« January 2008 | Main | March 2008 »

February 29, 2008

கொசோவோ விடுதலை இராணுவத்தின் பரிணாம வளர்ச்சி

டி.பி.எஸ். ஜெயராஜ்

சுதந்திர கொசோவோ என்னும் பறவைக் குஞ்சு முட்டையை உடைத்துக்கொண்டு வெளிவந்து ஒரு வாரகாலமாகிறது. கடந்த 17ம் திகதி சேர்பிய மாகாணமான கொசோவோ, சேர்பியாவிலிருந்து விலகி சுதந்திரபிரகடனத்தை மேற்கொண்டது. 39 வயதான பிரதமர் ஹசீம் தாசியினால் இந்த சுதந்திரப் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது.

சுதந்திரத்தையொட்டி கொசோவோ மக்கள் கீதங்கள் இசைத்தும், ஆரவாரித்தும் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கொசோவோ மக்கள் தலைநகர் பிரிஸ்றினாவில் பெப்பிரவரி 16 இரவு கொண்டாட்டத்தில்: படம்: நியு யோர்க் ரைம்ஸ்

புதிய தேசத்தில் நீலம் மற்றும் மஞ்சள் வர்ணத்தினாலான கொடிகள் திக்கெங்கும் ஏற்றப்பட்டன.

இது உண்மையிலேயே அல்பானிய மக்கள் மகிழ்ச்சி களிப்படைய வேண்டிய தருணமாகும். பல தசாப்தங்களாக அஹிம்சை மற்றும் வன்முறைப் போராட்டங்களினால் சிந்திய வியர்வைக்கும், இரத்தத்திற்கும் கிடைக்கப்பெற்ற விலைமதிப்பற்ற சன்மானமாக கொசோவோ மக்கள் தமக்கே உரிய தனிநாட்டைப் பெற்றுக்கொண்டனர்.

கொசோவோ விடுதலை இராணுவத்தினது நீண்டகால போராட்டத்தின் பின்னணியில் இருந்தவர் என்ற ரீதியில் பிரதமர் தாசிக்கு தனிப்பட்ட ரீதியில் இதுவொரு மாபெரும் வெற்றி மைல்கல்.

ஒரு காலத்தில் பிரதமர் ஹசீம் தாசி பயங்கரவாதி என முத்திரை குத்தப்பட்டிருந்தார். சேர்பிய நீதிமன்றம் ஹசீம் தாசிக்கு பத்தாண்டு கால சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. எனினும் தாசியை சிறைப்பிடிப்பதென்பது சுலபமான காரியமாக அமையவில்லை.

அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகளிடம் தக்க தருணத்தில் தலைசாய்ப்பதனூடாக இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுக்க முடியும் என்பதை தாசி நன்றாக விளங்கிக் கொண்டிருந்தார். 

கொசோவோ விடுதலை இராணுவம் உஸ்ற்ட்ரா ச்ரிமேட்ரே ஈ கொசோவோ அல்லது யூ.சீ.கே என அல்பானியாவில் பிரபலமடைந்திருந்தது. அண்மைக்கால கெரில்லா போராட்ட இயக்கங்களில் மிகவும் வெற்றிகரமான இயக்கமாக கொசோவோ விடுதலை இராணுவத்தைக் குறிப்பிடலாம். கொசோவோ விடுதலை இராணுவம் அதன் முக்கிய இரண்டு இலக்குகளில் ஒன்றை வெற்றிகரமாக எட்டியுள்ளது. முதலாவது சேர்பிய மாகாணமாக காணப்பட்ட கொசோவோவை தனிநாடாக பிரகடனப்படுத்திக் கொண்டதாகும்.

மற்றைய இலக்கை அவர்கள் எவ்வாறு அடைவார்கள் என்பது குறித்த தேடல் மிகச் சுவையானது. அல்பானிய இராச்சியமொன்றை அமைத்தலே அவர்களது மற்றைய இலக்கு.

உலகின் பல முன்னணி விடுதலைப் போராட்ட இயக்கங்களுடன் ஒப்பீடு செய்யும் போது கொசோவோ விடுதலை இராணுவம் அவ்வளவு பலம் பொருந்திய ஒன்றாக கருத முடியாது. அவ்வாறு இருந்த போதிலும் அவர்கள் தமது இலக்கை என்ன வழிமுறையில் அடைந்தார்கள் என்பது நோக்கத்தக்க ஒன்றாகும்.

கொசோவோ இராணுவத்தை; ஒரு பலம்வாய்ந்த இராணுவ அமைப்பாக குறிப்பிட இயலாது. ஒரு சில சந்தர்ப்பங்களில் சேர்பிய படையினருடன் இடம்பெற்ற நேரடி மோதல்களின் போது சூட்சுமமாக கொசோவோ இராணுவம் பின்வாங்கியிருந்தது.

என்றாலும், வெற்றியோ, தோல்வியோ கொசோவோ இராணுவம் ஒரு அமைப்பு என்ற வகையில் குறிப்பிட்டுக் கூறக்கூடியதொரு அங்கீகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டது. 

புவியியல் அமைப்பின் காரணமாக கொசோவோ விடுதலை இராணுவத்தை நிராகரிக்க முடியாத ஒரு சூழ்நிலைக் காணப்பட்ட போதிலும், ஏனைய பல அமைப்புக்கள் இதனைவிட சாதகமான பின்புலத்தைக் கொண்டிருந்த போதிலும் தமது போராட்டங்களில் வெற்றியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்.

யதார்த்தபூர்வமான அனுமுறையின் மூலமே கொசோவோ விடுதலை இராணுவம் வெற்றியீட்டியுள்ளது. ஆயுதப் போராட்டமொன்றின் வரையறைகளை மிக நுணுக்கமாக கொசோவோ இராணுவம் அறிந்து வைத்திருந்தது. எந்த நேரத்தில் போராட்டம் நடத்த வேண்டும், எந்த நேரத்தில் மௌனம் காக்க வேண்டும் என்பதனை நன்கு உணர்ந்திருந்தது. 

இந்த அமைப்பு இராஜதந்திர விளையாட்டில் அதிகாரம் என்ற பந்தை மிக சிறப்பான முறையில் கையாண்டதாகவே குறிப்பிடவேண்டும்.

சர்வதேச சமூகத்தின் நிபந்தணைகளுக்குக் கட்டுப்பட்டு, சர்வதேச சமூகத்தின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக செயலாற்றுவதன் மூலம் பேச்சுவார்த்தைகளை நீட்டிச் சென்றது. எந்த நேரத்தில் சமாதான இணக்கப்பாடுகளை தமக்குத் தேவையான கோணத்திற்கு திசைதிருப்ப வேண்டும் என்பதை கொசோவோ விடுதலை இராணுவம் தெளிவாக புரிந்து வைத்திருந்தது.

எதிர்த்தரப்பினர் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்ளாத சந்தர்ப்பங்களிலும் கூட கொசோவோ விடுதலை இராணுவம் போற்றத்தக்கதோர் பொறுமையுடன் செயலாற்றியது. பேச்சுவார்த்தைகளை ரத்து செய்து ஆயுதப் போராட்டத்தில் மீண்டும் குதிக்காமல் தமது இலட்சிய பாதையில் சற்றும் விலகாமல் நிலைத்து நின்றது.

இதனால்தான் சர்வதேச சமூகத்தின் ஆதரவை பெற்றுக்கொள்ளக்கூடிய இயலுமை கிட்டியது. கொசோவோ விடுதலை இராணுவத்தின் முக்கியஸ்தருக்கும் ஒசாமா பின்லேடனுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாக அமெரிக்கா பிரச்சாரம் செய்திருந்தமை நோக்கத் தக்கதோர் விடயமாகும்.

கொசோவோ சேர்பியாவின் ஒரு மாநிலமாகும். புராதண காலத்தில் சேர்பியாவின் முக்கிய கலாச்சார சின்னமாகவே கொசோவோ மாநிலம் கருதப்பட்டது. இந்த மாநிலத்தில் அதிகமாக சேர்பியர்களே வாழ்ந்து வந்தனர். பின்னர் கிறிஸ்தவர்கள் இந்த மாநிலத்தில் அதிகமாக வாழ்ந்து வந்தனர்.

1389ம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் திகதி கொசோவோவில் வரலாற்று புகழ்பெற்ற இராணுவப் போராட்டம் நடைபெற்றது. துருக்கிய சக்கரவர்த்தி ஒட்டமானின் ஆக்கிரமிப்பினைத் தொடர்ந்து கொசோவோ 523 ஆண்டுகள் துருக்கியின் கட்டுப்பாட்டின் கீழ்; காணப்பட்டது. தென்கிழக்காசிய யுத்தத்தின் மூலம் 1912ம் ஆண்டு சேர்பியா கொசோவோவை கைப்பற்றியது. 1913ம் ஆண்டு லண்டன் உடன்படிக்கையின் மூலம் கொசோவோ சேர்பியாவுடன் உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்டது.

முதலாவது உலக மகா யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், 1918ம் ஆண்டு கொசோவோ சேர்பிய இராச்சியத்தின் ஒரு அங்கமாக சட்டரீதியாக அறிவிக்கப்பட்டது. இரண்டாவது உலக யுத்தத்தின் போது கொசோவோவின் பெரும்பகுதி இத்தாலியின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டது. இரண்டாம் உலக மகா யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் கொசோவோ யுகோஸ்லாவிய சமஷ்டி ஆட்சின் அங்கமான சேர்பியாவின் ஒரு மாகாணமாக 1946ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது.

அறுபதுகளில் யுகோஸ்லாவியாவின் அதிபர் மார்ஸல் டுடோவினால், சேர்பியாவின் தீவிர தேசியவாதத்திற்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் உத்தியாக கொசோவோ மாகாணத்திற்கு அதிகாரங்களை வழங்கியிருந்தார். 1974ம் ஆண்டு அரசியல் சாசன சீர்த்திருத்தத்தின் மூலம் குறிப்பிடத்தக்களவு சுயாட்சி அதிகாரம் கொசோவோ மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.

கடந்த பல ஆண்டுகளாக கொசோவோ அதிக ஜனத்தொகை ரீதியான மாறுதல்களைக் கண்டுள்ளது. சேர்பிய சனத்தொகை குறைவடைந்ததுடன், அல்பானியர்களின் எண்ணிக்கை கனிசமான அளவு அதிகரித்தது. மத அடிப்படையில் கிறிஸ்தவர்கள் வெகுவாக குறைவடைந்த அதேவேளை, முஸ்லிம்கள் பெருகத் தொடங்கினர். 

இருபதாம் நூற்றாண்டில் சேர்பியர்கள் சிறுபான்மையினர் என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். பெரும்பான்மை இனத்தவராக அல்பானியர்கள் காணப்பட்டனர். பெரும்பாலும் அல்பானியர்கள் முஸ்லிம்களாகவும், சேர்பியர்கள் கிறிஸ்தவர்களாகவும் இருந்தனர்.

சேர்பிய கிறிஸ்தவர்களுக்கும், அல்பானிய முஸ்லிம்களுக்கும் இடையில் நீண்டகாலமாக ஒரு பனிப்போர் நிலவிவந்தது. தேசியவாத உணர்வுகள் கிளர்ந்தெழுந்தன.

கொசோவோ விடுதலை இராணுவத்தின் நதிமூலமாக 1979களில் பிரபலமடைந்திருந்த கொசோவோ குடியரசு இயக்கத்தை குறிப்பிடலாம். அல்பானிய சர்வாதிகாரி என்வர் ஒக்ஸாவினால் இந்த இயக்கம் நிறுவப்பட்டது. அல்பானியர்களின் இந்த உந்துதல் கொசோவோ தேசியவாதம் தோன்றுவதற்கு முக்கிய காரணியாக அமைந்தது என்று கூறின் அது மிகையாகாது.

1981ம் ஆண்டு நாடு தழுவிய ரீதியில் பிரிவினைவாதம் பரவி வியாபித்து, இறுதியில் ஓர் கலகமாக வெடித்தது. இதனைக் கட்டுப்படுத்த இராணுவத்தின் உதவி நாடப்பட்டது.

இந்த இயக்கத்தைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் நாட்டைவிட்டு வெளியேறி சுவிட்ஸர்லாந்தில் இயங்கிய மார்க்சிச – லெனின்வாத கொள்கைகளை பின்பற்றத் தொடங்கினர். 1982ம் ஆண்டு கொசோவோ மக்கள் இயக்கம் என்ற அமைப்பை சுவிட்ஸர்லாந்தில் நிறுவினர்.

அயர்லாந்தின் விடுதலை இராணுவத்தை (ஐ.ஆர்.ஏ) மாதிரியாகத் தழுவி தமது செயற்பாடுகளை கொசோவோ மக்கள் இயக்கம் ஆரம்பித்தது. யுகஸ்லாவிய சோசலிச குடியரசுக்குள் அல்பானிய தேசிய குடியரசொன்றை நிறுவுவதே இந்த அமைப்பின் பிரதான இலக்காக காணப்பட்டது. படிப்படியாக பாரிய அல்பானிய சாம்ராஜ்ஜியமொன்றை கட்டியெழுப்புவதே அவர்களின் இரண்டாவது இலக்காக அமைந்திருந்தது.

கடும்போக்குடைய தேசியவாத கொள்கைகளைக்க் கொண்ட ஸ்லொபொடன் மிலொச்சிவிக் சேர்பிய ஆட்சிப் பொறுப்பிற்கு அறிமுகமானதுடன் பிரிவினைவாதம் உச்சமடைந்தது. 1974ம் ஆண்டு அரசியல் சாசனத்தின் பிரகாரம் கொசோவோவிற்கு வழங்கப்பட்ட சுயாட்சி அதிகாரங்களை மிலொச்சிவிக் ரத்து செய்தார். இந்த செயல் கொசோவோ மக்களின் இதயங்களில் ரணமேற்படக் காரணமாக அமைந்தது. 1989ம் ஆண்டு அல்பானிய தலைவர்கள் சேர்பியாவிலிருந்து சுதந்திரப் பிரகடனம் செய்தனர். இதனால், சேர்பிய அரசாங்கம் கொசோவோவின் ஆட்சியைக் கலைத்தது. 

செப்டம்பர் மாதம் 100,000ற்கும் அதிகமான அல்பானியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதன் காரணமாக பொது வேலைநிறுத்தப் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டம் அடக்குமுறையின் மூலம் இறுதியில் கட்டுப்படுத்தப்பட்டது.

1991ம் ஆண்டு ஸ்லோவேனியா, குரேஷியா மற்றும் பொஸ்னியா ஆகிய நாடுகள் யுகோஸ்லாவியிலிருந்து விலகி சுதந்திரப் பிரகடனம் செய்தன. இதன் காரணமாக யுத்தம் வெடித்தது. 

அல்பானிய தலைவர்களும் ஒருதலைபட்சமாக 1991ம் ஆண்டில் சுதந்திரப் பிரகடனத்தை மேற்கொண்டனர். எனினும் இதனை அல்பானியா மாத்திரமே அங்கீகரித்தது. 

1992ம் ஆண்டு எழுத்தாளர் இப்ரஹிம் ரொகுவா ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். 

ரொகுவா ஓர் காந்தியவாதி, அஹிம்சை வழியில் சுதந்திரம் அல்லது சுயாட்சியைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைளை அவர் மேற்கொண்டார். 

எனினும், மிலோசிவிக்கினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட காட்டுமிராண்டித் தனத்தின் முன்னால் இந்த காந்தியவாத அஹிம்சைப் போராட்டத்;திற்கான உரிய பலன் கிடைக்கவில்லை.

சேர்பிய இராணுவப் படையினர் கொசோவோவின் அல்பானியர்கள் மீது இன ஒடுக்குமுறைகளைப் பிரயோகத்தினர்.

கொசோவோ மாநிலத்தில் சேர்பிய பெரும்பான்மையை உருவாக்கும் எண்ணத்தில் அல்பானிய இனத்தை களையும் நடவடிக்கைகளை இராணுவத்தினர் முன்னெடுத்தனர். இதனால் ஆயிரக்கணக்கான உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டன.

பல்லாயிரக்கணக்கான கோசோவோ அகதிகள் அல்பானியா, மசிடோனியா மற்றும் மொன்டென்க்ரோவில் சரணாகதி அடைந்தனர்.

ரொகுவாவின் வன்முறைகளற்ற காந்தியவாதப் போராட்டத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற பெரும் ஏமாற்றம் கொசோவோ மக்கள் அமைப்பு ஆயுதப் போராட்டக்குழுவாக வளர்ச்சி பெறுவதற்கு ஒரு துணைக்காரணியாக அமைந்திருந்தது. 1993ம் ஆண்டு கொசோவோ விடுதலை இராணுவம் மசிடோனியாவில் இரகசியமாக தமது நடவடிக்கைகளை ஆரம்பித்தது.

அயர்லாந்து விடுதலை இராணுவத்தை மாதிரியாகக் கொண்டு கொசோவோ விடுதலை இராணுவம் தன்னை நெறிப்படுத்திக் கொண்டது. கொசோவோவிற்கும் சேர்பியாவிற்கும் இடையில் பாரிய மோதலொன்றை ஏற்படுத்துவதற்கு தூண்டுவதே அப்போதைய பிரதான தந்திரோபாயமாக காணப்பட்டது.

கொசோவோ விடுதலை இராணுவத்தின் ஆரம்ப கர்த்தாக்காளக சஹிர் பஜ்ஜாட்சி மற்றும் அதம் ஜஸ்ரி ஆகியோரைக் குறிப்பிடலாம்.

கொசோவோ விடுதலை இராணுவம் மாறுபட்ட தரப்புக்களிடமிருந்து நிவாரணங்களையும், உதவிகளையும் பெற்றுக்கொண்டது. அமெரிக்காவும், ஜேர்மனியும் ஆயுதங்கள், ஆயுத பயற்சி மற்றும் நிதி உதவி முதலியவற்றை  வழங்கின. உண்மையில் தங்களது அரசியல் அபிலாஷைகளை அடைவதற்கான தந்திரோபாயமாகவே இந்த உதவிகள் நோக்கப்படுகிறது.

மறுபுறத்தில் கொசோவோ விடுதலை இராணுவத்தை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஒரு தடை செய்யப்பட்ட வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது. 

எனினும், அமெரிக்க அரசாங்கம் கொசோவோ விடுதலை இராணுவத்தினருக்கு மறைமுகமாக உதவிகளைத் தொடர்ந்தது.

அல்கய்தா அமைப்பு, கொசோவோ விடுதலை இராணுவத்திற்கு ஒத்துழைப்பு நல்கிய மற்றுமொரு சக்தியாக திகழ்கிறது. கொசோவோ விடுதலை இராணுவ வீரர்கள் பல சந்தர்பங்களில் ஆப்கானிஸ்தானில் பயிற்சிகளை பெற்றனர். இந்த விடயங்கள் அம்பலப்படுத்தபடாதவையாக காணப்படுகின்றன. 

1995ம் ஆண்டு கொசோசோ விடுதலை இராணுவம் சேர்பிய பொலிஸ் மற்றும் இராணுவத்தினரை இலக்கு வைத்து தாக்குதல்களை ஆரம்பித்தனர். 1996களில் மிகப் பிரபலமான ஒரு ஆயுதப் போராட்டக் குழுவாக கொசோவோ விடுதலை இராணுவம் உலகில் பிரபலமடைந்தது.

வடக்கு, கிழக்கு அல்பானிய பகுதிகளில் கொசோவோ விடுதலை இராணுவம் தமது பயிற்சி முகாம்களை நிறுவியது. யுகோஸ்லாவிய படைகளைச் சேர்ந்த பல அல்பானிய படையதிகாரிகள் பதவி விலகி கொசோவோ விடுதலை இராணுவத்தில் இணைந்து கொண்டனர். புதிய படைவீரர்களுக்கு அவர்கள் பயிற்சிகளை வழங்கினர். ஒரு இராணுவ அகடமி உருப்பெறும் அளவிற்கு இது வளர்ச்சிப் பெற்றிருந்தது.

16-20 உறுப்பினர்களைக் கொண்ட மத்திய கட்டளைக் கட்டமைப்பைக் கொண்ட குழுக்களாக கொசோவோ விடுதலை இராணுவ இயக்கத்தின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. 7 இராணுவ நடவடிக்கை வலயங்களாக கொசோவோ மாநிலம் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு வலயத்திற்கும் பொறுப்பான கட்டளைத் தளபதியொவருவர் காணப்பட்டார். “டி குரிஸ்” என கொசோவோ மொழியில் இந்தத் தலைவர்கள் அழைக்கப்பட்டனர். இதற்கு மேலதிகமாக அரசியல் துறையொன்றும் காணப்பட்டது. “ட்ரிஜிடோரியா பொலிட்டிகா” என இந்தத்துறை அழைக்கப்பட்டது. இந்த அரசியல்துறைக்கு தற்போதைய கொசோவோ பிரதமர் ஹசீம் தாசி தலைமை வகித்தார்.

1997 – 1999 ஆண்டு காலப்பகுதியில் கொசோவோ இராணுவம் ஒரு சடுதியான வளர்ச்சிப் போக்கை வெளிக்காட்டியது. ஆரம்ப காலத்தில் பாதுகாப்பு தரப்பினர் மற்றும் சிவில் படை அதிகாரிகள் மீது கொசோவோ விடுதலை இராணுவம் தாக்குதல்களை மேற்கொண்டது. தடைகளை அமைப்பதன் மூலம் அரசாங்கப் படைத்தரப்பின் ரோந்து நடவடிக்கைகளை கட்டுப்படுத்தியது.

1998ம் ஆண்டின் மத்தியபகுதியில் கொசோவோ மாநிலத்தின் ஒரு கால்வாசிப் பகுதியை கொசோவோ விடுதலை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருந்தனர். கொசோவோவின் டெரினிக்கா பிராந்தியத்தில் கொசோவோ விடுதலை இராணுவத்தினரின் பலம் ஓங்கிக் காணப்பட்டதுடன், ப்ரிகாஸ் என்ற கிராமத்தில் விடுதலை இராணுவத்தின் தலைமைக் காரியாலத்தை அமைத்திருந்தனர்.

சேர்பிய தலைநகர் பில்கிரேட் விடுதலை இராணுவத்தினரின் பலத்தை நூற்றுக் கணக்கில் மதிப்பிட்டது. எனினும், 20,000க்கும் மேற்பட்ட போராளிகளையும் பல நவீன ரக ஆயுதங்களையும் கொண்டமைந்த பாரிய போராட்ட இயக்கமாக கொசோவோ விடுதலை இராணுவம் வளர்ச்சிப் பெற்றது.

