ஊற்று

தொடர் கொலைகளின் சோகத்தினை சுமக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இலங்கை ஊடகத்துறை

"த்திரிகைச் சுதந்திரம் அர்த்தமுள்ளதாக அமைவதற்கு ஊடகத்துறையினர் மீதான வன்முறைகள், படுகொலைகள் என்பன வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது வீரகேசரி பத்திரிகை.

தொடராக தமது சகாக்களின் பிரிவுத்துயர் தணியும் முன்பே இன்னொரு கொலையின் சோகத்தையும் சுமக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இலங்கையில் ஊடகத்துறை உள்ளது.

Media freedom under threat

மேலும் படங்கள்: International Relations and Tamil's Affairs Group (IRTAG)

அச்சுறுத்தல்களுக்கு உள்ளாயிருக்கும் பத்திரிகை சுதந்திரம் காப்பாற்றப் பட்டாலேயே, நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டி இலங்கையின் முதன்மை தமிழ் செய்தி இதழ் வீரகேசரியின் ஜனவரி 11ஆம் திகதிய வார வெளியீட்டின் ஆசிரியத் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ண்டே லீடர் பத்திரிகையின் பிரதம பொறுப்பாசி?யரும், பிரபல ஊடகவியலாளருமான லசந்த விக்கிரமதுங்க கடந்த வியாழக்கிழமை (08.01.2009) காலை கல்கிஸ்ஸ அத்திட்டிய பகுதியில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளின் குண்டுகளால் மௌனமாக்கப்பட்டுள்ளார்.

லசந்த படுகொலை செய்யப்படுவதற்கு இருதினங்களுக்கு முன்னர் அதாவது 06.01.2009 திகதியன்று பன்னிப்பிட்டிய, தெப்பானமவிலுள்ள மகாராஜா நிறுவனத்துக்குச் சொந்தமான எம்.ரி.வி., எம்.பி.சி. ஊடக நிறுவனத்துக்குள் நுழைந்த இனந்தெரியாத ஆயுதக் கும்பலொன்று பேரழிவுகளை ஏற்படுத்திச் சென்றுள்ளது.

2009ஆம் ஆண்டு புது வருடத்தின் ஒரு சிலதினங்களுக்குள் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் ஊடகத்துறை சார்ந்தோரை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது. வழமைபோல் ஊடகத்துறை சார்ந்தோர், வெளி நாட்டுத் தூதரகங்கள் அரசியல் வாதிகள், சிவில் சமூக அமைப்புகள் என பல தரப்பினரிடம் இருந்தும் அடுக்கடுக்காக அனுதாபங்களும் கண்டன அறிக்கைகளும் குவிந்த வண்ணமுள்ளன.

ஊடகத்துறை சார்ந்தோரும், அரசியல்வாதிகளும், சிவில் அமைப்புக்களும் லசந்த விக்கிரமதுங்க, எம்.ரி.வி., எம்.பி.சி. ஊடக நிறுவனத் தாக்குதல்குறித்து கண்டனங்களையும் எதிர்ப்பையும் தெரிவிக்கு முகமாக கண்டன ஆர்ப்பாட்டங்களையும், ஊர்வலத்தையும் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இலங்கையில் ஊடகவியலாளர்கள் கடத்தப்படும்போது, தாக்கப்படும் போது, பயமுறுத்தப்படும் போது, படுகொலை செய்யப்படும் போது மேற் கூறியவாறு கண்டன அறிக்கைகள் குவிவதும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் கூட்டங்கள் நடத்தப்படுவதும் வழமையான சம்பிரதாய சடங்குகளாகப் போய்விட்டன.

ஆனால், இத்தகைய கண்டனங்களும் ஆர்ப்பாட்டங்களும் வரலாற்றில் வெறும் பதிவுகளாகவே உள்ளன. ஊடகத்துறையினருக்கெதிராகத் தொடரும் வன்முறைகளை, பயமுறுத்தல்களை, படுகொலைகளைத் தடுத்து நிறுத்தும் வல்லமையை ஊடகத்துறையினருக்கு இவை வழங்கத் தவறிவிட்டன.

