ஊற்று

யாழ்ப்பாணத்திலிருந்து பாராளுமன்றம் செல்லும் முதலாவது முஸ்லிம் எம்.பி.ஆர்.எம்.இமாம்

டீ.பீ.எஸ்.ஜெயராஜ்

யாழ்ப்பாண நகரின் மூர் வீதியைச் சேர்ந்த 61 வயது நிரம்பிய சட்டத்தரணி ரசீன் எம். இமாம், யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து முதன்முதலாக வருகின்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினராவார். எம்.கனகேந்திரன் அல்லது ஈழவேந்தன் என்பவரின் இடத்திற்கு தேசிய பட்டியல் உறுப்பினராக ஆர்.எம்.இமாம் என எல்லோராலும் அறியப்பட்ட இமாம் தெரிவாகியுள்ளார். கடந்த தேர்தலின் போது த.தே.கூ. க்கு இரண்டு தேசிய பட்டியல் ஆசனங்கள் உரித்தாயின. மட்டக்களப்பிலிருந்து ஜோசப் பரராஜசிங்கமும் யாழ்ப்பாணத்திலிருந்து எம்.கே.ஈழவேந்தனும் நியமிக்கப்பட்டனர்.

மூன்று மாதங்களுக்கு மேலாக விடுமுறையின்றி பாராளுமன்றத்திற்கு சமுகம் தராதிருந்ததன் காரணமாக ஈழவேந்தன் தனது பாராளுமன்ற ஆசனத்தை இழந்தார்.

சிறந்த பொது நல்லுறவு செயல்பாடு

ஆர்.எம்.இமாம் 2004 ஆம் ஆண்டில் த.தே.கூ. தேசிய பட்டியலில் இருந்தவர். அவர் தன் இளமைப் பருவத்திலிருந்தே நேர்மையான சமஷ்டி வாதியாகவிருந்து பின் த.ஐ.வி.மு. வின் அங்கத்தவராய் இருந்தவர். விடுதலைப் புலிகளினால் அநீதி இழைக்கப்பட்டு ஓரம் கட்டப்பட்ட வடக்கு முஸ்லிம்களுக்கு யாழ்ப்பாண முஸ்லிம் ஒருவர் பா.உ. ஆக தெரிவு செய்யப்பட்டது நிச்சயமாக ஒரு நல்ல பொது நல்லுறவு செயல்பாடாகும்.

நான் இமாமை முதன் முதலாக 1981 இல் சந்தித்தேன். அப்போது அவர் த.ஐ.வி.மு. பட்டியலில் யாழ்ப்பாண மாநகர சபை அங்கத்தவராக இருந்தார். யாழ்ப்பாண மாநகர சபை பகுதி குடியிருப்பாளர்களான முஸ்லிம்கள் 'சோனகத்தெரு' அல்லது மூர் வீதி மற்றும் பொம்மைவெளியில் செறிவாக வாழ்பவர்கள். இமாம் மூர் வீதியைச் சேர்ந்தவர். அவருடைய தந்தை அப்பகுதியில் விதானையாக இருந்து இளமையிலேயே காலமானார். இமாம் தமிழ் சமூகத்தோடு மிக நெருக்கமானவராக இருந்ததோடு, அவர்களுடன் நெருக்கமான நட்புறவை பேணி வருபவர்.

யாழ்ப்பாண நகர முஸ்லிம்கள் எண்ணிக்கையில் குறைவானவர்களாக காணப்பட்ட பொழுதிலும் பொது மக்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்னால் அங்கே மிக முக்கிய செல்வாக்கைச் செலுத்தக் கூடியவர்களாக இருந்தார்கள். அங்கிருந்த முஸ்லிம்கள் நெடுங்காலமாக யாழ்ப்பாண மாவட்ட தேர்தல், மாநகர சபை தேர்தல்களில் ஆட்சியாளர்களை தீர்மானிப்பவர்களாகவிருந்தனர்.