குறிப்பாக ஏ.கே 47 ரக துப்பாக்கிகள், ஆர்.பி.ஜீ. – 7 ரக ஆயுதங்கள் மற்றும் எஸ்.ஏ. – 7 ரக ஏவுகணைகள் போன்ற ஆயுதங்கள் இவற்றில் குறிப்பிடத்தக்கவை.

ஆரம்பத்தில் கொசோவோ விடுதலை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பிரேசங்களுக்கான ரோந்து நடவடிக்கைகளை சேர்பிய இராணுவம் தவிர்த்துக் கொண்டது. விடுதலை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அடைந்த மோசமான தோல்விகளினாலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. எனினும், நேரடியான மோதல் ஒன்றின் போது சேர்பிய படையினருடன் ஒப்பிடக்கூட முடியாத அளவிற்கு சிறிய சக்தியாகவே கொசோவோ விடுதலை இராணுவம் கருதப்படுகிறது.

கொசோவோ விடுதலை இராணுவத்தின் பாரிய போராட்ட பின்னடைவாக ஹொராஹொவாக் பகுதியை கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட இராணுவ முன்னகர்வைக் குறிப்பிடலாம். உண்மையில் இந்த முயற்சியின் காரணமாக கொசோவோ விடுதலை இராணுவம் பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்கியது. அதன்பின்னர், சேர்பிய இராணுவத்தரப்பினர் அடிக்கடி கொசோவோ இராணுவத்தினருடன் மோதல்களில் ஈடுபட்டனர். 

இந்த மோதல்களினால் விடுதலை இராணுவத்தினர் தோற்கடிக்கப்பட்டனர். அதுவரையில் கெரில்லா இயக்கத்தின் கட்டுப்பாட்டில் காணப்பட்ட பல பகுதிகளை சேர்பிய இராணுவம் முற்றாக மீட்டெடுத்தது. எல்லைப்புறமான ஜூனிக்கைத் தவிர ஏனைய அனைத்துப் பகுதிகளின் கட்டுப்பாட்டையும் தலைநகர் பில்கிரேட் கைப்பற்றிக் கொண்டது.

சேர்பிய இராணுவத்தினரின் மோசமான தாக்குதல்களின் காரணமாக கொசோவோ விடுதலை இராணுவம் வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டது. கொசோவோ விடுதலை இராணுவத்திற்கோ இதுவொரு எதிர்பாராத தண்டனையாக அமைந்தது. இஸ்ரேலுக்கு வெளியே வசிக்கும் யூதர்கள் (அல்பானியர்கள்) இதனால் கொதிப்படைந்தனர். கொசோவோ விடுதலை இராணுவத்தினருக்கான நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் மேற்குலக நாடுகளில் உச்சமடைந்திருந்தது. ஐரோப்பாவிற்குச் சென்றிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொசோவோ விடுதலை இராணுவத்தில் இணையும் பொருட்டு தாயகம் திரும்பினர். உண்மையில் இந்த பெரும் எண்ணிக்கையிலானோரை சமாளிப்பதில் கொசோவோ விடுதலை இராணுவம் சிக்கல்களை எதிர்நோக்கியது என்றே கூறலாம்.

அப்பாவி அல்பானியர்கள் பாரியளவில் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களினால் கொசோவோ விடுதலை இராணுவத்திற்கான ஆதரவு பல்கிப் பெருகத் தொடங்கியது எனலாம். கொசோவோ விடுதலை இராணுவ வீரர்கள் மேற்கொண்ட தாக்குதல்களில் நான்கு சேர்பிய பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதில் தாக்குதலாக நிக்சோசன் மற்றும் சிரிஸ் ஆகிய கொசோவோ கிராமங்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல்களை சேர்பிய படையினர் மேற்கொண்டனர்.

குறிப்பிட்ட கிராமங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மற்றுமொரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சகோதரர்கள் கொல்லப்பட்டனர். ஏழுமாத கர்ப்பிணித் தாயயொருவரின் தலையில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு குரூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

மற்றுமொரு இடத்தில், அதம் ஜசரி என்ற கொசோவோ விடுதலை இராணுவத்தின் தளபதியை கைது செய்வதற்காக பிரிகாஸ் கிராமத்தில் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகளினால் 60 பேர் கொல்லப்பட்டனர். இதில் 45 அப்பாவி சிவிலியன்களும் அடங்குகின்றனர். இந்த மோதல்களின் போது அதம் ஜசரியும் கொல்லப்பட்டார்.

சேர்பிய இராணுவத்தினரால் சிவிலியன்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களை கொசோவோ விடுதலை இராணுவம் தமது பிரச்சார உத்தியாக கையாண்டது. சேர்பிய அரசாங்கத்தின் இனஒடுக்குமுறை முழு உலகிற்கும் வெளிச்சம்போட்டுக் காட்டப்பட்டது. பொஸ்னியாவின் அப்போதைய சூழ்நிலை இதற்கு மேலும் வலுவூட்டியது.

1999ம் ஆண்டு மார்ச் மாதமளவில் கொசோவோவில் முழுஅளவிலான போர் வெடித்தது. சேர்பிய மற்றும் யுகோஸ்லாவிய படையினர் கொசோவோ விடுதலை இராணுவத்தினர் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டனர். இந்தத் தாக்குதலினால் விடுதலை இராணுவம் பாரிய அழிவுகளை எதிர்நோக்கியதுடன், அல்பானியவிற்கே மீண்டும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. கொசோவோவில் சில ஆயிரம் போராளிகளே எஞ்சியிருந்தனர்.

கொசோவோ படையினர் நேட்டோ படையினருடன் இணைந்து செயற்பட்டனர். நேட்டோ படையினர் 78 நாள் வான்தாக்குதல்களை மேற்கொண்ட போது கொசோவோ விடுதலை இராணுவத்தினர் இலக்குகளை அடையாளங்காட்டுவதில் ஒத்துழைப்பு வழங்கினர்.

1999ம் ஆண்டு மே மாதத்தில் கொசோவோ விடுதலை இராணுவத்தின் கமாண்டர் ஸ்லிஜமன் செலிமி பதவி நீக்கம் செய்யப்பட்டு, அல்பானிய இனத்தவரும், முன்னாள் செச்னிய இராணுவ பிரிகேடியர் ஜெனரலுமான அகீம் செகு புதிய கமாண்டராக நியமிக்கப்பட்டார். 

அகீம் சேகு பதவியேற்றதன் பின்னர் தீவிர இராணுவ முன்னகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அடிக்கடி சேர்பிய பாதுகாப்பு அலகுகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த யுத்தம் முடிவடைந்த சந்தர்ப்பத்தில், நோட்டோவும் சேர்பிய தலைவர்களும் சமாதான இணக்கப்பாடொன்றை எட்டியிருந்தனர். கொசோவோ ஐக்கிய நாடுகளினால் நிர்வகிக்கப்படும் என இதன் போது இணக்கம் காணப்பட்டது. கொசோவோ விடுதலை இராணுவத்தினரின் ஆயுதங்கள் களையப்படவிருந்தன. எனினும், கொசோவோ விடுதலை இராணுவம் சமாதான முன்னெடுப்புக்களில் பங்கேற்கவில்லை. ஆயுதங்களை களைவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு பதிலாக கொசோவோ விடுதலை இராணுவத்தினர் சாணக்கியமாக ஆயுதக்களைவிற்கு ஒப்புதல் தெரிவித்தனர்.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பிரிவினரால் கொசோவோ படையினர் சமாதான முன்னெடுப்புக்களில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். 3000 கொவோவே விடுதலைப் போராளிகள், கொசோவோ பாதுகாப்பு வீரர்கள் என்ற பெயரில் நேட்டோவுடன் இணைந்து பணியாற்றினர்.

அனர்த்த நிவாரணம், தேடுதல் மற்றும் மீட்புபணிகள், கண்ணிவெடியகற்றல், மனிதாபிமான உதவிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மீளமைத்தல் போன்ற பணிகளில் இந்த மூவாயிரம் படைவீரர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.

கொசோவோ பாதுகாப்பு வீரர்களின் செயற்பாடுகளும், கொசோவோ விடுதலை இராணுவத்தின் செயற்பாடுகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கட்டமைப்பைக் கொண்டிருந்தது. இதன் மூலம் இந்த இரண்டு அமைப்புக்களுக்கும் இடையிலான தொடர்பினை தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும். முன்னால் யுகோஸ்லாவிய படைவீரர்களின் விடுதிகளில் கொசோவோ பாதுகாப்பு வீரர்கள் நிலைகொள்ளச் செய்யப்பட்டனர்.

அல்பானிய பிரதிநிதிகளின் தலைவரான ஹசீம் தாசிக்கு இத்தாலிய பரிஸின் ராம்போலியூட்  நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் மேற்கத்தைய நாடுகளினால் முன்வைக்கப்பட்ட கொசோவோ சுயாட்சி யோசனைகளை தாசி நிராகரித்தார்.

பின்னர் மாற்றுச் சிந்தனையுடைய தாசி இந்த சோசனையை ஏற்றுக்கொண்டார். இந்த முடிவு கொசோவோ விடயத்தில் ஒரு மிக முக்கிய திருப்பு முனையாக அமைந்தது எனக் குறிப்பிடலாம்.

இதன் காரணமாக கொசோவோ விடுதலை இராணுவம் சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்ற ஒரு ஜனநாயக கட்சியாக கொசோவோவில் தோன்றியது. கொசோவோவில் இடைக்கால ஆட்சியொன்றை அமைப்பது குறித்து பிரதான மூன்று கட்சிகளும் கவனம் செலுத்தின. ரொகுவோவின் ஜனநாயக லீக் கட்சி (டுனுமு) , ஐக்கிய ஜனநாயக லீக் (டுடீனு) மற்றும் கொசோவோ விடுதலை இராணுவம் (முடுயு) ஆகியனவே இந்த பிரதான மூன்று கட்சிகளுமாகும். 

இடைக்கால நிர்வாகத்தின் பிரதமராக ஹசீம் தாசி நியமிக்கப்பட்டார்.

இனஒடுக்குமுறை தற்போது தலைகீழாக மாறியது. ஒதுக்கப்பட்ட அல்பானியர்களின் மீள் வருகையினால் சேர்பிய இனத்தவர்கள் மெதுவாக கொசோவோவைவிட்டு வெளியேறத் தொடங்கினர். அல்பானியர்கள் சேர்பியர்களுக்கு எதிரான இன வன்முறைகளை சுதந்திரமாக அரங்கேற்றினர். ரோமா மற்றும் ஜிப்சி இனத்தவர்கள் இந்த இனஒடுக்குமுறையினால் மிக மோசமான வகையில் பாதிக்கப்பட்டனர்.

கடும்போக்குடைய தேசியவாதிகளுக்கு ஐக்கிய நாடுகளின் நிர்வாகிகள் பூரண சுதந்திரம் வழங்கியிருந்தனர். சர்வதேச மன்னிப்புச் சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் கொசோவோவில் மிக மோசமான பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

கொலை, பாலியல் வல்லுறவு, ஆட்கடத்தல் மற்றும் குண்டு வெடிப்பு போன்ற பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பாக விசாரணைகளை உரிய முறையில் ஐக்கிய நாடுகள் அமைப்பு மேற்கொள்ளத் தவறியது என கொசோவோவின் மனிதவியல் ஆய்வாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.

நேட்டோ படையினரால் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதல்களினால் மூன்றில் இரண்டு பங்கு ரோம இனத்தவரும், அஸ்காலி இனத்தவரும் வேறுவழியின்றி அப்பிரதேசங்களைவிட்டு வெளியேறினர். 

துரதிஷ்டவசமாக பெருமளவிலான ரோம இனத்தவர்கள் கொசோவோவைவிட்டு வெளியேற நேர்ந்ததது.

இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின்னர் ரோம இனத்தவர்கள் மிக பாரதூரமான அளவில் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட அல்லது அழிவடைந்த சந்தர்ப்பம் இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது. ஆயிரக் கணக்கான சேர்பியர்களும் பலவந்தமாக கொசோவோவைவிட்டு வெளியேற்றப்பட்டனர். 

பிரதமர் தாசி இடைக்கால நிர்வாக ஆட்சியைப் பொறுப்பேற்ற நான்கு மாதங்களில் 348 கொலைகள், 116 கடத்தல்கள், 1070 கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் 1106 சொத்துக்களைச் சேதப்படுத்திய சம்பவங்கள் பதிவாகின. 1999ம் ஆண்டு டிசம்பர் மாதம் இடைக்கால நிர்வாக ஆணைக்குழு நிறுவப்பட்டதன் மூலம் தாசியின் ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. தாசியின் டி.பி.கே. கட்சி மாநராட்சி தேர்தலில் படுதோல்வியடைந்தது.

ஹசீம் தாசி சேர்பியாவின் வடமேற்கு பள்ளத்தாக்கான டெனிசாவின் புரோஜா மாநகரில் 1968ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் திகதி பிறந்தார். பல்கலைக்கழகத்தில் பயிலும் காலத்தில் அல்பெனிய மாணவத் தலைவர்களில் ஒருவராகவும், பிரிஸ்தினா நகரில் அமைந்துள்ள அல்பானிய பல்கலைக்கழகத்தின் முதலாவது மாணவ தலைவராகவும் தாசி கடமையாற்றியுள்ளார். 

1993ம் ஆண்டு ஹாசீம் தாசி சுவிட்ஸர்லாந்திற்குச் சென்றார். அங்கு கொசோவோ விடுதலை இராணுவத்தின் முக்கிய உறுப்பினராக செயற்பட்டார். விடுதலை இயக்கத்தில் தாசிக்கு “ஜர்பீரி” (பாம்பு) என்ற பெயர் சூட்டப்பட்டிருந்தது.

ஹசீம் தாசி அல்பானியாவின் பயிற்சிப் போராளிகளுக்கு பொறுப்பாளராக கடமையாற்றியிருந்தார். பின்னர் கொசோவோ விடுதலை இராணுவத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளராக பதவி உயர்த்தப்பட்டார்.

கொசோவோவின் தற்போதைய ஆட்சியாளர்கள் சிறுபான்மை இனத்தவர்கள் உரிமைகள் குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவிக்க உள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

துருக்கியர்கள், பொஸன்ஜன்க்ஸ் மற்றும் ஏனைய சிறுபான்மை இனத்தவர்களான சேர்பியர்கள், ரோமர்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட உள்ளது.

பெப்ரவரி 17ம் திகதி கொசோவோவின் சுதந்திரப்பிரகடனம் செய்யப்பட்டதற்கு அதன் ஒத்துழைப்பு நாடுகள் உந்துசக்தியாக அமைந்திருந்தது. குறிப்பாக அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா மற்றும் இத்தாலி ஆகியனவே பிரதான நட்பு நாடுகளாகும். 

இந்த சுதந்திரப் பிரகடனம் நீண்டகாலம் திட்டமிடப்பட்டு அமுல்படுத்தப்பட்டது என்பது தெளிவாக புலனாகிறது. 

ஒரு வருடத்திற்கு முன்னதாக பின்லாந்தின் ஜனாதிபதி மாட்டீ அதிஷாரி சுதந்திரத் திட்டமொன்றை முன்வைத்தார். இந்தத் திட்டத்தில் ரஸ்யா மற்றும் சேர்பிய நிபந்தணைகளுக்கு நிகரான கொசோவோவின் நிபந்தணைகளும் முன்வைக்கப்பட்டிருந்தன.

பின்லாந்துத் தலைவரின் திட்டவரைவு நிராகரிக்கப்பட்டது, சுதந்திரத்திற்கான அடிப்படையும், கால அட்டவணையும் இந்தத் திட்டத்தில் காணப்பட்டது. சுதந்திரத்திற்கான ஒவ்வொரு படியையும்;, சுதந்திரத்திற்கான நாளையும் கொசோவோ பிரதமர் தாசியும், ஒத்துழைப்பு குழுவினரும் இணைந்து தீர்மானித்தனர்.

உத்தேசிக்கப்பட்ட முழு சுயாட்சியை சேர்பியா நிராகரித்ததன் மூலமாக, கொசோவோ பூரண சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டது. நாட்டின் இறைமை என்ற எண்ணக்கருவினை விஞ்சி தேசிய சுயநிர்ணய உரிமை முன்னிலைப்படுத்தப்பட்ட நிலைமையாகவே இது கருதப்படுகிறது.

2007ம் ஆண்டு நவம்பர் மாதம் 17ம் திகதி கொசோவோவில் தேர்தல்கள் இடம்பெற்றன. கொசோவோ விடுதலை இராணுவத்தின் ஆதரவு கட்சியான கொசோவோ ஜனநாயக கட்சி 34 வீதமான (220,000) வாக்குகளையும், 1998ம் ஆண்டு நேட்டோவின் தலையீட்டுன் ஆட்சியில் இருந்த கொசோவோ ஜனநாயக லீக் 22 வீதமான வாக்குகளையும் பெற்றுக் கொண்டன. 

பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இந்தத் தேர்தலை புறக்கணித்தனர். கொசோவோ யுத்த்தின் பின்னர் 80 வீதமாக காணப்பட்ட வாக்களிப்பு வீதம் சடுதியாக 37 வீதமாக குறைவடைந்தது. 

தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் செயற்பாடுகள் மீது மக்களின் அதிருப்தியும், எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையின்மையுமே இந்தத் தேர்தல் முடிவுகளின் மூலம் பிரதிபலிப்பதாக ஐரோப்பிய பாராளுமன்ற கண்காணிப்புக் குழுவின் தலைவர் டொரிஸ் பெக் தெரிவித்தார்.

எவ்வாறெனினும், தமது கட்சிக்கு கிடைத்த 15 வீதத்திற்கும் குறைவான வாக்குகளை சேர்பியாவிலிருந்து சுதந்திரம் பெற்றுக் கொள்வதற்கான மக்களின் அங்கீகாரமாக ஹசீம் தாசி பிரடகனம் செய்தார். இந்தத் தேர்தலின் மூலம் கொசோவோ மக்கள் சர்வதேசத்திற்கு ஒரு பலமான செய்தியை கூற முனைந்துள்ளனர். “கொசோவா சுதந்திரத்திற்கு தயார்” என தாசி தெரிவித்தார்.

2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் திகதி கொசோவோ அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பு ஹாசீம் தாசிக்கு வழங்கப்படுவதாக கொசோவோ ஜனாதிபதி பெட்மீர் செஜிடு தெரிவித்தார். மேலும் விரைவாக ஆட்சியை அமைக்குமாறு தாசிக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் திகதி பாராளுமன்றத்தினால் ஹாசீம் தாசி பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். தாசிக்கு ஆதரவாக 85 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் பாராளுமன்றத்தில் பதிவாகின.

பிரதமர் பதவியை பொறுப்பேற்ற போது கொசோவாவிற்கு சுதந்திரம் பெற்றுக்கொடுப்பதே தமது முதன்மையான இலட்சியம் என ஹாசீம் தாசி குறிப்பிட்டார்.

பெப்ரவரி மாதம் 16ம் திகதி நாளைய தினம் கொசோவோ மக்களுக்கு மிக முக்கியமான நாள் என பிரதமர் ஹாசீம் தாசி சுதந்திரப் பிரகடனம் செய்தார். 

பெப்ரவரி மாதம் 17ம் திகதி கொசோவோ ஒரு தலைப்பட்சமாக சுதந்திரத்தை பிரகடனம் செய்தது.

“ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட எமது மக்களின் தலைவர்கள் நாமே” கொசோவோ சுதந்திரமானதும், இறைமையானதுமான இராச்சியம் என பிரகடனம் செய்கிறோம். இந்தப் பிரகடனம் எமது மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கின்றது. ஐக்கிய நாடுகளுக்கான பிரதிநிதி மர்ட்டீ அஜ்ஸ்தாரியின் பூரண அங்கீகாரத்துடனேயே இந்த சுதந்திரப் பிரகடனம் மேற்கொள்ளப்படுகிறது என பிரதமர் ஹாசீம் தாசி தெரிவித்தார்.

மதசார்பற்ற, பல்லின மக்களும் சட்டத்தின் முன் சமனாக கருதப்படக்கூடிய ஜனநாயக நாடாக நாம் கொசோவோவை பிரகடனம் செய்கிறோம். கொசோவோவில் வாழும் அனைத்து சமூகத்தினரதும் உரிமைகளை பாதுகாத்து, அவற்றை மேலும் வலுப்படுத்துவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம் என ஹாசீம் தாசி பிரதிக்ஞை செய்தார். 

கொசோவோவின் அரசியல் விவகாரங்கள் மற்றும் தீர்மானங்களின் போது பல்லின மக்களது கருத்துக்களை பிரதிபலிக்கும் வகையில் செயலாற்றுவோம் என பிரதமர் மேலும் உறுதிமொழியளித்தார். 

அமெரிக்கா ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னணி நாடுகள் இந்த புதிய நாட்டை அங்கீகரித்துள்ளன.

கொசோவோ விடுதலை இராணுவம் தமது இலட்சிய சிகரத்தின் உச்சத்தை வெற்றிகரமாக அடைந்துள்ளது என்று கூறின் அது மிகைப்படாது.

February 25, 2008

2002 ஒப்பந்த முறிவு குறித்த கோட்பாட்டியல் நோக்கு

கலாநிதி ஏ.ஆர்.எம். இம்தியாஸ்
 
கிந்த ராஜபக்ஷ அரசாங்கமானது இலங்கையில் வடக்கு – கிழக்கை உள்ளடக்கியதான நிலப்பரப்பில் தமிழர்களுக்கான தன்னாட்சி கோரிப் போராடிவரும் அரசியல் இராணுவ பேரியக்கமான தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அன்றைய அரசாங்கம் பெப்ரவரி 2002 இல் கைச்சாத்திட்டுக் கொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அதாவது ரத்துச் செய்வதற்கு எடுத்த தீர்மானமானது, இலங்கை அரசியல் அவதானிகள் பலரையும் ஏனையோரையும் பலத்த ஆச்சரியத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ள ஒரு விவகாரமாகும். இத்தகையதொரு பின்னணியில் அவர்கள் அவ்வாறான முடிவு எடுக்கப்பட்டது ஏன் என்ற கேள்வியினை எழுப்பி வருகின்றனர்.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்யுமளவிலான தீர்மானத்தை எடுப்பதற்கு அரசாங்கத்தைத் தூண்டியது எது அல்லது எலை என்பதே இன்று எழுந்துள்ள கேள்வியாகும். இதற்குக் கிரமமான ஒழுங்கிலான அரசியல் சம்பவங்களதும் மற்றும் சூத்திரங்கள், சுலோகங்களதும் அடிப்படையில் ஒருவர் பலவேறான விடைகளையும் விளக்கங்களையும் முன்வைக்க முடியும். இந்த வகையில் இக்கட்டுரை, அவ்வாறானதொரு தீர்மானத்தை எடுப்பதற்கு வழிவகுத்திருக்கக் கூடிய காரணங்கள் குறித்து ஆராய முற்பட்டுள்ளது. இது குறியீட்டு அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் சில கோட்பாட்டு ரீதியிலான விளக்கங்களை முன்வைக்கும் ஒரு கட்டுரையாகும்.

