ஊற்று

தமிழக அகதிமுகாம்களிலுள்ள ஈழத் தமிழ் மாணவர்களுக்கு நடிகர் சிவகுமார் உதவி

மிழகத்தின் அகதி முகாம்களில் துன்பப்படும் ஈழத் தமிழர்களின் குழந்தைகளில் சிலருக்கு இந்த ஆண்டு முதல் கல்வி உதவி வழங்குவதை கடமையாகக் கொண்டுள்ளதாக நடிகர் சிவகுமார் அறிவித்துள்ளார்.

Sivakumar0615.jpgநடிகர் சிவகுமார், தனது 'சிவகுமார் கல்வி அறக்கட்டளை' மூலம் கடந்த 30 ஆண்டுகளாக பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத் தொகைகள் மற்றும் கல்வி உதவித் தொகைகளை வழங்கி வருகிறார்.

இம்முறை 30ஆவது ஆண்டு பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார், அவரது புத்திரர்களான நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் 30 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சம் உதவித் தொகை வழங்கப்பட்டது. மேலும் கல்வி மேம்பாட்டுக்காக இயங்கும் சில நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து ரூ.6 லட்சம் உதவித் தொகையையும் வழங்கினார் சிவகுமார்.

நிகழ்ச்சியில் சிவகுமார் பேசுகையில்,

சிவகுமார் அறக்கட்டளை 1979ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 25 ஆண்டுகள் நான் அந்த அறக்கட்டளையை நடத்தி என்னால் முடிந்த அளவு சிறப்பாக பணிகள் செய்தேன். பின்னர் என் மகன் சூர்யா அந்தப் பணியை ஏற்றுக் கொண்டு, என்னைவிட சிறப்பாகச் செய்து வருகிறார்.

அவர்தான் உதவித் தொகையை ரூ.10000-ஆக உயர்த்தினார். ஆண்டுதோறும் உதவி பெறும் மாணவர் எண்ணிக்கையையும் உயர்த்தி வருகிறார்.

நான் மிகவும் கஷ்டப்பட்டுப் படித்தேன். ஒரு வேளை மட்டுமே நல்ல சாப்பாடு கிடைக்கும். கஷ்டப்பட்டுப் படித்ததால், ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு என்னால் இயன்ற உதவியை செய்து வருகிறேன்.

இலங்கையில் போர் முடிந்த பிறகாவது நிம்மதி ஏற்படும் என்று பார்த்தால், அங்கு உணவு மற்றும் மருந்துகள் கிடைக்காத நிலையே காணப்படுகிறது.

இலங்கையில் வாழ்க்கையை தொலைத்துவிட்டு, தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் துன்பப்படுகிற ஈழத் தமிழர்கள் பிள்ளைகளில் சிலருக்கு இந்த ஆண்டு முதல் உதவி வழங்க முடிவு செய்துள்ளோம்"என்றார். [நன்றி: வீரகேசரி]

ஊற்றில் அண்மையில் பிரசுரமானவை