ஊற்று

தமிழக மக்களின் போராட்டங்கள் அல்லல்படும் தமிழ் மக்களுக்காகவே - கனிமொழி

ற்போது தமிழகத்தில் இலங்கைத் தமிழ் மக்களுக்காக எழுந்துள்ள எழுச்சியானது வெறும் தேர்தலை நோக்கியதல்ல. நாம் இலங்கையில் அல்லல்படும் தமிழ் மக்களுக்காகவே குரல் எழுப்புகின்றோம்'' என்று தமிழக முதல்வரின் புதல்வியும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இலங்கையின் முதன்மை தமிழ் பத்திரிகையான வீரகேசரியின், வார இதழுக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரத்துக்குத் தீர்வு கிடைக்க வேண்டுமெனக்கோரி அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமாச் செய்து கடிதம் கையளித்துள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.

" இலங்கையிலுள்ள தமிழர்களின் விவகாரம் உள்நாட்டு விவகாரம் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அதற்காக நாம் ஒதுங்கியிருக்க முடியாது. நாஸி முகாம்களில் யூதர்களை ஹிட்லர் படுகொலை செய்தபோது அதனை உள்நாட்டு விவகாரம் என உலகம் பார்த்துகொண்டிருக்கவில்லை அந்த வகையில் இலங்கையில் தமிழர்கள் பாதிக்கப்படுவது உள்நாட்டு விவகாரமாக இருந்தாலும்கூட அதுகுறித்து நாம் கவலைகொள்ள வேண்டியுள்ளது'' என்றும் அவர் தனது செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

"தமிழீழ மக்களையும், விடுதலைப் புலிக ளையும் இணைத்து இந்த பிரச்சினைகளை திசை திருப்புவதற்கு இலங்கை அரச தரப்பு, ஜெயலலிதா போன்ற பலரும் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். தமிழகத்தில் குரல் எழுப்பப்படுவதற்கு முக்கியமாக அமைவது, இலங்கையில் அவதிப் படும் அப்பாவி குழந்தைகளுக்காக, பெண்ளுக்காக முதியோர்களுக்காகவுமேயாகும்.

இதற்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. விடுதலைப் புலிகள் அவர்களுடைய போராட்டத்தை அவர்களே பார்த்துக் கொள்வார்கள். அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அது எமது நோக்கமுமல்ல'' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வீரகேசரி வார இதழுக்கு வழங்கிய செவ்வியின் முழு விவரம் பின்வருமாறு:

கே: தமிழீழ விடுதலைப்புலிகளைக் காப்பாற்றுவதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் முயற்சிப்பதாக இலங்கைத் தரப்பில் குற்றம் சுமத்தப்படுகின்றதே?

ப: தமிழீழ மக்களையும் விடுதலைப் புலிகளையும் இணைத்து இந்த பிரச்சினைகளை திசை திருப்புவதற்கு இலங்கை அரசு தரப்பும் ஜெயலலிதா போன்ற பலரும் இந்த முயற்சியை தீவிரமாக செய்துகொண்டு வருகின் றார்கள். இங்கே குரல் எழுப்பப்படும் முக்கிய விடயம் அங்கே அவதிப்படும் அப்பாவிக் குழந்தைகளுக்காக, பெண்களிற்காக, முதியோர்களுக்காக எதுவுமே தெரியாமல் அகதி முகாம்களில் இருந்து அழைத்துச்செல்லப்பட்டு கொடுமைப்படுத்தப்படும் இளைஞர்களுக்காக, இதுதான் இங்கே பிரச்சினை.

இதைவிட்டுவிட்டு விடுதலைப்புலிகளுக்கான குரல், ஆதரவாகச்செயற்படுகிறார்கள் என்று சொல்லப்படுவதெல்லாம் பொய். இந்த திசை திருப்பும் செயல்களை இலங்கை அரசும் அதன் கைக்கூலிகளாக இருக்கும் சிலபேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதற்கும் விடுதலைப்புலிகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. விடுதலைப் புலிகள் அவர்களுடைய போராட்டத்தை அவர்களே செய்வார்கள். அவர்களுக்காக குரல்கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. அதுவே நோக்கமும் இல்லை. முதலில் இது இரண்டையும் பிரித்து பார்த்து நியாயமாக பே கற்றுக்கொள்ள வேண்டும்.

