'இலங்கையில் மேலும் சீரழிவைச் சந்திக்கக்கூடிய சூழ்நிலைக்கே இந்தியா உதவிக்கொண்டிருக்கின்றது'
"இலங்கை இனநெருக்கடியை தவறான முறையில் ஆரம்பம் முதல் தொடர்ந்து கையாளும் இந்தியா, நிலைவரங்கள் மேலும் சீரழிவைச் சந்திக்கக்கூடிய சூழ்நிலைக்கே உதவிக்கொண்டிருக்கின்றது" என கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ் தினசரி தினக்குரல், இன்று ஞாயிறு 18ஆம் திகதிய ஆசிரியத் தலையஙத்தில் தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் கொழும்பு வந்து தமிழ் மக்களின் இடர் நீங்க ஆக்கபூர்வமான முடிவேதுமின்றி புது டில்லி திரும்பியது தொடர்பாக தினக்குரல் ஆசிரியர் தலையங்கம் எழுதியுள்ளது.
"மேனன் விஜயம்" என்ற தலைப்பிலான அவ் ஆசிரியத் தலையங்கம் முழுவதுமாக வருமாறு:
இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் இலங்கைக்கான தனது இரு நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்றைய தினம் புதுடில்லி திரும்பியிருக்கிறார். இந்த விஜயத்தின் போது அவர் அரசாங்கத் தரப்பினர், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோருடனும் இறுதியாக கண்டியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார். இருதரப்பு உறவுகள் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து மேனன் இவர்களுடன் ஆராய்ந்திருக்கக்கூடும் என்றாலும், வன்னியில் தீவிரமடைந்திருக்கும் போரின் விளைவாக முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் தஞ்சமடைந்திருக்கும் 3 இலட்சத்துக்கும் அதிகமான அப்பாவித் தமிழ் குடிமக்கள் எதிர்நோக்குகின்ற மனிதாபிமான நெருக்கடியே பேச்சுவார்த்தைகளில் முக்கிய இடத்தை வகித்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அந்த மக்களுக்கான இந்தியாவின் இரண்டாம் கட்ட மனிதாபிமான உதவிகளை (4 கோடி ரூபா பெறுமதியானவை) வழங்கும் அறிவிப்பை மேனனின் விஜயத்தின் போது இந்தியா விடுத்திருந்தது என்பதும் கவனிக்கத்தக்கது.
இந்தியாவிடமிருந்து கிடைக்கப்பெறக்கூடிய மனிதாபிமான உதவிகளுக்கு அப்பால் போரை நிறுத்துவதற்கு இந்தியா உதவ வேண்டுமென்றே தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த எதிர்பார்ப்புக்கு உறுதுணையாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளும் போர்நிறுத்த மொன்றைக் கொண்டு வருவதற்கு இலங்கை அரசாங்கத்தை இந்திய மத்திய அரசாங்கம் வற்புறுத்த வேண்டுமென்று அண்மைக்காலமாக கோரிக்கை விடுத்த வண்ணமிருக்கின்றன. ஆனால், இந்திய அரசாங்கமோ போர் நிறுத்த விவகாரம் குறித்து ஜனாதிபதி ராஜபக்ஷவின் அரசாங்கத்துடன் பேசுவதற்குத் தயாராயில்லை. தமிழகத்தை ஆட்சி செய்கின்ற முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி உட்பட மாநிலத்தின் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கடந்த மாதம் புதுடில்லியில் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கைச் சந்தித்து முறையிட்டபோது வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்புவதாக அவர் உறுதியளித்தார். ஆனால், அந்த உறுதிமொழி காப்பாற்றப்பட வில்லையே என்று இந்தியப் பிரதமர் கவலைப்படுவதாகவும் தெரியவில்லை.
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத் தீர்மானம், மனிதச் சங்கிலிப் போராட்டம், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரத இயக்கங்கள் என்று எண்ணற்ற போராட்டங்கள் நடத்தப்பட்ட போதிலும், இலங்கை நெருக்கடி தொடர்பாக அந்த மாநில மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் உருப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று புதுடில்லி அக்கறைப்படவில்லை. மத்திய அரசாங்கத்துக்கு நெருக்குதல்களைக் கொடுக்கக் கூடிய போதுமான அரசியல் வலுவுடன் கலைஞர் கருணாநிதி இருக்கின்ற போதிலும், இலங்கை நெருக்கடி தொடர்பில் மத்திய அரசாங்கத்தின் அணுகுமுறைக்கு முரணாக எத்தகைய நிலைப்பாட்டையும் எடுப்பதில்லை என்று சபதம் செய்தவர் போன்று அவர் கருத்துக்களை வெளியிடுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான பெரும்பாலான தமிழகக் கட்சிகள் மத்திய அரசாங்கத்தை இந்த விடயத்தில் இனிமேல் நம்பிப் பயனில்லை என்று பகிரங்கமாகக் கூறுகின்ற போதிலும், கலைஞர் கருணாநிதி இன்னும் பொறுத்திருந்து பார்ப்போம் என்றுதான் கூறிக் கொண்டிருக்கிறார்.