அல்பிரட் துரையப்பா முஸ்லிம்களின் ஏகமனதான ஆதரவைப் பெற்றே அரசியல் வெற்றியை தனதாக்கிக் கொண்டார். ஒரு முறை யாழ்ப்பாண மாநகரபை உறுப்பினரான சுல்தான் மாநகர சபை முதல்வராக இருந்தார். இன்னொரு முறை மாநகர சபை உறுப்பினரான பஸீர் காதர் போன்றோர் உதவி மாநகர சபை முதல்வராக இருந்தனர்.

பொது வாழ்க்கையில் அதி முக்கிய பங்கு வகித்த குறிப்பிடத்தக்க யாழ்ப்பாண முஸ்லிம்கள் பலர் இருந்திருக்கிறார்கள். ஷ்ரீலங்காவில் முதல் முஸ்லிம் சிவில் சேவையாளரான ஏ.எம்.ஏ. அஸீஸ் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பிறகு அவர் ஸாஹிரா கல்லூரியின் அதிபரானார். நீதிபதியான அப்துல் காதர் ஆகியோரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களே. அவ்வாறே கல்வி இலாகா அத்தியட்சர் மன்சூருமாவார். இப்போது இமாம் யாழ்ப்பாணத்து முதல் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினராகியுள்ளார்.

இமாம் 1977 இல் யாழ்ப்பாண த.ஐ.வி.மு. வேட்பாளரான வெற்றிவேலு யோகேஸ்வரனை ஆதரித்து முக்கிய பங்காற்றினார். 1979 இல் இமாம் த.ஐ.வி.மு. வில் போட்டியிட்டு மாநகர சபை உறுப்பினராக தெரிவானார். அப்போது அங்கே மூன்று முஸ்லிம் மாநகர சபை உறுப்பினர்கள் இருந்தனர். இ.ராஜா விஸ்வநாதன் மாநகர சபை முதல்வராகவிருந்தார்.

அப்போது அங்கு நற்பண்பாளர்களின் ஒப்பந்தமொன்று இருந்தது. அதன்படி மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் இரண்டாண்டுகளின் பின் பட்டியலிலுள்ள ஏனைய உறுப்பினர்கள் மாநகர சபை உறுப்பினர்களாவதற்காக இடமளித்து பதவியை இராஜிநாமா செய்ய வேண்டும் என்பதாகும். சிலர் பதவியை இராஜிநாமா செய்ய மறுத்த போதிலும், இமாம் ஒருவர் தான் அவரின் உத்தரவாதத்தை மதித்து உடனடியாக பதவியை இராஜிநாமா செய்தவராவார். அப்போதைய த.ஐ.வி.மு. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் இமாமினால் ஈர்க்கப்பட்டவராயிருந்தார்.

யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு இடையூறுகள் விளைவிக்கப்பட்ட பொழுதிலும் அங்கிருந்த பலர் தமிழர்களோடு நட்புறவையும் நல்லுணர்வுகளையும் தொடர்ந்தும் பேணி வந்தனர். அவ்வாறான யாழ்ப்பாண முஸ்லிம்களில் இமாமும் ஒருவர். அவர் தனது த.ஐ.வி.மு. உடனான அங்கத்துவத்தை தொடர்ந்தார். 1994 இல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ஒதுங்கிக் கொள்ளுமாறு சக யாழ்ப்பாண முஸ்லிம்களை இணங்கச் செய்வதில் முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவராவார்.

யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்த பெருந்தொகையான தமிழர்கள் வாக்களிக்க முடியாமல் போனமையால் புத்தளத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களும் மாபெரும் ஒருமைப்பாட்டின் அடையாளமாக பெருமளவில் தேர்தலை பகிஷ்கரித்தனர்.

த.ஐ.வி.மு. இனர் த.தே.கூ. யோடு ஒன்றிணைந்திருந்ததால் 2004 ஆம் ஆண்டு தேர்தலில் இமாம் கட்சிக்காக போட்டியிட்டார். அவர் தேசிய பட்டியலில் இடம் பெற்றிருந்தார். ஈழவேந்தனின் செல்வாக்கு சரிந்தபொழுது இமாம் அவரின் இடத்திற்கு நிரப்பப்படலாம் என்பது தெளிவாகியது.