அதேபோல், ஊடகத்துறையினருக்கு எதிரான சம்பவங்களுக்குக் காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தப் போவதாகக் கூறுவதும் தொடர்ந்தும் "வாய்ப்பாட்டுச் செய்தி" யாகவே உள்ளது என்பதும் கசப்பான உண்மையும், வேதனை தரும் விடயமுமாகும். ஊடகத்துறையினருக்கெதிராகத் தொடரும் வன்முறைகளே மேற்கூறியவைகளுக்குச் சாட்சியாகும். ஊடகவிய லாளர் ரிச்சட் டி சொய்சா படுகொலையில் இருந்து தொடரும் உண்மை நிலை இதுவாகும்.

1990 ஆம் ஆண்டு பெப்ரவரி 18ஆம் திகதி ரிச்சட் டி சொய்சா சித்திரவதை செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.

கொழும்பில் காலி முகத்திடலில் கே.எஸ். ராஜா சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

கொழும்பில் 1999ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் திகதி நடராஜா அற்புதராஜா சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணத்தில் 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி மயில் வாகனம் நிமலராஜன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

2004 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி மட்டக்களப்பில் ஐயாத்துரை நடேசன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

கொழும்பில் 2004 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 16 ஆம்திகதி பால நடராஜா ஐயர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

கொழும்பில் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் திகதி பிரபல ஊடகவியலாளர் தர்மரட்னம் சிவராம் கடத்தப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

திருகோணமலையில் 2006ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதி சுப்ரமணியம் சுகிர்தராஜனும் அதே ஆண்டில் ஒகஸ்ட் 27ஆம் திகதி சின்னத்தம்பி சிவமகாராஜாவும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கொழும்பில் வைத்து 2005ஆம் ஆண்டு ஓகஸ்ட் 12ஆம் திகதி றேலங்கி செல்வராஜாவும் 2006 ஆம் ஆண்டு மே 2ஆம் திகதி லக்மல் சம்பத்தும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தில் 2006 ஆம் ஆண்டு மே 2 இல் உதயன் பத்திரிகை அலுவலகத்திற்குள் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

யாழில் தேவகுமார் 2008ஆம் ஆண்டு மே 28ஆம் திகதி கொலை செய்யப்பட்டார். வவுனியாவில் சுதாகரனும் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். தற்போது சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம பொறுப்பாசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு தொடராக தமது சகாக்களின் பிரிவுத்துயர் தணியும் முன்பே இன்னொரு கொலையின் சோகத்தையும் சுமக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இலங்கையில் ஊடகத்துறை உள்ளது.

ஆரம்பத்தில் பெரும்பாலும் தமிழ் ஊடகவியலாளர்கள் மீது படிந்த "இனந்தெரியாதோரின் கொலைக் கரங்கள்'' இன்று ஒட்டு மொத்த ஊடகத்துறை மீதும் படிந்து உயிரைக் குடிக்கத் தொடங்கியுள்ளது.

அதேபோல் பயறுத்தல், வன்முறை என்பனவும் இனம், மொழி, மதம் கடந்து அனைத்து ஊடகவியலாளர்கள் மீதும் "இனந்தெரியாத மறைந்த கரங்கள்'' பரவிவருகின்றன.

பத்திரிகைச் சுதந்திரம் அர்த்தமுள்ளதாக அமைவதற்கு ஊடகத்துறையினர் மீதான வன்முறைகள், படுகொலைகள் என்பன வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்பட வேண்டும். பயம், பீதி, அச்சுறுத்தல் போன்றவற்றில் இருந்து விடுபட்டு பத்திரிகையாளர்கள் சுதந்திரமாகப் பணியாற்றுவதற்கு அனைத்து மட்டங்களைச் சேர்ந்தவர்களும் வழிசமைக்கவேண்டும்.

இன்றைய நிலையில் இன்று லசந்த நாளை யார்? என்ற கேள்விகளுடன் பலிக்கடாக்களாக பயணிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில்தான் ஊடகத்துறை இலங்கையில் உள்ளது.

ஊடகத்துறை தொடர்ந்தும் தமது சகாக்களை இழந்து கொண்டிருக்க முடியாது. இத்தகைய செயல்கள் தொடருமாயின் ஜனநாயகம் குழி தோண்டிப் புதைக்கப்படுவது தவிர்க்க முடியாததாகும். ஆகவே ஜனநாயகம் காப்பற்றப்பட வேண்டுமாயின் ஊடகத்துறை காப்பாற்றப்பட வேண்டும்.

ஊற்றில் அண்மையில் பிரசுரமானவை