ஊற்று

தீபாவளியை அண்மிக்கும் இத்தருணத்திலாவது மலையக மக்கள் நலன் முன்னுரிமை பெறவேண்டும்

ல கோடி பணம் யுத்ததிற்காகவும் வேறும் அதிகார துஷ்பிரயோகங்களினாலும் விரயமாகப்பட்டுக் கொண்டிருக்கையில், நாட்டிற்கு கணிசமானளவு அந்நிய செல்லாவணியை தலமுறைகள் வழியாக ஈட்டித்தரும் தமிழ் - மலையக தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார வளர்ச்சி புறக்கணிக்கப்படும் நிலயே தொடர்கிறது.

நாட்டில் அன்றாடம் அதிகரித்துச் செல்லும் விலையேற்றங்கள் மற்றும் பண வீக்கங்களுக்கு மத்தியில் பெருந்தோட்டப்பகுதி மக்கள் தமது வாழ்க்கையை கொண்டு நடத்துவது பெரும் சவாலாகவே இருந்து வருவதனை சுட்டிக்காட்டியும், அவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை மனிதாபிமான ரீதியில் உணர்ந்து நிவர்த்தி செய்ய வலியுறுத்தியும், கொழும்பில் இருந்து வெளிவரும் முதன்மை தமிழ் நாளிதழான வீரகேசரி, ஒக்ரோபர் 23ம் திகதி ஆசிரியத்தலையங்கம் தீட்டியுள்ளது.

[மலையகத்தில் - படப்பிடிப்பு: Kaz]

ஒக்ரோபர் 28ம் திகதி, தீபாவளிப்பண்டிகையை மிகவும் விசேடமாக கொண்டாடும் பெருந்தோட்டத்துறை மலையக மக்களுக்கு உரிய முற்பணங்களையும் காலதாமதமின்றி வழங்கிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியத்தலையங்கம் முழுவதுமாக:

மலையக மக்கள் எதிர் நோக்கும் பொருளாதாரப்பிரச்சனைகள்

லையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பொதுவாகவே பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்த நிலையிலேயே தங்கள் வாழ்க்கையை கடத்தி வருகின்றனர். அவர்களுக்கு தொழிலுக்கேற்ற வேதனம் கிடைப்பதில்லையெனவும் அதன் காரணமாகவே தங்கள் வாழ்க்கைத்தரத்தை எந்தவகையிலும் உயர்த்திக்கொள்ள முடியாத சூழ்நிலையில் இருப்பதாகவும் மிகுந்த கவலை தெரிவிக்கின்றனர்.

எனினும் பெருந்தோட்டப்பகுதி மக்கள் தங்கள் தலைவிதியை நொந்து கொண்டு சலிக்காமல் தமது பணிகளை தொடரவே செய்கின்றனர். இந்நிலையில் தமது பொருளாதார நெருக்கடிகள் குறித்து சம்பந்தப்பட்டோரின் கவனத்திற்கு பல தடவைகள் கொண்டு வந்தும் கூட அது தொடர்பில் எவரும் கனக்கில் எடுப்பதாக தெரியவில்லை.

நாட்டில் அன்றாடம் அதிகரித்துச் செல்லும் விலையேற்றங்கள் மற்றும் பண வீக்கங்களுக்கு மத்தியில் பெருந்தோட்டப்பகுதி மக்கள் தமது வாழ்க்கையை கொண்டு நடத்துவது பெரும் சவாலாகவே இருந்து வருகின்றது. சாதாரணமாக மூன்று வேளை உணவை திருப்தியாக உண்ண முடியாத நிலையில் பல்வேறு நெருக்கடிகளுக்கு அவர்கள் முகம் கொடுத்து வருகின்றனர்.

அவர்களின் சம்பளத்தில் ஒரு சில ரூபாய்களை உயர்த்துவதற்குக்கூட போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், வேலைநிறுத்தங்கள் என பல்வேறு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டியிருப்பதாக விசனம் தெரிவிக்கும் பெருந்தோட்டப்பகுதி மக்கள் தங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு எந்தவகையான திட்டங்களோ அன்றேல் நடவடிக்கைகளோ எடுக்கப்படவில்லை என்றும் கூறுகின்றனர்.

இதனிடையே ஒரு சில தோட்டங்களில் வழங்கப்படும் வேலை நாட்கள் குறைக்கப்படுவதால் அவர்கள் தங்கள் வரவுசெலவை கையாளமுடியாது மிகுந்த நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கின்றனர். அதுமாத்திரமன்றி இரண்டு வேளை உணவைக்கூட திருப்தியாக உண்ண முடியாது தொடர்ச்சியான கஷ்டங்களை எதிர்நோக்குவதாக மலையக மக்கள் தெரிவிக்கின்றனர்.