கோட்பாட்டு அடிப்படையிலான விளக்கங்கள்:


கோட்பாட்டு ரீதியில் சிந்திக்கையில் எப்போதும் மக்கள் அறிவார்ந்த தளத்தில் செயற்பட நினையாது தமது மனச்சாய்வுகளுக்கு ஏற்ப உணர்வு ரீதியாகவே செயற்பட முனைகிறார்களென்பது ஏற்றுக் கொள்ளப்படவேண்டியதொரு உண்மையாகும். ஒரு பதற்றமான அரசியல் சூழ்நிலையில் அல்லது அத்தகையதொரு பின்னணியில் தலைவர்ள் நேரடியாகவே அம் மக்களது உணர்வுகளைக் கிளற முற்பட்டு விடுகிறார்கள் என்பது அவதானிக்கப்பட வேண்டியதொரு அம்சமாகும். குறியீட்டு அரசியல் தொடர்பில் ஆராய்கையில், மக்களை மிக இலகுவாக இரையாக்கும் அவர்களை உணர்ச்சி வசப்படுத்தி ஆட்டிவைக்கக் கூடிய அடையாளங்கள் என்ற ரீதியில் உணர்வுகளைத் தூண்டும், சூத்திரங்கள் - சுலோகங்களான யுத்தம் சார்ந்த அல்லது சமாதானத்திற்கு எதிரான கோஷங்கள், கொட்டி – பதாகைகள் இன்னும் தேசிய கீதம், இனக்குழும வரலாறுகள்,  நேசத்திற்குரிய தாய் தந்தையர் நாடு குறித்த கற்பிதங்கள் அல்லது பிரமைகள் போன்றனவே பிரதான தோற்றுவாய்களாக இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியும். உணர்வு ரீதியாக மக்களை வசப்படுத்தி எழுச்சிக்குத் தூண்டக்கூடிய ஆயதங்களாக சமூக மேலோங்கிகளால் இவையே வெகுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. அதிகார மையங்களை நிலை நிறுத்தவும் இருப்பினைத’ தக்க வைத்துக் கொள்ளவும் அவர்களுக்கிருக்கும் ஒரே மார்க்கம் இதைவிட வேறெதுவுமில்லை.

அரசியல் அரங்கில், அடையாளக் குணாம்சங்களை வெளிக் கொணரும் இக் குறியீடுகள், பெரும் பங்கினை வகிக்கின்றன என மானிட பண்பியல் ஆய்வாளரான சிட்சிஸ்லோமாச் கூறுகிறார். அவை மக்களை உணர்ச்சிகளைத் தூண்டி எழுச்சிகளுக்கும், கிளர்ச்சிகளுக்கும் உள்ளாக்குவதற்கு நன்கு பயன்படுத்தப்படுகின்றன.

அரசியல்வாதிகளோ, அரசியல் இயக்கங்களது தலைவர்களோ மக்களைத் தமது அணிகளுக்குள் உள்ளீர்த்துக் கொள்வதுடன், சடுதியான உணர்வகளுக்கு ஆட்படுத்தி தமது குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்கின்றனர். இந்த வகையில், மக்களும் தம்வசமிழந்து அரசியல்வாதிகளின் போக்கிலேயே கட்டுண்டவர்களாகச் செயற்படுகின்றனர். இவ்வாறாக இலகுவாக மக்கள் ஆதரவை மிகப் பரந்தளவில் திரட்;டிக் கொள்ள முடிவதற்கான காரணம் என்னவெனில், மக்கள் அதீத சக்தி வாய்ந்த குறியீடுகளான வீரவரலாறுகள் ஆவேசமான இனப்பற்று மற்றும் தொன்மங்கள், கலாசாரம், மதம், பாரம்பரிய கற்பிதங்கள் போன்ற அடையாளக் கூறுகளினூடாக அவற்றினடியாக தூண்டப்படக் கூடியோராக ஏற்கனவே அவைமீது அதீத பற்றுடையோராய் உள்ளார்ந்த பிடிமானங்கள் கொண்டோராய் இருப்பதாகும்.

படித்த வர்க்கத்தினரை உள்ளடக்கிய மேலோங்கிகள், அரசியல்வாதிகள் அல்லது தேசியத் தலைவர்கள் சூத்திரங்கள், சுலோகங்களின் மூலமாக வரலாற்றுப் பெருமைகளை உன்னதங்களை புகழ்ந்து போற்றும் போதும், இன – மத பிரிவினைகளின் அடிப்படையில் தமது விரோதிகள் மீது போர் தொடுக்கும் போதும், உள்நாட்டு நெருக்கடிகளின் விளைவுகளுக்கு வெளிநாடுகளைத் தூற்றி வசைபாடும் போதும், புராதன மன்னர்கள் கால ஆட்சியினை மீண்டும் கொண்டு வருவதற்கு உறுதி பூணும் போதும், புராணிக வீரர்களது சாகசங்களைப் புகழ்ந்து பரணி பாடும் போதும், கொடிகளை வானளாது உயர்த்தி ஆவேச பிரகடனங்களை உதிர்க்கும் போதும் குறிப்பிட்ட இனக் குழுமத்தின் மொழி, மத பாரம்பரியங்களுக்கு உத்தியோகபூர்வ ரீதியான அந்தஸ்து பாதுகாப்பு மற்றும் சலுகைகளை முன்மொழிந்து ஆரவாரிக்கும் போதும், வருங்கால சந்ததியினரின் இளந்தளிர்களான குழந்தைகளை அரவணைத்து முத்தமிடும் போதும் மக்கள் அளவுகடந்த உணர்ச்சிகளுக்கும் நெகிழ்ச்சிகளுக்கும் ஆட்பட்டு விடுகின்றனர். மக்களுணர்வுகளை இலக்கு வைத்து, அவர்களைத் தூண்டி எழுச்சிகளை உண்டு பண்ணக் கூடிய சக்தி வாய்ந்த குறியீடுகளைப் பயன்படுத்துவதே அரசியல்வாதிகளின் வெற்றிகளுக்கு எப்போதும் இடப்படும் அடித்தளமாக இருக்கின்றது.

நாட்டின் குறிப்பிட்டதொரு நிலப்பகுதியில் ஆதிக்கம் பெற்றவர்களாக இன அல்லது மதம் சார்ந்த ஒரு குழுவினர் பெரும்பாண்மையினராக இருக்கும் பட்சத்தில், இக் குறியீட்டு அரசியலின் பிரதான விளைவாக அவர்களுக்கு எதிராக வன்மம் சார்ந்த உள்நாட்டு யுத்தம் கூட மூண்டுவிடக் கூடிய அபாயம் நேரலாம். குறிப்பிட்ட இனப்பிரிவினர் பூகோள ரீதியாக தமக்கான பூர்வீக நிலப்பரப்பை தமது தாயகமாகக் கொண்டிருப்பதற்கு உரித்துடையோராகத் தம்மைக் கருத நேரும் பட்சத்தில், அவர்களுக்கு எதிரான பகைமை நியாயப்படுத்தப்படுகிறது. இதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது கற்பிதங்களே என்கிறார் எஸ்.ஜே.கொவ்மான்.

உதாரணமாக இலங்கையின் வடக்கு – கிழக்கு பிரதேசத்தில் பெரும்பான்மையினராக வாழுகின்ற தமிழ் மக்கள் தாம் அரசாங்கத்தினாலும் பெரும்பான்மை சிங்கள அரசியல்வாதிகளாலும் கடுமையான பாரபட்சங்களுக்கும் ஒடுக்கு முறைக்கும் உள்ளாக்கப்பட்டு வருவதாகக் கூறி, தமது தாயகத்தினை உள்ளடக்கியதாக தமிழர்களுக்கென தமிழீழம் கோரி, தீவிரமான பிரசாரங்களிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை அரசியல்வாதிகள் எப்போதும் போல தேர்தல் லாபங்களை முன்னிறுத்தி சிங்கள மக்களது இன உணர்வுகளைத் தூண்டும் கையில் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருவது மாத்திரமன்றி, தமிழர்களது நியாயபூர்வமான பிரச்சினைக்கு சம்ஷ்டி அடிப்படையிலான சுயாட்சிக்கான அரசியல் தீர்வினைக்கூட எட்டமுடியாதவாறும் எதிர்த்து வருகின்றனர். சிங்கள அதிகாரவர்க்கத்தினர் இந்த வகையில் தமிழர்களுக்கு எதிரான இன உணர்வுகளைத் தூண்டி அவர்களுக்கு எதிராக சிங்கள மக்கள் கொதித்தெழச் செய்யக்கூடிய விதமாக தீர்வு நோக்கில் பிரித்தானியர் அறிமுகப்படுத்திய ஒற்றையாட்சி முறைமை என்ற வரையறைக்கு அப்பால் செல்ல முடியாதவாறு மட்டுப்படுத்துவதன் மூலம் நிலைமைகளை மேலும் மேலும் கடினமடையச் செய்தும் வருகின்றனர்.

ஒப்பந்த ரத்தின் பின்னணியில்…..

இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே இன அடிப்படையிலான பிளவுகள், குரோதங்களைப் பிரதானப்படுத்தி அத்தகைய அடையாளங்கள் - குறியீடுகள் மூலமாக இலாபமீட்டுவதே மேலோங்கிகளின் அரசியலில்  ஒரு பிரதான போக்காக இருந்து வந்துள்ளது. குறுகிய தேர்தல் - வாக்காளர் மைய தந்திரோபார அரசியலே அன்று தொடக்கம் இலங்கையில் கோலேச்சிவ ந்துள்ளது. ஆரம்பத்திலிருந்தே சிறுபான்மையினருக்கு எதிராக மிகுந்த வன்மத்துடன் முன்னெடுக்கப்பட்டு வந்த இந்த அரசியல் போக்கு கடும் நம்பிக்கையீனங்களையும் பீதியையுமே சிறுபான்மையினர் மத்தியில் தோற்றுவித்திருந்தது. சிங்கள அரசியல் கட்சிகளுக்கு இத்தகையதொரு பின்னணி மேலும் முனைப்புடன் இயங்குவதற்கான வாய்ப்பானதொரு சூழ்நிலையை தோற்றுவித்துக் கொடுத்திருந்தது. 

சிங்கள மக்களை பெரும்பாண்மையினராகக் கொண்ட தென்பிராந்திய பிரதேசத்தைச் சேர்ந்தவரான ராஜபக்ஷ மிகந்த தீவிரத்துடன் சிங்கள சார்பிலான கொள்கைகளையும் கோஷங்களையும் நவம்பர் 17, 2005 தேர்தலில் முன்வைத்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினார். தேர்தல் பிரசார காலத்தின் போது தனக்கேயுரியதொரு பாணியில் மிகுந்த தந்திரோபாயத்துடன் சிங்கள மக்களுக்கு தன்னை ஒடுக்கு முறைக்குள்ளானதொரு சிங்கள மக்களின் பிரதிநிதியைப் போல இனங்காட்டியும் கொண்டார். இத்துடன் தென்னிலங்கைச் சிங்கள மக்களது அனுதாபத்தையும் ஆதரவையும் சுவீகரித்துக் கொள்ளும் வகையில், குறியீட்டு அரசியல் சார்ந்த கோஷங்களை மிகத் தாராளமாகவே பயன்படுத்தியும் கொண்டார். எல்.ரி.ரி.ஈ யினருக்கு எதிராக மிகக் கடுமையான நிர்ப்பந்தங்கள் மற்றும் நிபந்தனைகள், ஜனாதிபதி குமாரதுங்க எல்.ரி.ரி.ஈ யினருடன் செய்து கொண்ட சுனாமி ஒப்பந்தத்தை ரத்தச் செய்வதற்கான வாக்குறுதி, நோர்வே அனுசரணையிலான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முற்றாக மாற்றுவது, நாட்டின் நெருக்கடிக்கு மேற்கு நாடுகள், குறிப்பக நோர்வே மீதான  வசைபாடல் போன்றவற்றுடன் தேசியக் கொடி, குழந்தைகளை அரவணைத்தல் ஆகிய உத்திகளும் இவற்றிலடங்கும். இவையெல்லாவற்றுக்கும் மகுடம் வைக்கும் வகையில், சிங்கள தேசியவாதக் கட்சிகளான ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவுடனான ஒப்பந்தங்கள் ராஜபக்ஷவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தனவாய் இருந்தன. எல்.ரி.ரி.ஈ யை மிகக் கடுமையாக எதிர்த்து வரும் இவை, ராஜபக்ஷ பதவிக்கு வரும் போது, யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை நீக்க வேண்டும் என முன் நிபந்தனையையும் விதித்தன.

மக்களைக் கவரும் குறியீட்டு அரசியல் அடிப்படையிலான நிகழ்ச்சி நிரலின் மூலம் பதவியினைக் கைப்பற்றும் அரசியல்வாதிகள் தாம் உணர்ச்சிபூர்வமாக அளித்த வாக்குறுதிகளை, மறந்து செயற்படுவது என்பது சற்றுக் கடினமானது. உதாரணமாக, இலங்கை அரசியலில் முதல் முதலாக நிறுவன மயப்பட்ட சிங்கள பேரினவாதத்தை அறிமுகப்படுத்திய எஸ்.டபிள்யூ. ஆர். டீ. பண்டாரநாயக்காவினால் அவர் கட்டவிழ்த்து விட்ட உணர்ச்சி கொந்தளிப்புக்களை அடக்க முடியாத நிலையே ஏற்பட்டது. சிங்கள மக்களது நலன்களுக்கு கேடு விளைவிக்கும் வகையில் தமிழ் மக்களுக்கு சலுகைகளை பண்டாரநாயக்கா அள்ளி வழங்கிவிட்டதாகக் கருதிய தீவிரவாத பிக்கு ஒருவரால், 1959இல் அவர் படுகொலை செய்யப்பட்டார். சமஷ்டிக்கு எதிரான அல்லது சமாதானத்திற்கு எதிரான நிலைப்பாட்டினை எடுத்து, தேர்தலில் வெற்றியீட்டிய ராஜபக்ஷ மிகக் கவனமாக, தந்திரோபாயத்துடன் தமது கொள்கைகளை வகுத்துக் கொண்டு செயற்பட்டார். சிங்கள மக்களது ஆதரவுப் பலத்தைத் திரட்எ, அவர்களது நம்பிக்கையினை வென்றெடுப்பதே அவரது குறிக்கோளாகும். இதில் கடும் போக்காளர்களுள் பிரதான சக்தியாகிய பாராளுமன்றத்தில் 39 ஆசனங்களைக் கொண்ட ஜே.வி.பியினரின் ஆதரவினை எந்த விதத்திலும் இழப்பதற்கு அவர் தயாரில்லை.

ஜே.வி.பி யிடமிருந்து கிளம்பிய அழுத்தமும் நிர்ப்பந்தமும், ராஜபக்ஷ நிருவாகத்தை யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்யும் தீர்மானத்தை எடுக்கத் தூண்டிய விவகாரத்தில் பெரும் பங்கினையாற்றியிருந்ததென்பது பரவலானதொரு அபிப்பிராயமாகும். சிங்கள சார்பிலான நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்ததன் மூலம், பதவிக்கு வந்த ராஜபக்ஷவுக்கு தேர்தல் காலத்தில் அவரது உணர்ச்சிக் கோஷங்களையும் வாக்குறுதிகளையும் உண்மையென்று விழுங்கிய ஏழை மக்களுக்கு பொருளாதார விடுதலையை மற்றும் நல மேம்பாடுகளை எவ்வாறு அளிப்பதென்பது பாரியதொரு சவாலாக உருவெடுத்துள்ளது.

ராஜபக்ஷ ஆட்சியினரின் முன்நிலையில் இப்போது இரு தெரிவுகள் மாத்திரமே உள்ளன:

(1) தொடரும் யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டு வரக் கூடியவாறு அரசியல் தீர்விகை; காணுதல்.

(2) இன அடிப்படையிலான குறியீட்டு அரசியலை மேலும் தொடர்வது. ஜே.வி.பியினரின் சமாதான எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலுக்கு ஆட்சியினர் இணங்கியிருப்பதைப் பார்க்கையில், அவர்கள் இரண்டாவது தெரிவினையே தழுவியிருக்கின்றனர் எனத் தோன்றுகின்றது. சிங்கள மக்களிடமிருந்து வரும் அதிருப்தி அலையினைத் திசை திருப்புவதற்கும் அவர்களுக்கிருக்கும் உபாயம் இதுவேயாகும்.

உண்மையிலேயே யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்ய ராஜபக்ஷ எடுத்திருக்கும் தீர்மானம், தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டினை நியாயப்படுத்தும் மேலும் வலுப்படுத்தும் ஒன்றாகவே கருதப்பட வேண்டும். அரசாங்கமும் அதன் நிறுவனங்களும், சிங்களவர்கள் சார்பிலானவையென்றே இலங்கைத் தமிழர்கள் நம்புகின்றனர். சிங்களத் தரப்பிலிருந்து நீதியான தீர்வு எதுவும் கிடைக்கப் போவதில்லை என்ற எண்ணமே அவர்கள் மனதில் மேலோங்கியுள்ளது. நூற்றாண்டுக்கும் பழைமை வாய்ந்த ஒற்றையாட்சி கட்டமைப்பிலிருந்து விலகும் விதத்தில் எத்தகையதொரு அரசியல் தீர்வினையும் முன்வைக்கும் திராணியற்றனவாகவே சிங்கள அரசியல் நிறுவனங்கள் இருக்கின்றன. சிங்களவர்களின் பிரிக்க முடியாத ஒரு அடையாளமாகவே நாட்டில் ஒற்றையாட்சி அமைப்பானது தொடர்ந்தும் பேணப்பட்டு வருகின்றது.

அரசியல் அரங்கில் இடையறாது மேலும் மேலும் அரசியல்வாதிகளால் குறியீட்டு அடிப்படையிலான அரசியல் கொள்கைகளும் கோஷங்களும் முனைப்புடன் தீவிரப்படுத்தப்பட்டு வரும் ஒரு சூழ்நிலையில் ராஜபக்ஷ நிருவாகதடதழனரழனட நடவடிக்கையால், நாடு மீட்சியற்றதொரு நிலைக்கே அதள பாதாளத்தை நோக்கித் தள்ளப்பட்டு வருவதாகவே காட்சியளிக்கிறது. இத்தகையதொரு நிலைமை தொடரும் பட்சத்தில் பேரழிவான விளைவுகள் எக் கணமும் எற்பட்டு விடுமோ என அஞ்ச வேண்டியுள்ளது. குறியீட்டுக் கொள்கைகளின் மூலம் சிறுபாண்மையினரது கலாசார அடையாளங்களை முன்நிறுத்தி அவர்கள் மீது இலக்கு வைக்கும் போது ஓரங்கட்டப்படும் அல்லது ஒடுக்கு முறைகளுக்கு உள்ளாகும் சிறுபாண்மையினர் முழு அளவில் அரசிற்கு எதிராக திரண்டெழுவது எதிர்பார்க்கப்பட வேண்டிய இயல்பானதொரு வெளிப்பாடேயாகும். அரசிடமிருந்தும் அதனுடைய நிறுவனங்களிடமிருந்தும் நம்பிக்கையிழக்கும், ஒரங்கட்டப்படும் சிறுபாண்மையினர் தமது போராட்டத்தைத் தொடர்வது தவிர்க்க முடியாததொன்றாகி விடுகிறது. ஆட்சியிலிருக்கும் அதிகார வர்க்க மேலோங்கிகளாலும் எதிர்கட்சி அணியிலுள்ள மேலோங்கிகளாலும் நிறுவனமயப்படுத்தப்பட்டு வருகின்ற விடாப்பிடியான, பகைமையும் வன்மமும் சார்ந்த குறியீட்டு அரசியல் கொள்கைகளினாலும் நடவடிக்கைகளினாலும் அவர்கள் தமிழர்களுக்கென தனிநாடு கோரி போராடி வரும் அரசியல் - இராணுவ பேரியக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினையே ஆதரிக்க முற்படுவர். வடக்கு கிழக்கில் தமிழர்களுக்கு சுதந்திரமும், தன்னாட்சி இறைமையும் கொண்ட தனிநாட்டுக்கான அவர்களது போராட்டமும் ஒருவகையில் இத்தகையதொரு நிலைமையின் பிரதிபலிப்பாகவே தோன்றுகின்றது.

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளின் குறியீட்டு அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் காரணமாக நாடு, நவீனத்துவம் சார்ந்த முன்னேற்றங்களையும் அபிவிருத்தி இலக்குகளையும் எட்ட மடியாத நிலையில் பாரிய சவால்களை எதிர்நோக்கியவாறு முடங்கிப் போயுள்ளது. இலங்கை உரியவாறு முன்னேற்றங்களையம் எற்ற அபிவிருத்திகளையும் எய்த வேண்டுமாயின் அரசியல்வாதிகளும் தலைவர்களும் காலாதி காலமாக பின்பற்றி வரும் தீங்கு விளைவிக்கும் நடைமுறைகளையும் குறுகிய தேர்தல் அபிலாஷைகளுக்கான தந்திரோபாயங்களையும் முன்னிறுத்தும் அரசியல் மற்றும் ஆட்சி முறைகளை முற்றாக ஒதுக்கி, நவீனத்துவப் பாங்கும் விரிந்த பார்வையும் கொண்டதொரு புதிய யுகத்திற்குள் பிரவேசிக்க வேண்டும்.

இலங்கை அரசியலில் பகைமைகளும் எதிர்ப்புணர்வு வன்மங்கள் சார்ந்த கொள்கைகளுமே தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்துமாயின், குறியீட்டு அரசியலின் விகாரமான, பாதகமான விளைவுகள் மற்றும் தாக்கங்கள் குறித்து ஆராயும், பகுப்பாய்வு செய்யும் ஆய்வாரள்களுக்கு இலங்கையே ஒரு அசலான ஆய்வுக் களமாக மாறும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

[கலாநிதி ஏ.ஆர்.எம். இம்தியாஸ், பென்சில்வேனியா-ரெம்பிள் பல்கலை கழகத்தினை சார்ந்த அரசியல் விஞ்ஞான பீட விரிவுரையாளர்] - தமிழாக்கம்: ஜி.ரி.கே

February 24, 2008

நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுடன் காணோளி பேட்டி

நீதிக்குப் புறம்பான படுகொலைகள், காணாமல் போதல் தொடர்பான பொதுமக்கள் கண்காணிப்புக்குழுவின் தலைவரும், மேலக மக்கள் முன்னணியினி கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனுடன் பேட்டி:

[நன்றி: மாற்று வழி - விகல்ப - Vikalpa]

February 20, 2008

யுத்தத்தை மேலும் வலுவடையச் செய்வதற்கான ஓர் ஒப்பந்தம்

கொழும்பு அரசாங்கம் போர்நிறுத்த உடன்படிக்கையை உத்தியோகபூர்வமாக ரத்து செய்ததன் மூலம் இலங்கையின் தேசியப் பிரச்சினை ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இது நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுக்க வழிகோலும்.