ஆகஸ்ட் 10, 2007 இல், ராஜ்ய சபை உறிப்பினர் கனிமொழி இந்திய பாராளுமன்றத்திற்கு உப ஜனாதிபதி தேர்தலுக்காக வாக்களிக்க வந்தபொழுது...படப் பிடிப்பு: கமல் சிங் (பி.ரி.ஐ)

கே: இலங்கையில் நடைபெற்று வரும் இன் றைய போர் நிலைமை குறித்து?

ப: இலங்கையில் போர் நிலைமைகளைவிட மக்களுடைய கஷ்டங்களைத்தான் இங்கே முக்கியத்துவப்படுத்த வேண்டியிருக்கின்றது.

போரில் ஈடுபட்டிருக்காத அந்த மக்கள் பெரிய அவதிக்குள்ளாகி இருக்கின்றார்கள்.

அந்த போரால் மூன்று லட்சத்திற்கு மேற்பட்டோர் உள்நாட்டிலேயே அகதிகளாக ஆக்கப்பட்டிருக்கின்றார்கள் என்று கணித்து சொல்லப்படுகின்றது. இப்போது மழைகாலம் வேறு வரப்போகிறது தங்குவதற்குரிய இடங்களில்லாமல் துன்பப்படும் அம்மக்களுக்கு இன்று அது கொடுமையாக இருக்கும். அதை தடுப்பதற்கே நாம் குரல்கொடுக்கிறோம்.

கே: இப்பொழுது நடைபெறுவது இலங்கையின் உள்நாட்டு பிரச்சினை எனவும் இதில் தலையிட இந்தியாவுக்கு உரிமை இல்லை எனவும் கூறப்படுகின்றதே?

ப: உள்நாட்டு பிரச்சினை என்பதில் யாருக்கும் இருவேறு பட்ட கருத்துக்கள் இல்லை.

ஆனால் ஹிட்லர் நாஸி முகாமில் யூதமக்களை கொண்டுபோய் லட்சக்கணக்கில் கொலை பண்ணியதை எப்படி ஜேர்மனிய உள்நாட்டு பிரச்சினை என்று சொல்லி நாம் இன்றுவரை அதை நியாயப்படுத்த முடியாதோ அது போலத்தான் ஒரு இனத்தின் மக்களை அரசாங்கமே அம்மக்கள் மீது ஒரு இனப்படுகொலையை கட்டவிழ்த்து விடுகின்றது எனும்போது அதை நாம் உள்நாட்டு விவகாரமாக பார்க்க முடியாது. ஒரு தனிநாட்டுக்கான போராட்டத்தை வேண்டுமென்றால் உள்நாட்டு விவகாரமாக கருதி நாம் தலையிடுவது தப்பு என்று சொல்வது நியாயம் . ஆனால் ஒரு இனத்தை, நாட்டில் உள்ள ஒரு பகுதிமக்களை அரசாங்கமே அழிக்கவேண்டும் என்ற நோக்கில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றபோது அதை எப்படி நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியும்? இது தமிழர்களுடைய பிரச்சினையாக நாம் பார்க்கவில்லை. இதை ஒரு இந்தியப்பிரச்சினையாக நாம் பார்க்கவில்லை. இதை ஒரு மனிதாபிமானமான, மனிதர்களைக்காப்பாற்ற வேண் டிய ஒரு பிரச்சினை யாக நாம் பார்க்கின்றோம். இது குறித்து இந்தியா மட்டும்தான் கேள்வி கேட்க வேண்டும் என்பதல்ல, அமெ?க்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் கேட்க வேண்டும்.

மனித இனத்தின் மேல் நம்பிக்கை வைத்திருக்கும் யாராக இருந்தாலும் கேட்கவேண்டிய நியாயமான கேள்வி கள் இவை.

கே: இந்தியாவில் பல்வேறு பிரச்சி னைகள் இருக்கும் போது இலங்கைப் பிரச்சினையில் இந் தியா ஏன் தலையிட வேண்டும் எனக்கேட்கப்படுகின்றதே?

ப: ஒவ்வொரு நாட்டிற்கும் ஆயிரத் தெட்டு பிரச்சி னைகள் இருக்கின் றன. பிரச்சினை கள் இல்லாமல் யாரும் இருக்க முடியாது. உன் கோயிலை இடித் தால் எனக் கென்ன பிரச்சினை என்று ஒதுங்கிக்கொள்ள முடியுமா? நமது அன்றாடப் பிரச்சினைகளையும் நம் வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் வேறுபடுத்தி, இதையெல்லாம் தீர்த்துவிட்டுத்தான் இந்தியா ஜனநாயக நாடாக இருக்க வேண்டும் என்று நாம் சொல்ல முடியாதில்லையா?

