ஊற்று

தமிழகத்தின் ஒன்றிணைந்த குரலே அதிக வலுவுடையதாக இருக்கும்

மிழகத்தில் இன்று அரசியல் கட்சிகள் மட்டுமின்றி மாணவர்கள், வணிகர்கள், திரையுலகத்தினர் என பலரும் இலங்கை வாழ் தமிழ் மக்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும், தங்கள் பூர்வீக பிரதேசத்தில் வாழவேண்டும் என்ற குறிக்கோளுடன் பலவித போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அவர்கள் ஒன்றிணைந்து குரல் கொடுத்தால் அது அதிக வலுவுடையதாக இருக்கும் என்பதே பொதுவான அபிப்பிராயம், என கொழும்பில் இருந்து வெளி வரும் முன்னணி தமிழ் நாளிதழான வீர்கேசரி, ஒக்ரோபர் 14ம் திகதிய ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.

"தமிழகத்தில் எதிரொலிக்கும் இலங்கைத் தமிழர் விவகாரம்:, வீர்கேசரி ஆசிரியத்தலையங்கம் முழுமையாக:

இலங்கைத் தமிழர் விவகாரம் தமிழக அரசியற் கட்சிகள் மத்தியில் பெரும் அனுதாபத்தைப் பெற்றுள்ள அதேவேளை, ஒருமித்தும் தனித்தும் கூட்டங்களை நடத்தவும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளவும் அவை திட்டமிட்டுள்ளன.

தமிழக முதல்வர் மு. கருணாநிதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை இன்று கூட்டியுள்ளார். அதேவேளை, அக்கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ள அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, இன்று சென்னையில் எம்.ஜி.ஆர். சமாதிக்கு முன்பாக இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதமிருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் சகல கட்சிகளும் கலந்து கொள்வது அவசியமென காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் கே.வி. தங்கபாலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை, ஈழத்தமிழர் பிரச்சினையில் அ.இ.அ.தி.மு.க.வும் , ம.தி.மு.க.வும் இதர கட்சிகளிலிருந்து தனிமைப்பட்டு விட்டன.

முதலமைச்சர் கருணாநிதி குரல் கொடுத்ததோடு நிறுத்தி விடாமல் அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் கூட்டுகிறார். ஈழத் தமிழர் பிரச்சினையில் உண்மையான அக்கறையும், கவலையும், இன உணர்வுமுள்ள எவரும் இதனை வரவேற்கவே செய்வர். ஆனால், அ.இ.அ.தி.மு.க.வும் ம.தி.மு.க.வும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என்று அறிவித்திருப்பதன் மூலம் மிகுந்த கவலையை ஏற்படுத்தி விட்டதாக திராவிடர் கழகத் தலைவர் வீரமணி நீண்ட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

தமிழக முதல்வர் கருணாநிதி கூட்டியுள்ள மாநாடு குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இக்கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணிப்பதும், இதனைக் கண்துடைப்பு நாடகமென விமர்சிப்பதும் துளியளவும் ஈழத்தமிழர்களுக்குப் பயனளிப்பதாக அமையாது என்றும் அவர்களின் நலனைக் கருத்திற் கொண்டேனும் அரசியல் நோக்கங்களைப் புறந்தள்ளி விட்டு ஒன்றுபட்டு குரல் எழுப்ப முன்வர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வணிக சங்கக் கூட்டமைப்பு எதிர்வரும் 17ஆம் திகதி தமிழகம் தழுவிய அளவில் கடையடைப்பு, அறப்போர் நடத்த அழைப்பு விடுத்திருப்பது மிகுந்த பாராட்டுக்குரியதாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் அரசியற் கட்சிகள் மாத்திரமன்றி வணிகச் சங்கங்கள் மற்றும் தமிழ்த் திரைப்படத் துறையினர் ஆகியோர் குரல்கொடுக்க முன்வந்திருப்பது பாரியதோர் திருப்பமாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

இலங்கையில் தொடரும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தக் கோரி தமிழ்த் திரை உலகினர் எதிர்வரும் 19 ஆம் திகதி பேரணியொன்றையும் பொதுக் கூட்டமொன்றையும் நடத்தவுள்ளனர். இதையொட்டி 18 ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை மூன்று நாட்களுக் குள் படப்பிடிப்புக்கள் அனைத்தும் நிறுத்தப்படுமென்றும் அறிவிக்கப்படுள்ளது.

அத்துடன், தமிழ்த் திரை உலகைச் சேர்ந்த அனைத்துப் பிரிவினரும் எதிர்வரும் 18ஆம் திகதி சென்னையிலிருந்து தனி ரயில்களிலும் பஸ்களிலும் புறப்பட்டு இராமேஸ்வரம் செல்வதாகவும் 19 ஆம் திகதி இராமேஸ்வரத்தில் கண்டன ஊர்வலமும் பொதுக் கூட்டமும் நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பில் தமிழகக் கட்சிகள் காட்டி வரும் ஆர்வத்தையும், அக்கறையையும் எத்தரப்பினரும் குறைத்து மதிப்பிடக் கூடாது. கடந்த காலங்களில் இலங்கை தமிழர் தொடர்பில் தமிழகக் கட்சிகள் காட்டி வந்த ஆர்வம் காரணமாகவே தமிழக முன்னாள் முதல்வர் அமரர் எம்.ஜி.ஆர். மற்றும் முன்னாள் பிரதமர் அமரர் அன்னை இந்திராகாந்தி ஆகியோரின் கவனம் இலங்கை தமிழ் மக்கள் மீது செறிந்து போயிருந்தது.

இவ்வாறான பின்னணியில் இலங்கை விவகாரம் தமிழகத்தில் மீண்டும் எதிரொலிக்க தொடங்கியுள்ள நிலையில் அதனை சுமுகமாகத் தீர்ப்பதற்கு சகல தரப்பினரும் தம்மாலான பங்களிப்பைச் செய்வார்களேயானால் இலங்கையில் மீண்டும் அமைதி ஏற்படுவதுடன் மக்கள் நிம்மதியாக வாழும் சூழலை உருவாக்கக் கூடியதாக இருக்கும்.

தமிழக அரசியற் கட்சிகளைப் பொறுத்த மட்டில் எந்தவொரு விடயத்திலும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட போக்குகளைக் கொண்டிருந்தப் போதிலும், ஏதோ ஒரு வகையில் இலங்கை விவகாரத்தில் ஒரு மித்தப் போக்கு காணப்படுவது மிகவும் வரவேற்கத் தக்க விடயமாகும்.

அனைத்துத் தரப்பினரும் இலங்கை வாழ் தமிழ் மக்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும், தங்கள் பூர்வீக பிரதேசத்தில் வாழவேண்டும் என்ற குறிக்கோளுடனேயே இத்தகைய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அவர்கள் ஒன்றிணைந்து குரல் கொடுத்தால் அது அதிக வலுவுடையதாக இருக்கும் என்பதே பொதுவான அபிப்பிராயம். எனவே, அது குறித்து சற்றேனும் அக்கறை செலுத்துவது மிகவும் இன்றியமையாதது என்பதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

ஊற்றில் அண்மையில் பிரசுரமானவை