளை அவர்களது சமூகத்தில் மீண்டும் இணைத்து, போருக்குப் பின்னான சமமூகத்தை இயல்பு வாழ்வுக்குக் கொண்டுவருவது இந்தப் பயிற்சிகளின் நோக்கம்.
‘முன்னாள் போராளிகள் சமூகத்திற்குள் திரும்பி தமது வாழ்வைக் கட்டி எழுப்புவதற்கும் பாதுகாப்பான எதிர்காலத்தைப் பெறுவதற்குமான சந்தர்ப்பத்தை இந்தப் பயிற்சிகளும் உதவிகளும் வழங்கும்” எனத் தெரிவித்தார் யுஎஸ்எய்ட் நிகழ்ச்சித் திட்ட பணிப்பாளர் ரொபேக்கா கோன்.
‘இந்த உதவிகளினால் அந்த ஆண்களும் பெண்களும் தமது வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முடியும். தமக்கென புதிய லட்சியங்களை உருவாக்கி, புதிய கனவுகளைக் காண முடியும்” என்றார் அவர். [நன்றி: புதினப்பலகை.கொம்]

