காணொலி: உடப்பூர் மங்களம் - மரவிசை பாடல்
படப் பிடிப்பும் பாடல் பதிவும்: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை [நன்றி: humanityashore]
"உடப்பூரில் தீமிதிப்பு" பற்றி கொழும்பில் இருந்து வெளி வரும் தினகரன் பத்திரிகையில், உடப்பூர் வீரசொக்கன் எழுதியுள்ள கட்டுரை:
அலைகடல் தவிழும் நெய்தல் மணற் சூழலில் உடப்பூர் அமைந்துள்ளது. இவ்வூரில் முத்தாக அமைந்து அருள்பாலிக்கும் தலமே உடப்பு ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்ரீருக்மணி சத்தியபாமா ஸ்ரீ திரெளபதையம்மன் தேவஸ்தானமாகும்.
இவ்வாலயத்தில் வருடா வருடம் ஆடிமாத மூல நட்சத்திரத்தில் நடைபெறும் பெருவிழாவே தீமிதிப்பாகிய பூமிதிப்பாகும்.
இவ்விழா பதினெட்டு நாட்கள் நடைபெற்று இறுதி நாளில் அகிலாண்டேஸ்வரி ஸ்ரீ திரெளபதா அனற்குளத்தில் இறங்கி திருநடனம் புரிந்து பக்த அடியார்களுக்கு அருள்பாலிப்பாள்.
வரலாற்று சிறப்புப் பெருமைகளைக் கெண்டிருக்கும் இக்கிராமம் முன்னர் ‘உடப்பங்கரை’ என்றே வழங்கி வந்தது. பின்னர் அப்பெயர் மருவி “உடப்பு” என்று வழங்கி வருகின்றது.
ஓர் தனித்துவமான கலை, கலாசார பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களை பாதுகாத்து வரும் இவ்வூர் மக்கள் சைவர்களாகவும், சைவவாணக்களாகவும், தமிழர்களாகவும் வாழ்ந்து வருகின்றார்கள்.
இம்மக்கள் தென்னிந்தியாவிலுள்ள இராமேஸ்வரத்தை அண்மித்துள்ள அக்காமடம், தங்கச்சிமடம் போன்ற இடங்களிலிருந்து வந்தவர்கள். கி.பி. 1630 ஆம் ஆண்டு உடப்பில் குடியேறியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
16 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட முரண்பாட்டின் தாக்கத்தால் பயந்து புலந்து இம்மக்கள் 18 குடும்பங்களுடன் 7 தோணிகளில் வந்து குடியேறியுள்ளனர். இவர்களுக்கு “அம்பலகாரன்” என்பவரே தலைமை தாங்கி வந்துள்ளான். இவர்கள் அம்பலகாரர் வம்சத்தைச் சேர்ந்தவர்களாவார்கள்.
சக்தி வழிபாட்டை கடைப்பிடித்து ஒழுகிவரும் இவ்வூர் மக்கள் தங்கள் குல தெய்வங்களான ஸ்ரீ திரெளபதாதேவி, ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ காளியம்மன், கோவில் அமைத்து முன்னோர் கட்டிக்காத்த தமது பாரம்பரியம், மரபுகளை, சடங்கு சம்பிரதாயங்களை வழுவாமல், பிசகாமல் நேர்த்தியான முறைமைகளில் விழாக்களை நடத்தி வருகின்றார்கள். இதற்கெல்லாம் கட்டியம் கூறி நிற்பதே ஸ்ரீ திரெளபதையம்மன் ஆலய உற்சவ நிகழ்வுகள்.
இயற்கை சீற்றம், கொடிய நோய்கள் அவதியுற்று பீடைகளால் தாக்கப்படும் போதெல்லாம் தங்களின் குலதெய்வங்களுக்கு விழாவெடுத்து, நேத்தி வைத்து தத்தம் குறைகளை தீர்க்க வேண்டி இவ்விழாவை கொண்டாடி வருகின்றார்கள்.
இவ்விழா கொண்டாட இங்குள்ள மூதாதையர்கள் இராமநாதபுரத்தில் இருந்து வழிபட்டு வந்த ஒரு தெய்வத்தையே இங்கு கொண்டு வந்து பூஜித்தார்கள் என்பார் ஒரு சாரார், அதுவல்ல தமது குலதெய்வத்தை நினைவில் நிறுத்தி உருவாக்கிய தெய்வத்தின் திருவுவச் சிலையை வைத்து வழிபட்டு வருவதாக இன்னொரு சாரர் கூறுகிறார்கள்.