கருத்து முரண்பாடுகள்

இமாம் பாராளுமன்ற உறுப்பினராகும் சாத்தியப்பாடு முன் வைக்கப்பட்ட பொழுது பெரும் வாக்குவாதங்கள் எழுந்தன. இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் மத்தியில் சீற்றமும் எதிர்ப்பும் பலமான கருத்து முரண்பாடுகளும் எதிரொலித்தன. த.தே.கூ. யினர் தற்போது விடுதலைப் புலிகளின் ஏவலாளர்களாயிருப்பது இவற்றிற்கான காரணங்களை விளக்கி நிற்கின்றது.

விடுதலைப் புலிகளோடு உறவு வைத்துக்கொள்ளும் எந்தவொரு கட்சியினரோடும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் எந்த விதமான தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என சிலர் கருதினர். ஏனையோர் விடுதலைப் புலிகளின் நல்லெண்ண ஏற்பாடுகள் முதலில் சரியாக அளவீடு செய்யப்பட வேண்டும் எனக் கருதினர்.

இமாம் தானே கல்வியியலாளர்கள், சமயப் பிரமுகர்கள் உட்பட முக்கிய யாழ்ப்பாண முஸ்லிம்கள் முதலானவர்களோடு கலந்து ஆலோசனை நடத்தினார். அவர்களில் பலர் யாழ்ப்பாண முஸ்லிம்களின் நன்மை கருதியும் தீர்வுக்கான முன்னெடுப்புகளில் உதவுவதற்காகவும் இமாம் அந்தப் பதவியை ஏற்க வேண்டுமென கருதினர். இமாமும் ஜனவரி 20 ஆம் திகதி வன்னிக்குச் சென்று விடுதலைப் புலிகளின் தலைவர்களைச் சந்தித்தார். இது தமிழ் - முஸ்லிம் இணக்கத்திற்கான நல்லெண்ண முன்னெடுப்பு எனவும் அது ஒரு குறுக்கு வழியான சூழ்ச்சித் திட்டமில்லை எனவும் அவர் தெரிந்து கொண்டார். அதன்பின் அவர் கொழும்பு திரும்பி வந்து வேண்டுகோளை ஏற்றுக் கொண்டார்.

சத்தியப் பிரமாணம்

இமாம் சத்தியப் பிரமாணம் எடுக்கும்பொழுது அதைக் காண்பதற்கு புத்தளத்திலிருந்து 30 - 35 யாழ்ப்பாண முஸ்லிம்கள் வருகை தந்திருந்தனர். மற்றும் கொழும்பிலிருந்து 50 - 60 எண்ணிக்கையானோர் வருகை தந்திருந்தனர்.

இமாம் சுருக்கமான தனது கன்னி உரையை பாராளுமன்றத்தில் மரபு முறையாக நிகழ்த்தினார். அவர் தனது உரையில், தான் அந்தப் பதவியை ஏற்பது தனது மக்கள் கூட்டத்திற்கு உதவவும் அவர்கள் நிலைமையை உயர்த்தவுமே என குறிப்பிட்டபோது அது மனதை நெகிழ வைத்தது.

அவருடைய இலக்கு எல்லா மக்களிடையேயும் நல்லிணக்கத்தை வளர்ப்பதும் தமது இடம் பெயர்ந்திருக்கும் சகோதரர்களின் தேவைகளுக்கு ஆவன செய்வதுமாகும். அவருடைய நீண்ட கால திட்டமானது யாழ்ப்பாண முஸ்லிம்கள் தங்கள் பாரம்பரிய இருப்பிடங்களுக்கு திரும்பிவர உதவுவதாகும்.

காலமொன்றிருந்தது, அநேகமான முஸ்லிம்கள், காரியப்பர், முஸ்தபா, அஹமட், மொஹமட் அலி போன்றவர்கள் கிழக்குத் தேர்தல் தொகுதியிலே சமஷ்டி கட்சியின் சீட்டிலே போட்டியிட்டு வென்றார்கள்.

மற்றவர்கள் அதாவது மசூர் மௌலானா, உதுமா லெவ்வை போன்றவர்கள் சமஷ்டி கட்சியின் சீட்டிலே போடியிட்டனர்.

