தமிழர் பேரவலங்களை பார்ப்பதற்கு சுயாதீன குழுவை சர்வதேசம் அனுப்பவேண்டும்-சம்பந்தன் எம்.பி
வன்னியிலும், கிழக்கு மாகாணத்திலும் அப்பாவித் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பேரவலங்களை நேரில் சென்று பார்வையிடுவதற்கு சர்வதேச சமூகம் உடனடியாக சுயாதீனக் குழுவொன்றை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்தலைவர் இரா. சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் ஜனவரி 21ஆம் திகதி, புதன்கிழமை நடை பெற்ற நாட்டின் தற்போதைய நிதி நிலைமை தொடர்பான பாராளுமன்ற ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளதாக வீரகேசரி பத்திரிகை தெரிவித்துள்ளது.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
வன்னி மண்ணில் அவலம் அல்ல பேரவலம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இந்த அரசாங்கத்தினால் பச்சிளம் பாலகர்கள், குழந்தைகள் கூட கொன்று குவிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். மக்கள் பசி, பட்டினியில் நாளாந்தம் செத்துக் கொண்டிருக்கின்றனர்.
தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுகின்றார்கள். அவர்கள் அங்கு ஒவ்வொரு நாளும் செத்துக் கொண்டிக்கின்றனர், அகதிகளாக அங்குமிங்கும் அலைகின்றார்கள். அவர்களை மரங்களின் கீழும், காடுகளிலும் வாழ வைக்கின்றீர்கள். அந்த மக்களுக்கு மருத்துவ உதவிகளை கூட வழங்குவதற்கு நீங்கள் தயாரில்லை. இதனைதான் நீங்கள் விடுதலை என்கின்றீர்களா? இதுவா விடுதலை? இதுதானா உங்களின் விடுதலை?
தமிழ் மக்கள் கண்ணியமாக நடத்தப்படுகின்றார்கள் என்பதை உங்களால் கூற முடியுமா? எவ்வாறு கூற முடியும். தமிழ் மக்களை காலால் போட்டு நசுக்கின்றீர்கள். அவர்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகளை வழங்குகின்றீர்களா?
யுத்த நிறுத்த உடன்படிக்கை மற்றும் பொதுக் கட்டமைப்பு போன்ற ஒப்பந்தங்களுக்கு எதிராக ஜே.வி.பி. கோஷம் எழுப்பியது. போராட்டங்களையும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியது. இவையாவும் அவர்களுக்கு முக்கியமானது. ஏனென்றால் சிங்கள வாக்குகள் அவர்களுக்கு முக்கியமானது. அதனால் தான் நாட்டின் நிலைமை மோசமடைந்துள்ளது.
சில விடயங்களில் தீர்மானத்தை எடுப்பதற்கு இந்த அரசாங்கம் சிந்தித்திருக்க வேண்டும். குறிப்பாக கடுமையான தீர்மானங்களை எடுப்பதை தவிர்த்திருக்கலாம். அவ்வாறான முடிவுகளையும் தீர்மானங்களையும் எடுத்தமையினால் நாட்டின் நிலைமை இந்தளவிற்கு மோசமடைந்துள்ளது. நாட்டின் நிலைமையை பார்த்தீர்களா? பாருங்கள்.
எந்தவொரு அரசசார்பற்ற நிறுவனமும் வன்னியில் இல்லை, பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் உயிருக்காக போராடுகின்றனர். இடம்öபயர்ந்த மக்கள் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலைமைகள் தொடர்பில் உண்மையான நிலைமையை உலகத்திற்கு சொல்ல வேண்டியது அவசியம். இராணுவப் பேச்சாளரோ அல்லது அரசாங்கத் தரப்பினரோ உண்மையை சொல்வார்கள் என்றும் நாம் நம்பவில்லை.