இத்தகைய நிகழ்வுப் போக்குகளின் பின்புலத்திலேதான் இந்திய வெளியுறவுச் செயலாளரின் இலங்கை விஜயம் இடம் பெற்றிருக்கிறது. பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பவேண்டுமென்ற தமிழகக் கட்சிகளின் கோரிக்கைக்கு எதிராக கொழும்பில் ஏற்கெனவே அரசாங்கத்துக்குச் சார்பான பேரினவாத அரசியல் சக்திகளின் குரல்கள் ஓங்கி ஒலித்தன. முகர்ஜி கொழும்பு வருவதற்குத் தயாராயில்லை என்பதற்கு அப்பால் அவர் வருவதை ஜனாதிபதி ராஜபக்ஷவின் அரசாங்கம் விரும்பவுமில்லை. அதுமாத்திரமல்ல, அவ்வாறு முகர்ஜி வந்திருந்தாலும் கூட அவருக்கு அவமதிப்பைத் தரக்கூடிய பதிலுடன் அரசாங்கம் தயாராயிருந்தது என்பதிலும் சந்தேகமில்லை. ஆரம்பம் முதலிருந்தே புதுடில்லி இலங்கை இனநெருக்கடியை தவறான முறையில் கையாண்டதன் விளைவே இதுவாகும்.
பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்புவதற்கு இந்திய மத்திய அரசாங்கம் காட்டுகின்ற தயக்கம் தமிழகத்தில் ஏற்படுத்தக்கூடிய பிரதிபலிப்புக்களை சமாளிப்பதற்காகத்தான் மேனன் அனுப்பப்பட்டிருந்தாரோ என்ற சந்தேகமும் அரசியல் மற்றும் இராஜதந்திர வட்டாரங்களில் எழுப்பப்படுகின்றது. எது எவ்வாறிருந்தாலும் இலங்கையில் தற்போதைய நிலையில் போர்நிறுத்தம் என்பது பற்றிப் பேசுவதற்கு கொழும்போ அல்லது புதுடில்லியோ அக்கறைப்படவில்லை என்பதே உண்மையானது. அதனால், மேனனின் விஜயம் இலங்கையின் அரசியல் இராணுவ நிகழ்வுப்போக்குகளில் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்துமென்று நம்புவதற்கில்லை. மேனனுடன் பேசிய இலங்கை அரசாங்கத் தரப்பினர் குறிப்பாக வெளியுறவு அமைச்சர் ரோஹிதபோகொல்லாகம 1987 இலங்கை இந்திய சமாதான உடன்படிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பு தற்போதைய இராணுவ வெற்றிகளின் விளைவாக ஏற்பட்டிருக்கின்றது என்றும் அந்த உடன்படிக்கைக்குப் பின்னர் இலங்கை அரசியலமைப்பிற்கு கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பல மார்க்கங்களை அரசாங்கம் ஆராய்ந்துகொண்டிருக்கின்றது என்றும் தெரிவித்திருக்கிறார். இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு இலங்கை இந்திய சமாதான உடன்படிக்கை முக்கியமான ஒரு திறவுகோல் என்பதே ஜனாதிபதி ராஜபக்ஷ அரசாங்கத்தின் நிலைப்பாடு என்று இப்போது இந்தியாவுக்கு சொல்லப்படுகிறது.
அவ்வாறானால், ஜனாதிபதி கூட்டிய சர்வகட்சி மகாநாட்டுக்கும் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி பிரதிநிதித்துவக் குழுவினால் சமர்ப்பிக்கப்படக்கூடிய யோசனைகளுக்கும் என்ன கதி நேரப்போகிறது என்பது இன்னொரு கேள்வி. இந்தியாவின் கடந்த இரு தசாப்தகால அணுகுமுறை இலங்கையில் சிறுபான்மை இனங்களின் நியாயபூர்வமான எந்தவொரு அரசியல் அபிலாசையையும் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லாத பேரினவாதச் சக்திகளையே வலுப்படுத்தி வந்திருக்கின்றது என்றும் நாம் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். இந்தச் சக்திகளே போரை முழு மூச்சுடன் முன்னெடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியவை என்பதை இச்சந்தர்ப்பத்திலாவது புதுடில்லி புரிந்துகொள்ளுமா? இந்தியாவின் அணுகுமுறை காரணமாகத் தோன்றிய அரசியல் கோலங்கள் இனநெருக்கடி தொடர்பில் புதுடில்லி ஆரோக்கியமான பங்களிப்பை செய்வதை தடுக்கின்றன. இலங்கையில் நிலைவரங்கள் மேலும் சீரழிவைச் சந்திக்கக்கூடிய சூழ்நிலைக்கே இந்தியா உதவிக்கொண்டிருக்கின்றது.

