ஊற்று

ரவூப் ஹக்கீம்: "இந்த நாட்டை இறைவன் தான் காக்க வேண்டும்"

"தேசியவாத அலையில் பெரும்பான்மை மக்கள்:" புத்தளம் நகரில் அண்மையில் இடம் பெற்ற வட மேல் மாகாண சபைத் தேர்தல் கூட்டத்தில், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரை:

RH0125.jpg

டிசம்பர் 2007, கொம்பனித்தெருவில் அமைந்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் தலமை அலுவலகம் - "தாருஸ்ஸலாம்" இல் தலைவர் ரவூப் ஹக்கீம்

மாகாண சபைத் தேர்தல் முடிந்து மூன்று மாதங்களுக்குள் ஒரு பொதுத் தேர்தல் வரலாம் என்று இப்போது கட்டியம் கூறப்படுகிறது. எனவே, எமக்கு இருக்கின்ற சவால்கள் யாவும் ஆகக் கூடியது 90 நாட்களுக்குத் தான் இருக்கப் போகிறது. சகல கட்சிகளிலும் இருந்தும் பிரித்து, விலைக்கு வாங்கப்பட்டவர்கள் அனைவருக்கும் அமைச்சுப் பதவிகள் கொடுக்கப்பட்டு இருப்பதன் மூலம் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் காலம் காலமாக சுதந்திரக்கட்சியோடு இருந்தவர்கள் தான்.

இனங்களுக்கு இடையில் இருக்கின்ற ஒற்றுமையைக் குலைக்கின்ற வகையிலும் சிறுபான்மை இனங்களை வந்தான் வரத்தான்களாகவும், அவர்களுக்கு நாட்டின் பிரஜா உரிமை வழங்கக் கூட அருகதையில்லை என்ற வகையிலும் இனவாதக் கட்சியின் தலைமைத்துவங்கள் அரசாங்கத்திடம் சோரம் போயிருக்கின்றன.

யுத்தமுனை வெற்றிகளை மட்டும் மூலதனமாகக் கொண்டு ஆட்சியிலே நீடிக்கலாம் என்று நினைப்பவர்களின் பிரசாரங்களினால் நாட்டில் தேசியவாத அலை வீசுகிறது. நாட்டில் பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டி விட்டோம் என்ற இறுமாப்பில் புறப்பட்டிருக்கும் இந்த தேசியவாத அலையில் பெரும்பான்மையின மக்கள் அசந்து போயிருக்கிறார்கள். சிறுபான்மையின மக்கள் என்ன நடக்கப் போகிறது என்று அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் வெற்றி பெற்றால் தங்களால் நிம்மதியாக வாழ முடியும் என்ற நம்பிக்கை பல தமிழ்ப் புத்திஜீவிகளிடம் இருக்கவில்லை. எனவே, புலிகளுடைய வெற்றி தமிழர்களிடையே வெற்றி என்று அவர்கள் எண்ணவில்லை. அன்றிருந்த சங்கடங்களினால் அவர்களில் சிலர் ஆதரவாகப் பேசியிருக்கலாம்; இன்றும் பேசிக் கொண்டிருக்கலாம். ஆனால், உண்மை அதுவாகத்தான் இருந்தது.

ஆனால், புலிகளுடைய வெற்றி தமிழர்களுடைய வெற்றி அல்ல; ஆனால், புலிகளுடைய தோல்வி தமிழர்களுடைய தோல்வியாகப் போய்விடும் என்ற தமிழர்களுடைய பீதி, மஹிந்த ராஜபக்ஷவின் போக்கினாலும், நோக்கினாலும் இன்று ஏற்பட்டிருக்கிறது. இதுதான் அப்பட்டமான உண்மை.

அதன் காரணமாகத்தான் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசுகின்ற பின்புலம் தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.

இந்த அரசு போகின்ற போக்கும், அதன் வீரப்பிரதாபங்களும், பேரிகை முழக்கங்களும் சிறுபான்மை மக்களை அவர்களது கொத்தடிமைகளாக மாற்றிவிடுமோ என்ற அச்சத்தை தோற்றுவித்திருக்கிறது. இந்த அரசாங்கத்திலுள்ள சிறுபான்மை இன அமைச்சர்களும் முஸ்லிம் அமைச்சர்களும் இதுபற்றிப் பேசத் தயங்குகின்றனர்.

இந்த அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் எவரும் நேரடியாக சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்லர். அமைச்சர் பௌஸி கூட ஐ.தே.க.வினூடாக அரசியலுக்கு வந்தவர்தான். ஆனால், நிறைய முஸ்லிம்கள் இந்த அரசில் அமைச்சர் பதவிகளால் அலங்க?க்கப்படுகிறார்கள். அண்மைக் காலமாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலுள்ள முஸ்லிம்களை விட, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து அரசுக்கு சோரம் போனவர்களுக்கு இப்போது கவனிப்பு அதிகம். ஏனென்றால், இந்த அரசுக்கு முஸ்லிம்களின் இந்த விடுதலை இயக்கத்தை அழிக்க வேண்டும்.

ஆனால், முஸ்லிம்களாகிய எமக்கு என ஒரு இயக்கம் தேவை.இந்த இயக்கத்துக்காகவே நாம் எமது பதவிகளை தூக்கி எறிந்து விட்டு அரசை விட்டு வெளியேறினோம்.

