தமிழ் பொது மக்களின் பரிதாப அவலம்
எத்திராஜன் அன்பரசன்
[பி.பி.சி. செய்திச் சேவை]
வடமுனையில் அவதியுறும் மக்களின் பரிதாப நிலை யுத்தம் பற்றிய இரு தரப்பினரதும் பரஸ்பர களமுனை நிலவரங்கள் பற்றிய உரிமை கோரல்களிற்கு நடுவே மறைந்து போயுள்ளது.
முன்னெறி வரும் இராணுவத்திற்கும் எதிர்த்து தீவிர தாக்குதல்களை நாடாத்தும் விடுதலைப் புலிகளுக்குமிடையே சிக்கியுள்ள புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழும் ஆயிரக்ணக்கான தமிழ் பொதுமக்கள், வீடு வாசல்கள இழந்து பாதுகாப்பு நிமித்தம் அங்கும் இங்குமாக அலைந்து திரிகின்றனர்.
கடந்த வருடம் ஆரம்பித்த யுத்தத்தின் காரணமாக இடம் பெயர்ந்தோர் எண்ணிக்கை எவ்வளவு என்று திட்டவட்டமான கணிப்பு எதுவும் இல்லை. இருப்பினும் சுமார் 150,000 பேர் அரச மற்றும் தனியார் தொண்டர் நிறுவனங்களின் உணவு மற்றும் உறையுள் உதவிகளில் தங்கியுள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் நிவாரணப் பணி அமைப்பாகிய யூ.என்.எச்.சி.ஆர், வடக்கில் அத்தியாவசிய தேவைப் பொருட்களுக்கு நிலவும் தட்டுப்பாட்டினால், இடம் பெயர்ந்தோர் நிலவரம் ஆபத்தான நிலையில் உள்ளதாக கடந்த வாரம் தெரிவித்திருந்தது.
அகதிகள் நிவாரணப் பணியகம் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 60,000 பேர், இராணுவத்திற்கும் புலிகளுக்குமிடயிலான சண்டையினால் இடம் பெயர நிர்பந்திக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
சமர்களின் நடுவிலிருந்து தப்பியோடும் பொது மக்களுக்குத் தேவையான உணவு, தற்காலிக உறைவிட வசதிகளுக்கான தளபாடங்கள், குடி நீர், மருந்துகள் மற்றும் இடப் பெயர்வு பிராயணத்திற்கான எரிபொருள் எனபவற்றின் கையிருப்பு மிகவும் "ஆபத்தான அளவிற்கு" குறைவடைந்துள்ளதாகவும் யூ.என்.எச்.சி.ஆர். தெரிவித்துள்ளது.
கடும் பதிலடி
கடந்த சில மாதங்களாக இராணுவத்தினர் கணிசமானளவு புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் முன்னேறியுள்ளது தெளிவாகியுள்ளது.
மன்னார் மாவட்டம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டினுள் வந்துள்ளது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வேறு நகரங்களும் கடற் புலிகள் தளங்களும் கூட இழக்கப்படும் நிலயில் புலிகள் உள்ளனர்.
ஒரு பாரிய தகர்வின் மூலம் படு வீழ்ச்சியடைந்தாலன்றி, நாளடைவில் இராணுவத்தினர் புலிகள் வசம் உள்ள முக்கிய நகரமாகிய கிளிநொச்சிக்கு கூட அடி மேல் அடி வைத்து நகர்ந்து விடலாம்.
இராணுவத்தினர் வகுத்துள்ள வியூகம் தெளிவாகத் தெரிகிறது. படை நடவடிக்கை ஆரம்பிக்க முற்பாடு பாரிய எறிகணைத் தாக்குதல் மூலம் பொது மக்களை வெளியேற்றம் செய்த பின்னர் புலிகள் கட்டுப்பாடுப் பிரதேசங்களினுள் முன்னேறும் தந்திரோபாயத்தினை அவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.
இராணுவத்தினர் பல கள முனைகளை திறந்ததன் மூலம் புலிகள் அணியினரை பல களங்களிற்கு பரப்பியும் வருகின்றனர். அதிக எண்ணிக்கை, வான் படை என்பனவும் இயல்பாகவே அவர்களிற்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது.
எவ்வாறாயினும் சமீபத்திய இழப்புக்களிற்கு பிற்பாடும் புலிகள் இன்னும் கணிசமானளவு திடீர் பதில் தாக்குதல்கள் மூலம் போரிடும் வல்லமையில் உள்ளனர்.
இராணுவத்தினரின் உரிமை கோரல்களிற்கு மாறாக புலிகள் இன்னும் கணிசமானளவு படையணியினரை தக்க வைத்துள்ளதாகவே கூறப்படுகிறது. நீண்ட கெரில்லா யுத்தமொன்றை நடாத்தும் அணியாக மாற்றம் கொள்ளவும் அவர்களினால் இயலும்.
இதனால் தான் பிரதேசங்களை கைப்பற்றுவதனை மட்டும் கருத்திற் கொள்ளாமல் புலிகளை தாக்குவதிலும் இராணுவத்தினர் கண்ணாயுள்ளனர்.