இப்போது இந்தியாவில் பல பிரச்சினைகள் இருக்கும் போது தேர்தல் எதற்கு என்று கேட்க முடியுமா? அல்லது பலபிரச்சினைகள் இருக் கும் போது அவசரகால சட்டங்களை மீண் டும் கொண்டு வந்தால் ஏற்றுக்கொள்ள முடியுமா? பங்களாதேஷ் பிரச்சினை வந்தபோது இந்தியாவில் பிரச்சினைகள் இல்லாமலா இருந்தது? அப்போதும் இதை விட கூடுதலான பிரச்சினை கள் இருக்கத்தான் செய்தது.

ஆகவே, எமக்கிருக்கிற பிரச்சி னைகளைக் காரணம் காட்டி பக்கத்துவீடு பற்றி எரிவதை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

கே: தமிழகத்தின் புதிய நிலைவரத்தால் இலங்கையில் யுத்தத்தை முன்னெடுப்பதற்கு தடங்கல் எதுவுமில்லையே என இலங்கை அரசு தரப்பால் கூறப்படுகின்றதே?

ப: இதை ஒரு உலகளாவிய பிரச்சினையாகப் பார்த்து எல்லாநாடுகளும் மனிதாபிமான அடிப்படையில் இதில் தலையிட வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும்.

இலங்கை மீது அழுத்தம் கொடுக்க வேண்டும். மக்கள் பாதுக்காக்கப்படவேண்டும்.

இதைத்தான் நாங்கள் திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருக்கின்றோம். மாற்றம் வருமா வராதா என்று ஆருடங்கள் சொல்வதை விட மாற்றம் வேண்டும் என்பதுதான் நமது விருப்பம்.

கே: தேர்தல் காலமென்பதால் தான் இலங்கை தமிழர்களிற்காக குரல் எழுப்பப்படுவதாக சொல்லப்படுகின்றதே?

ப: இலங்கையில் அரசாங்கம் சிங்கள மக்களிடம் தாம் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக மோசமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிலே நம்முடைய மக்கள் அங்கு அழிகின்றார்கள். பிரச்சினை உச்சக்கட்டத்தை நோக்கி செல்கின்றது.

அதனால் வேறு வழியில்லாமல் இந்த பிரச்சினையை. எல்லோரும் கையில் எடுக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இப்பொழுது இங்கே தேர்தல் காலமென்பதை நான் ஒத்துக்கொள்கின்றேன்.

அந்த பிரச்சினையை ஒரு கட்சி முன் னெடுத்து அதன் மூலமாக அரசியல் ஆதாயம் தேடுகின்றது என்றால் அக்கட்சிக்கு பலம் ஏற்படக் கூடும். ஆனால் எல்லாக்கட்சிகளும் இணைந்து இதை ஒருமித்த குரலாக மாற்றும் போது இது எப்படித் தேர்தல் லாபத்திற்கானதாக அமையும்? இதற்கு தனித்து எதிர்ப்புக்குரல் ஜெயலலிதா அம்மையாரிடம் இருந்து மட்டும்தான் வருகிறது. இதைத்தவிர எல்லா கட்சிகளும் பல கருத்து வேறு பாடுகளையும் தாண்டி ஒன்றாக குரல் கொடுக்க முன்வந்த பிரச்சினையாகத்தான் பார்க்கவேண்டும் இதை எப்படி தேர்தலுக் கான ஒரு விசயமாகப் பார்க்கமுடியும்? அந்த அம்மையார் இதையே காரணமாக வைத்து எம்.எல்.ஏக்களையும் ராஜினாமா செய்யச்சொல்லி இங்கே நாடாளுமன்றத் தேர்தலில் மாத்திரம் குறிவைக்காமல் சட்ட மன்றத்தேர்தலையும் கொண்டு வந்துவிட முடியுமா என்றும் ஆசைப்படுகின்றார். அவர் ஒருவரைத் தவிர இங்கே யாரும் இதன் மூலமாக அரசியல் ஆதாயம் தேடமுனைவதாகத் தெரியவில்லை.

கே: இந்திய அரசு தங்களுடன் முழுமையாக ஒத்துழைப்பதாகவும் தமிழ் நாட்டின் நிலைப்பாடு குறித்து கருத்தில் எடுக்க தேவையில்லை எனவும் இலங்கை அரசு தரப்பால் கூறப்படுவது குறித்து?

ப: அவர்கள் என்ன வேண்டுமென்றாலும் சொல்லுவார்கள். ஆனால் இந்திய மத்திய அரசாங்கத்தின் மீது தமிழக அரசுக்கு முழுமையான நம்பிக்கை இருக்கின்றது எங்களை அவர்கள் ஏமாற்றி விடமாட்டார்கள்.