ஆனால் இவ்வூர் மக்கள் சக்தி வழிபாட்டை தத்தம் குல தெய்வங்களாக போற்றி வழிபட்டுவருகின்றார்கள் என்பது உண்மையாகும்.
இப்பூமிதிப்பு பெரு விழாவை பாரதக் கதையை அடிப்டையாகக் கொண்டே பதினெட்டு தினங்களாகக் கொண்டாடி வருகின்றார்கள்.
இதிலும் ஆலயப் பூசகர் தன்னை ஜீவாத்மாவாக பாவனை செய்து பதினெட்டு நாள் உபவாச மிருப்பார். முதல் நாள் அன்று ஜீவாத்மாவாகிய பூசகர் மாலை 6.00 மணிக்கு கரகத்தை தலையில் ஏற்றிக் கொண்டு மாரியம்மன் ஆலயத்தை அடைவார்.
அங்கு தன்னை திரெளபதா தேவியாக உருக்கொண்ட நிலையில் ஆடிக்கொண்டு அன்னை ஆலயத்தை அடைந்த பின்னர் பாரதக்கதையிடம் யுத்த ஆரம்பக் கதையை படிப்பார் பின் சர்ப்பக் கொடியேற்றப்படும். இது துரியோதனனுக்காக ஏற்றுவதாக அமையும்.
அதைத் தொடர்ந்து ஐந்தாவது நாள் பாண்டவர்களுக்காக வேண்டி வெளிக்கொடி யேற்றப்படும். அன்று தொடக்கம் ஒவ்வொரு தினமும் இரவு 9.00 மணி தொடக்கம் 11.00 மணி வரையும் பாரதக்கதை பூரணமாக படித்து முடிக்கப்படும்.
கரகம் பாலிப்பது முக்கிய நிகழ்வாக நடைபெறும்.
கரகம் பாலிக்கும் பூசகரே தன்னை திரெளபதையாக பாவனை செய்வார். அவ்வண்ணம் மரவிசை பாடல்கள் பக்திபூர்வமான முறைமையில் மனமுருகிபாடுவார்கள்.
“மங்களம் பொங்கும் உடப்பு
நகர் தண்ணில்
வாகா உதித்து எழுந்தருள்வீர்
சங்காரம் பெற்றோங்கும்மாகானி
தாயார் மேல் சாத்து கும்பி
உரைப்போமே!
வெற்றி பாக்கு பழந்தேங்காய்
கொண்டு
வேண்டிய அர்ச்சினை
செய்வோர்க்கு
புத்திரபாக்கியம் செல்வம்
பெருமையும்
பூதால வாழ்வையும் தான்
கொடுப்பாள்
பதினெட்டாம் நாள் கொண்டாடப்படும் தீமிதிப்பாகிய பூமிதிப்பு பெருவிழா வெற்றி விழாவாகக் கொண்டாடப்படும். அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் ஒமக்குண்டத்தில் இருந்து தீவளர்க்கப்படும்.
இவ்வாலயத்தில் அன்னை திரெளபதா தேவியின் சிலைமுன் தொடர்ந்து சுடர்விட்டு எழும் தூண்டாமணி விளக்கிலிருந்தே தீஎடுக்கும் காட்சி மிக பக்தியுணர்வுகளுடன் அரோகரா கோஷத்துடன் நிகழ்வுறும்.
அதைத்தொடர்ந்து மாலையானதும் செந்தழல் மீட்டும் திடுமிகு அனற்குளத்தில் பக்தர்கள் நடனமிடும் காட்சி இடம்பெறும்.
வடமேல் மாகாணத்தில் இந்துக்களின் இருப்பையும் தமிழர்களின் சிறப்பையும் தாய்தெய்வ வழிபாட்டையும் முன்னுதாரணமாக எடுத்துக் கூறும் உடப்பு ஸ்ரீ திரெளபதையம்மன் தீமிதிப்பாகிய பூமிதிப்பு விழாவின் அற்புதத்தை கண்டு நாமும் அன்னையின் அருள் பெறுவோமாக.