வன்னி மக்களின் பாதுகாப்பு அங்குள்ள மக்களின் நிலைமைகள் தொடர்பில் எங்களுக்கு தெளிவாக அறிய முடியாதுள்ளது. எனவே சுயாதீன குழுவொன்றை வன்னிக்கும் கிழக்கு மாகாணத்திற்கும் அனுப்பி தமிழ் மக்களின் பேரவலங்கள் தொடர்பில் பார்வையிடுவதற்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
அத்துடன் இந்தியாவிலிருந்தும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறுபட்ட தரப்பினர்களை கொண்ட குழுவொன்றை வன்னிக்கு அனுப்பி அங்குள்ள உண்மையான நிலைமைகளை பார்வையிடல் வேண்டும். ஜனாதிபதி இந்திய பிரதமருடன் தொலை பேசியில் பேசுகின்றார் ஏன்? நேரிலும் சென்று பேசுகின்றார். கிழக்கை மீட்டு விட்டதாகவும் அங்கு தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர் என்றும் கூறுகின்ற ஜனாதிபதி கிழக்கின் நிலைமைகளை பார்வையிடுவதற்கு வருகை தருமாறு இந்திய தரப்பினரை ஏன்? அழைக்கவில்லை. அதிஉயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ள சம்பூர் உள்ளிட்ட பிரதேசங்களில் மக்களை மீள குடியேற்றாதது ஏன்? அங்குள்ள வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. மக்கள் அங்கு மீள குடியேறக் கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு சதித்திட்டமொன்று அரங்கேற்றப்படுவதாக கருதுகின்றோம்.
யுத்தம் பற்றிய உண்மைச் செய்திகளை அறியும் உரிமை அனைவருக்கும் உண்டு. எந்த பொதுமக்களுக்கும் அங்கு செல்லக்கூடிய நிலைமை வேண்டும். எனினும் இவற்றை தடுத்து நிறுத்துவதன் மூலம் அங்குள்ள உண்மையான நிலைவரங்களை அரசாங்கம் மூடி மறைத்து வருகின்றது. இரகசியமாக அரசாங்கம் முன்னெடுக்கும் உண்மைகளை வெளிக்கொணர்வதற்கு சர்வதேச சமூகம் தலையிட வேண்டும்.
காசாவில் யுத்தம் நடைபெறும் பகுதிகளுக்குள் ஊடகவியலாளர்கள் சென்று வருகின்றனர். அங்கு ஊடகவியலாளர்கள் செல்வதை யாரும் தடுக்கவில்லை. தாக்குதல்கள், இழப்புகள் தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் வெளிவந்தன. இங்கு அந்த நிலைமை இல்லை. அங்கு செல்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்குவதில்லை. இதனை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் பத்திரிகைகள் மூலம் பேசப்பட்டாலும் வன்னி பகுதியை தனிமைப்படுத்திவிட்டு அரசாங்கத்தினால் முன் செல்ல முடியாது. 4 இலட்சம் வரையான மக்களை அரசாங்கம் அவல நிலைக்கு தள்ளிவிட்டது என்பதனால் தான் இவ்விடயத்தில் சர்வதேசத்தை தலையிடுமாறு வேண்டுகின்றோம்.
சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான அடிப்படைப் பிரச்சினையை கண்டுபிடித்து அதனை தீர்க்க வேண்டும் என்று அமெரிக்காவின் ஜனாதிபதி பராக் ஒபாமா தனது பதவியேற்பு உரையில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் எமது நாட்டில் என்ன நடைபெறுகின்றது. வன்னி மக்களை பற்றி யாராவது கதைத்திருக்கின்றார்களா? எனவே தான் சுயாதீன குழுவொன்றை அனுப்பி தமிழ் மக்களின் அவல நிலையை நேரில் பார்வையிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச சமூகத்திடம் தமிழ் மக்கள் சார்பில் மீண்டும் கோரிக்கை விடுக்கின்றேன்.
இவ்வாறு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்தலைவர் இரா. சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