"காட்டுப் பகுதிகளுக்குள் அவர்களை ஓட வைக்கலாம். ஆனால் அவர்களை தேடி அழிப்பதினால் மட்டுமே சமாதானத்தினை கொண்டுவரலாம்", என பாதுகாப்பு செயலர் கோதபாய இராஜபக்ச பிரிட்டன் பத்திரிகையொன்றுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.
அவரின் இந்த கூற்று வன்னியில் வாழும் பொது மக்களுக்கு மேலும் அச்சுறுத்தல்கள் அநேகம் உள்ளதனையே தெரிவிக்கின்றது.
[கிளிநொச்சிக்கு இடம் பெயர்ந்தோர் படக்கோவை]
"புலிகளின் படை கட்டுமானங்கள் பல பொது மக்கள் வாழும் பிரதேசங்களில் கலந்துள்ளன. இராணுவம் மேலும் முன்னேற்றம் கண்டு புலிகள் சிறிய பிரதேங்களினுள் நிலை கொள்ள நிர்ப்பந்திக்கப் படுவார்களேயானால் பொது மக்களிற்கான அச்சுறுத்தல்கள் மேலும் அதிகரிக்கும்", என்கிறார் ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ்.
பொதுமக்களின் இன்னல் நிலமை
போரிடுவோரிற்கு நடுவே அகப்பட்டுள்ள மக்களிற்கு அதிலிருந்து மீள்வதற்கான வழி ஒன்று இருக்குமானால் அது புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து வெளியேறுவதுதான்.
ஆனால் அவ்வாறு தப்பிச்செல்ல பொது மக்களுக்கு மாற்று வழிகள் இல்லை என்றே கூறவேண்டும்.
முக்கிய வீதிகள் யுத்தத்தின் காரணமாக பிரயாணத்திற்கு ஒவ்வாதவையாக உள்ளன. கண்ணி வெடி மற்றும் ஆள ஊடுருவும் அணியினரின் தாக்குதல்கள் உள்ளூர் மாற்றுப்பாதைகளயும் பொதுமக்கள் பிராயாணப் பாதுகாப்பிற்கு அபாயகரமாக்கியுள்ளன. அவர்கள் வெளியேறுவதற்கு புலிகள் அனுமதிப்பார்களா என்பதும் தெளிவாக தெரியவில்லை.
சிறு பிள்ளைகள், பெண்கள் மற்றும் கால்நடைகள் ஒரு சில உடமைகள் என்பவற்றுடன் பெருவாரியான பொது மக்கள் ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு யுத்தமற்ற வலையமோ ஒழுங்கமைக்கபட்ட அகதி முகாம்களோ இல்லாததனால் பாதுக்காப்புத் தேடி அங்குமிங்குமாக அலைந்து திரிகின்றனர்.
பொது மக்களிற்கு மல சல கூடங்கள், குளிக்கும் வசதிகள் என்பனவும் இல்லை. கொதிக்கும் வெக்கையிலும் நுளம்புக் கடிகளுக்குக்கு மத்தியிலும் தங்கியிருந்து வெட்ட வெளிகளில் நித்திரைக்கும் செல்கின்றனர்.
இடம்பெயர்ந்தோருக்கு உதவிகள அதிகரிக்க விளையும் மனிதாபிமான நிவாரண அமைப்புக்களின் முயற்சிகள், வன்னிப் பிரதேசத்தினுள் பொருட்கள் கொண்டு வரப்படுவதற்கான தடை விதிப்புக்களினால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால் புலிகளின் வன்னிக் கட்டுப்பட்டுப் பிரதேசத்திற்கு தேவையானளவு பொருட்கள் அனுப்பப்படுவதாக அரசாங்கம் கூறுகின்றது.
"தடைகளும் இல்லை அங்கு பொருட்களுக்கு தட்டுப்பாடும் இல்லை. அங்குள்ள அரசாங்க அதிகாரிகளினது அறிவுறித்தல்களின் பிரகாரம் தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அங்கு அனுப்பட்டுக்கொண்டு தானிருக்கின்றன", என்கிறார் ஸ்ரீ லங்கா இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார.
சர்வதேச சமூகம்
யுத்தம் எப்போது, எப்படி முடிவுறும் என்று எவருக்கும் தெரியாது. ஆனால் சர்வதேச சமூகம் கூடுதல் பங்காற்றி உதவியிருக்கலாம் என தமிழர்கள் நினைக்கின்றனர்.
"சர்வதேச சமூகம், முக்கியமாக அயல் நாடாகிய இந்தியா, மக்கள் இடப் பெயர்வு குறித்தும் இன்னல்கள் குறித்தும் மௌனம் காப்பது விசனமாயுள்ளது", என்கிறார் ஊடகவியலாளர் டி. பி.எஸ். ஜெயராஜ்.
யுத்தம் ஓயும் அறிகுறிகளேதும் இல்லாத சூழ்நிலயில் வடக்கில் மனித அவலம் மேலும் அதிகரிக்கும் களம் அமைக்கப்பட்டுள்ளதாக நிவாரணப் பணியாளர்களும் தமிழ் மக்களும் அஞ்சுகின்றனர்.