தமிழ் மக்களை அவர்கள் கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை நிச்சயமாக இருக்கின்றது.

அதனால்தான் அவர்களை நோக்கி கோரிக்கையை வைத்துக்கொண்டிருக்கின்றோம். இலங்கை அரசாங்கம் தன்னுடைய வசதிக்கேற்ப என்னவென்றாலும் சொல்லட்டும்.

கே: இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட முடியாது, அது ஒரு இறைமையுள்ள அரசாங்கம் எனவே ஒரு வரையறைக்குள்தான் இந்தியா செயற்பட முடியும் என காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் அபிக்ஷக் சிங்வி கூறியிருக்கின்றாரே?

ப: அந்த வரையறைக்குள்தான் நாம் செயற்படச் சொல்கின்றோம். இன்னொரு நாட்டின் மீது போர் தொடுப்பதோ அல்லது வேறு எதையம் செய்வதென்பதோ எந்த அளவுக்கு சாத்தியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒரு விடயம் தான். ஆனால் நிச்சயமாக அப்பாவி மக்கள் கொல்லப்படும் போது நம்முடைய இனத்தை சேர்ந்த மக்கள் கொல்லப்படும் போது நிச்சயமாக நம்மால் கண்டிக்கப்பட வேண்டிய ஒரு விடயமில்லையா. அவர்கள் தமிழ் இனம் மாத்திரமில்லை, அவர்களும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்கள் தான். இன்னொன்றை பார்த்தால் பிரிட்டனின் பல்வேறு இனமக்கள் வாழ்க்கின்றார்கள். சீக்கிய இனமக்களும் வாழ்க்கின்றார்கள் அவர்கள் தலைப்பாகை கட்டக்கூடாது என்ற விடயம் வந்தபோது நிச்சயமாக நாம் எல்லோருமே நம்முடைய கண்டனத்தை தெரிவித்தோம்.

இது சீக்கியர்களுடைய அடிப்படை நம்பிக்கையென்று இது அவர்களுடைய விவகாரமென்று நாம் ஒதுக்கிவிடவில்லையே அது போலத்தான் இதுவும். அதைவிட வாழும் உரிமையைப் பற்றிய ஒரு பிரச்சினையாக இருக்கின்றது.

கே: தமிழக முதல்வர் ஏற்பாடு செய்த அனைத்துக்கட்சி மாநாட்டில் பங்குபற்றாத கட்சிகளை இவ்விடயத்தில் எவ்வாறு அரவணைத்து செயற்படப்போகின்றீர்கள்?

ப: எல்லோரும் ஒன்றாக சேர்ந்து இவ்விடயத்திலே ஈடுபடவேண்டும் என்பதைத்தான் தமிழக முதல்வர் அந்த அனைத்துக்கட்சி கூட்டத்திலேயே சொல்லியிருக்கின்றார். "சில கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இந்த கூட்டத்திற்கு வராதது என்னை எதிர்ப்பதற்காகவே ஒழிய தமிழர்களை எதிர்ப்பதற்காக அல்ல. பிரச்சினையை அவர்கள் மறுதலிக்கின்றவர்கள் அல்லர்' என்பதை மிகவும் பெருந்தன்மையோடு சொல்லியிருக்கின்றார்கள். அதைப் புரிந்துகொண்டு இதை ஒருமித்த குரலாக ஒலிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இவர்கள் புரிந்துகொண்டு நிச்சயமாக வருவார்கள் என்பதைநாம் நம்பகின்றோம்.

கே: அனைத்துக்கட்சி கூட்டதில் எடுத்த முடிவின்படி பதினைந்து நாட்களிற்குள் இலங் கையில் யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்படா விட்டால் தமிழகத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவார்கள் என்றதீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது நீங்கள் உடனடியாக உங்களது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கின் றேன் என்று தலைவர் கலைஞர் அவர்களிடம் கடிதத்தை சமர்ப்பித்தீர்கள். அது போல் தமிழகத்தின் மற்றைய எம்.பிக்களும் ராஜினாமா செய்வார்களா?

ப:இதற்கு திராவிட முன்னேற்ற கழக தலைவர் சொன்னதை வைத்து உங்களிற்கு பதில் சொல்லுகின்றேன். கண்டிப்பாக எங்கள் கட்சியின் தலைமை என்ன முடிவெடுத்ததோ உணர்வு பூர்வமாக ஒத்து நாம் செயற்படுவோம். மற்றவர்களும் நிச்சயமாக தங்களினுடைய வாக்குறுதியை காப்பாற்று வார்கள் என்று நம்புகின்றோம்.

