தமிழர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் 64 ஆவது ஐ.நா. கூட்டத் தொடர்
தமிழர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் உட்பட பல நாட்டவர்களின் போராட்டங்களுக்கு மத்தியில் ஐக்கிய நாடுகள் சபையின் 64 ஆவது பொதுக் கூட்டத் தொடர் செப் 23 ஆம் திகதி தொடங்குகிறது. பல நாடுகளின் தலைவர்களும் இதற்காக நியூயோர்க்கில் கூடுகின்றனர்.
நியூயோர்க் நகர் கிட்டத்தட்ட மூடப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பெருமளவில் பலப்படுத்தப்பட்டுள்ளன.
கூட்டத் தொடருக்காக வந்திருக்கக் கூடிய தலைவர்களின் கவனத்தையும் பொதுச் சபையின் கவனத்தையும் கவரும் வகையில் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் ஐ.நா. தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.



சீன ஜனநாயகக் குழுக்கள், திபெத் விடுதலை அமைப்பு, கமெரூன் குழு ஆகியன தமது நாடுகளின் பிரச்சினைகளை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களின்பால் ஐ.நா.வின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ஐ.நா. கட்டடத்தின் முதல் குடியிருப்பு (அவன்யூ) மற்றும் 47 ஆவது வீதிக்கு இடைப்பட்ட பகுதியில் செவ்வாய்கிழமை செப் 22 மாலையில் கூடிய தமிழர்கள் பலர், ஐ.நா.வின் செயலின்மைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனின் செயற்திறன் இன்மையை அவர்கள் முக்கியமாகக் கண்டித்தனர்.



கடந்த மே மாதத்தில் வன்னியில் நடைபெற்ற இறுதிப் போரின்போது சிறிலங்காப் படையினரின் கனரக ஆயுதப் பாவனையால் 20 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அந்த உயிரிழப்புக்களைத் தடுக்க பொதுச் செயலாளர் தவறிவிட்டார் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.
அத்துடன், சிறிலங்காப் படையினரால் மேற்பார்வை செய்யப்படும் முகாம்களில் சுமார் 3 லட்சம் மக்கள் மிகச் சிறிதளவான நடமாட்டச் சுதந்திரத்துடன் தொடர்ந்து அடைத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்தும் ஐ.நா. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
மக்களை அவர்களின் சொந்த இடங்களுக்குத் திருப்பி அனுப்பி இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்த சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைகளை ஐ.நா. விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
"நாட்டில் இருந்து தமிழ்ச் சமூகத்தை அடியோடு அழித்து விடுவதற்கு சிறிலங்கா அரசு முயற்சிக்கிறது. ஆனால் இந்தக் குற்றச் செயல் ஐ.நா.வால் செயற்திறனுடன் தடுத்து நிறுத்தப்படவில்லை" என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.



"போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று மேற்குலக நாடுகள் தொடர்ச்சியாகக் கோரி வருகின்றபோதும், சுயாதீன விசாரணையாளர்களையும் அனைத்துலக ஊடகவியலாளர்களையும் போர்ப் பகுதிகளுக்குச் செல்ல அரசு அனுமதி மறுத்து வருகின்றது" என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மற்றொருவர் தெரிவித்தார்.
இதேவேளை, "ஐரோப்பிய ஒன்றியத்தால் சிறிலங்காவுக்கான ஏற்றுமதி வரிச் சலுகை நிறுத்தப்படப் போவதாகவும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் போர்க் குற்ற விசாரணைப் பிரிவால் சிறப்பு அறிக்கை ஒன்று சிறிலங்கா தொடர்பில் சமர்ப்பிக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின்றன. அனைத்துலக சமூகம் சிறிலங்கா தொடர்பில் மேற்கொள்ளும் இத்தகைய நகர்வுகள் எவை குறித்தும் நாம் அகமகிழ்வு கொள்ளவதற்கான நேரம் இதுவல்ல. உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் சிறிலங்காவின் அடங்குமுறைகளை அனைத்துலக சமூகத்திற்கு தொடர்ந்து எடுத்துச் சொல்ல வேண்டும். அதேபோன்று தமிழ் மக்களின் துயர்துடைக்க ஐ.நா.வும் அனைத்துலக சமூகமும் தவறி விட்டன என்பதையும் எடுத்துச் சொல்ல வேண்டும்" என ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவர் புதினத்திற்கு தெரிவித்தார்.
அனைத்துலக சமூகத்தால் முன்வைக்கப்படும் தடைகளை அகற்றுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சிறிலங்கா அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐ.நா. தலைமை அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களை ஒளிப்படம் எடுத்து சிறிலங்கா அரசுக்கு அனுப்புவதற்கு சிலர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தார்கள் என்றும் இவ்வாறு செய்வதன் மூலம் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த கொழும்பு முற்படுகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டது.




நன்றி: புதினம்

