95வது வயதை பூர்த்தி செய்யும் பிரம்மஸ்ரீ பா. சண்முகரத்தின சர்மா
பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா
கொழும்பு 10 கப்பித்தாவத்தை ஸ்ரீபாலசெல்வ விநாயகர் ஆலய பிரதம குருவும் இலங்கையின் அந்தண குழாமின் மூத்த சிவாச்சாரியாருமான பிரம்மஸ்ரீ பா. சண்முகரத்தின சர்மா இன்று செவ்வாய்க்கிழமை - அக்ரோபர் 28ம் திகதி, சித்திரை நட்சத்திரத்தில் விநாயக பெருமானின் அநுக்கிரகத்துடன் 95 வயதை பூர்த்தி செய்கின்றார்.
இவர் 1942 இல் இராஜலக்ஷ்மி அம்மாளை மணம் புரிந்தார். மணவாழ்வில் புகுந்த அவர் பெரியோர்களின் ஆசியின் படியே பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்பதற்கிணங்க 8 ஆண் குழந்தைகளையும் 3 பெண்பிள்ளைகளையும் தவப்புதல்வர்களாக கொண்டவர். மனைவி ராஜலக்ஷ்மியும் சுமங்கலியாகவே சுமார் 3 ஆண்டுகளுக்கு முன் இறைவனடி சேர்ந்தார்.
1938இல் மருதானையில் அமைந்துள்ள யாருக்கும் கண்ணுக்கு புலப்படாமல் இருந்த ஸ்ரீ பால செல்வ விநாயகர் ஆலயத்தின் அர்ச்சகராக சேர்ந்து கொண்டார். இன்று வரை ஓம்கார மூர்த்தியான வில்லங்கங்களைப் போக்கும் விநாயக பெருமானுக்கே 60 வருடங்களாக அன்பாலும் பணிவாலும் தளராத முயற்சியாலும் தனது பிள்ளைகளையும் நல்வாழ்வுக்கு கொண்டு வந்தது அல்லாமல் ஆலயத்தையும் இலங்கையின் பெருமை மிக்க புனித ஆலயமாக உருவாக்கினார்.
இவர் யாழ். பரமேஸ்வரா கல்லூ?யின் பழைய மாணவர் ஆவார். செல்வ விநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேகங்கள் 1950 ஆம் ஆண்டு சங்கானை சிவஸ்ரீ விஸ்வநாத குருக்களினாலும் 1962, 1974, 1986, நயினாதீவு சிவஸ்ரீ ஐ. கைலாசநாத குருக்களினாலும் 1998 ஆம் ஆண்டு நவாலியூர் சிவஸ்ரீ சுவாமி விஸ்வநாத குருக்களினாலும் பக்திபூர்வமாக இக் கும்பாபிஷேகங்கள் நிறைவேற்றப்பட்டன. தற்பொழுது பாலஸ்தாபனத்தில் உள்ள இவ் ஆலயம் மிக விரைவில் மிகவும் இந்திய சிற்ப வேலைப்பாடுடைய மகா மண்டபமும் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் மிக விரைவில் நடைபெறவுள்ளது. இதற்காக கோயில் குருக்கள் நாளும் பொழுதும் அயாராது உழைத்து வருகின்றார்கள்.
காஞ்சி ராஜப்பா குருக்கள், காளியம்பாள் சாம்பசிவமூர்த்தி குருக்கள். தாம்பரம் முத்து குருக்கள் போன்ற தென்னிந்திய குருமார்கள் இவரது ஏற்பாட்டில் நடைபெற்ற கும்பாபிஷேகங்களில் கலந்து சிறப்பித்தவர்கள். முன்னாள் இந்து கலாசார அமைச்சர் செல்லையா இராசதுரைக்கு முதலாம் உலக இந்து மாநாட்டிற்கு பெரும் ஒத்துழைப்பு கொடுத்தவர் மேலும் அஸ்வமேத யாகம் நடைபெறுவதற்கு அளப்பெரிய பங்கினை வகித்தவர். இரண்டாம் உலக இந்து மாநாட்டின் போது முன்னாள் இந்து கலாசார அமைச்சர் அமரர்.தி மகேஸ்வரன் அவர்கள் மூலம் தங்கப்பதக்கம் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்ட மகா குரு.
இவர் முன்னர் இந்து கலõசார அமைச்சராக இருந்த கே. என். டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து கொழும்பு முகத்துவாரம் ஸ்ரீ சர்வார்த்த சித்தி விநாயக ஆலய வளாகத்தில் வேத சிவாகம பாடசாலையான ஸ்ரீ வித்தியா குருகுலம் 2002 இல் ஸ்தாபிக்கப்பட்டது.
கதிர்காம தொண்டர் சபை, மாளிகாவத்தை சித்தி விநாயகர் ஆலயம் போன்றவற்றில் ஆலோசகராகவும் கொழும்பு ராமகான சபையில் 39 வருடமாக தலைவராகவும் மற்றும் சிவ பிராம்மண சங்கத்தின் தலைவராகவும் ஸ்ரீ வித்தியா சர்வதேச இந்து மத பீடத்தின், சர்வதேச இந்து மத பீடத்தின் போஷகராகவும் கடமையாற்றி வருகின்றார்.
2007 கம்பன் விழாவில் இவரது அயராத ஆன்மிக சேவையைப் பாராட்டி மிகப் பெரும் கௌரவம் இவருக்கு அளித்தது.
அமரர் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸாவின் மிகப்பெரும் மதிப்புக்குள்ளானவர்.
எல்லோரையும் எளிமையாக தன்பால் கவர்ந்து ஆன்மிக சேவையை சிறப்புறச் செய்து வரும் குருக்கள் மேலும் நன்கு வாழ நாம் அனைவரும் பிராத்திப்போமாக.
நன்றி: வீரகேசரி

