அக் 29-நவ 3: கலி தீர்க்கும் கந்தசஷ்டி கவசமும் விரதமும்
இன்று அக்டோபர் 29 கந்தசஷ்டி விரதாரம்பம்
நா. சிதம்பரநாதர்
என்றோ ஒருநாள் அழியப் போகும் இவ்வுடம்பைக் காப்பாற்றும் உடம்பின் வெளி உறுப்புகளுக்கு கவசம் அணிகின்றோம்.
மோட்டார் சைக்கிளில் செல்பவர் தலைக்கவசம் அணிகிறார். யுத்தம் செய்யப் புறப்படுபவர்கள் ஒவ்வோர் அவயவத்திற்கும் தனித்தனி கவசங்கள் அணிகிறார்கள். கைகளில் நோய்க் கிருமிகள் தாக்குவதை தவிர்க்க கையுறைகளும் கால்களைப் பாதுகாப்பதற்கு காலுறை போன்ற பாதணிகளும் அணிகிறார்கள்.

கொழும்பு, கொம்பனித் தெரு ஸ்ரீ சிவசுப்பிரமாணிய சுவாமி கோயிலிருந்து - [மேலும் படங்கள்]
என்றும் அழியாத ஆன்மாவாகிய உயிருக்கு ஆணவம், கன்மம், மாயையாகிய மும்மலங்களிலிருந்து பாதுகாப்பளிக்க என்ன கவசம் இருக்கிறது? ஆம், ஒரே ஒரு விலைமதிக்க முடியாத கவசம் இருக்கின்றது. அதுதான் பாலன் தேவராஜன் அருளிய கந்தசஷ்டி கவசம். இது ஒரு தெய்வீகமான ஒப்பற்ற கவசம்.
இக்கவசத்தை மனத் தூய்மையுடனும் பக்தியுடனும் தினமும் ஓதினால் உள்ளம் தூய்மையடைவதுடன் உயிரும் மும்மலங்களினின்றும் பிறவிப் பிணியினின்றும் பாதுகாக்கப்பட்டு ஆன்மா கந்தப்பெருமானின் திருவடிகளை அடைகின்றது.
அரிதாகிய மானிடப் பிறவி, ஆறாவது பகுத்தறிவுடன் எமக்குக் கிடைத்தமைக்கு நாம் எம்மைப் படைத்த இறைவனுக்கு என்ன கைமாறு செய்ய முடியும். அவன் பாதத்தை நினைந்து தினமும் மனதினால் அவன் திருவருளையும் புகழையும் நினைந்து மறவாது நன்றி தெரிவித்தல் வேண்டும்.
"அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி.'' ஏ மனமே! வானவர்களாகிய தேவர்கட்கு ஏற்பட்ட துன்பம் அழிந்து போகுமாறு பகைவர்களுடன் போர் புரிந்து அப்பகைவர்களை அடியோடு அழித்த முருகப் பெருமானுடைய பாதங்களைச் சிந்திப்பாயாக. மேலும், நிர்மலமான தூய வடிவினனான சிவபெருமான் திருவருளால் அவதாரம் செய்த கந்தப் பெருமானுடைய மந்திர நூலாகிய கவச நூலை பொருள் உணர்ந்து முறைப்படி தோத்திரம் செய்பவர்கட்கு அவர்களைப் பீடித்திருக்கும் கொடிய வினைகள் யாவும் நீங்கும்; கொடும் மனத்துயரம் யாவும் நில்லாது ஓடிப் போகும்.
சஷ்டி கவசத்தை நெஞ்சில் அழியாவண்ணம் நிலைநிறுத்தி ஓதுவார்க்கு அன்புச் செல்வமானது சிறப்புற்று வளர்ச்சியடையும். தியான நிஷ்ட நிலையும் கிடைக்கப் பெறும்.
அடுத்ததாகக் கந்தசஷ்டி விரத மகிமையை நோக்குவோம். விரதம் என்பது மனம், பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு உணவை விடுத்தேனும் சுருக்கியேனும் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலும் இறைவனை விதிப்படி மெய்யன்போடு விசேஷமாக வழிபடுதல் ஆகும்.
அறியாமை என்னும் அஞ்ஞான இருளை அகற்றி மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற பரம்பொருளின் முக்திப் பேரருளை அடைவதற்காகச் சைவப் பெருமக்களால் அனுஷ்டிக்கப்படும் விரதங்களுள் தலையாயது கந்தசஷ்டி விரதம். மேலும் வல்வினை நீக்கி, வரும் வினை போக்கி, வரும் வழி பாதுகாத்து செல்லும் வழிகாட்டி செல்வமும் செல்வாக்கும் தந்து அழகும் அறிவும் தந்திடும் வள்ளி மணாளனை, வடிவேலனை வழிபடும் முறைகளில் மிகவும் சிறந்தது இந்தக் கந்தசஷ்டி விரதமாகும். உணர்வுகளை அடக்கி உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி கந்தப் பெருமானின் பெருமை பேசி இம்மைக்கும் மறுமைக்கும் சிறந்த வழியமைப்பதே இந்த விரதத்தின் பெறுபேறாக அமைகிறது.
