"தமிழகம் அணி திரண்டுள்ளமை ஆறுதல்தரும் விடயமாகும்"
"தமிழர்கள் நாதியற்றவர்கள் அல்ல, அவர்களுக்காகக் குரல் கொடுக்க நாம் இருக்கின்றோம் என்று தமிழகம் அணி திரண்டுள்ளமை ஆறுதல்தரும் விடயமாகும்," என கொழும்பில் இருந்து வெளிவரும் முன்னணி தமிழ் நாளிதளான வீரகேசரி, அதன் ஒக்ரோபர் 12 ம் திகதி வார வெளியீட்டின் ஆசிரியத் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.
"தமிழகத்தின் எழுச்சி" என்ற தலைப்பில் வெளி வந்துள்ள ஆசிரியத் தலையங்கம், முழுவதுமாக:

நீண்ட நாட்களுக்குப் பின் தமிழகம் தனது மௌனத்தைக் கலைத்துள்ளது. போரின் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழ் மக்களுக்காக தமிழக மண்ணில் இருந்து மீண்டும் உரத்துக் குரல்கள் எழும்பத் தொடங்கிவிட்டன.
இந்தக் குரல்கள் தமிழகத் தலைவர்களை இலங்கைத் தமிழர் குறித்து வெளிப்படையான ஒரு நிலைப்பாட்டை எடுக்க வைத்துள்ளது. தமிழகக் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பி வருகின்றன.
அரசியல் சார்ந்த சக்திகள் ஒருபுறமும் மறுபுறம் திராவிடர் கழகம் மற்றும் படைப்பாளிகள் முன்னணி, திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் என அரசியல் சார்பற்ற அமைப்புக்களும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் போராட்டங்களை நடத்தத் தொடங்கியுள்ளன.
உண்மையில் ஈழத் தமிழர்களுக்காக தமிழகம் ஓரணியில் திரள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி காரணகர்த்தாவாக இருந்துள்ளது.
வழமையாக பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க என்பன ஆதரவாகக் குரல் கொடுத்து வந்துள்ளன. தற்போது இந்த அணிகளுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்துள்ளதானது இலங்கை விவகாரம் தமிழகத்தில் புதிய திருப்பத்திற்கு வழிவகுத்துள்ளது.
இலங்கை விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், தமிழர்களின் சுய உரிமைப் போராட்டத்திற்கு எங்கள் ஆதரவு, ஒத்துழைப்பு, நல்லெண்ணம் என்றைக்கும் மாறாதது. இலங்கை கடற்படையினால் இந்திய மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள். உள்நாட்டு சண்டை என்ற பெயரில் இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் கருணாநிதி சிறிதும் அக்கறையின்றி இருக்கிறாரே.
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் என்னுடைய நிலைப்பாடும் அ.தி.மு.க. வின் நிலைப்பாடும் எல்லோருக்கும் நன்கு தெரிந்ததே.
1. இலங்கையின் மற்ற குடிமக்களைப் போல தமிழர்களும் சம உரிமையுள்ள குடி மக்கள். அவர்கள் யாருக்கும் இரண்டாந்தரமானவர்கள் அல்ல.
2. சட்டத்தின் முன் சமத்துவம் வேண்டியும், கல்வியில், வேலை வாய்ப்பில் சமத்துவம் பெறவும், இலங்கைத் தமிழர்கள் நடத்தும் நெடிய போராட் டத்தை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.
3. சுய நிர்ணய உரிமை வேண்டி அவர்கள் நடத்தும் தார்மீக போராட்டத்தை நாங்கள் முழுமையாக அங்கீகரிக்கிறோம்.
4. இலங்கையில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தமிழர்கள் தங்களுக்கென சுயாட்சி உரிமையுள்ள தமிழ்த் தாயகம் உருவாக்கிக் கொள்ள அவர்களுக்கு இருக்கும் வேட்கையை நாங்கள் புரிந்து ஏற்றுக் கொள்கிறோம்.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இரு வேறு பக்கங்கள் உள்ளன என்பதை தெளிவுற உணர வேண்டும். சுய நிர்ணய உரிமைக்கென்ற தமிழர்களின் போராட்டம் என்பது ஒருபுறம். ஆயுதம் ஏந்தியவர்கள் பயங்கரவாதத்தில் ஈடுபடுவது என்பது மறுபுறம். முதலாவதை ஆதரிக்கிறோம். இரண்டாவதை கடுமையாக எதிர்க்கிறோம்.
மத்திய அரசில் தனக்குள்ள செல்வாக்கை, இலங்கைத் தமிழர்கள் நலன்காக்க கருணாநிதி பயன்படுத்த வேண்டும்; பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை ஜனாதிபதியுடன் பேசி, தமிழர்கள் மீதான இனப்படுகொலை குறித்த இந்தியாவின் கவலையைத் தெரிவித்து, அதனை நிறுத்துமாறு வலியுறுத்த வேண்டும் என்று கருணாநிதி பிரதமரை கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில் ஈழத் தமிழர்கள் படுகொலைக்கும் கொடூரச் செயல்கள் அனைத்திற்கும் கூட்டாளியாக இந்திய அரசு செயற்படுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்ததையும் இங்கு குறிப்பிடுதல் பொருந்தும்.
தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மட்டுமல்ல, எந்தப் பிரச்சினையிலும் தமிழக அரசு தூங்கியதில்லை என்று கூறியுள்ளதுடன் தமிழக மக்களை மத்திய அரசுக்குத் தந்திகளை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டதுடன் வரும் 14 ஆம் திகதி ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக முதல்வரைப் பொறுத்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஈழத் தமிழர் பிரச்சினையில் உறுதியான முடிவை எடுக்கின்ற வல்லமையைக் கொண்டவராக இன்றும் உள்ளார். எனினும் இதுவரை ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்திய மத்திய அரசின் நிலைப்பாடே தனது நிலைப்பாடுமாகும் என்று கூறி வந்ததை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அந்த ஒரு நிலையில் இருந்த தமிழக முதல்வரின் மனமாற்றத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்பாடு காரணமாக அமைந்து விட்டது.
தமிழகத்தில் இன்று எழுந்துள்ள எழுச்சி இந்திய மத்திய அரசை மாத்திரமல்ல, இலங்கை அரசையும் சற்று சிந்திக்க வைத்துள்ளது.
ஒட்டுமொத்த தமிழினத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள போர் அனர்த்தம், அழிவுகள், உயிரிழப்புகள் அனைத்தையும் சர்வதேச சமூகமும் கைகட்டிக் கொண்டு மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தது.
தமிழர்கள் நாதியற்றவர்கள் அல்ல, அவர்களுக்காகக் குரல் கொடுக்க நாம் இருக்கின்றோம் என்று தமிழகம் அணி திரண்டுள்ளமை ஆறுதல்தரும் விடயமாகும்.
தமிழகத்தின் இந்த எழுச்சி தமிழர்களுக்கு நீதி, நியாயம் கிடைக்கும்வரை ஒலிக்க வேண்டுமென்பதே இலங்கையில் மாத்திரமல்ல, உலகத் தமிழர்கள் அனைவரதும் எதிர்பார்ப்பாக உள்ளது.
[படத்தில் - "கேசரிக்கு" மட்டக்களப்பில் வீதியோர விளம்பரம்]

