ஊற்று

வீரகேசரி: 'லசந்த விக்கிரமதுங்கவின் இழப்பு ஓர் நிரந்தர வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது'

சந்த விக்கிரமதுங்க தனது கருத்துக்களை சுதந்திரமாகவும் துணிச்சலாகவும் எழுதக்கூடிய ஒருவராக விளங்கினார். அவரது இழப்பு இந்நாட்டின் ஊடகத்துறையினர் மத்தியில் மாத்திரமன்றி பரந்துவாழும் அனைத்து சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மத்தியிலும் பெரும் கவலையையும் அதேவேளை கண்டனத்தையும் தோற்றுவித்துள்ளது, என கொழும்பிலிருந்து வெளிவரும் முதன்மை தமிழ் நாளிதழாகிய வீரகேசரி ஜனவரி 9ஆம் திகதிய ஆசிரியத் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.

LW0108.JPG

லசந்த விக்கிரமதுங்க

அவ் ஆசிரியத் தலையங்கம் முழுவதுமாக:

லங்கையின் ஊடகத்துறை மிகவும் சவால் மிக்க ஒன்றாக மாறிவருவது ஊடகவியலாளர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் மிகுந்த கவலையையும் அதிர்ச்சியையும் தோற்றுவித்துள்ளது. ஊடகங்கள் தாக்குதல்களுக்கு இலக்காகுதல், ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படுவது போன்ற சம்பவங்கள் சர்வதேச ரீதியில் இலங்கையின் நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவது தொடர்பில் பல்வேறு தடவைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் மேற்கொள்ளப்படும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் மிகுந்த கண்டனத்தையும் அதிர்ச்சியையும் வெளியிட்டு வருகின்றன. அத்துடன் சர்வதேச சமூகமும் இத்தகைய செயல்களை வன்மையாக கண்டித்துள்ளது. எவ்வாறெனினும் ஊடகங்கள் மீதான அச்சுறுத்தல்கள் எந்தவகையிலும் குறைந்தபாடில்லை.

இந்நிலையில் இலங்கையின் பிரபல ஆங்கிலப்பத்திரிகைகளில் ஒன்றாக விளங்கும் சண்டேலீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளரும் சட்டத்தரணியுமான லசந்த விக்கிரமதுங்க நேற்றுக்காலை இனந்தெரியாத ஆயுததாரிகளினால் சுடப்பட்டு ஆபத்தான நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார்.

நேற்றுக்காலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே கல்கிசை அத்திடிய வீதியில் வைத்து இவரது காரை மறித்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். குறிப்பாக லசந்த விக்கிரமதுங்க தனது கருத்துக்களை சுதந்திரமாகவும் துணிச்சலாகவும் எழுதக்கூடிய ஒருவராகவே விளங்கினார்.

அவரது இழப்பு இந்நாட்டின் ஊடகத்துறையினர் மத்தியில் மாத்திரமன்றி பரந்துவாழும் அனைத்து சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மத்தியிலும் பெரும் கவலையையும் அதேவேளை கண்டனத்தையும் தோற்றுவித்துள்ளது.

அத்துடன் அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், புத்திஜீவிகள் என பல்வேறு தரப்பினரும் இத்தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ளனர். தேசிய ஊடகமொன்றின் பிரதம பத்திரிகை ஆசிரியர் ஒருவர் இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டமை இதுவே முதற்றடவையாகும். எவ்வாறெனினும் லசந்த விக்கிரமதுங்கவின் இழப்பானது ஓர் நிரந்தர வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை எந்தவகையிலும் மறுப்பதற்கில்லை.

இதேவேளை சிரச ஊடக நிறுவனம் கடந்த 6ஆம் திகதி அதிகாலை இனந்தெரியாத ஆயுததாரிகளினால் தாக்குதலுக்கு உள்ளாகி முற்றாக சேதமடைந்த நிலையில் அந்த அதிர்ச்சியில் இருந்தும் மக்கள் விடுபட முன்னர் இக்கோரச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. இதனை சாதாரண பொதுமக்கள் உட்பட அனைத்துத்தரப்பினருமே கண்டித் துள்ளதுடன் தங்கள் கவலையையும் வெளியிட்டுவருகின்றனர்.

ஊடகவியலாளர்களைப் பொறுத்தமட்டில் பல்வேறுபட்ட கஷ்டங்களுக்கு மத்தியிலும் எந்தவித லாபமும் கருதாது மக்கள் சேவையை கருத்தில் கொண்டே செயற்பட்டு வருகின்றனர். அவ்வாறானதோர் சூழலில் வெறுமனே எழுந்தமானமாக ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் என்பன மனோரீதியாக அவர்கள் மத்தியில் அச்ச உணர்வையே மேலோங்கச் செய்துள்ளன.

உண்மையில் இதனை யார் செய்தார்கள்? என்ன நோக்கத்தின் அடிப்படையில் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பவை அனைத்தும் மர்மமாகவே உள்ளன. இத்தகைய சம்பவங்கள் மென்மேலும் தொடருமானால் சர்வதேச ரீதியில் இலங்கை தொடர்பில் தவறான அபிப்பிராயங்களே மேலோங்குவதாக இருக்கும். ஊடகவிலயாளர்களதும் ஊடக நிறுவனங்களினதும் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டியது மிகவும் அவசியமாகும்.

ஊடகவியலாளர்கள் தங்கள் பணிகளை சுதந்திரமாகவும் அச்சுறுத்தல் இன்றியும் மேற்கொள்ளக்கூடிய சூழலை உருவாக்க சகல தரப்பினரும் தம்மாலான பங்களிப்பைச் செய்ய முன்வரவேண்டும். ஜனநாயக நாடொன்றில் ஊடகத்துறையை பாதுகாப்பதும், சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதும் மிகவும் இன்றியமையாததாகும்.

இதுவரை ஊடகவியலாளர்கள் பலர் வெறுமனே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதனால் இத்துறை மிகவும் ஆபத்து மிக்கதொன்றாக மாறிவருவதுடன் கருத்துச் சுதந்திரமும் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலைமை மேலும் தொடராதிருப்பதற்கு சாத்தியமான நடவடிக்கை எடுப்பது மிகவும் அத்தியாவசியமென்பதை சகல தரப்பினரும் சுட்டிக்காட்டிவருகின்றனர்.

எதிர்வரும் காலத்திலேனும் இவ்வாறான துயரச் சம்பவங்கள் தொடராதிருப்பதை உறுதி செய்வது மிகவும் அத்தியாவசியமாகும்.

ஊற்றில் அண்மையில் பிரசுரமானவை