ஜயதேவ உயங்கொட

யுத்தத்தின் கோர விளைவுகள் குறித்து நாடு அவ்வளவு கரிசனை காட்டுவதாக விளங்கவில்லை. உண்மையில் இந்த மோசமான யுத்தத்தின் பாதக விளைவுகள் குறித்து இலங்கையர்களை விட வெளிநாட்டவர்கள் அதிகம் அக்கரை செலுத்துவதாகவே தோன்றுகின்றது. இனப்பிரச்சினையை இராணுவ ரீதியில் தீர்க்க முடியாது எனவும், யுத்தத்தின் மூலம் இறுதியில் யாரும் வெற்றி பெறப் போவதில்லை எனவும் நாட்டிற்கு புறத்தே உள்ள அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். மாறாக இந்தப் போரினால் ஆழமான மனித உரிமைப் பிரச்சினைகள் தோன்றக்கூடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர். எனினும், அரசாங்கம், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இலங்கையில் வாழும் அனேகர் போரை ஒரு தவிர்க்க முடியாத யதார்த்த நிலையாகவே நோக்குகின்றனர். இந்தப் புரியாத புதிரை எவ்வாறு விளக்குவது?

[பேராசிரியர் ஜயதேவ உயங்கொட]

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை மற்றும் தோல்வியடைந்த சமாதான முன்னெடுப்புக்கள் தொடர்பான பிரச்சினையின் பரிமாணங்களில் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒரு குறிப்பிட்டுக்கூறக்கூடிய இடமுண்டு. 2002ம் ஆண்டு பெப்ரவரி மாதம் போர்நிறுத்த உடன்படிக்கை அப்போதைய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் இடையில் சமாதான முன்னெடுப்புக்களுக்கான முதல்கட்டமாக போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. போர்நிறுத்த உடன்படிக்கை மற்றும் அதனைத் தொடர்ந்த அனைத்து சமாதான பேச்சுவார்த்தைகளுக்கும் நோர்வே அரசாங்கப் பிரதிநிதிகள் மத்தியஸ்தம் வழங்கினர். சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகளாக தொடர்ச்சியாக நோர்வே அரசாங்கம் தனது ஒத்துழைப்பை வழங்கி வந்தது. போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திட்டதன் பின்னர் அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஆறு சுற்று நேரடிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இவை அனைத்தும் இலங்கைக்கு வெளியே இடம்பெற்றவை என்பது நோக்கத்தக்கது.

2002ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒஸ்லோவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் ஒரு முக்கிய  கட்டத்தை எட்டியது எனக் குறிப்பிடலாம். தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக சமஷ்டி ஆட்சி முறைமை குறித்து ஆராயப்பட்டது. எனினும், ஒஸ்லோவில் காணப்பட்ட புரிந்துணர்வு தொடர்ச்சியாக நீடிக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த ஒஸ்லோ புரிந்துணர்வை நிராகரித்தனர். 2003ம் ஆண்டளவில் சமாதான பேச்சுவார்த்தைகள் சர்ச்சைக்குரிய நிலைக்கு தள்ளப்பட்டது. ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் இணங்கியவற்றை அமுல்படுத்தவில்லை எனக்கூறி தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகிக்கொண்டனர். சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களினாலும், 2003ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட ஆழிப்பேரலை அழிவினாலும் தடைப்பட்டிருந்த இலங்கையின் சமாதான முன்னெடுப்புக்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

போர்நிறுத்த உடன்படிக்கை மீறல்களுடன் படிப்படியாக பழைய மோசமான நிலைமைக்கு இந்தப் பிரச்சினை மீண்டும் திரும்பியது. அனேகமான சந்தர்ப்பங்களில் நேரடியான யுத்த நிறுத்த மீறல்களில் தமிழீழ விடுதலைப் புலிகளே ஈடுபட்டதாக போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் குற்றஞ்சாட்டினர். குறிப்பாக ஆயுதக் கடத்தல்கள் மற்றும் இராணுவ புலனாய்வுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளின் படுகொலைகள் தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. மறுபுறத்தில் போர்நிறுத்த உடன்படிக்கையில் காணப்பட்ட இணக்கபாடுகளின் அடிப்படையில் கொழும்பு அரசாங்கம் செயற்படவில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டது. குறிப்பாக இராணுவ உயர் பாதுகாப்பு வலயங்களாகக் காணப்பட்ட கிராமங்களிலிருந்து இராணுவத்தினரை அகற்றுவது தொடர்பில் கொழும்பு அரசாங்கத்தின் நிலைப்பாடு யுத்த நிறுத்த மீறல்களில் பிரதான சர்ச்சையாகக் கருதப்படுகிறது.

போர்நிறுத்த மீறல் குற்றச்சாட்டை ஒருவர் மீது ஒருவர் சுமத்தும் இந்த ஆடு புலியாட்டத்தில் யார் குற்றவாளிகள் என்பதை ஆராய்வதைவிட, போர்நிறுத்த உடன்படிக்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய இணக்கப்பாடுகளின் உண்மை நிலைமையை வெளியிலிருந்து அவதானிப்போருக்கு இலங்கையின் இனப்பிரச்சினையின்  தெளிவான பரிமாணங்களை நன்றாக விளங்கிக்கொள்ள முடியும். அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அரசியல் ரீதியான அனுகுமுறையை தொடங்குவதற்கான அடித்தளமாகவே உண்மையில் போர்நிறுத்த உடன்படிக்கை அறிமுகப்படுத்தப்பட்டது. அதிகார பரவலாக்கலின் மூலம் அரசியல் சாசனத்தினூடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்க அப்போதைய கொழும்பு அரசாங்கம் தயாராக இருந்தது. தனிநாட்டு கோரிக்கையினூடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில் தமது தீர்வுத் திட்டங்களைத் தேட தமிழீழ விடுதலைப் புலிகள் விளைந்தனர்.

இந்த இரு வேறுபட்ட நோக்கங்களுக்கு இடையிலான இடைவெளியை நிரப்ப வேண்டிய நிர்ப்பந்தமே 2002ம் ஆண்டு சமாதான முன்னெடுப்புக்களின் பிரதான சவாலாகக் காணப்பட்டது. இரண்டு தரப்பினருக்கும் இடையில் காணப்படும் இணக்கப்பாட்டுத் திறனின் அடிப்படையில் சாதாரண அதிகாரப் பகிர்வொன்றை நோக்கிச் செல்லக்கூடிய வாய்ப்பு இருந்த போதிலும், மறுபுறத்தில் அது பிரிவினையாக மாறக்கூடிய வாய்ப்பாகவும் அமைந்திருந்தது. சர்வதேச மத்தியஸ்தர்களின் ஒத்துழைப்புடன் 2002-2003ம் ஆண்டு காலப்பகுதியில் இனப்பிரச்சினை தொடர்பாக நிலவிய இணக்கப்பாட்டு நிலைமை இதுவரையில் எட்டப்படவில்லை என்றே குறிப்பிடலாம்.

போர்நிறுத்த உடன்படிக்கை மற்றும் சமாதான முன்னெடுப்புக்களின் போது இலங்கை அரச தரப்பு இரண்டு பிரதான பிரிவுகளாக பிளவுபட்டிருந்தது என்பது ஒரு முக்கியமான விடயமாக நோக்கப்பட வேண்டும். 1987ம் ஆண்டு இந்திய - இலங்கை உடன்படிக்கையின்போது காணப்பட்ட நிலைமையை ஒத்த ஒரு சந்தர்ப்பமாகவே இது காணப்பட்டது. ஆழமாக பிளவுபட்டு காணப்பட்ட அரசாங்கமாகவே காணப்பட்டது. இந்த நிலை ஏற்கனவே பிளவுபட்டிருந்த நிலைமையை மேலும் வலுப்படுத்துவதாகவே கருதப்படுகிறது.

இந்த பிளவு நிலை சிங்கள அரசாங்கத்தில் மிக அழுத்தமாக வெளிபடத் தொடங்கியது. உண்மையில் அரசாங்க அதிகாரம் இரண்டு மாறுபட்ட எதிரணிகளைக் கொண்டமைந்ததாக காணப்பட்டது. ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பொதுஜன ஐக்கிய முன்னணி ஒரு அணியாகவும், பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி மற்றொரு அணியாகவும் இரண்டு பிளவுகளாகக் காணப்பட்டன. ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு ஒரு சிறந்த அடித்தளமாக போர்நிறுத்த உடன்படிக்கை மற்றும் விடுதலைப் புலிகளுக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையிலான சமதான முன்னெடுப்புக்களினூடாக எதிர்பார்க்கப்பட்ட பலன்கள் கிடைக்கப் பெறாமை என்பவற்றை பொதுஜன ஐக்கிய முன்னணி உபாயமாகப் பயன்படுத்திக் கொண்டது. போர்நிறுத்த உடன்படிக்கையின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அதிகபட்ச சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதனால் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பிற்கு அது பெரும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் எனவும், நாட்டின் இறைமைக்கும், தேச ஒருமைப்பாட்டிற்கும் குந்தகம் ஏற்படக்கூடும் எனவும் பொதுஜன ஐக்கிய முன்னணி உள்ளிட்ட சிங்கள தேசியவாதக் கட்சிகள் தர்க்கித்தன.

இறுதியாக, போர்நிறுத்த உடன்படிக்கைக்கான தடைகள் மிகவும் வலுவானவை. அரைகுறை அர்ப்பணிப்புடன் கூடிய ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைவத்துவத்தினால் சமாதான முன்னெடுப்புக்களின் சரியான வெளியீட்டினை பெற்றுக்கொள்ள முடியவில்லை. சுயநலவாத, நெகிழ்வுப் போக்கற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் போர்நிறுத்த உடன்படிக்கையை மீறியமை, பொருளாதார சுதந்திரத்துடன் கூடிய எளிமையான ஜனநாயக முறைமையை நிலைநாட்ட முனைந்த சர்வதேச மத்தியஸ்தர்களின் தூரநோக்கற்ற கொள்கைகள் என்பவற்றின் காரணமாக இறுதியில் சமாதான முன்னெடுப்புக்களுக்கு அரசியல் தீர்வொன்றின் அவசியப்பாடு மிக மிக குறைந்தளவான சாத்தியப்பாடுடைய ஒன்றாக மாறியது. பூர்த்தி செய்யப்படாத சமாதான முன்னெடுப்புக்கள் மேலும் மேலும் பிளவுகளையே ஏற்படுத்தி நிற்கும் என்பது தெளிவாக இதன் மூலம் புலனாகின்றது. தீட்டிய கைகளைப் பதம்பார்த்த நிலைமையாகவே நாம் இதனை உணர்கின்றோம். 

இந்தப் பூரணப்படுத்தப்படாத புரட்சியின் மூலம், இலங்கையின் இனப்பிரச்சினை விசித்திரமான ஒரு கட்டத்தை எட்டியது. சமாதானத்தை நிலைநிறுத்த இராணுவமல்லா முறையில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் இறுதியில் யுத்த வன்முறைகளின் கரங்களை மேலும் வலுப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது. வேறு விதத்தில் கூறினால், இனப்பிரச்சினையின் தன்மை மேலும் பாரதூரமான வகையில் வளர்ச்சிப்பெற்று தொடர்ந்தது. இது இலங்கையில் சமாதான முன்னெடுப்புத் திட்டங்கள் காணப்படவில்லை என்பதைவிட, சமாதான முன்னெடுப்புக்களை மேற்கொண்ட தரப்புக்கள் சிவில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து அரசியல் தீர்வுவொன்றைப் பெற்றுக்கொடுக்க தவறியமையையே விளக்கி நிற்கின்றன. உண்மையில் கடும் சிக்கல் மிகுந்த இலங்கையின் தேசியப் பிரச்சினை நிறைவுசெய்யப்படாத சமாதான முயற்சிகளாகவே காணப்படுகின்றன. 

யுத்த நிறுத்த உடன்படிக்கை தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக போர்நிறுத்த உடன்படிக்கையின் மூலம் ஆரம்பம் முதலே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தேவையற்ற அரசியல் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கையும், இந்தியாவும் பலமாக குற்றஞ்சாட்டி வந்தன. ஏனென்றால் யுத்த நிறுத்த உடன்படிக்கையின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சம இராணுவ அதிகாரம் வழங்கப்பட்டது. வடக்கு, கிழக்குப் பகுதிகளில் விடுதலைப் புலிகளால் ஆட்சி செய்யப்படும் நிலப்பரப்புக்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த நிலைமையை ஏற்றுக்கொள்ள ஏனைய அரசியல் கட்சிகள் தயக்கம் காட்டின. 

பேச்சுவார்த்தைக்கான ஒரு அடித்தளம் என்ற நோக்கிலேயே விடுதலைப் புலிகள் போர்நிறுத்த உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டனர். போர்நிறுத்த உடன்படிக்கையின் மூலம் இராணுவ படையினருக்கு நிகரான அங்கீகாரம் தமக்கு கிடைக்கும் என்ற தந்திரோபயமே புலிகள் போர்நிறுத்த உடன்படிக்கையைக் கைச்சாத்திடத் தூண்டியது. எனினும், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் அந்த சமவலுவை வழங்கவில்லை. இராணுவ பலத்தைக் கொண்ட தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் எனவே கொழும்பு தரப்பினரது நோக்கம். எனினும், இந்த தந்திரோபாயம் உரிய முறையில் செயற்படுத்தப்படவில்லை. இதனால் 2002-2003ம் ஆண்டுகளில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையையும், சமாதான முன்னெடுப்புக்களையும் எதிர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் தெற்கின் பல அரசியல் சக்திகளுக்கு ஏற்பட்டது. 

கொழும்பில் ஆளும் வகுப்பினருக்கு இடையே காணப்பட்ட பிரிவினை மற்றும் முரண்பாடுகளின் காரணமாக முக்கிய பிரச்சினைகளின் போது ஒன்றுபட்டு செயற்பட முடியாது போயுள்ளது. பிரதான கட்சிகளுக்கு இடையே காணப்பட்ட இடைவெளியின் காரணமாக போர்நிறுத்த உடன்படிக்கையை முன்னெடுக்கத் தேவைப்பட்ட அவகாசம் அற்றுப்போனது. 2002ம் ஆண்டு பெப்ரவரி மாதம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட போது அவர், ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி உள்ளிட்ட ஏனைய பிரதான கட்சிகளிடம் அபிப்பிராயம் கேட்வில்லை என்பதை ஞாபகப்படுத்துவது இந்த இடத்தில் உசிதமானதாக அமையும். இரண்டு தரப்பினரது இணக்கப்பாட்டினால் மட்டும் விடுதலைப் புலிகளுடன் சமாதான முன்னெடுப்புக்களை ஏற்படுத்த முடியும் என்பதே ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் தந்திரோபயமாக காணப்பட்டது. அதாவது ரணில் விக்ரமசிங்கவின் ஆளுங்கட்சிக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான இணக்கப்பாட்டின் மூலம் தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என்பதே அவரது நோக்கம். எனினும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரைவாசிப் பகுதி சிங்கள மக்களையே பிரதிநிதித்துவப்படுத்தினார். ஏற்கனவே நடந்தது போன்று சமாதான முன்னெடுப்புக்களை பலவீனப்படுத்த மற்றைய தரப்பு தருணம் பார்த்து காத்திருந்தது.

சிங்கள ஆளும் வர்க்கத்திற்கு இடையே காணப்படும் பிளவுகள், முரண்பாடுகள் எந்தளவு தேசிய இனப்பிரச்சினையில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மீண்டுமொருமுறை பறைசாற்றியது. சிங்கள கடும்போக்குடைய தேசியவாதிகளின் உந்துதலினால் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சியை 2003ம் ஆண்டு இறுதிப்பகுதியில் கலைத்தார். போர்நிறுத்த உடன்படிக்கையும், தமிழீழ விடுதலைப் புலிகளின் இடைக்கால சுய நிர்ணய அதிகாரசபை உள்ளிட்ட தீர்வுத் திட்டங்களும் தேசிய பாதுகாப்பிற்கும், நாட்டின் இறைமைக்கும் பாரிய அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்பதனாலேயே ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சி கவிழ்க்கப்பட்டது. 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விடுதலைப் புலிகள் தன்னிச்சையாக சமாதான பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகிக் கொண்டதைத் தொடர்ந்து, சமாதான முன்னெடுப்புக்கள் மற்றும் போர்நிறுத்த உடன்படிக்கைக்கு ஏற்பட்ட இரண்டாவது பாரிய இடையூறாக இந்த ஆட்சி கவிழ்ப்பு கருதப்படுகிறது.

2004ம் ஆண்டு நடுப்பகுதியில் பாராளுமன்ற ஆட்சி மாற்றத்தின் பின்னர் கொழும்பு அரசாங்கம் மெதுவாக போருக்கான ஆயத்தங்களை மேற்கொண்டன. ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் மற்றும் சர்வதேச சமூகம் குறிப்பாக நோர்வே அரசாங்கம் முன்னெடுத்த சமாதான முயற்சிகளை ரத்து செய்வதற்கு ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உள்ளிட்ட சிங்கள தேசியவாத அரசாங்கம் நடவடிக்கைகள் மேற்கொண்டன. போர்நிறுத்த ஒப்பந்த மீறல்கள் பற்றி குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மீறல்கள் குறித்து சிங்கள கடும்போக்குடைய தேசியவாதிகள் தமது அதிருப்தியை வெளியிட்டதுடன் போர்நிறுத்த உடன்படிக்கை ரத்து செய்யப்பட வேண்டும் என அழுத்தங்கொடுக்கத் தொடங்கினர்.

2005ம் ஆண்டு வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். சர்வதேச ரீதியில் விடுதலைப் புலிகளை “பயங்கரவாதிகள்”; என்று பிரச்சாரம் செய்து, விடுதலைப் புலிகள் அமைப்பை சில நாடுகள் தடை செய்வதற்கும், யுத்த நிறுத்த உடன்படிக்கையை ரத்து செய்வது தொடர்பான பிரச்சாரங்களிலும் கதிர்காமர் முக்கிய பங்காற்றியுள்ளார். போர்நிறுத்த உடன்படிக்கை மற்றும் விடுதலைப் புலிகள் தொடர்பான தமது நிலைப்பாட்டினால் தமது அரசாங்கத்திற்கு சிக்கல்கள் தோன்றியதை சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உணர்ந்தார். சமாதான முன்னெடுப்புக்களை தொடர்வதற்கு திரும்புமாறு விடுதலைப் புலிகளுக்கு சந்திரிக்கா அழைப்பு விடுத்தார், மறுபுறம் சர்வதேச சமூகம் (ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஜப்பான்) எச்சரிக்கை விடுப்பதன் மூலமும், ஜனநாயக ரீதியிலும் விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்பச் செய்ய முயற்சித்தன. எனினும், இவை அனைத்தும் இறுதியில் தோல்வியிலேயே முடிவுற்றன. 2004ம் ஆண்டு இறுதிப் பகுதியில் விடுதலைப் புலிகள் போரைத் தொடரப் போவதாக தகவல்கள் வெளியாகின. தமது இராணுவ பலத்தை வெளிக்காட்டி புதிய நிலையிலிருந்து சமாதான பேச்சுவார்த்தைகளைத் தொடர தமிழீழ விடுதலைப் புலிகள் தயாராகினர்.

2004ம் ஆண்டு டிசம்பர் 26ல் ஏற்பட்ட ஆழிப்பேரலை இலங்கையின் இனப்பிரச்சினையை மாற்றியமைத்தது. அதற்கு முந்தைய ஒரு வருட காலமாக இலங்கையில் போர் மேகங்கள் சூழ்திருந்தன. இலங்கையின் கரையோரப் பகுதிகளில் வாழ்ந்து வந்த சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் உயிர்களை மிக மோசமான முறையில் சுனாமி அனர்த்தம் காவுகொண்டது. குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் உள்ள வடக்கு கிழக்கு பகுதிகளில் மிகப் பாரியளவிலான அழிவுகள் ஏற்பட்டன. இந்தக் கோரமான இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட மனித அவலங்கள் காரணமாக விடுதலைப் புலிகள் தமது ஆயுதப் போராட்ட உத்தியை கைவிட்டனர். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இந்த அனர்த்த சூழ்நிலை புதிய சமாதான பாதைகளை திறந்ததாகவே கூறலாம். இரு தரப்பினரும் இணைந்து அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை முன்னெடுக்கக் கூடிய சந்தர்ப்பம் கிட்டியதுடன் அதன் மூலம் சமாதான முன்னெடுப்புக்களை மீண்டும் ஆரம்பிக்கக் கூடிய வாய்ப்பும் காணப்பட்டது.