விநாயகப் பெருமானின் பேரருளைப் பெற விரும்புவோர் வளர்பிறைச் சதுர்த்தித் திதிகளிலே ஆவணி மாத வளர்பிறைச் சதுர்த்தித் திதியை விநாயக சஷ்டி எனச் சிறப்பாக விரதம் அனுஷ்டித்து வழிபாடு செய்வார்கள்.
அதேபோன்று கந்தப் பெருமானின் கடாட்சத்தையும் கருணையையும் பெற விரும்புபவர்கள் சஷ்டித் திதிகளிலே பிரதானமாக ஐப்பசி மாத வளர்பிறைச் சஷ்டியை கந்தசஷ்டி என்று நாமம் சூட்டி ஐப்பசி மாத அமாவாசையைத் தொடர்ந்து வரும் பிரதமைத் திதி தொடங்கி ஆறாம் நாள் சஷ்டித் திதியையே கந்தசஷ்டி என்று வெகு விசேஷமாக விரதமனுஷ்டித்து கந்தப் பெருமானை வழிபாடு செய்வார்கள்.
இவ்விரதம் பிரதமை திதி தொடக்கம் ஆறு நாட்கள் வரை அனுஷ்டிக்கப்படும். தேவாதி தேவர்களும் இவ்விரதத்தினால் முருகன் அருளைப் பெற்றார்கள் என்று கந்தபுராணமும் கூறுகிறது. முறைப்படி கந்தசஷ்டி விரதம் இருந்தவர்கட்கு கலியுக வரதனாம் கந்தப்பெருமான் சகல சௌபாக்கியங்களையும் கொடுத்தருளுவான் என்பது அனுபவ உண்மையாகும்.
இவ்விரதம் அனுஷ்டிக்க விரும்புவோர் விரத நாட்களில் வைகறையில் துயில் எழுந்து சந்தியாவந்தனம் முதலிய காலைக்கடன்களை முடித்து, தூய நீராடி, தோய்த்துலர்ந்த ஆடையணிந்து அமைதியான இடத்திலோ அல்லது ஆலயத்திலோ அமர்ந்து அல்லல் தீர்க்கும் ஆறுமுகப் பெருமானை நினைந்து தியானம் செய்ய வேண்டும். தியானத்துடன் நில்லாது மனம் பொறிவழிச் செல்லாது இறையருளை நாடி வேறு சிந்தனையின்றி களிப்புற வேண்டும். விரத காலங்களில் மனம் வேறு எண்ணங்களில் ஈடுபடாதிருக்க கந்தசஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரனு பூதி, கந்தர் கலிவெண்பா போன்ற நூல்களைப் படிக்க வேண்டும். முருகனாலயங்களில் இவ்விரத நாட்களில் கந்தபுராண படனம் நடைபெறும்.
இதை தவறாது கேட்டல் மிகவும் ஆன்மிக நன்மை பயக்கும்.
விநாயக புராணத்தில் ஆணவமே உருவான கஜமுகாசுரன் விநாயகப் பெருமானுடன் போர் புரிந்து விநாயகப் பெருமானால் ஆணவம் அழிக்கப்பட்டு மூஷிகமாக என்றும் எம்பெருமான் திருவடியில் இருக்கிறான். கந்தபுராணத்தில் ஜீவான்மாவைப் பீடித்திருக்கும் மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை ஆகியன உருவாய் வந்த அசுரர்கள் முருகப் பெருமானின் ஞானசக்தியாய் திருக்கை வேலினால் அழிக்கப்பட்டு ஆன்மா முக்தியடைதலை காட்டுகின்றது. சச்சிதானந்தப் பரப்பிரம்மமாகிய பரமசிவன் உலகம் உய்வதற் காக கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டுங்கொண்டு ஒரு திருமுருகனாக வந்தார் என்று கந்தபுராணம் எடுத்துக் கூறுகின்றது. அசுரர்கள் தாம் செய்த கடும் தவத்தினால் சிவபெருமானிடம் இருந்து பெறப்பட்ட வரத்தினை ஆணவ முனைப்பினால் மறந்து தேவர்கட்குப் பல இன்னல்களைச் செய்தார்கள். மாயைக்கு தாரகாசுரனையும், கன்மத்துக்கு சிங்கமுகாசூரனையும், ஆணவத்துக்கு சூரபத்மனையும் உருவகப்படுத்தி கந்தபுராணம் மனிதகுலத்துக்குச் செய்ந்நன்றி மறவாமையையும் கூறுகின்றது. சைவசித்தாந்த முடிவின்படி ஆன்மா மும்மலங்களினின்றும் விடுபட்டு இறைவனையொப்பு மலப?பாகம் ஆகிய முக்தியின்பத்தையும் காட்டுகின்றது.
எனவே, கந்தவேற் பெருமானின் சஷ்டி விரதத்தை முடிந்தளவு பக்தி சிரத்தையுடன் அனுஷ்டித்து அவனருள் பெறுவோமாக.
[நன்றி: வீரகேசரி]