இந்த அரசாங்கத்துடன் கரு ஜயசூ?யவும் நானும் ஒன்றாக சேர்ந்து கொண்டோம்.

நான் முதலில் வெளியேறிய பின்பு அவர் வெளியேறியிருக்கிறார். சேர்ந்ததற்கான காரண, காரியங்கள் வேறாக இருந்த போதும் அரசை விட்டு வெளியேறுவதற்கு இருவருக் கும் ஒரே காரணம் தான் இருந்தது. இந்த அர சாங்கத்தில் இருவரும் எமது சுய கௌர வத்தை அடகு வைத்து, இருக்க முடியாது என்று தான் வெளியேறி வந்தோம்.

எமது இந்தக் கட்சியை பலவீனப்படுத்து வதற்கு எடுத்த முயற்சி இந்தப் புத்தளத்து மண்ணில் இருந்துதான் ஆரம்பமாகியது.

ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடைசி ஒருவர் இருக்கும் வரை அது உயி ரோட்டம் உள்ள இயக்கமாக வாழும் என் பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இந்த இயக்கத்துக்கு தலைவர்கள் வரலாம்; போகலாம். இந்த இயக்கத்தை நாம் வைத்திருப்பது நாம் கௌரவமான கண்ணியமாக வாழவேண்டும் என்பதற்காகவே.

வெறுமனே கையறு நிலையில் கையேந்தும் அரசியலை நாம் செய்யமுடியாது. சரணாகதி அரசியல் செய்யும் கட்சியாக இந்த இயக்கத்தை மாற்றிவிட முடியாது.

இந்த அரசாங்கத்துடன் நாம் இணைந்திருந்தபோது எமக்கு இரண்டு விடயங்களே சவாலாக இருந்தன.அரசுக்கு உள்ளேயிருந்து அழிவதா? அல்லது வெளியேறி அழிவதா? என்பதுதான் அது. ரோஷம் கெட்டவர்களாக, அரசாங்கத்துக்குள் நாமிருக்கும் போது, இவ்வளவு அநியாயம் நடக்கும் போது, அதற்கு உடந்தையாக இருந்து பழியுடன் அழிவதை விட வெளியே வந்து அழிவதே மேல் எனக் கருதி வெளியேறினோம்.

ஆனால், இந்த இயக்கத்தை மக்கள் அழியவிடுவதற்குத் தயாராக இல்லை. எமக்கு நாளுக்கு நாள் ஊக்க?ம் தெம்பும் தந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்று வீசுகின்ற தேசியவாத அலையும், யுத்த களப் பின்னணியில் நிகழும் இத்தனை பித்தலாட்டங்களும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கப் போகிறது என நாம் பார்க்கப் போகிறோம்.

பிரபாகரனைப் பிடித்து அச்சாறு போடப்போவதாக ஒரு பிரதமர் கூறுகிறார். ஒரு பிரதமர் கூறக்கூடிய வார்த்தையல்ல அது. இப்படி உன்மத்தம் பிடித்தது போல பேசி, பெரும் தேசியவாத உணர்வுகளைக் கிளறி விட்டு, சிங்கள மக்களை வெறியிலே வைத்துக் கொண்டிருக்கலாம் என அவர்கள் நினைக்கிறார்கள்.

தேசப்பற்று என்ற விஷயம் இன்று ஒரு மலிவான விற்பனைப் பண்டமாக மாறிவிட்டது. பிரதமர், பிரபாகரனைப் பிடித்து அச்சாறு போடுவேன் என்று பேசினால் தான் தேசப்பற்று என்று நினைக்கின்ற அளவுக்கு அது மிகவும் கேவலமானதும் மலிவானதுமான நிலைக்குப் போய்விட்டது.

"தேசப்பற்று என்பது ஒரு அயோக்கியனின் கடைசி அடைக்கலம்'' என ஒரு ஆங்கிலக் கவிஞன் கூறியுள்ளான். அயோக்கியத்தனத்தின் கடைசி அடைக்கலம் தான் தேசப்பற்று என்று இத்தேசப்பற்று பார்க்கப்படுகிறது.

பலவந்தப்படுத்தி நாட்டிலுள்ளவர்களுக்கு தேசப்பற்றைப் பருக்கி விட முடியாது. அது தானாகவே வரவேண்டும். இது எங்களுடைய வெற்றி என்று நாடு முழுவதும் கொண்டாடும் அளவுக்கு பரந்த விரிந்த மனப்பாங்கோடு இவ்விடயம் அணுகப்பட வேண்டும். ஆனால், அப்படி இது நடக்கவில்லை.

இந்த அரசாங்கம் ஆட்டம் கண்டதன் அடிப்படை தான் சக்தி, சிரச தொலைக்காட்சி நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். அரசின் வெற்றிக்களிப்பின் கொண்டாட்டம் இதுவாக இருந்தால் அந்தக் கொண்டாட்டம் எங்களுக்குத் தேவையில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமான ஒரு இடத்தில் பத்திரிகை ஆசிரியன் படுகொலை செய்யப்படுவது தொடர்பில் இந்த ஜனாதிபதிக்கு ஒன்றுமே தெரியாதாம். இதுதான் இந்நாட்டின் முப்படைத் தளபதியின் நிலை என்றால் இந்த நாட்டை இறைவன் தான் காக்க வேண்டும்.

ஊற்றில் அண்மையில் பிரசுரமானவை