இதன்படி, இரண்டு தரப்பினரும் பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பித்தனர். 2005ம் ஆண்டு ஜூலை மாதம் சுனாமி நிவாரணப் பணிகளுக்கான ஒப்பந்தமொன்றை இரு தரப்பினரும் கைச்சாத்திடுமளவிற்கு இந்த சுமூகமான சூழ்நிலை வளர்ச்சியடைந்திருந்தது. எனினும் புதிதாக உருப்பெற்ற சிங்களத் தேசியவாதிகளின் செயற்பாடுகளினால் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எவ்வித அரசியல் தொடர்புகளும் பேணப்படக்கூடாது என மக்கள் விடுதலை முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பலம்வாய்ந்த அங்கத்தினரான மக்கள் விடுதலை முன்னணியினர் சுனாமி நிவாரணப் பணிகளைத் தொடரும் பொருட்டு அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தம் அரசியல் சாசனத்திற்கு முரணானது என மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தனர். இதன்படி அரசாங்கத்திற்கும், விடுதலை; புலிகளுக்கும் இடையே மிகவும் இன்றியமையாத மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபடும் பொருட்டு ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்தது. இதேபோன்று இந்தோனேசிய அரசாங்கத்திற்கும் ஆச் கெரில்லா கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட மனிதாபிமான செயற்பாடுகளுக்கான ஒப்பந்தம் இன்றும் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

2005ம் ஆண்டு சமாதான முன்னெடுப்புக்களைத் தொடருவதற்கான தவறவிடப்பட்ட சந்தர்ப்பமாக கருதினால், 2006ம் ஆண்டு யுத்தபாதையை நோக்கி முன்னகர்ந்த ஆண்டாகக் குறிப்பிட முடியும். 2005ம் ஆண்டு நவம்பரில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் இந்தப் பிரச்சினையின் முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டு காரணிகளின் அடிப்படையில் தேர்தலில் வெற்றிபெற்றார். கடும்போக்குடைய சிங்களத் தேசியவாதிகளின் ஒத்துழைப்பு, தமிழீழ விடுதலைப் புலிகளினால் வடக்குத் தமிழ் வாக்காளர்கள் ஜனாதிபதித் தேர்தலை பகிஷகரித்தமை என்பனவே இந்த இரண்டு பிரதான காரணிகளாகும். இரண்டு கடும்போக்குடைய சிங்களத் தேசியவாதக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்ள மஹிந்த ராஜபக்ஷ நிர்ப்பந்திக்கப்பட்டார். மக்கள் விடுதலை முன்னணி, ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளுடன் ஜனாதிபதித் தேர்தலில் அவர் கூட்டணி வைத்துக்கொண்டார். சிங்கள பௌத்த தேசியவாத கொள்கைகளின் அடிப்படையில் மஹிந்த ராஜபக்ஷ தனது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்தார். தேசிய பிரச்சினைக்கு சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வோன்று முன்வைக்கப்பட வேண்டும் என தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்ட ரணில் விக்ரமசிங்கவை சிறியளவு வாக்கு வித்தியாசத்தின் அடிப்படையில் தேர்தலில் வெற்றிகொண்டார். 2006ம் ஆண்டு விடுதலைப் புலிகளும், புதிதாக பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமும் யுத்தத்தை ஆரம்பித்தன.

மஹிந்த ராஜபக்ஷவை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏன் மறைமுகமாக தேர்தலில் வெற்றிபெறச் செய்தனர்? தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்காமல் இருந்தால் தேர்தல் முடிவுகள் ரணில் விக்ரமசிங்கவிற்கு சாதகமாக அமைந்திருக்கும். இந்தப் பிரச்சினையை புதியதொரு கோணத்திற்கு கொண்டு செல்ல விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு தேவையேற்பட்டது. துரதிஷ்டவசமாக 2006, 2007ம் ஆண்டுகளில் விடுதலைப் புலிகளின் தந்திரோபயங்கள் குறிப்பிடத்தக்களவு வெற்றி பெற்றன என்றே கூறலாம். 

2006ம் ஆண்டின் முதல் பகுதியில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதிய அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தைகளை தொடரத் தீர்மானித்தனர். இதன்படி இரண்டு தடவைகள் ஜெனீவாவில் இரு தரப்பும் சந்திப்புக்களை மேற்கொண்டன. பெ;பரவரி மாதம் நடைபெற்ற முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் போது போர்நிறுத்த உடன்படிக்கையை பூரணமாக அமுல்படுத்த இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் அதிலிருந்து பிரிந்து சென்ற கருணா குழுவினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களினால் கிழக்கில் பதற்றம் நிலவியது. 2005, 2006ம் ஆண்டு காலப்பகுதியில் அனேகமான சந்தர்ப்பங்களில் விடுதலைப் புலிகளின் உட்கட்சி பூசல் காரணமாகவே போர்நிறுத்த உடன்படிக்கை மீறல் தொடர்பான சம்பங்கள் அதிகமாக பதிவாகின. போர்நிறுத்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சரத்துக்களின் அடிப்படையில் துணை இராணுவக் குழுக்களின் ஆயுதங்களை களைய கொழும்பு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா குழுவினர் பிரிந்து சென்ற சம்பவம் போர்நிறுத்த உடன்படிக்கை சர்ச்சையில் மிக முக்கியமானதொரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட இலங்கை இராணுவம் கருணா குழுவினருக்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்கியது. இறுதியாக ஜெனீவா பேச்சுவார்த்தைகள் உண்மையில் இருதரப்பினரின் யுத்த ஆயத்தமாகவே அமைந்தது என்பது தெளிவாகிறது.

அரசியல் காரணங்களுக்காக இரண்டு தரப்பினரும் போர்நிறுத்த உடன்படிக்கையை உத்தியோகபூர்வமாக ரத்து செய்ய விரும்பவில்லை. எவ்வாறெனினும், 2007ம் ஆண்டு யுத்த ஆண்டாகவே கருதப்படுகிறது. பிரகடனப்படுத்தப்படாத போராகவே இந்த நிலைமை கருதப்பட்டது. போர்நிறுத்த உடன்படிக்கையின் 4.4 சரத்திற்கு அமைய எந்தவொரு தரப்பும் போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகிக்கொள்ள வேண்டுமானால் அது தொடர்பாக நோர்வே அரசாங்கத்திற்கு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். 2007ம் ஆண்டின் ஆரம்பகாலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்குக் கட்டுப்பாட்டுப் பிரதேசமொன்றை இராணுவத்தினர் கைப்பற்றியதுடன் பிரகடனப்படுத்தப்படாத யுத்தம் உச்ச கட்டத்தை அடைந்தது. சில மாதங்களாக தொடர்ந்த யுத்தம் காரணமாக பாரியளவிலான மக்கள் இடம்பெயர்ந்தனர். இரண்டு தரப்பிலும் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டன. மேலும் மனிதாபிமான உதவியாளர்கள் கொல்லப்பட்டதுடன், மிக மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்களும் பதிவாகின. யுத்தம் உக்கிரமடைந்ததன் காரணமாக மனித உரிமை மீறல் மற்றும் மனிதாபிமான உதவிகள் என்ற விடயங்கள் தொடர்பாக அதிக அவதானம் செலுத்தப்பட்டது. 2007ம் ஆண்டு முழுவதும் தமிழீழ விடுதலைப் புலிகளும், அரசாங்கமும் போர்நிறுத்த உடன்படிக்கை தொடர்பில் மிகக் குறைந்தளவு மரியாதையையே பேணிவந்தனர். 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போர்நிறுத்த உடன்படிக்கையை ரத்து செய்தது தொடர்பாக அனேகமான தெற்கின் அரசியல் சக்திகள் தமது வரவேற்பை தெரிவித்தன. 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் போர்நிறுத்த உடன்படிக்கை ரத்து செய்யப்பட்டது. சிலர் இந்த முடிவை வரவேற்றனர். போர்நிறுத்த உடன்படிக்கை என்ற நடைபிணம் கடைசியில் தகனம் செய்யப்பட்டது என அவர்கள் தெரிவித்தனர். சிலருக்கு அது ஒரு சுவையில்லாத நாவல், இன்னும் சிலருக்கோ போர்நிறுத்த உடன்படிக்கை ரத்து செய்யப்பட்டமை தேசத்தின் கௌரவம் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது. விடுதலைப் புலிகளுக்கும் - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையிலான உடன்படிக்கை ரத்து செய்யப்பட்டதன் மூலம் இராணுவ வெற்றிகளுக்கு வழிகோலும் என சிங்கள மக்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட ஒரு சாரார் தெரிவித்தனர். இதனால்தான் விடுதலைப் புலிகள் போர்நிறுத்த உடன்படிக்கை பூரணமாக செயற்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தனர். எனினும் தெற்கின் அரசியல் சக்திகள் இதனை நிராகரித்தன. உண்மையில் போர்நிறுத்த உடன்படிக்கை மீதான விடுதலைப் புலிகளின் காதல் ஒரு யுத்த தந்திரோபாயமாகவே நோக்க வேண்டும்.

இந்த ஏதுக்கள் ஒருபுறமிருக்க, போர்நிறுத்த உடன்படிக்கை அமுலில் இல்லாத இலங்கை மிகவும் சிக்கல் நிறைந்த ஒன்றாகவே காணப்படும் என்பது தின்னம். ஆளும் தரப்பினரும், விடுதலைப் புலிகளும் பல்வேறு சந்தர்ப்பங்களில் யுத்த நிறுத்த உடன்படிக்கை மீறல்களில் ஈடுபட்ட போதிலும், இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவினரின் பிரசன்னத்தினால் போராட்டக்களத்தில் இடம்பெறக்கூடிய உக்கிர மோதல்களையேனும் கட்டுப்படுத்தக் கூடிய உத்தரவாதம் காணப்பட்டது. எனினும், போர்நிறுத்த உடன்படிக்கை ரத்து செய்யப்பட்டதனைத் தொடர்ந்து யுத்த நிலவரங்களைக் கண்காணிப்பதற்கோ அல்லது அது தொடர்பான எச்சரிக்கைகளை விடுப்பதற்கோ எந்தத் தரப்பும் இல்லை.

இந்த நிலைமை இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக ஒரு தனித்துவமான போக்கையே விளக்கி நிற்கின்றது. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் தங்களுடைய நியாயங்களை மிக தெளிவாக சர்வதேச சமூகத்தின் முன்னிலையில்  விளக்கியிருந்தனர். இனப்பிரச்சினை மற்றும் தீர்வுத் திட்டங்களில் முன்னொருபோதும் இல்லாதவகையில் 2002ம் ஆண்டு சமாதான முன்னெடுப்புக்கள் சர்வதேச ரீதியில் ஆழமான தாக்கத்தை செலுத்தியது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் இந்த நிலைமையை அளவுக்கு மீறிய வகையில் சர்வதேச மயப்படுத்தினர் என்றே கூறலாம்.

இலங்கை அரசாங்கத்தின் இனமுரண்பாடுகளுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் இடையிலான வலுவான பிணைப்பாகக் காணப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கை ரத்து செய்யப்பட்டதன் மூலம், தமக்கு விரும்பிய வகையில் சுதந்திரமாக யுத்தத்தில் ஈடுபடக்கூடிய சந்தர்ப்பங்கள் உதயமாகியுள்ளன. மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான ஏதுக்கள் தொடர்பான எவ்வித அழுத்தங்களுமின்றி மோதல்களில் ஈடுபட வாய்ப்பு கிட்டியுள்ளது. எதிர்வரும் மாதங்களில், எவ்வித தங்குதடையுமின்றி உக்கிர மோதல்கள் இடம்பெறும் என்பதனையே இந்த நிலைமைகள் எமக்கு வெளிப்படுத்தி நிற்கின்றன. 
 
 

 

February 19, 2008

யாழ்ப்பாணத்திலிருந்து பாராளுமன்றம் செல்லும் முதலாவது முஸ்லிம் எம்.பி.ஆர்.எம்.இமாம்

டீ.பீ.எஸ்.ஜெயராஜ்

யாழ்ப்பாண நகரின் மூர் வீதியைச் சேர்ந்த 61 வயது நிரம்பிய சட்டத்தரணி ரசீன் எம். இமாம், யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து முதன்முதலாக வருகின்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினராவார். எம்.கனகேந்திரன் அல்லது ஈழவேந்தன் என்பவரின் இடத்திற்கு தேசிய பட்டியல் உறுப்பினராக ஆர்.எம்.இமாம் என எல்லோராலும் அறியப்பட்ட இமாம் தெரிவாகியுள்ளார். கடந்த தேர்தலின் போது த.தே.கூ. க்கு இரண்டு தேசிய பட்டியல் ஆசனங்கள் உரித்தாயின. மட்டக்களப்பிலிருந்து ஜோசப் பரராஜசிங்கமும் யாழ்ப்பாணத்திலிருந்து எம்.கே.ஈழவேந்தனும் நியமிக்கப்பட்டனர்.

மூன்று மாதங்களுக்கு மேலாக விடுமுறையின்றி பாராளுமன்றத்திற்கு சமுகம் தராதிருந்ததன் காரணமாக ஈழவேந்தன் தனது பாராளுமன்ற ஆசனத்தை இழந்தார்.

சிறந்த பொது நல்லுறவு செயல்பாடு

ஆர்.எம்.இமாம் 2004 ஆம் ஆண்டில் த.தே.கூ. தேசிய பட்டியலில் இருந்தவர். அவர் தன் இளமைப் பருவத்திலிருந்தே நேர்மையான சமஷ்டி வாதியாகவிருந்து பின் த.ஐ.வி.மு. வின் அங்கத்தவராய் இருந்தவர். விடுதலைப் புலிகளினால் அநீதி இழைக்கப்பட்டு ஓரம் கட்டப்பட்ட வடக்கு முஸ்லிம்களுக்கு யாழ்ப்பாண முஸ்லிம் ஒருவர் பா.உ. ஆக தெரிவு செய்யப்பட்டது நிச்சயமாக ஒரு நல்ல பொது நல்லுறவு செயல்பாடாகும்.

நான் இமாமை முதன் முதலாக 1981 இல் சந்தித்தேன். அப்போது அவர் த.ஐ.வி.மு. பட்டியலில் யாழ்ப்பாண மாநகர சபை அங்கத்தவராக இருந்தார். யாழ்ப்பாண மாநகர சபை பகுதி குடியிருப்பாளர்களான முஸ்லிம்கள் 'சோனகத்தெரு' அல்லது மூர் வீதி மற்றும் பொம்மைவெளியில் செறிவாக வாழ்பவர்கள். இமாம் மூர் வீதியைச் சேர்ந்தவர். அவருடைய தந்தை அப்பகுதியில் விதானையாக இருந்து இளமையிலேயே காலமானார். இமாம் தமிழ் சமூகத்தோடு மிக நெருக்கமானவராக இருந்ததோடு, அவர்களுடன் நெருக்கமான நட்புறவை பேணி வருபவர்.

யாழ்ப்பாண நகர முஸ்லிம்கள் எண்ணிக்கையில் குறைவானவர்களாக காணப்பட்ட பொழுதிலும் பொது மக்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்னால் அங்கே மிக முக்கிய செல்வாக்கைச் செலுத்தக் கூடியவர்களாக இருந்தார்கள். அங்கிருந்த முஸ்லிம்கள் நெடுங்காலமாக யாழ்ப்பாண மாவட்ட தேர்தல், மாநகர சபை தேர்தல்களில் ஆட்சியாளர்களை தீர்மானிப்பவர்களாகவிருந்தனர்.

அல்பிரட் துரையப்பா முஸ்லிம்களின் ஏகமனதான ஆதரவைப் பெற்றே அரசியல் வெற்றியை தனதாக்கிக் கொண்டார். ஒரு முறை யாழ்ப்பாண மாநகரபை உறுப்பினரான சுல்தான் மாநகர சபை முதல்வராக இருந்தார். இன்னொரு முறை மாநகர சபை உறுப்பினரான பஸீர் காதர் போன்றோர் உதவி மாநகர சபை முதல்வராக இருந்தனர்.

பொது வாழ்க்கையில் அதி முக்கிய பங்கு வகித்த குறிப்பிடத்தக்க யாழ்ப்பாண முஸ்லிம்கள் பலர் இருந்திருக்கிறார்கள். ஷ்ரீலங்காவில் முதல் முஸ்லிம் சிவில் சேவையாளரான ஏ.எம்.ஏ. அஸீஸ் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பிறகு அவர் ஸாஹிரா கல்லூரியின் அதிபரானார். நீதிபதியான அப்துல் காதர் ஆகியோரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களே. அவ்வாறே கல்வி இலாகா அத்தியட்சர் மன்சூருமாவார். இப்போது இமாம் யாழ்ப்பாணத்து முதல் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினராகியுள்ளார்.

இமாம் 1977 இல் யாழ்ப்பாண த.ஐ.வி.மு. வேட்பாளரான வெற்றிவேலு யோகேஸ்வரனை ஆதரித்து முக்கிய பங்காற்றினார். 1979 இல் இமாம் த.ஐ.வி.மு. வில் போட்டியிட்டு மாநகர சபை உறுப்பினராக தெரிவானார். அப்போது அங்கே மூன்று முஸ்லிம் மாநகர சபை உறுப்பினர்கள் இருந்தனர். இ.ராஜா விஸ்வநாதன் மாநகர சபை முதல்வராகவிருந்தார்.

அப்போது அங்கு நற்பண்பாளர்களின் ஒப்பந்தமொன்று இருந்தது. அதன்படி மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் இரண்டாண்டுகளின் பின் பட்டியலிலுள்ள ஏனைய உறுப்பினர்கள் மாநகர சபை உறுப்பினர்களாவதற்காக இடமளித்து பதவியை இராஜிநாமா செய்ய வேண்டும் என்பதாகும். சிலர் பதவியை இராஜிநாமா செய்ய மறுத்த போதிலும், இமாம் ஒருவர் தான் அவரின் உத்தரவாதத்தை மதித்து உடனடியாக பதவியை இராஜிநாமா செய்தவராவார். அப்போதைய த.ஐ.வி.மு. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் இமாமினால் ஈர்க்கப்பட்டவராயிருந்தார்.

யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு இடையூறுகள் விளைவிக்கப்பட்ட பொழுதிலும் அங்கிருந்த பலர் தமிழர்களோடு நட்புறவையும் நல்லுணர்வுகளையும் தொடர்ந்தும் பேணி வந்தனர். அவ்வாறான யாழ்ப்பாண முஸ்லிம்களில் இமாமும் ஒருவர். அவர் தனது த.ஐ.வி.மு. உடனான அங்கத்துவத்தை தொடர்ந்தார். 1994 இல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ஒதுங்கிக் கொள்ளுமாறு சக யாழ்ப்பாண முஸ்லிம்களை இணங்கச் செய்வதில் முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவராவார்.

யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்த பெருந்தொகையான தமிழர்கள் வாக்களிக்க முடியாமல் போனமையால் புத்தளத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களும் மாபெரும் ஒருமைப்பாட்டின் அடையாளமாக பெருமளவில் தேர்தலை பகிஷ்கரித்தனர்.

த.ஐ.வி.மு. இனர் த.தே.கூ. யோடு ஒன்றிணைந்திருந்ததால் 2004 ஆம் ஆண்டு தேர்தலில் இமாம் கட்சிக்காக போட்டியிட்டார். அவர் தேசிய பட்டியலில் இடம் பெற்றிருந்தார். ஈழவேந்தனின் செல்வாக்கு சரிந்தபொழுது இமாம் அவரின் இடத்திற்கு நிரப்பப்படலாம் என்பது தெளிவாகியது.

கருத்து முரண்பாடுகள்

இமாம் பாராளுமன்ற உறுப்பினராகும் சாத்தியப்பாடு முன் வைக்கப்பட்ட பொழுது பெரும் வாக்குவாதங்கள் எழுந்தன. இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் மத்தியில் சீற்றமும் எதிர்ப்பும் பலமான கருத்து முரண்பாடுகளும் எதிரொலித்தன. த.தே.கூ. யினர் தற்போது விடுதலைப் புலிகளின் ஏவலாளர்களாயிருப்பது இவற்றிற்கான காரணங்களை விளக்கி நிற்கின்றது.

விடுதலைப் புலிகளோடு உறவு வைத்துக்கொள்ளும் எந்தவொரு கட்சியினரோடும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் எந்த விதமான தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என சிலர் கருதினர். ஏனையோர் விடுதலைப் புலிகளின் நல்லெண்ண ஏற்பாடுகள் முதலில் சரியாக அளவீடு செய்யப்பட வேண்டும் எனக் கருதினர்.

இமாம் தானே கல்வியியலாளர்கள், சமயப் பிரமுகர்கள் உட்பட முக்கிய யாழ்ப்பாண முஸ்லிம்கள் முதலானவர்களோடு கலந்து ஆலோசனை நடத்தினார். அவர்களில் பலர் யாழ்ப்பாண முஸ்லிம்களின் நன்மை கருதியும் தீர்வுக்கான முன்னெடுப்புகளில் உதவுவதற்காகவும் இமாம் அந்தப் பதவியை ஏற்க வேண்டுமென கருதினர். இமாமும் ஜனவரி 20 ஆம் திகதி வன்னிக்குச் சென்று விடுதலைப் புலிகளின் தலைவர்களைச் சந்தித்தார். இது தமிழ் - முஸ்லிம் இணக்கத்திற்கான நல்லெண்ண முன்னெடுப்பு எனவும் அது ஒரு குறுக்கு வழியான சூழ்ச்சித் திட்டமில்லை எனவும் அவர் தெரிந்து கொண்டார். அதன்பின் அவர் கொழும்பு திரும்பி வந்து வேண்டுகோளை ஏற்றுக் கொண்டார்.

சத்தியப் பிரமாணம்

இமாம் சத்தியப் பிரமாணம் எடுக்கும்பொழுது அதைக் காண்பதற்கு புத்தளத்திலிருந்து 30 - 35 யாழ்ப்பாண முஸ்லிம்கள் வருகை தந்திருந்தனர். மற்றும் கொழும்பிலிருந்து 50 - 60 எண்ணிக்கையானோர் வருகை தந்திருந்தனர்.

இமாம் சுருக்கமான தனது கன்னி உரையை பாராளுமன்றத்தில் மரபு முறையாக நிகழ்த்தினார். அவர் தனது உரையில், தான் அந்தப் பதவியை ஏற்பது தனது மக்கள் கூட்டத்திற்கு உதவவும் அவர்கள் நிலைமையை உயர்த்தவுமே என குறிப்பிட்டபோது அது மனதை நெகிழ வைத்தது.

அவருடைய இலக்கு எல்லா மக்களிடையேயும் நல்லிணக்கத்தை வளர்ப்பதும் தமது இடம் பெயர்ந்திருக்கும் சகோதரர்களின் தேவைகளுக்கு ஆவன செய்வதுமாகும். அவருடைய நீண்ட கால திட்டமானது யாழ்ப்பாண முஸ்லிம்கள் தங்கள் பாரம்பரிய இருப்பிடங்களுக்கு திரும்பிவர உதவுவதாகும்.

காலமொன்றிருந்தது, அநேகமான முஸ்லிம்கள், காரியப்பர், முஸ்தபா, அஹமட், மொஹமட் அலி போன்றவர்கள் கிழக்குத் தேர்தல் தொகுதியிலே சமஷ்டி கட்சியின் சீட்டிலே போட்டியிட்டு வென்றார்கள்.

மற்றவர்கள் அதாவது மசூர் மௌலானா, உதுமா லெவ்வை போன்றவர்கள் சமஷ்டி கட்சியின் சீட்டிலே போடியிட்டனர்.

அயூப் மற்றும் பஸீர் சேகுதாவுத் போன்றவர்கள் ஈரோஸ் அனுசரணையுடன் சுயேச்சை வேட்பாளர்களாக போட்டியிட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்களானார்கள்.

இமாமின் நியமனம் தமிழ், முஸ்லிம்களின் உறவில் புதிய வளர்ச்சிப் படிகளின் ஆரம்பமாக அமையலாம். முஸ்லிம் காங்கிரஸின் ஹஸன் அலி எம்.பி. இமாமின் நியமனத்தை வரவேற்றதோடு, அதை மீள் இணக்கப்பாட்டின் அடையாளமாக கருதுகிறார்.

வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளால் முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டது தமிழ் - முஸ்லிம் உறவுகளிலே மிகவும் துன்பகரமான அத்தியாயமாகும். சிங்களவர்களின் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான அடக்கு முறையைப் பற்றி முறையிடும் தமிழர்கள், அவர்கள் மத்தியில் வாழ்ந்த அதி சிறுபான்மையான முஸ்லிம்களுக்கு அவர்களால் இழைக்கப்பட்டவைகளுக்காக வெட்கி தலைகுனிய வேண்டும்.

சிங்கள ஆட்சியாளர்கள் மணலாறு/வெலிஓயா பகுதிகளில் இன ஒழிப்பு செய்கிறார்கள் என முறையிடும் தமிழர்கள், வடக்கிலிருந்து முழுமையாக முஸ்லிம்களை வெளியேற்றியதும் இன ஒழிப்பிற்கு சமமானது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

விடுதலை என்ற பெயரால் சிறு தொகையினரான முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் மனிதத் தன்மையற்ற செயல்களுக்கு தமிழர்கள் முஸ்லிம்களிடம் கட்டாயம் மன்னிப்புக் கோர வேண்டும்.

நட்புக் கரங்கள்

இவ்வளவு நடந்த பிறகும் வடக்கு, முஸ்லிம்கள் நட்புறவையும் நல்லிணக்கத்தையும் வேண்டி நிற்பதானது அவர்களின்பால் நன்மதிப்பை மேலும் வலுப்படுத்துகிறது. அவர்கள் வடக்கு எங்களின் தாயகம் என்பதிலே தொடர்ந்தும் ஊன்றி நிற்கிறார்கள். தமிழர்கள் தமிழ்மொழி பேசுகின்ற அவர்களின் முஸ்லிம் சகோதரர்களுக்கு நட்புக் கரங்கள் நீட்ட வேண்டும்.

இவ்வாறான குறைபாடுகளை களைந்தெறிய இமாமை தேர்ந்தெடுத்திருப்பதானது ஒரு நல்ல சமிக்ஞையாகும். இது ஒரு முதல் படி மட்டுமே என்றாலும் அது மகிழ்ச்சிகரமான நீண்ட பயணத்தின் ஆரம்பமாகக் கொள்ளலாம்.

இமாம் பெரிய சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியவராகிறார். இடம்பெயர்ந்த யாழ்ப்பாண முஸ்லிம்களின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டிய கடமை அவர் முன் நிற்கிறது. தமிழர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்தவும் சிங்களவர்கள் மத்தியில் நம்பிக்கையை முன்னெடுக்க வேண்டிய கடமை அவர் முன் நிற்கிறது. அவர் முஸ்லிம்களை மீண்டும் அவர்களின் பாரம்பரிய இருப்பிடங்களை நோக்கி திரும்பிவர அவர்களுக்கு தைரியமூட்டும் கடமையும் அவர்களின் அகதி முகாம் வாழ்க்கை நிலைமையை சீர்படுத்தும் கடமையும் அவர் முன் நிற்கிறது.

இவ்வாறான சிக்கலான செயல்பாடுகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருப்பதால் ஆர்.எம்.இமாம் தனது கடமையில் பின்னிற்க மாட்டார் என நம்பலாம். [நன்றி: தினக்குரல்]

த நேஷன், 10.02.2008

 

February 17, 2008

சமுதாய நலன் மற்றும் ஒருமைப்பாட்டில் மிக உயர் நிலையை அடைதல்

கொழும்பு, சைவ மங்கையர் கழக அதிபர் அமரர் செல்வி நாஹம்மாள் காசிப்பிள்ளை ஞாபகார்த்த உரை நிகழ்வில், இளைப்பறிய நீதியரசர் உயர்திரு சி.வி. விக்னேஸ்வரன் நிகழ்த்திய அறிமுக சொற்பொழிவின் தமிழாக்கம்:

இன்று எங்கள் பாத்திரங்கள் மாறிவிட்டன. இரண்டு வருடங்களுக்கு முன்னர் முதலாவது ஞாபகார்த்தக் கூட்டத்தை தலைமைவகித்த திருமதி துரைசாமி அவர்கள் இந்த வருட ஞாபகார்த்த உரையை வழங்க பெருந்தன்மையுடன் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த உரையானது கடந்த இரு வருடங்களினூடக நெறிவடைந்துள்ளது. இந்த உரையின் முதலாவது காசிப்பிள்ளை ஞாபகார்த்த உரையை ஆற்றும் தருணம்-செல்வி காசிப்பிள்ளையின் மரணத்தின் போது அவருடன் நாங்கள் மிகவும் நெருக்கமாக இருந்த காரணத்தினால், அவரது வாழ்க்கை, அவரது சாதனைகள் அவ்வேளையில் எங்கள் சிந்தைகளை நிறைத்திருந்தது. சென்ற ஆண்டு செல்வி மதிவதனி பொன்னம்பலம், இரத்தினக் கைத்தொழிலில் அவரது அனுபவங்களைப் பற்றியும் செல்வி காசிப்பிள்ளை அதிபராக இருந்த போது அவரது பாடசாலை அனுபவங்களைப் பற்றியும் பேசினார். இந்த வருடம் 'பெண்ணும் மாறும் உலகமும் - இந்து மதத்தின் பதிலுரை' என்ற கருவை மையமாகக் கொண்டுள்ளது.

[அமரர் நாஹம்மாள் காசிப்பிள்ளை]

சமுதாயத்தில் ஓர் இந்துப் பெண்ணின் பாத்திரம் என்பது செல்வி காசிப்பிள்ளைக்கு மிகவும் பிடித்த விடயமாகும். அவர் அந்தக் காலத்தின் இந்து மத்தின் விழுமியங்களிலும் இந்தக் காலத்தின் சமுதாய நெறிகளிலும் சிரத்தை கொண்டிருந்ததுடன் இரண்டு நியமங்களினதும் ஓர் சந்தோசமான கல்வியை உருவாக்குவதில் மிகவும் கடினமாக உழைத்தார். இரண்டின் தோற்றப்பாடுகளிலும் இருக்கும் பேதங்களை அவர் நன்கு அறிந்திருந்தார். இந்துமத வாழ்க்கையில் ஆழமான சமய சிந்தனைகள் நடத்தைகள் என்பன, ஆண் அல்லது பெண்ணை தனித்தனியாக நோக்கவில்லை. ஆணும் பெண்ணும், குடும்பம், சமுதாயம், பொதுவில் மானிடத்தில் பரந்துபட்ட பாத்திரங்களை வகிக்க வேண்டியவர்களாக உள்ளனர். வாழ்க்கையின் நோக்கமானது சந்தோசமான பிள்ளைப் பராயத்தை (பிரம்மச்சாரியம்), மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கையை (கிரஹஸ்த), திருப்திகரமான துறவு வாழ்க்கையை (வானபிரஸ்த), மனம் நிறைந்த யோக வாழ்க்கையை (சந்நியாசம்) கொண்டிருத்தலே ஆகும். இந்த முறைமையில் ஒருவரது வாழ்க்கையை ஒருவர் ஒருவர் பூரணப்படுத்த ஆணும் பெண்ணும் பல பாத்திரங்களை வகிக்க வேண்டியிருந்தது. மனைவி பாதுகாக்கப்பட வேண்டியவளாகவும் வாஞ்சையுடன் நடாத்தப்பட வேண்டியவளாகவும் இருந்தாள். அவள் இல்லத்தைக் கொண்டு நடாத்தினாள். கணவனும் பிள்ளைகளும் வீட்டில் அவளைச் சுற்றித் திரளும் அதேவேளையில் மனைவியும் பிள்ளைகளும் வீட்டிலுள்ள ஆணை, குடும்பத்தின் மிக நெருக்கமான தலைவனாக பெருமிதத்துடன் நோக்கினர். வீட்டின் தலைவனுக்கு வீட்டின் தலைவி கொடுக்க எதிர்பார்க்கப்பட்ட மரியாதை கீழ்ப்படிவில் தங்கியிருந்தது. பொதுவில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான வயது வித்தியாசம் கூடுதலாக இருந்தது. மூத்தவர்களை மதிக்கும், கடமையில் சீரிய மதிப்பைக் கொண்ட ஓர் சமுதாயத்தின் இந்த மனப்பாங்கு கணவனின் விருப்புகள் மந்திரகோள் தேவைகளுக்கு மதிப்பளித்து இடங்கொடுக்க இளம் மனைவிக்கு இலகுவாக இருந்தது. காட்டில் துறவு அல்லதுவானபிரஸ்த வாழ்க்கையில், கணவன் கற்றலிலும் சிந்தனையிலும் நேரத்தை செலவிடும் போது, மனைவியானவள் அவரது தேவைகளையும் சௌகரியங்களையும் கவனிக்க வேண்டியவளாகின்றாள். கணவர் சிந்தனை மார்க்கம் அல்லது ஞானம் அல்லது சூட்சும அறிவு மார்க்கத்தைப் பின்பற்றும் போது, மனைவி கர்ம யோக மார்க்கத்தைப் பின்பற்றினாள். இவ்விரு சமய மார்க்கங்களும் ஒன்றைவிட ஒன்று தாழந்ததல்ல. கர்மயோகத்தைப் பின்பற்றிய சில பெண்கள் ஞானப் பரிணாமத்தின் உன்னத நிலையை அடைந்துள்ளார். திருவள்ளுவரின் மனைவி வாசுகியின் கதையை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

கொங்கனனார் என்னும் துறவி ஓர் சிறந்த சித்தாராக இருந்த போதும் அவர் கடுங் கோபக்காரனாக இருந்தார். ஒரு நாள் அவர் தியானத்திலிருந்த போது கொக்கு ஒன்று அவரின் மேலாகப் பறந்த போது அவரின் மேல் எச்சமிட்டது. கோபத்துடன் அந்தக் கொக்கை நோக்கிய போது அது எரிந்து சாம்பலாகியது. இந்த நிகழ்வின் பின்னர் இத்தகைய சக்தி வாய்ந்த சித்தர் பிச்சை கேட்டுத் திருவள்ளுவரின் வீட்டிற்குச் சென்றார். அதேநேரம் வாசுகி தனது கணவரின் தேவைக்கும் அவரது ப+ஜைக்கும் வேண்டிய நீரைக் கிணற்றிலிருந்து அள்ளிக் கொண்டிருந்தார். அவர் தனது கணவனுக்குச் செய்து கொண்டிருந்த கடமையை இந்தத் துறவிக்காக நிறுத்துவதாக இல்லை. அவர் துறவியை வீட்டினுள் அழைப்பதற்குச் சிறிது காலதாமதமாகிவிட்டது. கொங்கனனார் சினம் கொண்டு அவரை எரித்து விடுவது போன்று நோக்கினார். இந்த மாது சாந்தமாகவும் கம்பீரமாகவும் காணப்பட்டார். அவர் 'கொக்கென்று நினைத்தீரோ கொங்கனனாரே' என்று அவரை நோக்கி உரைத்தார். கணவனிற்கு சேவகம் செய்யும் இந்த பெண்ணிற்கு தனது ஆச்சிரமத்தில் தனிமையில் நடந்த நிகழ்ச்சி எவ்வாறு தெரியும் எனச் சித்தர் ஆச்சரியமடைந்தார். அவருக்கு வாசுகியின் முன்மை புரிந்தது, அவரை பதிவிதரை என்று கொண்டாடி தன் வழியே சென்றார். ஆச்சிரமத்தில் தனது கணவனிற்கு சேவை செய்த காரணத்தினாலேயே வாசுகி அத்தகைய சக்தியைப் பெற்றார்.

இது எவ்வாறு சாத்தியமாகியது? இற்றைக் காலத்தில் எம்மில் பலர், சத்தியசாய்பாபா போன்ற குருக்களை உண்மையான ஈடுபாட்டுடன் வழிபடும் போது அவர்களின் அருளைப் பெறுவதைப் போன்று அன்றைய காலத்தின் வாழ்க்கை வழி முறைகளில் தங்களது கணவன்மார்களை குரு ஸ்தானத்தில் வைத்து அவர்களிடம் அன்பும் நம்பிக்கையும் கொண்ட மனைவியர்களுக்கு அதிசயங்கள் பல நடைபெற்றன.

அருள் என்றால் என்ன என்பதனை நான் பலதடவை யோசித்திருக்கின்றேன். எனது முஸ்லீம், கிறிஸ்தவ, இந்து நண்பர்கள் பலர், தமது வாழ்வில் நடைபெற்ற அதிசயமான பல நிகழ்வுகளை முறையே அல்லா அல்லது யேசு அல்லது இந்து கடவுள்கள் அல்லது குருவிற்கு அர்ப்பணம் செய்வதை கண்டிருக்கின்றேன். பௌத்தராகிய காலம் சென்ற பலாங்கொட ஆணந்த மைத்திரி தேரர் சத்தியசாய்பாபாவின் அருளைப் பற்றி எடுத்தியம்பியுள்ளார். அருளாவது, அதிசய நிகழ்வுகளின் உச்ச நிலைக்கு இட்டுச் செல்லும், எமக்குப் புறம்பான அல்லது புறம்பான சக்தியினால் தூண்டப்பட்ட எம்மகத்தே நடைபெறும் செயன்முறைகளா? பல மதங்களை சார்ந்தோர் தமது கடவுள்கள் அல்லது குருவினைப் பற்றி இவ்வாறு பேசும் போது அதிசயங்கள் பலவற்றை நிகழ்த்தும் நம்பிக்கை எங்கள் அனைவரினுள்ளும் ஏதோவொரு மாற்றத்தை ஏற்படுத்துகின்றது போல் தோன்றுகின்றது.

நாம் இந்துக்களாகட்டும், கிறிஸ்தவர்களாகட்டும் அல்லமு முஸ்லிம்களாகட்டும் நாம் கொண்டுள்ள நம்பிக்கையே உண்மையில் அற்புதங்களை அனுபவிக்கச் செய்கின்றது. இராமகிருஷ்ண பரமஹம்சர் ஓர் கதை கூறுவார். ஓர் ஆற்றின் ஒரு பக்கத்தில் ஓர் குரு இருந்தார். அவர் சிறிது தற்பெருமை கொண்டவர். தன்னைத் தானே உயர்வாகக் கருதுபவர். மற்றக்கரையில் வசிக்கும் ஓர் இளம் பெண் ஆற்றைக் கடந்து வந்து குருவிற்குப் பால் கொண்டு வருவாள். ஒரு நாள் ஆறு பெருக்கெடுத்தது. பெண் காலதாமதமாக வந்தாள். குருவிற்கு கோபம் வந்தது. இறுதியாக அவள் வந்தடைந்த போது 'நீ என்னிடம் நம்பிக்கை வை;ததிருந்தால் ஆறு ஒரு வித ஆபத்துமின்றி அதனைக் கடந்து செல்ல வழிவிட்டிருக்கும். நம்பிக்கை இல்லாத காரணத்தினாலேயே இந்த காலதாமதம்' என்று அந்தப் பெண்ணை வைதார். பெண் அதிசயப்பட்டாள். குருவிடம் முழு நம்பிக்கை வைக்கத் தீர்மானம் எடுத்தாள். அடுத்த முறை பெரும் மழைகாரணமாக ஆற்றுநீர் சீற்றத்துடன் பாய்ந்தது. அவள் குருவை நினைத்து தியானித்தாள், நம்பிக்கையுடன் ஆற்றுக்குக் குறுக்காக நடந்தாள். ஆறு வழிவிட்டது.

குருவிற்கு அந்த பெண்ணைக் கண்டதும் ஆச்சரியமாகி விட்டது. 'இந்த சீரற்ற காலநிலையில் எவ்வாறு வந்தாய்' என்று குரு வினவினார். 'உங்களை வணங்கினேன்' உங்களில் நம்பிக்கை கொண்டேன். நான் ஆற்றைக் கடந்தேன் இதோ உங்கள் முன் நிற்கின்றேன்' என்றாள். குருவிற்கு அளவுகடந்த மகிழ்ச்சி. அவர் ஆறு;றங்கரைக்குச் சென்று பால்காரிக்கு வழிவிட்டதற்கு ஆற்றிற்க நன்றி செலுத்தினார். அந்தப் பெண்ணைப் போன்று கடப்பதற்கு ஆற்றில் இறங்கினார். ஆறு அவரை அடித்துச் சென்றது. அங்கு குரு முக்கியத்துவமல்ல. ஆனால் அந்தப் பெண் கொண்டிருந்த நம்பிக்கையே முக்கியமானது. இக்கதை நம்பிக்கை எம்முள் கொண்டுள்ள சக்தியை விளக்குகின்றது. அந்தப் பெண்ணிற்கு புறம்பாயிருந்த குரு அல்ல முக்கியமானவர். அந்தப் பெண்ணின் மனதினுள் நடைபெற்ற மாற்றமே அங்கு முக்கியமானது. அதனால் கணவர் முக்கியமல்ல. மனைவி கொண்டுள்ள நம்பிக்கையே முக்கியமானது.

பண்டைக் காலத்தின் கற்புக்கரசிகள் தங்கள் கணவன்மார்களில் எத்தகைய குறைபாடுகள் இருந்த போதிலும் அவர்களின் மேல் கொண்டுள்ள நம்பிக்கை அவர்களுக்குத் தங்களை அர்ப்பணிக்கும் மாட்சியே, அப்பெண்களை புறக்கணிக்க முடியாத, பெரும் சக்தி வாய்ந்தவர்களாக்கியது. காலம் மாறிவிட்டது. மனிதனுள் திருப்பதியடையும் தன்மை தொலைந்துவிட்டது. சமூகத்தில் ஒற்றுமை, குடும்பத்தின் நலன் என்பவற்றின் பரந்துபட்ட தோற்றப்பாடு அவரவரின் விருப்பத்திற்கேற்றவாறு எடுத்துக் கொள்ளப்படுகின்றது. கடமையின் சிறப்பு பற்றி ஒருவருக்கும் ஞாபகமில்லை. இந்தக் குடும்பங்கள் சமுதாயத்தின் வெளிப்புற சமுதாய அந்தஸ்துகளே முக்கியமாகிவிட்டது. ஒருவரது வாழ்க்கையை ஒருவர் பூரணப்படுத்தும் ஆண், பெண் பேதம் இப்பொழுது ஆண், பெண் சமத்துவத்தில் வந்து நிற்கின்றது. மேற்கத்தேய சமுதாயங்களில் பெண்கள் எழுப்பும் எதிர்ப்புக்களும் புரட்சிகளும் குடும்ப ஒன்றுகூடல்களில் பெண்களைத் துணையாக கருதாது, பாவித்து பின்னர் தூக்கி எறியும் தனிப்பட்ட சொத்தாகக் கருதும் மேற்கத்திய நாடுகளில் குறிப்பிட்ட சமூகத் தேவைப்பாடாக அமைகின்றது.

வாழ்வு பற்றி மேற்கத்திய, இந்திய கோட்பாடுகள் அடிப்படையில் வித்தியாசமானவை. பண்டைய கலாச்சாரத்தில் ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்தில் தொழிற்பட்டு அலகாக கருதப்பட்டான். ஆனால் இன்று கடந்த ஐந்து நூற்றாண்டுகளாக நிதர்சனமானவற்றுடன் ஈடுபடும் மேற்கத்திய மனங்கள் வேறுவிதமாக சிந்தித்தன. கேள்வி கேட்பதும் பதிலளிப்பதுமே அந்த விஞ்ஞான மூளைகளின் சின்னங்களாகும். பிரம்ம ஞானத்தின் முன்னணி பேச்சாளரும் அழகிய ஆன்மீக விழுமியங்களையுமுடைய பெரும் பெண்மணியுமான அனி பெஸன்ட் ஒருமுறை 'நான் 'என்ற அகங்காரமேமனதில் பிரதான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இந்த கீழ் நிலையிலுள்ள மனமே எல்லா இடமும் பேதங்களைக் காண்கின்றது. இந்த சிந்தனை அதிகரிக்க, 'நான் நானே' என்று தனிப்பட்ட பிரித்துப் பார்க்கும் உணர்வு அதிகரித்துப் 'நான் நானே', 'நீ நீயே', 'இது என்னுடையது', 'அது உன்னுடையது' - என்ற சுய சிந்தனை கிளைவிட்டு வளர்ந்தது. இந்த மனநிலை மேற்கத்திய ஆர்வமான சிந்தiனாயளர்களை 'நான்', 'என்னுடைய' என்ற உணர்வே மேன்மையானது என்று நினைக்க வைத்தது. தனிமையின் கொள்i, சுதந்திர மனிதன், தன்நம்பிக்கையுடைய தனிப்பட்ட மனிதன், தனது நன்மைக்காக அனைத்து சக்திகளையும் பிரயோகிக்கும் உரிமையுடைய தன்னந்தனியனாக நிற்கும் சுதந்திரமான ஒற்றை மனிதனாகும்.

ஜூன் ஜேகஸ் ரொசியு அவரது உடன்படிக்கையில் இந்த மனிதக் கொள்கையை உரிமைகளினால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் சுதந்திர மனிதன் என உருவகப்படுத்தியுள்ளார். மனிதன் தளைகளற்றுப் பிறந்தவன். கீழ்ப்படிதலுக்கு அவனுக்கும் எந்தத் தேவைப்பாடும் இல்லை. ஒருவனின் விருப்பின்றி எவரும் அவனை கட்டளை இட முடியாது. இந்தக் கருத்துக்களையே ரொசியு தனது சமுதாய உடன்படிக்கைக் கொள்கையில் முன்வைத்துள்ளார். அதனால், அவனது பெரும்பாண்மையான உரிமைகளுக்காக தனது இயற்கையான ஒரு சில உரிமைகளை சமூகத்தில் பாதுகாப்பிற்காக விட்டுக் கொடுத்துள்ளான்.

இந்த ஆண், பெண் தனித்துவம் இருபாலருக்குமிடையிலான சமத்துவம். பெண் விடுதலைக் கொள்கைகள் என்பன முன்நிலை வகிக்கின்றன. சந்தேகமே இல்லை! இஸ்லாமிய மற்றும் மேற்கத்திய கலாச்சாரங்கள் இந்து கலாச்சாரத்துடன் கலந்த போதே உள்ளுர் வாழ்க்கை முறையி;ல் வெளியூர் சமூக விழிப்புத் தோற்றத்தை உருவாக்கியது. அர்த்தநாரீஸ்வரர் என்ற கருத்தினால் சமத்துவமான இருவரில் பூரணப்படுத்தும் அலகாக உருவகப்படுத்தப்பட்ட பெண், அடிமை மற்றும் காமப் பொருள் என்ற நிலைக்குத் தாழ்த்தப்பட்டாள்.