கே: தமிழகத் தலைவர்கள் சொன்னார்கள் என்பதற்காக இராணுவத் தாக்குதலை நிறுத்த முடியாது என்று இலங்கை அரசாங்கத்தரப்புஅறிவித்திருக்கின்றதே?

ப: தமிழ் மக்கள் பகுதியில் மக்கள் மீது தாக் குதல் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்பதை இங்கே சிலபேர் இல்லை என்று மறுக்கிறார்கள். அதை இலங்கை அரசு சொல்வதால் அவர்களின் வேசம் நன்றாக கலைகிறது.

கே: மக்கள் அகதிகளாக மர நிழல்களிலும் வயல்வெளிகளிலும் தங்கியிருப்பதாக கூறப் படுவது இவை உண்மைக்கு மாறான கூற்று என்று இலங்கை அரசால் கூறப்ப டுகிறதே?

ப: ஐ.நா அமைப்பு, செய்தி நிறுவனங்கள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்ற பல அமைப்புக்களை உள்ளே விடச் சொல்லுங்கள். எது உண்மை எது பொய் என்று உலகம் அறியட்டும்.

கே: அண்மையில் இந்தியப்பிரதமருடன் நீங்கள் சந்தித்த போது. பேசிய விடயங்களைப்பற்றி..?

ப: கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படும் தமிழக மீனவர்களைப் பற்றியும் இன்னல்களுக்குள்ளாகும் ஈழத்தமிழர்கள் பற்றியும் சர்வகட்சி மாநாடு நடைபெறு?ன்னரே பிரதமருக்கு விளக்கமாக எடுத்துக் கூறினேன்.

நிச்சயமாக அவர் நடவடிக்கை எடுக்கின்றேன் என்பதைத்தான் திரும்ப திரும்ப சொல்லியிருந்தார். வாக்குறுதிகளை அளித்தார்கள். நாங் கள் பொறுத்திருந்து பார்ப்போம்.

கே: இலங்கை இனப்பிரச்சினையில் எவ்வகையிலான தீர்வு எட்டப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

ப: அப்பாவி மக்கள் இன்னல்களிலிருந்து காப்பாற்றபடவேண்டும் அதுதான் அடிப்படை. அவர்களுடைய உள்நாட்டு விவகாரத்தில் தலையிடவோ, இது தான் தீர்வு என்று சொல்லவோ உரிமையில்லைத்தான். ஆனால் இந்தப்பிரச்சினைக்கு சரியான தீர்வு அரசியல் தீர்வு ஒன்றாகவே இருக்கமுடியும்

2008 அன்று தி ஹிந்து பத்திரிகைக்கு பேட்டி அளித்த ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் தமிழ் மக்களிற்கு இந்த நாட்டில் உரிமையிருக் கின்றது என்று சொல்லியிருக்கின்றார்.

ஆனால் சில வாரங்களுக்கு முன்னர் இலங்கை இராணுவத் தளபதி இது சிங்களவர்களுக்கே சொந்தமான நாடு என்று சொன்னார்.

அப்படியென்றால் ஜனாதிபதிக்கும் நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருப்பவருக்கும் இடையில் எப்படி இரு வேறுபட்ட கருத்துக்கள் இருக்க முடியும்? அதை அவர்கள் தெளிவு படுத்த வேண்டும்.

அங்கு இருக்கும் குடிமக்களுக்கு நீ இரண்டாம் பட்ச குடிமகன் தான் என்று அரசாங்கம் முடிவெடுத்து அறிவிக்கு மென்றால் அதை எல்லோரும் ஒட்டு மொத் தமாக அறிவிப்பார்களானால் அங்குள்ள உண்மை நிலைமை என்ன என்று தெரியவரும். அப்போது நாம் அதற்கு என்ன செய் யலாம் என்பதையும் தீர்மானிக்க முடியும்.

அவர்கள் வேறு வேறாகப் பேசும் போது பல சந்தேகங்கள் எழத்தான் செய்யும்.

Comments

I congratulate and thank her on her stance and candid views based on her very human concern for the Tamils in Sri Lanka.Wishing her more courage and success in her political career.

kanimoli - she is true tamil fighter

Post a comment

(The comment may need to be approved by Ootru.com. Until then, it won't appear on the entry. Thanks for waiting.)

ஊற்றில் அண்மையில் பிரசுரமானவை