அயூப் மற்றும் பஸீர் சேகுதாவுத் போன்றவர்கள் ஈரோஸ் அனுசரணையுடன் சுயேச்சை வேட்பாளர்களாக போட்டியிட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்களானார்கள்.

இமாமின் நியமனம் தமிழ், முஸ்லிம்களின் உறவில் புதிய வளர்ச்சிப் படிகளின் ஆரம்பமாக அமையலாம். முஸ்லிம் காங்கிரஸின் ஹஸன் அலி எம்.பி. இமாமின் நியமனத்தை வரவேற்றதோடு, அதை மீள் இணக்கப்பாட்டின் அடையாளமாக கருதுகிறார்.

வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளால் முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டது தமிழ் - முஸ்லிம் உறவுகளிலே மிகவும் துன்பகரமான அத்தியாயமாகும். சிங்களவர்களின் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான அடக்கு முறையைப் பற்றி முறையிடும் தமிழர்கள், அவர்கள் மத்தியில் வாழ்ந்த அதி சிறுபான்மையான முஸ்லிம்களுக்கு அவர்களால் இழைக்கப்பட்டவைகளுக்காக வெட்கி தலைகுனிய வேண்டும்.

சிங்கள ஆட்சியாளர்கள் மணலாறு/வெலிஓயா பகுதிகளில் இன ஒழிப்பு செய்கிறார்கள் என முறையிடும் தமிழர்கள், வடக்கிலிருந்து முழுமையாக முஸ்லிம்களை வெளியேற்றியதும் இன ஒழிப்பிற்கு சமமானது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

விடுதலை என்ற பெயரால் சிறு தொகையினரான முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் மனிதத் தன்மையற்ற செயல்களுக்கு தமிழர்கள் முஸ்லிம்களிடம் கட்டாயம் மன்னிப்புக் கோர வேண்டும்.

நட்புக் கரங்கள்

இவ்வளவு நடந்த பிறகும் வடக்கு, முஸ்லிம்கள் நட்புறவையும் நல்லிணக்கத்தையும் வேண்டி நிற்பதானது அவர்களின்பால் நன்மதிப்பை மேலும் வலுப்படுத்துகிறது. அவர்கள் வடக்கு எங்களின் தாயகம் என்பதிலே தொடர்ந்தும் ஊன்றி நிற்கிறார்கள். தமிழர்கள் தமிழ்மொழி பேசுகின்ற அவர்களின் முஸ்லிம் சகோதரர்களுக்கு நட்புக் கரங்கள் நீட்ட வேண்டும்.

இவ்வாறான குறைபாடுகளை களைந்தெறிய இமாமை தேர்ந்தெடுத்திருப்பதானது ஒரு நல்ல சமிக்ஞையாகும். இது ஒரு முதல் படி மட்டுமே என்றாலும் அது மகிழ்ச்சிகரமான நீண்ட பயணத்தின் ஆரம்பமாகக் கொள்ளலாம்.

இமாம் பெரிய சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியவராகிறார். இடம்பெயர்ந்த யாழ்ப்பாண முஸ்லிம்களின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டிய கடமை அவர் முன் நிற்கிறது. தமிழர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்தவும் சிங்களவர்கள் மத்தியில் நம்பிக்கையை முன்னெடுக்க வேண்டிய கடமை அவர் முன் நிற்கிறது. அவர் முஸ்லிம்களை மீண்டும் அவர்களின் பாரம்பரிய இருப்பிடங்களை நோக்கி திரும்பிவர அவர்களுக்கு தைரியமூட்டும் கடமையும் அவர்களின் அகதி முகாம் வாழ்க்கை நிலைமையை சீர்படுத்தும் கடமையும் அவர் முன் நிற்கிறது.

இவ்வாறான சிக்கலான செயல்பாடுகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருப்பதால் ஆர்.எம்.இமாம் தனது கடமையில் பின்னிற்க மாட்டார் என நம்பலாம். [நன்றி: தினக்குரல்]

த நேஷன், 10.02.2008

 

ஊற்றில் அண்மையில் பிரசுரமானவை