உண்மையில் பண்டைக் காலத்தில் இந்திய சமுதாயத்தில் பெண் ஓர் உன்னத நிலையைப் பெற்றிருந்தாள். அவள் பாதுகாக்கப்பட்டாள். அன்பு செலுத்தப்பட்டாள், மதிக்கப்பட்டாள் காரணம் அவள் அடுத்த பரம்பரையைப் பெற்றெடுத்தாள். என்னை பிழையாக கருதாவிட்டால், என்னை ஒரு விடயத்தைக் கூற அனுமதியுங்கள். யாழ்ப்பாணக் குடாநாட்டில் சில வருடங்களுக்கு முன்னர், தற்போது அங்கு வதியும் தெற்கின் ஆமியினர் மீள கைப்பற்று முன்னர் யாழ்நகர் வீதிகளில் சூரிய அஸ்தமனத்தின் பின்னரும் தன் விலை உயர்ந்த நகைகளை அணிந்த வண்ணம் ஓர் இளம் பெண் தன்னந்தனியே ஒருவித துன்புறுத்தலோ அல்லது துஷ்பிரயோகத்திற்கோ உட்படாது நடந்து செல்லாம் என்று பார்தட்டிக் கொண்டனர். எமது முன்னோர்களின் விழுமியங்களையும் கோட்பாடுகளையும் தமிழ் இளைஞர்கள் விளங்கிக் கொண்டுள்ளனர் என்பது தெட்டத் தெளிவாகின்றது. பெண்களை மதிக்கும் ஒரு சமுதாயம், சமுதாய நலன் மற்றும் ஒருமைப்பாட்டில் மிக உயர்;ந்த நிலையை அடையும் என்பது திண்ணம். எமது இந்துமத பாரம்பரியம் பெண்களின் முக்கியத்துவத்தையும் அவர்களது நலன்களைப் பற்றியும் வலியுறுத்துகின்றது.

திருமதி சிவானந்தி துரைசாமி அவர்களை உங்களிற்கு அறிமுகப்படுத்துவது எனது இனிய கடமையாகும். அவரைப் பற்றி என்னை விட நீங்கள் கூடுதலாக அறிந்திருப்பீர்கள். அவரது சமூக, கல்விசார் மற்றும் கலாசார நடவடிக்கைகள் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். அதனால் அவரைப் பற்றி நீங்கள் எல்லோரும் அறிந்திராத விடயங்கள் பற்றிக் கூறுகின்றேன்.

இந்த சமகாலத்து தெளிவான இலங்கைத் தமிழ் பெண்மணி கலை, நுண்கலை இரண்டிலும் பூரணமானவர். அவர் லண்டன் பல்கலைக்கழகத்தின் கலைப்பட்டதாரி; அவர் பியானோ, வீணை இரண்டையும் மிகவும் அழகாக வாசிப்பார். பீஜிஸ், மணிலா, கொழும்பு ஆகிய இடங்களில் தனது சித்திரக் கண்காட்சிகள் பலவற்றை நடாத்தியுள்ளார். இராமகிருஷ்ண மிஷன் கலாச்சார ஆதரவுடன் கல்கத்தா அரும்பொருட் காட்சியகத்தின் பணிப்பாளரின் வழிநடத்திலின் கீழ் இந்துக் கலையில் ஆராய்ச்சிக் கல்வியை மேற்கொண்டு சிற்பக்கலை மற்றும் கட்டடக்கலைகளைகற்றத் தேர்ந்துள்ளார்.

அவர் “Remembering Hindu Traditions”, “The creative touches of the chisel- Hindu sculpture and architecture” மற்றும் “The Foot falls on Time- A story of our saints and sages” அடங்கலான பல பத்தகங்களின் ஆசிரியராவார். அவர் தற்போது பல கல்வி, சமய, கலாச்சார, சமூக நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்திவரும் சைவ மங்கையர் கழகத்தின் தலைவராகவும், இலங்கை இந்து மன்றத்தின் தலைவராகவும் உள்ளார்.

அவரது எண்ணிலடங்கா சமூக, இலக்கிய, கல்விசார் சேவைகளுக்கு 'சொன்டா' சர்வதேச விருது, கொழும்பு கம்பன் கழக விருது, நீதி அமைச்சின் சமாதான விருதி போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். பல பாலமாக சமாதான முன்னெடுப்புக்களில் ஈடுபட்டிருந்தவரும் தூதரகராக தொழில் புரிந்த அவரது மறைந்த கணவருடன் பல இடங்களுக்கு அவர் சென்று வந்துள்ளார். அவர் கொழும்பிலும் வெளிநாடுகளிலும், வேறு பொதுக் கூட்டங்களில் இந்து மதத்தின் நோக்கங்கள் பற்றி பல ஆராய்ச்சி கட்டுரைகளை முன்வைத்துள்ளார். திருமதி சிவானந்தி துரைச்சாமியாரின் தம்பியும் நானும் றோயல் கல்லூரியில் ஒரே வகுப்பில் கல்வி கற்ற காரணத்தினால் என்னைவிட வயதில் மூத்தவர் என்று கூறும், ஆனால் தோற்றத்தில் என்னைவிட குறைந்தது பதினைந்து வருடங்களாவது இளமையாகத் தோற்றமளிக்கும் அவர், நிச்சயமாக மாறிவரும் உலகத்தில் பெண்ணிற்கு இந்து மதம் அளிக்கும் பதிலுரை பற்றி விரிவாக கூறுவார்.

'மாறும் உலகில் பெண் - இந்து மதத்தின் பதில் உரை' உன்ற தலைப்பில் இந்த வருட நாமகல் காசிப்பிள்ளை ஞாபகார்த்த உரையை வழங்க அவரை அன்புடன் அழைக்கின்றேன்.

கடந்த காலங்களின் தனித்துவமான இந்துப் பெண்மணியான சொல்வி நாகம்மாள் காசிப்பிள்ளையை நினைவுகூறும் இந்த விழாவில் நானும் பங்குகொள்ள சந்தர்ப்பம் வழங்கிய காசிப்பிள்ளை குடும்பத்தாருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

[வெள்ளவத்தை, சைவ மங்கையர் கழக அதிபர் அமரர் செல்வி நாஹம்மாள் காசிப்பிள்ளை ஞாபகார்த்த மூன்றாவது உரை நிகழ்வு, ஜனவரி 16, 2008 அன்று கழகத்தின் சிவானந்த நிலைய மண்டபத்தில் இடம் பெற்றது]

திருக்கோணேஸ்வரம் காணோளி

February 11, 2008

இயல், இசை, நாடகம் இம் மூன்றையும் இணைத்துச் செய்யப்படுவதுதான் வில்லிசை

வில்லிசைக் கலைஞர் சோதி சின்னமணி கணபதிப்பிள்ளையுடனான ஓர் சந்திப்பு:

1954ஆம் ஆண்டு, ஈழம் வந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுடன் மூன்று மாதங்கள் தங்கியிருந்து அவரிடம் சில நகைச்சுவை துணுக்களை கற்றறியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவரிடம் பெற்ற அனுபவங்களினாலும் அவரது ஆசீர்வாதப் பலத்தினாலுமே நான் திருப்பூங்குடி வி.வி.கே.ஆறுமுகம் அவர்களின் வில்லுப்பாட்டுக் குழுவின் நகைச்சுவைப் பகுதியை ஓரளவு திறமையாகச் செய்து வந்தேன். ஆசிரியர் திருப்பூங்குடி ஆறுமுகம் அவர்கள் எட்டியாந்தோட்டைக்கு மாற்றலாகிச் சென்றார். இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இக்கலையை மேலும் வளர்க்க யாரும் முன்வராத ஒரு நிலையும் யாழ் பகுதியில் வில்லிசையில் ஒரு தேக்க நிலையும் உண்டாகியது. இந்த நிலையில், ஆசிரியர் சோமசுந்தரம் அவர்கள் என்னிடம் வந்து "தம்பி உன்னிடம் சகல தகுதிகளும் இருக்கின்றன. நீ இக்கலையைத் தொடங்கு நான் உனக்கருகிலேயே இருக்கிறேன்" என்று கூறி ஊக்கப்படுத்தினார். 1968ஆம் ஆண்டு தைப்பூசத்தன்று செல்வச்சந்நிதியிலே எமது "கலைவாணர் வில்லிசைக் குழுவின் அரங்கேற்றம் நடைபெற்றது" என்று தனது அனுபவ பகிர்வுகளை எம்மோடு பகிர்ந்து கொள்ளும் வில்லிசைக் கலைஞரான சோதி சின்னமணி கணபதிப்பிள்ளை. மேலும் எமது கேள்விகள் பலவற்றுக்கு விளக்கமளித்தார்.

நீங்கள் ஒரு நாடக நடிகர். மேடைகள் பல கண்டவர். அத்துறையில் உங்கள் சிறப்பான நடிப்பால் மதிப்புப் பெற்றவர்கள். நாடகத்துறையில் பெருமை பெற்ற நீங்கள் வில்லிசையின் பால் நாட்டம் கொண்டமைக்கான காரணம் எதுவாக இருக்கும்? 

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மதுரம் குழுவினர் இலங்கையில் வில்லிசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக வந்திருந்தனர். பம்பலப்பிட்டி கிறிண்லன்ட்ஸ் ஹோட்டலில் அவர்கள் தங்கியிருந்த வேளை சினிமாஸ் லிமிட்டெட் அதிபர் குணரத்தினம் அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர்களின் அறிமுகமும் நட்பும் கிடைத்தது. நாடகம்@ வில்லிசை தொடர்பான நுணுக்கங்களைக் கேட்டு அறிந்து கொண்டேன். நான் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் சந்திப்பிலேயே என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களால் "கேசரிவர்மன்" (மனோகராவில் வரும் கேசரிவர்மன் மாதிரி) என்று அழைக்கப்பட்டேன். அவரின் காலில் தொட்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டேன். "என்னுடன் வாடா" என்று கலைவாணர் அழைத்தார். என் தாயார் என்னைப் போகவிடாதபடியால் அவருடன் தமிழ் நாட்டுக்குப் போக முடியவில்லை. இருந்தும் அவரிடமிருந்து வில்லுப்பாட்டு மெட்டுக்களையும் உத்திகளையும் கேட்டுத் தெரிந்து கொண்டேன். ஆகவே, எனது கலை ஆவர்வத்திற்கு கலைவாணர் வழிகாட்டியாக இருந்திருக்கின்றார். யாழ்ப்பாணத்தில் திருப்பூங்குடி ஆறுமுகம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட வில்லிசைக் குழுவில் தாவடி வடிவேலு சேர்ந்;திருந்தார். வடிவேலு அக்குழுவில் இருந்து விலகிய பின் நான் அவர் குழவில் இணைந்து கொண்டு செயற்பட்டேன். 1968ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 02ஆம் திகதி கலைவாணர் வில்லிசைக் குழுவில் ஆர்மோனிய வித்துவான் ஆர்.சோமசுந்தரம், மிருதங்க வித்துவான் என்.தங்களம், எஸ்.ரி.அரச, இரா.பற்குணன், ரி.மகாலிங்கம் ஆகியோர் இருந்தனர்.

தங்கள் குடும்பம் கலைக்குடும்பம் என்று சொல்லகின்றார்களே அதன் உண்மையான தார்ப்பரியத்தைச் சற்று விளக்குவீர்களா?

வடமராட்சிப் பகுதியிலே கலைக்கிராமம் என்று போற்றப்படும் மாதனை என்னும் கிராமத்தில் 30-03-1936இல் பிறந்தேன். தந்தையார் நாகலிங்கம். தாயார் இராசம்மா. நான் இவர்களுக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தேன். எனது தந்தையார் முத்தமிழ் வித்தகர். புராண இதிகாசங்களில் புலமை பெற்றவராக இருந்தார். தாயார் இசை ஆர்வமும் கலை ஆர்வமும் மிக்கவர். ராக பாவத்துடன் பாட வல்லவர். எனது அண்ணர் க.நா.நவரத்தினம் அவர்களும் சிறந்த நடன, நாடகக் கலைஞர். இலங்கை வானொலி நாடகங்கள் பலவற்றில் நடித்துப் பேர் எடுத்தவர். அன்றைய கல்வி அமைச்சர் பி.பி.ஜி.கலுகல்ல அவர்களினால் "நடன கலாமணி" என விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர். ஒரு முறை இராமாயணம் நாடகத்திலே நான் இலங்கேஸ்வரனாகவும் அண்ணர் நவரத்தினம் மண்டோதரியாகவும் நடித்த போது, கலையரசு சொர்ணலிங்கம் அந்த நாடகத்தை வந்து பார்த்தார். பண்பட்ட நடிப்பினால் பாத்திரங்களுக்கு உயிரூட்டி நடித்த எம் இருவரையும் வெகுவாகப் பாராட்டியதோடு "நாடக இரட்டையர்கள்" எனச் சிறப்புற அழைத்தமையைப் பெருமையாக எண்ணுகின்றேன். பாட்டுக் கலையை இலங்கை முழுவதும் எடுத்துச் சென்று பிரபல்யமாக்கியவர் திருப்பூங்குடி ஆறுமுகமாவார். சபா சதாசிவம், தாவடி வடிவேல், லடீஸ் வீரமணி ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். ஸ்ரீதேவி ஐயர், ஈழ நல்லூர் சாம்பசிவ சோமஸ்கந்த சர்மா, உடப்பு ஸ்ரீ சோமஸ்கந்தர், சோக்கல்லோ சண்முகநாதன், இராசையா ஸ்ரீதரன் அவர்களும் வில்லிசைக் கலைஞர்கள். 

வில்லிசை பற்றி உங்கள் தனித்துவமான அபிப்பிராயம் எப்படி என்று விளக்குவீர்களா?

இயல், இசை, நாடகம் இம் மூன்றையும் இணைத்துச் செய்யப்படுவது தான் வில்லிசை. இந்த மூன்றிலும் ஒருவர் வல்லவராக இருந்தால்தான் வில்லிசையைத் திறம்பட நடத்த முடியும். பேசும் ஆற்றல், இசை ஞானம், நாடக அனுபவம் உள்ளவரால் தான் வில்லிசையில் மிளிர முடியும். இந்த மூன்று துறைகளிலும் புலமை உள்ளவராக இருப்பதுடன் நகைச்சுவை கலந்து எனது வில்லிசைக் கச்சேரிகளை நடத்தி வருவதனால் மக்கள் மனதில் மிகுந்த வரவேற்புக் கிடைத்துள்ளது. சினிமாப்பாடல், துள்ளிசை, பொப்பிசை ஆகியவற்றின் கவர்ச்சியால் பழைய பாரம்பரியம் மறைக்கப்பட்டிருக்கின்றது. நாட்டுப் பாடல் மெட்டில்தான் வில்லுப்பாட்டு அமைவது சிறப்பானது. தெம்மாங்கு, கடற்பாட்டு, கும்மி, காவடிச்சிந்து, தாலாட்டு, ஒப்பாரி ஆகிய நாட்டுப்புற பாடல் மெட்டுக்களே வில்லுப்பாட்டின் தனித்துவத்தை உணர்த்தி நிற்கும். நகைச்சுவை கலந்த வில்லுப்பாட்டை ஒரு பகுதியினர் அரசிக்கிறார்கள். வில்லுப்பாட்டின் தனித்துவம் குன்றாத வகையில் நகைச்சுவை கலந்த வில்லிசையை செய்து வருகின்றேன்.

வெளிநாடுகள் பலவற்றக்கும் சென்று வில்லிசைக் கச்சேரிகளை நடத்தி புகழ்தேடி வந்துள்ளீர்கள். அவற்றைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளலாமா? 

வெளிநாடுகளில் இருந்த வரவேற்பு எக்கச்சக்கம். சின்னமணி என்ற பெயர் உலகம் முழுவதும் வியாபித்திருக்கின்றது. 1977ஆம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தன்று கலைவாணர் வில்லிசைக் குழுவினராகிய நாங்கள் எயார் லங்கா விமானம் மூலம் மலேசியா பறப்பட்டோம். எமது வில்லிசைக் குழுவின் ஆர்மோனியச் சக்கரவர்த்தி சி.மு.சோமசுந்தரம், கலைஞர் எஸ்.ரி.அரச, மிருதங்க வித்துவான் பொன் ஆத்மானந்தா, செ.தங்கவேல் ஆகிய நால்வருடன் நானும் இருந்தேன். அந்த நாட்டு நேரப்படி இரவு பதினொன்றுக்கு நாம் கோலாலம்பூரை அடைந்தோம். எமது வில்லிசைக் கருவிகளை கண்ணுற்ற விமான நிலைய அதிகாரி மூன்று நாட்களுக்குரிய விசாவைச் சிபாரிசு செய்து மறுநாள் உரிய அலுவலகத்திற்குச் சென்று விசாவை நீடிக்கும்படி கூறிவிட்டு அகன்றுவிட்டார். நாம் எவ்வளவோ மன்றாடி, ஒரு மாதத்திற்குரிய அனுமதிக்கான சிபாரிசைச் செய்யும்படி கேட்டும் அவர் மறுத்துவிட்டார். நாம் மலேசியா சென்றிருந்ததன் நோக்கம் தொடர்ந்து இரண்டு, மூன்று மாதங்களாவது வில்லிசை நிகழ்ச்சிகளைச் செய்ய வேண்டுமென எண்ணியிருந்தோம். விசா தொடர்ந்து கிடைப்பதற்கு யாழ்ப்பாணத் தமிழர்கள் உதவினார்கள். அசுர வேகத்தில் வில்லிசை நிகழ்ச்சிகளைச் செய்தோம். மலேசியாவில் இருந்த 144 நாட்களில் 140 நிகழ்ச்சிகளைச் செய்தோம். சிங்கப்பூர் ரேடியோவில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியைச் செய்தோம். மலேசியா கூ.ங. என்னைச் செவ்வி கண்டு ஒளிபரப்பியிருந்தது. மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் அளவிட்டுக் கூறமுடியாதபடி எமது வில்லிசைக் கச்சேரிகள் நிகழ்ந்தன. எமக்கு அங்கு மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. அமோக பாராட்டுக்களையும் பரிசில்களையும் பெற்றோம். தங்க மோதிரங்கள், தங்க மாலைகள் எல்லாம் எனக்குப் பரிசாகக் தந்தார்கள். கோலாலம்பூர் வள்ளலார் மன்றம் "வில்லிசைக் கலைஞனான சோதி" என்ற பட்டத்தையும் சலாங்கூர் சைவ மங்கையர் சங்கம் "வில்லிசை வித்தகன்" என்ற பட்டத்தையும் எப்போ பத்திரிகையாளர் சங்கம் "வில்லிசை வாணன்" உன்ற பட்டத்தையும் பத்திங் திபாகஸிக் கலையிரவு மன்றம் "முத்தமிழ் மாமணி" என்ற பட்டத்தையும் சிங்கப்பூர் செண்பக விநாயகர் ஆலய பரிபாலன சபை "வில்லிசை மாமணி" என்ற பட்டத்தையும் தந்து என்னைக் கௌரவித்தன. இன்னும் பல பட்டங்களும் கௌரவங்களும் கிடைத்தன. 2002 ஜூனில் கனடாவுக்குச் சென்றிருந்தேன். "தமிழர் தகவல்" எனது படத்துடன் "கனடாவைக் கலக்கும் கலாவிநோதன்" என்னும் மகுடத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. "ஈழத்தின் பட்டிதொட்டியெங்கும் தமது வில்லிசையால் புகழ்பெற்றுத் துலங்கும் மண்வாசனைக் கலைஞர் கலாவிநோதன் கணபதிப்பிள்ளை அவர்களின் வில்லிசை நிகழ்ச்சி இப்பொழுது தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. தமது ஒரு பகுதிக் குழுவுடன் இங்கு வந்திருக்கும் சின்னமணி எனப் பெணர் கொண்ட கலாவிநோதன் கணபதிப்பிள்ளை அவர்களின் வில்லிசை அனேகமாக இங்குள்ள சகல ஆலயங்களிலும் இடம்பெற்றுள்ளன. இச்செய்தியின்படி எங்களுக்கிருந்த வரவேற்பை நீங்கள் அறிந்து கொள்ளலாம். மேலும், இந்தியா, சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கும் சென்று எமது முத்திரையைப் பதிய வைத்து வந்துள்ளோம்.

தங்கள் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளில் இடம்பெறும் கதையம்சங்கள் எவ்வாறானவையாக இருக்கும்?

பழந்தமிழ் இலக்கியங்கள், இதிகாசங்கள், இலங்கைப் பெரியார்கள் என்ற பல்வகைப்பட்ட விடயங்களையும் கதைக் கருக்களாகக் கொண்டு வில்லிசை நிகழ்ச்சிகளாகச் செய்வோம். கண்ணகி கதை, மகாபாரதம், இராமாயணம், புராணங்கள் (சமய வளர்ச்சியை அடிப்படை நோக்கமாகக் கொண்டவை), பெரியார்கள் வரிசையில் யோகர் சுவாமிகள், கந்த முருகேசனார் மற்றும் இந்தியத் தலைவர்களையும் தமிழ் வளர்த்த பெரியார்களையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதும் எனது முக்கிய நிலைப்பாடாகும். மகாபாரதம் 72 கதைகள், இலங்கையிலும் இந்தியாவிலும் இராமாயணக் கதை தொடர்ச்சியாக சின்னமணி தான் செய்துள்ளார் என்பதைச் சொல்லியே ஆகவேண்டும்.

தங்களைக் கலைத்துறையில் ஈடுபாடு கொள்ள உந்து சக்தியாக இருந்தவர்களைப் பற்றிச் சொல்லுவீர்களா?

எனது குருநாதர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பல நுணுக்கங்களையும் புதிய மெட்டுக்களையும் அறிமுகப்படுத்தியது மட்டுமல்ல, என்னை  ஆசீர்வதித்ததும் ஒரு பேறாக எண்ணுகின்றேன். படிக்க, பரப்ப, பயில ஆசைப்படுபவர்களுக்கு முத்தமிழும் தெரிந்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் நான் என்னைத் தயாராக்கிக் கொண்டேன். எனது வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருந்தவர் எனது சகோரதன் "லண்டன் கந்தையா" புகழ் நா.நவரத்தினமாவார். அவர்தான் எனக்கு வழிகாட்டியாக இருந்து செயற்பட்டார்.

பழந்தமிழ்க் கலைகளை வளர்ப்பதில் நீங்கள் காட்டிவரும் ஆர்வம் அளப்பரியது. அத்துடன், மிகப்பெரிய நாடக நடிகராகவும் இருக்கின்றீர்கள் அவை பற்றித் தெரிந்து கொள்ளலாமா?