[அவிசாவளையில் இறப்பர் தோட்டமொன்று-படப்பிடிப்பு: HA]

குறிப்பாக இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்த வேலைநாட்களே வழங்கப்படுவதாகவும் சில தனியார் தோட்டங்கள் தமது உற்பத்தியை முற்றுமுழுதாக கைவிட்டுள்ளதாகவும் இதனால் அங்கு பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக பெரும் கஷ்டங்களுக்கு ஆளாவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இவ்வாறே இறப்பர் தோட்டங்களில் பணிபுரிவோரும் பல்வேறு வகையான பொருளாதார நெருக்கடிகளுக்கு ஆளாவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. முன்னர் ஒரு கிலோ 300 தொடக்கம் 400 ரூபாவிற்கு கொள்முதல் செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட இறப்பர் சீட்டுக்கள் தற்போது 100 ரூபாவிற்கு குறைவாகவே கொள்முதல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் மிகுந்த நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர்.

தோட்டத் தொழிலாளர்கள் முறையான வேலைநாட்கள் இல்லாத காரணத்தினால் ஒருபுறம் அவர்கள் வருமானத்தை இழப்பதுடன் மறுபுறம் அவர்கள் பொருட்களை கொள்வனவு செய்யும் சக்தியையும் இழந்து விடுகின்றனர். மேலும் பெருந்தோட்டப்பகு தியில் ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடி நிலை காரணமாக உணவு பொருட்களை விநியோகிப்போரும் கடன் அடிப்படையில் அவற்றை கொடுக்க தயக்கம் காட்டிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில் ஊழியர்களின் வேலைநாள் குறைப்பு விவகாரம் பாரிய பொருளாதார பிரச்சினைகளை உருவாக்கியுள்ளதை காணமுடிகின்றது.

[மலையகத்தில் - படப்பிடிப்பு: Kaz]

இவற்றுக்கு மத்தியில் பெருந்தோட்டத்துறை மக்கள் பொதுவாக தீபாவளிப்பண்டிகையை மிகவும் விசேடமாக கொண்டாடுவது வழக்கம். தீபாவளிப் பண்டிகை நெருங்கிவரும் நிலையில் கையில் போதிய பணம் இன்றி மிகுந்த கஷ்டங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கும் தோட்டத் தொழிலாளர்கள் தமக்கு உரிய முறையில் தீபாவளி முற்பணம் வழங்கப்படவில்லையெனவும் புகார் தெரிவிக்கின்றனர்.

தமக்கு நியாயமான தொகையை தீபாவளி முற்பணமாக வழங்க வேண்டும் என அவர்கள் ஏலவே கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

எனினும் ஒருசில தோட்டங்களில் 3000 ரூபா தொடக்கம் 4000 வரை தீபாவளி முற்பணம் வழங்கப்பட்டதாகவும் மேலும் ஒரு சில தோட்டங்களில் தீபாவளி முற்பணம் முற்றாகவே வழங்கப்படவில்லையெனவும் இவர்கள் மிகுந்த கவலை தெரிவிக்கின்றனர்.

குறைந்த பட்சம் தோட்டத்தொழிலாளர்கள் மூன்று வேளை உணவையேனும் நிம்மதியாக தேடிப்பெறும் வகையில் அவர்களுக்கு உரிய வேதனத்தை வழங்க சாத்தியமான நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். மலையக மக்களின் பொருளாதாரத்தை வளப்படுத்துவதன் மூலமே அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடியதாக இருக்கும்.

இன்றேல் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து தொடர்ந்தும் நலிவுற்ற சமுதாயமாகவே அவர்கள் இந்த பூமியில் வாழவேண்டிய துரதிருஷ்டவசமான நிலைமை நீடிப்பதாக இருக்கும்.

இன்று நாட்டில் சகல தரப்பினரும் பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இந்நிலையில் ஓர் குறித்த வருமானத்தை மாத்திரமே நம்பியிருக்கும் பெருந்தோட்டத்துறை ஊழியர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை மனிதாபிமான ரீதியில் உணர்ந்து பார்க்க முன்வருவது சகல தரப்பினரதும் கடப்பாடாகும்.

ஊற்றில் அண்மையில் பிரசுரமானவை