எமது பாரம்பரியக் கலைகளைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்பதில் ஆர்வமுடையவனாக இருக்கின்றேன். கிராமியப் பாடல்கள், தெம்மாங்கு, கும்மி, காவடிச்சிந்து, தாலாட்டு, ஒப்பாரி என்பவற்றடன் காத்தவராஜன் கூத்துப்பாடல்கள், வடமோடி தென்மோடி கூத்துப் பாடல்கள் உட்பட பாரம்பரிய நாட்டார் பாடல்களை எனது வில்லுப்பாட்டுகளில் முழுமையாகச் சேர்த்துள்ளேன். இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழின் அங்கங்களான உடுக்கிசை, நடனம், நாடகம், வில்லிசை எ;னபவற்றில் ஈடுபாடு கொண்டுள்ளமையால் மக்களின் பாராட்டுக்களையும் பரிசில்களையும் பெற்று வருகின்றேன். நாடகத் துறையைப் பொறுத்தளவில் சிறுவயதிலிருந்தே எனக்கு ஆர்வம் இருந்தது. பாடசாலை நாட்களிலே நாடகங்களைப் பார்த்து நடிக்க வேண்டும் என்ற ஆவல் தோன்றியது. வண்ணை கலைவாணர் நாடக மன்றம், அரியாலை நாடக மன்றம் ஆகியவற்றின் மூலம் இன்பக்கனவு, வீரமைந்தன், திப்பு சுல்தான், சரியா தப்பா போன்ற சமூக வரலாற்று நாடகங்களில் நடித்துள்ளேன். மாதனை கலா மன்றம் ஆரம்பிக்கப்பட்டு "அரிச்சந்திரா" நாடகம் மேடையேற்றப்பட்டது. அதில் நாரதர் வேடம் போட்டு நடித்தேன். மக்களின் பெருத்த ஆதரவு கிடைத்தது. தொடர்ந்து ஸ்ரீஸ்கந்த லீலா, பவளக்கொடி, ஸ்ரீவள்ளி, இராமாயணம், காத்தவராஜன் ஆகிய நாடகங்களை மேடையேற்றினோம். 

வில்லிசையில் உங்கள் வாரிசாக யாரைக் கூறுவீர்கள்?

சோக்கல்லோ சண்முகநாதனுக்கும் எனக்கும் மானசீகமான தொடர்பு இருந்து வந்திருக்கின்றது. கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற ஒரு வில்லிசை நிகழ்ச்சியில் எனது குழுவில் சோக்கல்லோ சண்முகநாதன் இருந்து சிறப்பான முறையில் தனது பங்களிப்பை வழங்கியிருந்தார். அவர் என்மேல் மிகுந்த பக்தியும் மரியாதையும் வைத்திருக்கின்ற ஒரு உண்மைக் கலைஞன். எனவே, வாரிசாக சோக்கல்லோ சண்முகநாதனைச் சொல்வதில் ஒரு திருப்தி. இன்று கொழும்பு மாநகரில் வில்லிசையை முன்னெடுத்துச் செல்வதில் அவரே முனைப்பாக நிற்கின்றார். அதுவே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது.

படிக்க, பரப்ப, பயில ஆசைப்படுபவர்களுக்கு முத்தமிழும் தெரிந்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் நான் என்னைத் தயாராக்கிக் கொண்டேன். [நன்றி: தினக்குரல்~தம்பி-சிவா]
 

February 04, 2008

'நெஞ்சு பொறுக்குதில்லையே'

இரத்மலானை இந்துக் கல்லூரியின் முத்தமிழ் விழா 2008 நிகழ்வு கடந்த 28-01-2008 அன்று மாலை 4 மணிக்கு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரை இங்கு தொகுத்துத் தரப்படுகின்றது:

மீண்டும் உங்கள் கல்லூரி விழாவொன்றில் பங்குபற்றுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். அதுவும் முத்தமிழ் விழா என்பதால் உங்கள் இயல், இசை நாடகத் திறமைகளைக் காணும், இரசிக்கும் ஒரு வாய்ப்பைப் பெற்றுள்ளேன். 

எப்பொழுதுமே ஒரு காலகட்டத்திக் இயல், இசை நாடக இலக்கியப் படைப்புக்கள், அக் காலகட்டத்தின் சமகால அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகளை, சிந்தனைகளை, எதிர்பார்ப்புக்களை வெளிக்கொண்டு வருவனவாக, சித்தரிப்பவையாக, பிரதிபலிப்பனவாக அமைவன நீங்களும் அதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல என்பதை உங்கள் படைப்புக்கள் எடுத்துக் காட்டுகின்றன.

நான் றோயல் கல்லூரியில் ஐம்பத்தேழு வருடங்களுக்கு முன் படித்த காலத்தில் பிரித்தானியரின் குடிநாடாக இருந்த இலங்கை அப்பொழுதுதான் அடிமைத்தலை நீங்கிச் சுதந்திர நாடாக மாறியிருந்தது. அந்தக் காலகட்டத்தில் சிங்களவரும் தமிழரும் திருமணமாகி இளந்தம்பதியர் தமது இல்லற வாழ்வு எப்படி அமைய வேண்டும் என்று கனவு கண்டிருப்பார்களோ அதே மாதிரியான ஒரு மனோநிலையில் தான் இருந்தனர். மாணவர்களாகிய நாங்கள் சுதந்திர இலங்கையின் வருங்காலம் எப்படி இருக்கும். எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் கனவு கண்டோம், ஆங்கில மோகம் மாற வேண்டும். தமிழ், சிங்கள மொழிப் பாண்டித்தியம் பரவ வேண்டும், பொருளாதார விருத்தி பெற்ற நாடாக இலங்கை மலர வேண்டும் என்று விழாக்களில் கூறியது மட்டுமன்றி ஆங்கில மோகத்தில் வளர்ந்த, ஊயிறிருந்த மக்களையும் மக்கட் தலைவர்களையும், நையாண்டி செய்து எங்கள் இலக்கிய விழாக்களை நடத்தினோம். உள்ளே காற்சட்டை அணிந்து அதன் பிறகு சாரம் அணிந்து மேல்கோட் அணிந்து தலையில் சீப்பு வைத்து வலம் வந்த அப்புஹாமிகளைப் பற்றி விமர்சித்தோம். பரிகசித்தோம். விகடகவிகள் எழுதினோம். அதே நேரந் தலையில் நன்றாக நல்லெண்ணை தேய்த்து, சுருட்டுப் பற்றவைத்து முருங்கைக்காய்க் கட்டுகளைச் சுமந்து வந்த அப்புச்சாமிகளையும் அரட்டைக்குள்ளாக்கினோம். இவற்றைச் சிங்களத் தமிழ் மாணவர்கள் சேர்ந்தே செய்தனர். ஆங்கில மொழி அப்பொழுது எங்களைப் பிணைத்து வைத்திருந்தது.

ஆனால், திருமணமான எட்டு ஆண்டுகளுக்குள்ளேயே மண வாழ்க்கை கசக்கத் தொடங்கியது. ~~சிங்களம் மட்டும் சட்டத்தைப் பெரும்பான்மையினத்தவர்கள் ஆங்கிலேயரால் ஒன்றிணைக்கப்பட்ட இலங்கையின் பாராளுமன்ற ஜனநாயக பலத்தைப் பாவித்து நடைமுறைக்குக் கொண்டு வந்தார்கள். அன்றிலிருந்து இன்றுவரை இலங்கைத் தமிழர்களின் அந்த இல்லற வாழ்வு இன்னல் வாழ்க்கையாகவே இருந்து வந்துள்ளது. கணவன் அடிக்கின்றான், துன்புறுத்துகின்றான் என்று அடுத்த வீட்டுக்காரனிடம் முறையிட்டால், ~~வருகிறாயா எனக்கமைவாக அடிமை வாழ்க்கை வாழ?|| என்று கேட்கிறான். ~~என்னடி பத்தினி வேஷம் போடுகிறாய்|| என்று இலங்கைத் தமிழரை இம்சைப்படுத்தப் பார்த்த அடுத்த வீட்டுக்காரனை அடித்து உதைத்ததால் அங்கு போகவும் முடியாதுள்ளது. விவாகரத்துப் பெறலாம் என்றால் அதற்கு அயலவர்கள் எவரும் சம்மதிக்க மாட்டார்கள் போலத் தெரிகிறது. புருஷனிடம் அடிபட்டு உதைப்பட்டு அல்லல்பட்டுத்தான் வாழ்க்கையை நடத்த வேண்டுமா என்ற ஒரு கட்டத்திற்குத் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

இவ்வளவுக்கும் இலங்கைத் தமிழன்னையின் இன்னொரு அங்கலாய்ப்பு அவளின் மக்களின் ஒற்றுமையின்மை, ஒருத்தரை ஒருத்தர் காட்டிக் கொடுக்கின்றார்கள். தம்பியை அடிக்க அண்ணன்மார், துப்பாக்கி எடுத்துக் கொடுக்கின்றார்கள். அதுவும் பதவி மோகத்தில், பகை காட்டுவோருக்குப் பணிந்து பணிவிடை செய்கின்றார்கள். இப்படி ஒரு அவல வாழ்க்கை வாழும் இலங்கைத் தமிழ் மக்களின் மத்தியில் எங்கள் இலக்கிய நாயக, நாயகிகள் இன்று உயிர் பெற்றுத் திரும்பி வந்தால் எங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் கற்பனை பண்ணத் தொடங்கியுள்ளார்கள் எங்கள் மாணவ மாணவிகள். அவர்கள் பார்வையில் இருந்து தெரியவருவது என்னவென்றால், இன்றைய கள நிலை கவலைக்குரியதாக இருக்கின்றது என்பதே பெரியவர்களாகிய நாங்கள் செய்த தவறுகள் தான் இளம் நெஞ்கங்களைக் குமுற வைக்கின்றனவோ என்று எண்ண வேண்டியுள்ளது.

என்றாலும் தமிழர் வாழ்க்கையில் இவையெல்லாம் சகஜம் என்று கூறுமாப்போல் அன்றும் இன்றும் எங்களை வழி நடத்தும் ஒரு சுந்தரத் தமிழ் மகன், சுந்தரத் தமிழ் நெஞ்சன், எமக்கு ஒரு விதத்தில் ஆறுதல் கூறுமாப் போல் பாக்களை யாத்துத் தந்துதவிச் சென்றுள்ளான். எத்தனையோ பாரதிகள் வாழ்ந்த தமிழ் நாட்டில் ~~பாரதியார்|| என்ற பெயருக்குப் பொருந்திய பாத்திரமாகக் கணிக்கப்பட்டவர் தான் அந்தத் தமிழ் மகன் சுப்பிரமணிய பாரதியார்.

அரை நூற்றாண்டுக்கு முன்னரும் எங்கள் முத்தமிழ் விழாக்களில் அவன் பாடல்கள் ஒலித்தன. இன்றும் அதே நிலைதான். சமகால சமுதாயத்தைப் பார்த்து, அதன் அடிமைத்தனத்தைப் பார்த்து அதன் அவலத்தைப் பார்த்து, அதன் அழுகையைப் பார்த்து மனம் பதைபதைத்துச் செந்தமிழ்ப் பாக்களினால் தனது உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தியவன் பாரதி. அவனின் அன்றைய உள்ளக் குழுறல்கள் வேறுபட்ட, மாறுபட்ட இன்றைய சூழலிலும் பொருந்துகின்றன என்றால் அதுதான் அவனின் இலக்கியப் படைப்;புக்களுக்குப் பெருமையையும் பெறுமதியையும் வாங்கித் தருகின்றது. அதேநேரம் தமிழர் குணங்கள் அன்றும் மாறவில்லை இன்றும் மாறவில்லை என்று எண்ணத் தோன்றுகின்றது.

நெஞ்சு பொறுக்குதில்லையே என்று அன்று அவன் கூறியது இன்றும் எமக்குப் பொருந்துகின்றது. நிலைகெட்ட இன்றைய இலங்கைத் தமிழ் சமுதாயத்தைப் பார்த்துத்தான் பாரதி கவிதை யாத்தானோ என்று மலைக்க வேண்டியுள்ளது அவனின் அந்தப் பாடலில் ஒரு செய்யுட் பகுதி பின்வருமாறு அமைகிறது.

சிப்பாயைக் கண்டு அஞ்சுவர் ஊர்ச்

சேவகன் வருதல் கண்டு மனம் பதைப்பார்

துப்பாக்கி கொண்டு ஒருவன் - வெகு

தூரத்தில் வரக் கண்டு வீட்டில் ஒளிப்பார்||

இதுதானே இன்று தமிழ்ப் பிரதேசங்களில் காணப்படும் நிலை!

1988-89 அளவில் ஒரு நண்பர் யாழ்ப்பாணத்தில் இருந்த குடும்ப சமேதரராய் வந்து என்னைக் கொழும்பில் கண்டார். திடீரென்று அவரின் ஆறு வயது மகன் நடுங்கி Settee பின் ஒளிந்து கொண்டான். ஏன் என்று கேட்டதில் ஹெலி! ஹெலி!! என்று கத்தினான். வானூர்தி ஒன்றின் சப்தம் கேட்டதும் அவன் தாம் யாழ்ப்பாணத்தில் இருக்கின்றோம் என்ற எண்ணத்தில் பதைபதைத்துப் போனான். அன்றைய நிலை இன்னமும் மாறவில்லை.

அதே பாடலில் இன்னொரு இடம் பின்வருமாறு அமைகிறது

நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த

நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்

கொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு

கோடி என்றால் அது பெரிதாமோ

ஐந்து தலைப் பாம்பென்பான் அப்பன்

ஆறதலை யென்று மகன் சொல்லி விட்டால்

நெஞ்சு பிரிந்திடுவார் பின்பு

நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார்

இப்படித்தானே எங்கள் பகைமைகள் எமது சமுதாயத்தை இன்றும் சீரழித்து வருகின்றன.

மாணவ மாணவியரின் இன்றைய படைப்புக்கள் அவர்களின் உள்ளக் குமுறல்களை வெளிக்காட்டுகின்றன என்று கொள்ளலாம். சிரிப்பு மூட்டினாலும், சில படைப்புக்கள் சிந்தனையைக் கிளறிவிடுவதாக அமைந்துள்ளன. ஆழச் சிந்திக்கவும் வைத்துள்ளன. 

பலவித தடங்கல்கள், தடைகள் என்பவற்றையும் தாண்டியே மாணவ மாணவிகள் இந்த முத்தமிழ் விழாவினை அரங்கேற்றுகிறார்கள் என்பதை நாம் அறிவோம். அவர்களின் குறைகளைக் கருதாமல் நிறைகளை மட்டும் மனதில் எடுத்து அவர்களைப் பாராட்டுவோமாக!

இன்றைய மாணவ உள்ளங்கள் தான் நாளைய மாமனித உள்ளங்கள், அவர்கள் பார்வையில் இன்றைய காலகட்டம் எவ்வாறு அவர் கண்களுக்குப் புலப்படுகின்றது என்பதை அவதானிக்கும் போது அவர்கள் காலத்தில் அவர்கள் எங்கள் பிழைகளைத் திருத்தி நல்வாழ்வுக்கான அத்திவாரத்தை சகவாழ்வுக்கான அடித்தளத்தை அமைக்கத் தம்மால் இயன்ற சகலதையும் செய்வார்கள். செய்ய வேண்டும் என்று எண்ணத் தோன்றுகின்றது. உங்கள் அனைவருக்கும் இறைவன் அருள் கிட்டுவதாக என்று பிரார்த்தித்து இந்தச் சிற்றுரையை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். 

[சுப்பிரமணிய பாரதியார்:யாழ் நல்லூரில் சிலை-படப்பிடிப்பு: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை]
 

 

February 02, 2008

'காதல் கடிதம்'

துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை

யுத்தம் - காதல் இவை இரண்டையும் எவராலும் தடுக்கவோ அல்லது தவிர்க்கவோ முடியாது என்பதைக் காதல் கடிதம் உணர்த்தி நிற்கின்றது. வோட்டர்ஃபோல்ஸ் மூவி மேக்கர்ஸ் (Waterfalls Movie Makers) இன் இரண்டு வருட கடின உழைப்பினால் காதல் கடிதம் திரைப்படமாக வெளிவந்துள்ளது.

ஜமுனாவாக அனிஷாவும், கார்த்திக்காக ஸ்ரீபாலாஜியும் இரண்டு இந்தியப் புதுமுகங்கள் காதல் கடிதம் மூலம் அறிமுகம். போர்ச் சூழ்நிலையில் வவுனியாவில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த ஜமுனா இசை பயில்வதற்காகச் சென்னை செல்கின்றாள். கார்த்திக் எஃப் எம் (FM) வானொலி நிலையமொன்றில் பாடல்களைத் தொகுத்து வழங்கும் ஒலிப்பதிவாளராகப் (DJ) பணியாற்றுகின்றான். ஜமுனா எஸ்.எம்.எஸ் மூலம் பாடல்களை விரும்பிக் கேட்க, கார்த்திக் அவளின் விருப்பத் தெரிவுகளைத் தொகுத்து வானொலி மூலமாக வழங்குகின்றான். கார்த்திக் மனதில் படிப்படியாகக் காதல் மலர்கின்றது. ஒரு நாள் கார்த்திக் 'I Love You Yamuna' எனத் தனது காதலை ஜமுனாவிடம் வெளிப்படுத்துகின்றான். எல்லோரும் போல 'I Love You Yamuna' என்று கார்த்திக்கும் சொல்கின்றான் என நினைத்து, அவனின் காதலை மறுக்கின்றாள். மறுதலிக்கின்றாள் ஜமுனா. தனது அப்பாவே தனக்கு எல்லாம் என்றும், ஊருக்குத் திரும்பிய பின்னர் கடிதம் எழுதுவதாகவும் கூறிப் படிப்பு முடிந்த பின்னர் வவுனியாவிற்கு ஜமுனா திரும்புகின்றாள்.

இலங்கையில் நிகழும் யுத்தம் ஒரு நாள் ஓயும், நான் தனியே வயலின் இசைக் கச்சேரி நடத்துவேன் என்று ஜமுனா தனது கல்லூரி நாட்களில் கனவு கண்டாள். ஜமுனாவின் கடிதத்தைத் தினமும் எதிர்பார்த்து, ஏமாந்து போகும் கார்த்திக் அவளின் பிரிவால் ஒவ்வொரு கணமும் வாடுகின்றான். கடிதத்தைக் காணாமல் ஏங்கித் தவிக்கும் கார்த்திக் சென்னையிலிருந்து ஜமுனாவைத் தேடி வவுனியா செல்கின்றான். இறுதியில் என்ன நடக்கின்றது என்பதை இயக்குனர் இலங்கையின் யுத்த சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் சாதாரண பொது மக்கள் எதிர்கொள்ளும் நிலக்கண்ணி வெடியுடன் தொடர்புபடுத்தியிருக்கின்றார். யுத்தத்தைப் பார்த்துப் பார்த்து எங்களுக்குப் பழகிப் போச்சு என்ற ஜமுனாவின் தந்தையாக நடிக்கும் நடராஜசிவத்தின் வசனம் காதுகளில் தொடர்ந்தும் எதிரொலிக்கின்றது.

வசீகரனின் வசீகரமான வரிகள் தூய்மையான காதல் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. யாழ் தேவி பிரயாணத்தின் சந்தோஷமான நிமிடங்களை யாழ்தேவியில் நாங்கள் காதல் செய்தால்…என்ற பாடலின் மூலமாக மீண்டும் இரைமீட்டிப் பார்க்கக் கூடியதாகவுள்ளது. நீண்ட யாழ்தேவி பிரயாணத்தின் இன்பகரமான நிமிடங்களை இழந்து நிற்கும் தமிழ் பேசும் மக்களுக்கு இப் பாடல் ஓர் விருந்தாக அமையும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை. பதினெட்டு வருடங்களுக்கு முன்னர் கொழும்பிலிருந்து காலை 5.45 மணிக்குப் புறப்படும் யாழ்தேவி 2.30 மணிக்கு யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தது.

கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஒஸ்லோவை வசிப்பிடமாகவும் கொண்ட வசீகரன் சிவலிங்கம் தனது இளமைக் கால நினைவுகளையும் உணர்வுகளையும் வரிகளில் வடித்தெடுக்க, உதயா அவ் வரிகளுக்கு இசையமைத்து மேலும் மெருகூட்டியுள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் வவுனியா உட்பட இலங்கையின் பல பாகங்களிலும் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீரூற்றுக்கள், மலைகள், பூங்கா என இயற்கைக் காட்சிகள் பலவும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இயக்குனர் முகேஷின் முதல் முயற்சி இது. வினோலியாவின் மூலக்கதை காதல் கடிதமாக வரையப்பட்டுள்ளது.

காதல் கடிதம் ஒலி இறுவெட்டு ஆல்பம் 2005ஆம் ஆண்டு எனது கைகளுக்குக் கிட்டியது. அதை முதன் முதலாகச் செவிமடுத்த எனக்கு யாழ்ப்பாணத்தின் மறக்க முடியாத பல மகிழ்ச்சிகரமான நினைவுகள் என் மனதைத் தொட்டுச் சென்றன. அவற்றுள் நீண்ட யாழ்தேவிப் பிரயாணம், பனங்காய்ப் பணியாரம், கிழுவை மரம், கூழ், பனையோலை பாய், காங்கேசன்துறை சீமெந்து, கீரிமலைப் பனங்கள்ளு, சுன்னாகத்து மாங்காய், கொடிகாமத்துத் தேங்காய், கீச்சு மாச்சு தம்பளம்
கீயா மாயா தம்பளம் மாயா மாயா தம்பளம் போன்ற என்றுமே மறக்க முடியாத நினைவுகளில் நிரந்தரமாகப் பதிந்துள்ள வார்த்தைகளும், வசனங்களும் திரைப்படத்திற்கு மேலும் மெருகூட்டுவதைக் காணலாம்.

'ஈழப் பெண்ணே' பாடலை மதுபாலகிருஷ்ணனும், 'யாரும் எழுதாத பாடல் கேட்கத் தானே ஆசை' பாடலை உன்னிமேனனும், ஜீவா ரேகாவும், 'எழுது எழுது' பாடலை ஸ்ரீநிவாசும், அம்பிலியும், 'ஒரு நதியின் பெயரோடு பிறந்தவளே' பாடலை விது பிரதாபனும், 'யாழ்தேவியில் நாங்கள் காதல் செய்தால் யாழ் மீட்டுமே தண்டவாளம்' என்ற பாடலை சாம் பி.கீர்த்தனும் பாடியுள்ளனர். ஆயினும் கிருஸ்ணராஜ் குழவினர் பாடிய 'பனங்காய் பணியாரம்' பாடலைத் திரைப்படத்தில் உள்ளடக்காதது கவலைக்குரியது. [dushi.pillai@gmail.com]

You Tube: பனங்காய் பணியாரம் காணொளி